பண்ணாகம் இணையத்தின் 15 ஆவது ஆண்டுவிழா
சிறுகதைப்போட்டிச் சிறுகதைகள்
அதிஉயர் வணக்கம் எழுத்தாளர் திருமதி.தேனம்மை இலக்ஷ்மணன் அவர்களே!
கதை 155
கதை 148
கதை 145
காலத்தின் முக சுருக்கங்கள்.
ஆண்டி வீட்ல யாராவது இருக்கீங்களா?
யாருமா காலேஜ் பிள்ளைங்க மாதிரி தெரியுது என்ன விஷயம்? (வயதான பொக்கை விழுந்த தாத்தா ஒருவர் வாசலில் வந்து நின்றார்)
தாத்தா,நாங்க பக்கத்து காலேஜ்ல இருந்து வந்திருக்கோம் . கொரோனா காலத்துல மக்கள் சந்திச்ச கஷ்டங்கள் எல்லாம் எப்படி இருந்துச்சுன்னு ஒரு சர்வே எடுக்கிறதுக்காக வந்து இருக்கோம்.
அப்படியா, இருங்கம்மா வாரேன்… (ச்சேர் எடுப்பதற்காக உள்ளே சென்றார் தாத்தா)
ஏய் வாங்கடி வேற வீட்டுக்கு போவோம் இது சரியான கிளடு , இதுக்கு என்ன தெரியப் போகுது .
சும்மா இருடி .பார்த்தாலே பாவமா இருக்கு. இந்த மாதிரி படிப்பறிவு இல்லாதவங்களுக்கு தான் இந்த கொரோனா பத்தி நம்ம எடுத்துச் சொல்லணும்.(அதற்குள் தாத்தாவும் வந்துவிட்டார்)
உட்காருங்கம்மா… தண்ணீ குடிக்கிறீங்களா? இந்தாங்க……..
தாத்தா உங்க பேர் என்ன?
பாண்டி முத்து சன் ஆஃப் தியாகராஜ்
இங்கப் பாருடி, தாத்தாவுக்கு குசும்ப இங்கிலீஷ்ல பேசுது.
தாத்தா உங்க வயசு? நவ் ஐ அம் 75…..
என்ன தாத்தா இங்கிலீஷ் எல்லாம் பிச்சு உதறுறீங்க? என்ன படிச்சு இருக்கீங்க?
நான் அந்தக்காலத்திலேயே எஸ்எஸ்எல்சி முடிச்சு இருக்கேன். 20 வருஷம் மிலிட்டரியில இருந்தேன் அங்க கத்துக்கிட்டது தான் இந்த இங்கிலீஷ், ஹிந்தி , சைனீஸ் எல்லாமே….
ஹேமா ராதிகாவை ஒரு பார்வை பார்த்தாள். தோற்றத்தை வைத்து தவறாக எடை போட்டதை உணர்ந்து தலைகுனிந்து நின்றாள் ராதிகா.
“வென் ஐ வாஸ் வொர்கிங் தெர், ஐ ஃபெல் இன் லவ் வித் ஒன் பியூட்டிஃபுல் லேடி” லுக் தர்…..
எல்லோரும் வீட்டு வாசலை நோக்கி தங்கள் கண்களைத் திருப்பினர். முகம் நிறைந்த மஞ்சளோடும், குங்குமப்பொட்டோடும் நின்றுக்கொண்டிருந்தார் ஒரு வடநாட்டு பாட்டி. எல்லோரும் தன்னைப் பார்ப்பதை உணர்ந்த பாட்டி வெட்கப்பட்டு உள்ளே சென்றுவிட்டாள். (எல்லோரும் நகைத்தனர்)
தாத்தா உங்களுக்கு எத்தனை பிள்ளைகள்?
ஐ ஹவ் டூ சன்ஸ்……. அவங்களையும் நல்லா படிக்க வெச்சேன். நவ் போத் ஆப் தெம் ஆர் வொர்கிங் இன் யுஎஸ்ஏ. ஆனா வேலை ன்னு சொல்லிட்டு அப்ப போனவவங்கதான், அதுக்கப்புறம் இந்த ஊர் பக்கம் திரும்பி வரவே இல்லை அங்கேயே தங்களோடு வாழ்க்கையை அமைச்சுக்குட்டாங்க. இப்ப நானும் பாட்டியும் தான். சந்தோஷமாத்தான் இருக்கோம். பேரன்ட்ஸ் ரெண்டு பேரையும் பார்த்துக்க அவங்களுக்கு தோணல.(தாத்தாவின் குரல் தழுதழுத்தது )
தாத்தா????????
நத்திங் டூ வொரி கண்ணா. யூ கேரி ஆன்.
ஆனால் கண்ணுங்களா! நீங்களும் அப்படி இருக்கக்கூடாது. உங்கள படிக்க வச்சு ஆளாக்கின உங்க பேரன்ட்ஸ் ரெண்டு பேரையும் கடைசி வரைக்கும் நல்லா பாத்துக்கணும்.
ஸ்வேர் தாத்தா. வெரி குட் கேர்ள்ஸ்.
தாத்தா உங்கள நினைச்சா ரொம்பப் பெருமையா இருக்கு. உங்க பசங்களுக்கு தான் உங்களோட அருமை புரியல.
ஹோ!! மை ஸ்வீட் ச்சைல்ட்……. தேங்க்யூ சோ மச்.
தாத்தா உங்க கூட ஒரு போட்டோ எடுத்துக்கலாமா?
ஓ எஸ், ப்ளீஸ் வெயிட் ,ஐ வில் கால் மை பியூட்டிஃபுல் லேடி. (மீண்டும் எல்லோரும் நகைத்தனர்)
தேங்க்ஸ் தாத்தா. உங்களுக்கு யாரும் இல்லேன்னு இனிமே நீங்க வருத்தப்படவே தேவையில்லை. இனி நாங்க எல்லாரும் உங்க பேத்திங்க . இனிமே வாராவாரம் உங்க வீட்டுக்கு கரெக்டா வந்துடுவோம்.
பதில் சொல்வதற்கு வார்த்தைகள் ஏதும் வராமல் உள்ளத்தின் உணர்வு எழுச்சியில் தன்னுடைய மானசீக பேத்திகளை அன்பு பொங்கும் மனதோடு பார்த்துக்கொண்டே இருந்தார் தாத்தா.
சரியாக அடுத்த வாரம் தாத்தாவோடு எடுத்துக்கொண்ட போட்டோவை பெரிதாக ஃப்ரேம் போட்டுக்கொண்டு அவர் வீட்டுக்கு வந்தனர் பேத்திகள்………
கதை 143
இலவு காத்தக் கிளிகள்
'அய்யோ.... கடவுளே! ஏன் என் தலைவி இப்படி நொடிந்து, நொறுங்கிப் போய் உள்ளாள்? பார்க்கவே பரிதாபமாக நிறம் மாறி காட்சியளிக்கின்றாளே! என்னவாயிற்று? ஏதாவது பொல்லாத நோய்ப் பற்றித் துன்புறுகிறாளா? எப்படி இருந்தவள்.... ஏன் இப்படி ஆனாள்? காவியா என்ற பெயருக்கேற்ப காவியமாகத் திகழ்ந்தவளாக் கருவாடு போலக் காய்ந்து கிடக்கிறாள்? இதற்கு யார் காரணம்?'
என்று தன் தோழியும் தலைவியுமாக விளங்கிய காவியாவைப் பார்த்ததுமே அவளைப் பற்றிச் சங்கவியின் நெஞ்சில் அலையடித்தது. உடனே அவளின் மனம் கடந்த காலத்தை நோக்கி நினைவு நகர்ந்தது.
காவியாவும் சங்கவியும் ஒரே ஊரைச் சார்ந்தவர்கள்; சாதி மதப் பாகுபாடு இல்லாமல், ஏற்றத் தாழ்வு பாராமல், சின்னஞ்சிறு வயது முதல் ஒன்றாகச் சேர்ந்து விளையாடியவர்கள்; எங்குச் சென்றாலும், ஒன்றாகக் சேர்ந்தே செல்வார்கள்; எதைச் செய்தாலும் சேர்ந்தே செய்வார்கள்; ஒட்டிப் பிறந்த இரட்டைப் பிறவிகள் போல் இருந்தனர்; ஆரம்பப் பள்ளி முதல் கல்லூரி வரை ஒரே வகுப்பில் படித்து வந்தனர்; படிப்பில் மட்டுமல்ல, பேச்சுப் போட்டி, கவிதைப் போட்டி, ஓவியப் போட்டி என்று பள்ளிக் கல்லூரியில் ஒருவருக்கொருவர் சவால் விட்டு போட்டியில் வென்றனர்.
எப்பொழுதும் முதல் பரிசு, பாராட்டு எல்லாமே காவியா தான் பெறுவாள். அவள் முதல் இடத்தைப் பிடித்துச் சங்கவி இரண்டாவது, மூன்றாவதாக வெற்றிப் பெற்றாலும், காவியா முதல் இடம் பிடிப்பது சங்கவிக்குத் தானே முதல் பரிசு பெற்றது போல் மகிழ்ச்சி அடைவாள். சங்கவிப் பின் தங்கிய பரிசுகளைப் பெற்றாலோ காவியா சங்கவிக்காக வருந்துவாள்; ஆனால், அந்த வருத்தமே இல்லாமல் காவியாவுக்காகச் சங்கவி மகிழ்ச்சி அடைவாள்.
பள்ளி வகுப்பிலும் சரி, கல்லூரியில் நடக்கும் மாணவர் மன்றத் தேர்தலிலும் சரி வெற்றிப் பெற்று மாணவர் தலைவி என்ற அந்தஸ்தைப் பெற்று எல்லோரும் காவியா என்ற பெயரையே மறக்கும் அளவிற்கு "தலைவி.... தலைவி... " என்றே அழைக்கப் பட்டாள். காவியாவும் தலைவிக்கான தகுதியுடன் மிடுக்காக நடமாடினாள். அவளின் அழகோ பெண்களும் காமுறும் அழகு. அழகு என்றால் அப்படியொரு அழகு; கட்டுக் கோப்பான உடற்கட்டு.
இப்படிப் பட்டத் தேவதைக்குக் காவியாவின் பெற்றோர் வரன் பார்த்து திருமணம் முடிக்கும் வரை சங்கவி அவளைத் தலைவியாகவும், காவியா சங்கவியைத் தோழியாகவும் ஏற்று, பட்டதாரிகளாகப் படிப்பை முடித்தப் பிறகும் பிரியாமல் ஒன்றாகவே இருந்தனர்.
பட்டணத்தில் வாழும் தன் அத்தை மகனுக்கே பேசி முடித்து, ஒரு முகூர்த்த நாளில் திருமணம் முடிந்து மாமியார் வீட்டிற்குப் போன பிறகு தான் இவர்களுடைய ஆழமான நட்பை உணர முடிந்தது. ஊரார்கள்,
" இப்படி ராவு பகலா எந்நேரமும் புருஷன் பொண்டாட்டி மாதிரி இருக்கீங்களே.... கல்யாணமானா என்ன பண்ணுவீங்க? " என்று கேட்டவர்களுக்கு,
"ஒருத்தரையே ரெண்டு பேரும் கட்டிக்கிட்டு வாழுவோம்! "
என்று அன்று இருவரும் விளையாட்டாகச் சொன்னது விளையாட்டாகவே முடிந்ததே தவிர நிஜமாகவில்லை; இவர்களின் பிரிவு காதலர் பிரிவு போல வாட்டியது. இதனால், தலைவியான காவியா குடும்பப் பந்தத்தில் இருப்பதால், அவளால் வர முடியாது. எப்பவாவது தாய் வீட்டிற்கு வருவாள்; அப்போது சந்தித்துப் பேசிக் கொள்வர். மற்றபடி எப்பொழுதும் சங்கவி தான் பட்டணத்திற்குச் சென்று பார்த்து வருவாள்.
சங்கவிக்கும் திருமணம் முடிந்து மூன்றாண்டு ஆயின. சங்கவியின் திருமணத்திற்கு காவியா வந்து போனாள். அதன் பிறகு இந்த மூன்றாண்டாகக் காவியாவைச் சங்கவி வந்து சந்திக்கவில்லை. எதிர்பாரா விதமாக அண்மையில் சங்கவியின் கணவன் ஒரு விபத்தில் இறந்து போனான். ஒரு ஆறுதலுக்காகக் காவியாவைச் சந்திக்கப் போனபோது தான் காவியாவின் நிலையைக் கண்டு தன்னுடைய திருமண வாழ்க்கை தத்தளிப்பதைச் சொல்லி அழுது தீர்க்கச் சென்றவள்,' தன் நிலையை விடக் காவியாவின் நிலை மோசமாக உள்ளதே! '
என்று மனதுக்குள் எண்ணி வருந்தினாள். தான் சொல்ல வந்த தன் வாழ்க்கையைப் பற்றிச் சொல்லாமல் மறைத்தாள்.காவியா இப்படி இருக்கும் காரணத்தை அறிய வேண்டிக் கேட்டாள் சங்கவி..... " ஏன் காவியா! இப்படி நிறம்மாறி உருகுலைந்து இருக்கிறாய்?" என்று கேட்டாள்.
" என் கணவர் என்னுடன் இருந்த போது நான் அடைந்த இன்பத்திற்கு அளவே இல்லை. தினமும் சொர்க்கத்தில் திளைத்தேன். ஊர்த் திருவிழாக் காலங்களில் அலங்கரித்த வீடுகளில், சொந்த பந்தம் எல்லாம் கூடி மகிழ்ந்து இருந்ததைப் போல் இருந்தேன்; நாட்டின் எல்லையில் போர் மூண்டதால் அவருக்கு லீவைக் கேன்சல் செய்து வரும்படி, ராணுவத்திலிருந்து அழைப்பு வந்ததால் போர்களத்திற்குச் சென்று விட்டார். அவர் இல்லாமல் நான் யாருக்காகத் தன்னை அலங்கரித்துக் கொள்ள வேண்டும்?
இதனால், ஊர்த் திருவிழாக் கோலம் முடிந்து வெறிச்சோடிக் கிடக்கும் வீடுகளின் முற்றத்தில் அணில்கள் விளையாடுவது போல அவர் இல்லாத இப்போது அவருடைய நினைப்பு மட்டும் நெஞ்சில் நினைப்பென்னும் அணில் ஆடும் நிலையானதால் இப்படி தெரிகிறேன். "
என்று காவியா சொன்னாள். துன்பத் துயரம் மேலோங்க விரக தாபத்தில் தவிக்கிறாள் என்பதை புரிந்து கொண்ட சங்கவி,
' உனக்குக் கணவர் இருக்கிறார் என்ற எண்ணமாவது இருக்கிறது. எனக்கோ அப்படிப்பட்ட நிலமையே இல்லையே! '
என்று தன்னைத் தானே நொந்து கொண்டாள் சங்கவி.
ஆனால், காவியாவின் கணவன்
எல்லையில் நடந்த போர்க் களத்தில் பகை நாட்டு ராணுவத் தாக்குதலில் இறந்தவர்களில் தன் கணவனும் ஒருவன் என்பது காவியாவுக்கும் தெரியாது; சங்கவிக்கும் தெரிய வாய்ப்பில்லை.
போருக்குப் போகும் முன் " தனக்கு ஏதாவது நேர்ந்தால் மனைவிக்குத் தெரிய வேண்டாம்." என்று சொல்லி இருந்ததால் காவியாவின் மாமியார் மாமனார் தன் மகன் இறந்த செய்தியைப் பிணம் கிடைக்காததால் நல்லதாயிற்று என்று எண்ணி, இறந்ததை மறைத்துத் தமக்குள் நொந்து வேகலாயினர். சில நேரம் நாட்டுக்காகத் தன் மகனைக் கொடுத்ததில் ஆறுதலாக இருந்தது.
இச் செய்தி கூட காவியா அறியாமல் அவளின் அறைக்குள்ளேயே கடந்த கால கணவனுடன் அனுபவித்த இன்பத்தை எண்ணியபடி காலத்தை ஓட்டினாள். கணவனுடைய பிணம் கூட கண்டெடுக்க முடியவில்லை என்பது கூட தெரியாமல் இலவு காத்த கிளி போல காத்துக் கிடக்கிறாள். என்பது காவியாவுக்கும் சங்கவிக்கும் தெரிய வாய்ப்பே இல்லை. இருவரும் ஒருவரையே திருமணம் செய்து கொள்ளும் நிலை வராவிட்டாலும் கணவனை இழந்து தனித் தனி மரமாக தவிப்பதில் ஒத்து போயிற்று. என்ன ஒரு விதியின் விளையாட்டு இது?
கதை 141
மனித நேயம்.......
நெருப்பலைப் பாவலர்,இராம இளங்கோவன், பெங்களூரு.
" இதப் பாருங்க! இந்த வீட்ல ஒன்னு உங்கண்ணா இருக்கணும்; இல்ல நான் இருக்கணும்; ரெண்டுல ஒன்னு முடிவு பண்ணுங்க."
என்று கணவன் வேல்முருகனிடம், கருணைவாணி கேட்டாள்.
" ம்.....நல்லா யோசிச்சிட்டேன்; எங்கண்ணனே இருக்கட்டும்."
என்று வேல்முருகன் தீர்க்கமான முடிவோடு சொன்னான்.
" என்னங்க சொல்றீங்க?"
" உண்மையத்தான் சொல்றேன்; பல முற நீயும் கேட்டுட்டே; நானும் பல முற சொல்லிட்டேன் நீதான் கேக்க மாட்டேங்கிறே! "
" இதுக்கு எதுக்குங்க என்னெக் கட்டிக்கிட்டீங்க?"
" ஏற்கெனவே உன் அப்பம்மா கிட்ட எல்லா விஷயமும் சொல்லித்தான் அவங்க ஏத்துக்கிட்டப் பிறகு தான் உன்னெக் கட்டிக்கிட்டேன்."
"சரி....பொணத்த பொதைக்கிறதயும், அநாதைங்களக் கூட்டி வந்து அவங்களக் குளிப்பாட்டறதயும் விடச் சொல்லுங்க."
" அது மட்டும் முடியாது; அது அவரோட வேல; அவரோட இஷ்டம்; நான் கூடத்தான் பேருக்கு டாக்டரு; ஆனா, என்னோட வேல போஸ்ட் மார்ட்டம் செய்றது; என் மேல கூடத்தான் பொண வாட அடிக்கிது; அதுக்காக எங்கூட நீ வாழலயா?"
" நீங்களும் அவரும் ஒன்னா?"
" இல்ல.....அதுக்கும் மேல தெய்வம்." என்றதும் சின்ன மௌனம் நிலவியது.
பெங்களூர் சாம்ராஜ் பேட்டையைச் சேர்ந்த கூலித் தொழிலாளியான மோகன்ராஜ் வயது நாற்பது இருக்கும்; திருமணமே செய்து கொள்ளாதவர்; சமூகச் சேவையே கடவுளுக்குச் செய்யும் சேவையாக எண்ணி அவரின் தாயார் பெயரில் " விஜயா கருணை அறக்கட்டளை " ஒன்றைத் தொடங்கி, கூலி வேலை செய்து வாங்கும் கூலியுடன், தெரிந்தவர், நண்பர்கள், தன்னுடன் வேலை செய்வோர் ஆகியோரிடம் நிதி வசூல் செய்து தன் தம்பி வேல்முருகன் கொடுத்த ஒரு பெரிய தொகையையும் சேர்த்து அறக்கட்டளையை நடத்தி வந்தார்.
தினமும் வேலை செய்யும் நேரம் போக மீதி நேரத்தை மற்றவர் போல் பொழுது போக்குக்காகவோ, குடித்தோ வேறெந்த பழக்கத்துக்கோ அடிமை ஆகாமல், போலிஸ், மாநகராட்சி உதவியுடன் தெருவில் அநாதையாகச் சுற்றித் திரியும் முதியவர்கள், நோயாளிகள், மனநிலை பாதிக்கப் பட்டோர்களை அழைத்து வந்து பராமரித்து, அநாதைக் காப்பகங்களில் சேர்ப்பதும், அநாதைப் பிணங்களைக் காவல் துறையின் அனுமதியோடு முறையாக இறுதிச் சடங்கு செய்து புதைப்பதும் தன் கடமையாகக் கொண்டு பதினைந்து ஆண்டுகளாக செய்து வருகிறார்.
எல்லோரும் சம்பாதித்து அவரவர்கள் மகிழ்ச்சியாக மனைவிப் பிள்ளைகளோடு வாழும்போது இவர் மட்டும் வாழ்க்கையை வாழ்ந்து அனுபவிக்காமல் சேவை செய்யும் மனோநிலையைத் தந்தது எது?
மோகன் ராஜின் சொந்த ஊர் தமிழ் நாட்டின் திருவண்ணமலை மாவட்டத்தைச் சேர்ந்த மூலக்காடு ஆகும். விவசாயக் கூலிகளான காளியப்பன் விஜயாவின் மூத்தப் பிள்ளை தான் இந்த மோகன்ராஜ். இவருக்கு வேல்முருகன், காளீஸ்வரி என்ற தம்பியும் தங்கையும் இருந்தனர். காளியப்பன் சாராயம் குடித்து விட்டு வரும்போது லாரியில் அடிபட்டு இறந்து போனார்.
விவசாய கூலி வேலை செய்து விஜயா பிள்ளைகளை வளர்த்து வந்தாள். தன்னால் மூன்று பிள்ளைகளையும் வைத்துக் கூலிப் பணத்தில் வளர்க்க முடியாது என்று புரிந்து கொண்ட விஜயா வேல்முருகனையும் காளீஸ்வரியையும் ஒரு தனியார் காப்பகத்தில் சேர்த்துப் படிக்க வைத்தாள். மூத்தவன் மோகன்ராஜை பேக்கரி வேலைக்கு அனுப்பினாள்.
விஜயாவுக்கு உடல்நலம் குறைந்து படுத்தப் படுக்கையானாள். மோகன்ராஜ் காப்பகத்திற்கு சென்று தாயின் நிலையைச் சொல்லி தம்பி வேல்முருகனை மட்டும் வீட்டிற்கு அழைத்து வந்தான். உடனே அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்று சேர்த்தனர். டாக்டர் பரிசோதித்து விட்டு, "புற்றுநோய் முற்றி விட்டது; இனிக் காப்பாற்ற முடியாது" என்று கூறினார்.
" டாக்டர்! எப்படியாவது எங்க அம்மாவக் காப்பாத்துங்க; எங்க அம்மா இல்லன்னா சின்ன வயசிலேயே நாங்க அநாதயா ஆயிடுவோம்."
என்று சொல்லி டாக்டரின் காலைப் பிடித்துக் கெஞ்சினர்.
" முடிஞ்சளவு ட்ரீட்மெண்ட் செய்திட்டுத்தான் இருக்கோம். ஆரம்பத்திலேயே வந்திருந்தா இன்னும் கொஞ்சம் காலம் வாழற மாதிரி செய்திருக்கலாம். ஆனா, இப்ப கேன்சர் ரொம்ப முத்திப் போச்சுப்பா! கடவுள வேண்டிக்கிங்க." என்றார் டாக்டர்.
" இப்ப எங்களுக்கு நீங்க தான் டாக்டர் கடவுள். பிலீஸ் டாக்டர்..... "
" சரி.... சரி.... எங்களால எவ்ளோ முடியுமோ அவ்ளோ முயற்சி பண்றோம்; எதுக்கும் சொந்தக்காரங்களுக்குச் சொல்லிடுங்க."
என்று சொல்லி டாக்டர் அங்கிருந்து வெளியேறினார். அழுவதைத் தவிர வேறு வழித் தெரியாமல் அழுதனர். சாப்பிடவோ வழியில்லாமல் யாராவது பாலோ ரொட்டியோ கொடுத்தால் தன் தாய்க்கு ஊட்டி விட்டு, வெறும் தண்ணீரைக் குடித்து விட்டு,
மருத்துவ மனையில் இருவரும் தாய் விஜயா கூடவே இருந்தனர். ஐந்தாவது நாள் விஜயா மருத்துவ மனையிலேயே இறந்து போனாள்.
மோகன்ராஜ் ஊருக்கு வந்து சொந்தக்காரர்களிடம் சொல்லி உதவி கேட்டான். யாரும் பிணத்தை அடக்கம் செய்ய உதவவில்லை என்பது மட்டுமல்ல. பிணத்தின் முகத்தைக் கூட யாரும் வந்து பார்க்காதது மோகன்ராஜ் நெஞ்சைப் பிழிந்தது. திரும்பி வந்து தன் தம்பியுடன் மருத்துவ மனையில் உள்ள எல்லோரிடமும், அழுதுகொண்டு,
" எங்க அம்மாவ பொதைக்கக் கூட வழி தெரியல; சொந்தக்காரங்க உதவல நீங்களாவது உதவுங்க."
என்று பிச்சைக் கேட்டு வாங்கி அந்தப் பணத்தில் தாயை அடக்கம் செய்தனர். 'தம்பித் தங்கையை வேலை செய்து படிக்க வைத்து பட்டதாரி ஆக்குவேன்' என்று மனசுக்குள் வைராக்கியம் வைத்தான் மோகன்ராஜ். வேல்முருகன் படிக்கக் காப்பகத்திற்கு சென்று விட்டான். மோகன்ராஜ்,
'இரக்கமும், மனுஷ தன்மயும் இல்லாத மிருகங்களான உறவுக்காரப் பாவிங்க இருக்கிற இடத்தில இருக்கக் கூடாது'.
என்று எண்ணியவன் புறப்பட்டு, கையில் பணம் இல்லாததால், ரெயிலிலோ பேருந்திலோ ஏறி வர முடியாமல், திருட்டு வண்டி ஏறவும் மனமில்லாமல் நடந்தே பெங்களூர் வந்து சேர்ந்து சாப்பாட்டுக்கும், தங்கற இடத்துக்கும் கஷ்டப்பட்டு, ஒரு வழியாகத் தன்னைப் பெங்களூரில் நிலைநிறுத்திக் கொண்டான்.
' தன் தாயிக்கு ஏற்பட்ட நிலம யாருக்கும் வரக் கூடாது; முடிஞ்சளவு அநாதயா யாரும் செத்து நாறக் கூடாது.' என்று முடிவெடுத்தான் மோகன்ராஜ்.
' தன் தாயைப் போல அநாதையாகச் சாகுவோரைப் புதைக்கவும், அநாதைகளாகத் திரிவோரைப் பாதுகாக்கவும் தன்னலமில்லாமல் தொண்டு செய்தான்; தன் தம்பித் தங்கைகளைப் படிக்க வேண்டிய பண உதவிகளையும் செய்து வந்தான்; படித்துத் தம்பி வேல்முருகன் டாக்டரானான்; தங்கை காளீஸ்வரியை ஒரு நல்ல இடத்தில் திருமணம் செய்து வைத்தான். தம்பிக்கும் திருமணத்தை முடித்தான். வேல்முருகன் திருமணமே செய்து கொள்ளாமல் இருந்ததால் அவனுக்கு ஆதரவாக வீட்டில் வைத்துக் கவனித்துக் கொள்ள பெங்களூருக்கு வந்து அரசு மருத்துவ மனையில் வேலைக்குச் சேர்ந்தான் வேல்முருகன்.
வீட்டில் தம்பி வேல்முருகனும் தம்பி மனைவியும் பேசியதைக் கேட்ட மோகன் ராஜ் ' என்னால் தம்பி வாழ்க்கைப் பாதிக்கக் கூடாது; முன்பு போலவே தனி வீடு எடுத்துத் தங்க முடிவெடுத்துப் புறப்பட்டான் மோகன்ராஜ். அண்ணன் வராததை அறிந்து எங்கு தேடியும் இருக்குமிடம் தெரியாமல் திண்டாடினான் வேல்முருகன்.
மறுநாள் மருத்துவ மனையில் விபத்தில் இறந்த ஒருவரின் பிணம் போஸ்ட் மார்ட்டத்துக்கு வந்தது. போஸ்ட் மார்ட்டம் செய்ய வந்த வேல்முருகன் பிணத்தின் முகத்தைப் பார்த்து அலறி மயக்கமடைந்து விழுந்தான். அந்தப் பிணம் வேறு யாருமல்ல; வேல்முருகனின் அண்ணன் மோகன்ராஜ் தான்.
............
136 .கதை
கடவுளே ஆனாலும்.....
அலைபேசியின் 'கிர்ரிங்...கிர்ரிங்...' ஓசை.
கோவையிலிருந்து மணிவண்ணனின் தாய்மாமன் சென்னியப்பன் அழைத்திருந்தார்.
"வணக்கம் மாமா" என்றான் மணிவண்ணன்.
"ஏதோ ஒரு வணிக நிறுவனத்திலிருந்து நேர்முகத் தேர்வுக்குப் போய்ட்டிருக்கேன்னு முந்தாநாள் சொன்னியே, என்ன ஆச்சு?" என்றார் சென்னியப்பன்.
"நான் தேர்வாகல " என்று வருத்தம் தோய்ந்த குரலில் சொன்னான் மணிவண்ணன்.
"அவங்க கேட்ட கேள்விகளுக்குச் சரியா பதில் சொல்லலையா?"
"அவங்க என்னைக் கேள்வியே கேட்கல." -அவன் அசடு வழிந்ததை அவனின் குரல் காட்டிக்கொடுத்தது.
"என்னடா சொல்லுறே?"
"நேர்முகத் தேர்வுக்கான நேரம் 'காலை 09.55'ன்னு குறிப்பிட்டிருந்தது. நான் சரியா '10.00' மணிக்குஅலுவலகத்துக்குப் போனேன். 'இது ஒரு வணிக நிறுவனம். நேரப் பராமரிப்பு ரொம்ப ரொம்ப முக்கியம். இதைப் போட்டியாளருக்குப் புரிய வைக்கத்தான் தேர்வு நேரத்தை ஒன்பது ஐம்பத்தைந்துன்னு குறிப்பிட்டிருந்தோம். நீ குறிப்பிட்ட நேரத்துக்கு வரலே. ஐந்து நிமிசம் தாமதமா வந்ததால தேர்வில் கலந்துக்கிறதுக்கான தகுதியை இழந்துட்டே. நீ போகலாம்'னு சொல்லி அனுப்பிட்டாங்க."
"முன்கூட்டியே போயிருக்கலாமே?"
"போயிருக்க முடியும். என்னோட 'பைக்கில்'தான் கிளம்பினேன். போக்குவரத்து நெரிசலும் இல்ல. வழியிலிருந்த கோயிலுக்குப் போயி சாமி கும்பிட்டதில் தாமதம் ஆயிடிச்சி."
"தேர்வுக்குப் போன உனக்கு அது முடியறவரைக்கும் வேறு சிந்தனையே வந்திருக்கக் கூடாது. தேர்வுக்காகப் புறப்பட்டுப் போயிட்டிருக்கும்போது, குறுக்கே கோயில் வழிபாடு எதுக்கு? போகிற போக்கில் மனசுக்குள்ள அதைச் செய்திருக்கலாமே?"
"என்னதான் மனசுக்குள்ள வேண்டிகிட்டாலும் கோயிலுக்குப் போயி நெடுஞ்சாண்கிடையா விழுந்து கும்பிடுறதில் கிடைக்கிற திருப்தியே தனி. நீங்க சாமி இல்லேன்னு சொல்வீங்க. நான் சாமியை நம்புறவன். போற வழியில்தானே கோயில், கும்பிட்டுப் போலாம்னு நினச்சேன். அம்மாவும் சொல்லி அனுப்பினாங்க."
"மாப்ள, நீ என்னைச் சரியா புரிஞ்சிக்கல. எனக்குக் கடவுள் பக்தி இல்லைதான். ஆனா, யாரையும் கடவுளை நம்பாதேன்னு வற்புறுத்தினதில்ல. உன் கிட்ட எப்பவாவது நாத்திகம் பேசியிருக்கேனா?"
"இல்ல மாமா."
"நீ கோயிலுக்குப் போறதே தப்புன்னு நான் சொல்ல வரல. ஒரு வேலையைச் செய்ய ஆரம்பிச்சா, அதைச் செஞ்சி முடிக்கிறவரைக்கும் கடவுள் உட்பட மனசில் வேறு நினைப்புக்கு இடம் தரக்கூடாதுன்னுதான் சொல்லுறேன். அன்றாட வேலைகளைச் செய்யுறது அறிவு சம்பந்தப்பட்டது. கடவுளை நம்புறதும் நம்பாததும் அவரவர் மனப் பக்குவத்தைப் பொருத்தது. கடமைகளைச் செய்யுறதுக்குன்னு நேரம் ஒதுக்குற மாதிரி கடவுள் வழிபாட்டுக்குன்னு தனியே நேரம் ஒதுக்கலாம். அதைவிடவும், மனத்தளவில் சிறிது நேரம் கடவுளை வேண்டி முடிச்சிட்டு, நினைத்ததைச் சாதிக்க இடைவிடாம முயற்சி செய்துகொண்டே இருப்பதுதான் புத்திசாலித்தனம். தொட்டதுக்கெல்லாம் "கடவுளே...கடவுளே..."ன்னு புலம்பிகிட்டுச் சோர்ந்து கிடக்குறது பைத்தியக்காரத்தனம்.
கடவுளைக் கும்பிடும்போது வேறு பணிகள் சம்பந்தப்பட்ட நினைப்புக்கு இடம் தரக்கூடாதுன்னு சொல்வாங்க. அது மாதிரி, மற்ற வேலைகளில் மனதைச் செலுத்தும்போது, செய்யுற வேலையில் மட்டுமே முழுக் கவனமும் இருக்கணும். கடவுள் உட்பட வேறு எதுக்காகவும் கவனம் சிதறக் கூடாது. சிதறினா செய்யுற தொழில் சிறக்காது.
ஏதோ என் மனசில் பட்டதைச் சொன்னேன். தப்பா எதுவும் சொல்லியிருந்தா....."
குறுக்கிட்டான் மணிவண்ணன். "நீங்க தப்பா எதையும் சொல்லல. நல்ல கருத்துகளைத்தான் சொல்லியிருக்கீங்க. ரொம்ப நன்றி மாமா" என்றான்.
.
சிறுகதை.126
எங்கே போகிறோம்?
அந்த கிராமத்தின்,தெரு கோடியிலிருந்தது.முன்னாள் இராணுவ வீரர் உதயச்சந்திரன் வீடு,பல வருடங்களாக, பூட்டி இருந்த வீடு, தற்போது திறக்கப்பட்டு,
மராமத்து பணி நடைபெற்று கொண்டிருந்தது.அக்கம் பக்கத்தினர்,வேடிக்கை பார்த்தனர்.அந்த,கூட்டத்தில் இருந்த ஒரு வயதான, மூதாட்டி
அங்கே வேலை செய்து கொண்டிருந்தவர்களிடம்,“ இது பட்டாளத்துக்கார்,வீடாயிற்றே! இப்போ யார் வரப் போறாங்க,வீட்டைசரி பண்றீங்களே!” என கேட்க, அவர்களோ“எங்களுக்கு அதெல்லாம் தெரியாது, பாட்டி, எங்க முதலாளி, வீட்டை,திறந்துவேலை பார்க்க சொன்னார்.அதான் தெரியும்”என்றனர்.“மூதாட்டியோ, சும்மா இராது,” ஏம்பா,வேலை செய்ய சொன்னா! ஏன்,எதுக்குயார் வரப் போறாங்கன்னு தெரிஞ்சுக்க,மாட்டீங்களா!, எப்படித் தான் பிழைக்கப் போறீங்களோ?” என புலம்பியபடியே சென்று விட,வேலை செய்தவர்களோ,”பாட்டிக்கு வயசானாலும், குசும்பு மட்டும் குறையவில்லை”.என்று சொல்லியபடியே வேலை செய்தனர்,.இது நடந்து ஒரு வாரம்சென்ற நிலையில்,அந்த வீட்டுக்கு உதயச்சந்திரனின்,மகன்ரவிச்சந்திரனும், மனைவி,சுபத்ராவும்,பல வருடங்களாக, வடஇந்தியா, பக்கம்,இருந்தவர்கள்,ஓய்வு, பெற்று விட,தங்களுடைய,பூர்விக,வீட்டுக்கு குடி வந்தனர்.அவர்களின்,ஒரே மகன்,இராணுவத்தில் பணிபுரியும் போது, உயிர் துறக்க, மனம்உடைந்து போயினர்.எஞ்சி யிருக்கும் வாழ்க்கையை அமைதியாய் கழிக்கஎண்ணி,இந்த வீட்டுக்கு வந்திருந்தனர்.கிராமத்து வழக்கப்படி, ஒவ்வொருத்தராக, வந்து விசாரித்து சென்றனர்ரவிச்சந்திரனும்,அவர்மனைவி, சுபத்ராவும், மாலை நேரத்தில்,நடை பயிற்சி செல்வது வழக்கம். ஒரு நாள்,நடைபயிற்சி சென்று வரும் போது,பல பெண்கள்,கூட்டமாக,அமர்ந்திருந்தனர்.எல்லோர் முகத்திலும்,சோகம்,குடிகொண்டுஇருந்தது.
சுபத்ரா அவர்களை நெருங்கி, என்ன விஷயம்ன்னு கேட்க,அதில் ஒருபெண்,எங்க அம்மாவுக்கு காய்ச்சல்,கொரனாவோ இருக்குமோன்னு பயமாஇருக்கு”,என்று கூற,“ அரசாங்கம் தான்,கூட்டம் போடாதீங்க,முக கவசம்,அணியுங்க! கைகளைசோப்பு போட்டு கழுவுங்கன்னு,சொல்றாங்களே! ஏன்,செய்ய மாட்டிங்கிறீங்க.”“அரசாங்கம், சொல்லும்,எங்களுக்கு வசதி வேண்டாமா.?,எங்க வீட்டிலே ஆண்கள்.பெண்கள், குழந்தைகள்னு,மொத்தம் இருபத்தைந்து,பேர் இருக்கோம்.வர்ற, வருமானம்,சாப்பாட்டுக்கே போறல்லை! ஊர்லே தண்ணி வசதியில்லை.கொஞ்ச தூரத்திலே ஒரு கிணறு இருக்கு,அங்கிருந்து தான்,தண்ணி. இறைச்சுகொண்டு வர்றோம்.நீங்க சொல்றது மாதிரி,அத்தனை பேரும்,கைகழுவசோப்பு,தண்ணிக்கு எங்கே போறது? அப்புறம்,முக கவசம் அணிய,எப்படிமுடியும்? ”காசு வேண்டாமா?இதை கேட்ட சுபத்ரா,இன்னும்,எத்தனை காலத்துக்கு இந்த கிராமத்து மக்கள்தண்ணீருக்கும்,மற்றும்,இதர வசதிகளுக்கும்,போராடிக் கொண்டிருப்பார்கள்.இது போன்று இன்னும் எத்தனை கிராமங்கள் இருக்கின்றன.இதற்கு தன்னால்ஏதாவது செய்ய,முடியுமா? என யோசித்தார்.
வீட்டுக்கு வந்ததும்,தன் கணவனுடன்,சேர்ந்து,ஆலோசித்தார்,எல்லாவற்றிற்கும்,அரசாங்கத்தை எதிர்பார்த்தால்,நடக்காது, நம்மை போன்று ஓய்வு
பெற்றோர்களும்,வேலை இல்லாது,ஊரை சுற்றி வரும்,இளைஞர்களும்.வீட்டில்சும்மா,இருக்கும்,பெண்களும்,சேர்ந்து,இந்த பிரச்னைகளை தீர்க்க உதவலாம்.
நாளைக்கே,இங்கே உள்ள, இளைஞர்களை, திரட்டி,குளங்களை தூர்வார சொல்ல வேண்டும்.அது மட்டுமல்லாது! பொது உபயோகத்திற்கென,தண்ணீர்
தொட்டி அமைத்து,குடிநீர்,கிடைக்க வழி செய்ய வேண்டும்,தண்ணீரை சிக்கனமாக, செலவு செய்ய,கற்றுத் தர வேண்டும்.“பெண்களை,ஒன்று, சேர்த்து, முககவசம்,சோப்பு,நாப்கின்.தயாரிக்க,ஏற்பாடு,செய்ய வேண்டும்.இதற்கான பணத்தை,நாமும்,மற்றும்,சில,வசதியானவர்
களிடம்,பெற்று,அரசாங்க அதிகாரிகளிடம்,அதற்கான, உரிமை, பெற்று,விரைவில் செயல்பட வேண்டும்,அது மட்டுமல்லாது, இவர்கள்,தயாரிக்கும்,பொருட்களுக்கு உரிய விலை கிடைக்கவும்,செய்ய வேண்டும்,”என கூறியவர்,மறுநாளே,தன்,மனைவியின் துணை கொண்டு, பெண்களிடம்,பேச, அவர்களும்ஆர்வம்காட்டினர், பெண்களின் ஆர்வம், கண்டு,இளைஞர்களும்,ஓய்வுபெற்றவர்களும்,முன்வர,வேலைகள்,துரிதமாக நடை பெற்றன.இவர்களின்முயற்சிக்கு,அரசாங்க அதிகாரிகளும்,ஆதரவு தர,மள,மளவென,வேலைகள்நடந்து,அவர்கள்,நினைத்தபடி எல்லாம் முடிய,எல்லாரும்,ரவிச்சந்திரனையும் அவர், மனைவி,சுபத்ராவையும்,பாராட்டினர்.அந்த கிராமும் முன்னேறியதுஇதை முன் உதாரணமாக கொண்டு, மற்ற,கிராமங்களும்,செயல்பட வேண்டும்என பாராட்டிய அதிகாரிகள் கூறினர்.வேலையிலிலருந்து ஓய்வு பெற்றவர்களும்.வேலை கிடைக்கவில்லைஎன்ற விரக்தியில்,போதையை,நாடி செல்லும் இளைஞர்களும்,அதிகம் படிக்கமுடியாமல்,தொலைக்காட்சியை பார்த்து பொழுது போக்குபவர்களும்,ஒன்றுசேர்ந்து,தாங்கள்,குடியிருக்கும்,பகுதிக்கு,தேவையானவற்றை, செய்ய ஆரம்பித்
தால்,நாடு விரைவில்,முன்னேற்றம் அடையும்.கிராமங்கள்,முன்னேற்றம்அடைந்தால்தான்,நாடு முன்னேற்றமடையும்.அது மட்டுமல்லாது இனிவருகிற, நம் சந்ததிகளும்,இதை பார்த்து அவர்களும்பின்பற்றுவார்கள்,என்பதில் சந்தேகம், கிடையாது.மனமும் உற்சாகத்துடன்.இருக்கும்.தேவையில்லாத மன உளைச்சல் வராது.என,,மனநல காப்பகத்தில்சிகிச்சை எடுத்து கொண்டிருந்த, ஓய்வு பெற்ற ஒருவர்,தன்னை பேட்டிகாணவந்த,தொலைக்காட்சி, பெண்மணியிடம்,தன் கிராமத்தில்,நடந்ததை,விலாவாரியாக சொல்லிக் கொண்டிருந்தார்..மறுவாரம் இந்நிகழ்ச்சி,தொலைக் காட்சியில்ஒளி பரப்பாக,அதனை பார்த்தவர்கள்,பாராட்டியபடியே,தனது, அடுத்த தொலைக்காட்சி தொடரை பார்க்கலாயினர்.எங்கே,போய்க் கொண்டிருக்கிறோம்,நாம்?”
வாழ்க வளமுடன்
கதை 109
புத்தாண்டு சபதம்
குமார் ஆறாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கும் சிறு பையன். விளையாட்டில் அவனை அடித்துக் கொள்ள ஆளே இல்லை. ஆனால் மைதானத்தில் தன் திறமையை வெளிப்படுத்தும் யாரும் வகுப்பறையின் நான்கு சுவர்களுக்குள் சாதித்துவிட முடியாது என்ற எழுதப்படாத சட்டம் குமாரையும் பாதித்தது.
அன்று காலை குமாரும்,கோகுலம் பள்ளியை நோக்கி நடந்து செல்லும்போது பேசிக்கொண்டது, டேய் குமாரு வரவர நீ விளையாட்டு மைதானத்தில் காலையில இருந்து சாயங்காலம் வீட்டுக்கு போறவரைக்கும் விளையாடிட்டு இருக்க, டீச்சர் உன்னை ரொம்ப திட்டினாங்க டா. இன்னைக்கு கிளாஸ்ல நம்மளோட புத்தாண்டு சபதத்தை பத்தி எல்லாருமே முன்னாடி வந்து பேசணுமாம். அதுக்கு நிச்சயம் மார்க் போடுவாங்களாம் . கண்டிப்பா இன்னைக்கு மறக்காம கிளாசுக்கு வந்துடு.
சரிடா கேம்ஸ் டீச்சர்ட சொல்லிட்டு வந்துடுறேன். ஆமா ஒன்னோட புத்தாண்டு சபதம் என்ன? எத பற்றி சொல்ல போற?
இந்த வருஷம் நடக்கிற எல்லா டெஸ்ட்லயும் நான் மட்டும் தான் ஃபர்ஸ்ட் மார்க் வாங்கணும் . அந்த கார்த்திக் பையன் ரெண்டு தடவை என்னை முந்தி விட்டான். அப்புறம் இனிமே கிளாஸ் லீடரா நான் மட்டும் தான் இருப்பேன் வேற யாரையும் இருக்க விடமாட்டேன். இதுதாண்டா என்னோட சபதம்.
என்னடா,நீ ஜெயிக்கிறதுக்கு ஏதாவது சபதம் எடுக்க சொன்னா மத்தவங்கள தோக்கடிக்கிறத பத்தியே பேசுற?
டேய் இதெல்லாம் நீ சொல்றியா? நீயே கிளாசுக்கு வரதில்லைனு டீச்சர் அந்த திட்டு திட்டுறாங்க .இதுல என்ன குறை சொல்ல வந்துட்டான் போடா.
சரி நிறைய மார்க் எடுக்கிறது விட உனக்கு மிகப்பெரிய சபதம் இருக்கா? சொல்லுடா குமாரு.
அதுவா, நான் இப்போதெல்லாம் கிளாசுக்கு வரதே இல்லைனு நம்ம டீச்சர் எங்க கேம்ஸ் டீச்சர்ட கம்ப்ளைன்ட் பண்ணிட்டாங்க. போன மாசம் நடந்த அரையாண்டு தேர்வுல எல்லா பாடத்திலும் நான்
பெயிலாம். இப்படியே போனால் அடுத்த வருஷம் ஏழாம் கிளாஸ்கு அனுப்பமாட்டார்களாம்.
ரொம்ப திட்டிட்டாங்க டா. எனக்கு ரொம்ப கஷ்டமா போச்சு. கேம்ஸ் டீச்சரும் என்ன திட்ட போறாங்கன்னு நினைச்சேன். ஆனால், அவங்க எனக்கு ஒரு விஷயம் சொல்லி கொடுத்தாங்க டா அத நான் மறக்கவே மாட்டேன்.
இங்கே பார் குமார் , கிளாஸ் டீச்சர் திட்டுறாங்க ,வீட்டுல யாருமே சப்போர்ட் பண்ணல , எக்ஸாம்ல மார்க் வரல, இப்படியெல்லாம் சின்னச்சின்ன பிரச்சனையை பார்த்து பயந்து உன்னோட திறமையை விட்டுக் கொடுத்துறாத. இன்னைக்கு கிரிக்கெட் கடவுள்னு சச்சின் டெண்டுல்கரை உலகமே கொண்டாடுதே , அவரு படிச்சது பத்தாவது தான். பொம்பள பிள்ளைங்கள வீட்டை விட்டு வெளியே அனுப்புறதுக்கு இன்னும் கூட யோசிக்கிற சின்ன கிராமத்திலிருந்து வந்த மேரி கோம் இன்னைக்கு குழந்தை பிறந்ததுக்கு அப்புறம் கூட குத்துச்சண்டையில் யாருமே முறியடிக்காத சாதனையை பண்ணியிருக்காங்க.
அதே மாதிரி உனக்கு கபடில பெரிய எதிர்காலம் காத்துகிட்டு இருக்கு. அதுக்காக நீ கஷ்டப்பட்டு போராடனும் .” இன்னைக்கு உன்னை திட்டுற அதே வாய் ஒரு நாள் உன்னை புகழும் குமார் “ அதை மட்டும் மறந்துடாத.
எப்படியாச்சும் “நேஷனல் கபடி பிளேயர் “ ஆயிடனும்ண்டா கோகுல். இந்த வருஷத்துல இருந்து அதுக்காக முழுமூச்சா உழைக்கப் போறேன். அதுதான் என்னோட புத்தாண்டு சபதம்.
ஹாஹாஹா ..,… எவ்வளவு சொன்னாலும் திருந்த மாட்டியா டா ? கிளாஸ்கு வா, டீச்சர் உன்ன எப்படி பந்தாட போறாங்கன்னு பாரு. கபடி விளையாடுரானாம் கபடி.
ஆண்டுகள் பல உருண்டோடின நட்சத்திர கபடி விளையாட்டு வீரராக ஜொலித்தார் குமார்.தமிழ்நாடு கண்டடைந்த மாபெரும் சொத்தாக குமாரை அனைவரும் கொண்டாடினர்.
மாத சம்பளத்திற்காக இயந்திரமாய் ஓடிக்கொண்டிருக்கும் கோகுல் தன் இரு மகன்களிடமும் சொன்னான், அதோ டிவில வராரே குமார் அவர் என்னோடு உயிர் நண்பர் .
போன வாரம் கூட எனக்கு மெசேஜ் பண்ணார்னா பாத்துக்கோயேன். ஸ்கூலில் இருக்கும் போதே தெரியும் குமார் பெரிய ஆளாக வருவார்னு…………..
கதை 106
“ நீயா..நானா..? “
அலுவலகப்பணி முடித்த களைப்புடன் வீட்டுக்குள் நுழைந்தான் பாலு.
வெறும்கையோடு கணவன் வந்திருப்பதைக்கண்டு கடுப்பானாள் ரேவதி.
“என்னங்க..பால்பாக்கெட்டும், டீத்தூளும் வாங்கிட்டு வரச்சொன்னேனே” எரிமலையாய் முறைத்தாள்.
“அடடா..ஆபிஸ் மீட்டிங் மும்முரத்தில் நீ சொன்னது சுத்தமாக மறந்து போச்சு..சாரி…” அசடு வழிந்தான்.
“எப்பவும் நான் சொல்வதை மறக்கறதுதான் உங்களுக்கு பிழைப்பு அத்தனை அலட்சியம்..இப்படி பொறுப்பில்லாமல் பல வருடங்களை ஓட்டியாச்சு..” எரிந்து விழுந்தாள்.
“ஓவராக சவுண்ட் உடாதே! இப்பவேபோய் வாங்கிட்டு வந்திடறேன்” சமாதானம் கூறினான்
“ எப்ப போய் எப்ப திரும்பறது..அரை மணிநேரம் இழுத்திடுவீங்க எனக்கு ஒரே தலைவலி..நீங்க இன்னொரு தலைவலி.!”நக்கலடித்தாள்.
அவளைச் சட்டை செய்யாமல் காருக்குள் புகுந்து, விரைவாக ஓட்டிச் சென்று பொருள்களோடு வந்து சேர்ந்தான்.
“இந்த வெட்டி வேலை தேவையா..நீங்க என்னைக்குத் தான் திருந்த போறீங்களோ..”
“ஏய்..!நீ கேட்டதை வாங்கியாச்சில்ல..அதோட விடேன்.. மறுபடியும் ஏன் வாயைக் கிளர்றே..நான் ஒரு எக்ஸிகுவிடிவ்ங்கிற நினைப்பு உனக்கு என்னைக்காவது வந்திருக்கா?பிரச்னை வளர்த்து திட்டுவதே வழக்கம்”
“ஆமா..பொல்லாத ஆபிசர்..வீட்டுக்கு வந்துட்டா பெரிய குடும்பத் தலை வரு! மகாராஜாவை சிரித்து வரவேற்று உபசரிக்கணும்.வீட்டில் வெட்டி முறிக்கிற மாதிரி தான் ஆபிசிலும் கிழிப்பீங்க”
ஆபிஸ்பணிபற்றி கிண்டலடித்ததும்,பாலுவுக்கு கோபம் தலைக்கேறிற்று.
:அடியேய்…! உங்க பரம்பரைக்கே மரியாதைக்கு அர்த்தம் தெரியாதுடி.. நாளுக்குநாள் உன் அழிச்சாட்டியம் அதிகமாகுது. மேற்கொண்டுபேசாதே நாயே..!”
“உங்க பரம்பரை மட்டும் உசத்தியோ?பதிலுக்கு பதில் வாயாடறீங்களே.. மரியாதை குறையுது.ஓ..அந்த அளவுக்கு மட்டமா ஆயிட்டேனா ? சாமி போதும்..ஆளை விடுங்க ! இனிமேல் உங்களுக்கும் எனக்கும் பேச்சு வார்த்தை இல்லை! அவங்க அவங்க கடமையை செய்வோம்.என் பெட் ரூமுக்கு நீங்க வரவே கூடாது..உங்க கம்ப்யூட்டர்ரூமிலேயே படுத்துக்க ணும்..சரியான ஆம்பிளையா இருந்தால், இந்த நிபந்தனைபடி நடந்து காட் டுங்க.. பார்க்கலாம்”
“ஓ.கேடீ.ரேவதிசபதமா ? சின்ன விஷயத்தை ஊதி பெருசாக்கிட்டே. நானும் ரெடி. உன் சவாலை சமாளித்து ஜெயித்து காட்டறேன் பார்..!”
“அப்புறம்பல்லிளிச்சிட்டு வந்து ஏதாவது கேட்டீங்க..ரசாபாசமாயிடும்..” பத்ரகாளியாய் நாக்கைத் துருத்தினாள்.
மொபைல் சார்ஜர், ஸ்பெக்ஸ், மணிபர்ஸோடு தன்கணினி அறைக்குள் நுழைந்தான்.
‘அப்பாடா.இனி நிம்மதி!’
பாலு வளர்ந்துவரும் எழுத்தாளன். இரண்டு பேரும் வேலைக்கு சென்று வந்தபோது, எந்த பிரச்சினையும் இல்லாமல் இருந்தது. பணிமுடிந்தபிறகு கிடைக்கும் ஓய்வு நேரங்களில் கதை எழுதுவான். ‘. ரேவதி பள்ளி ஆசிரியை வேலையை முடிச்சிட்டு வெளியூரிலிருந்து வீட்டுக்குவர-இரவு ஏழு மணி ஆகிவிடும்.. அவள் வருவதற்குள் எழுதிய கதைகளைத் திருத்தி,தயார் செய்ய நேரமா கிடைச்சுது..ஆனால் சுகர்,பிரஷர்னு உடம்பு வம்பு செஞ்சதால அவள் விருப்பஓய்வு எடுத்துட்டு வீட்டிலே இருப்பதால் என்கிட்ட வாதம் செய்து மூட்அவுட் பண்றது தினமும் தொடருது.கதைப்போட்டிக்கு படைப்புகள் அனுப்பமுடியாமல் தவிச்சிட்டிருந்தேன்.. இந்த சமயத்தில் ரேவதி என்னை ஒதுக்கி ஓரம்கட்டினது நல்லதாப்போச்சு. அதுக்காகதான் காத்திருந்தேன். நிறைய சிறுகதைப்போட்டி வந்திட்டிருக்கு.. தனியாக உட்கார்ந்து நல்ல கதைகள் உருவாக்கலாம். .கற்பனைக் குதிரையைத் தட்டிவிட்டு பரிசுகளைத் தட்டிடலாம்..நல்ல வாய்ப்பு..! நழுவ விடாதே பாலு…உர்ரே!’ என மனதுக்குள் துள்ளியவாறு, எழுத்துப்பணியை யாருடைய தொந்தரவும் இல்லாமல் நிம்மதியாக சுதந்திரமாக மகிழ்ச்சியோடு செய்யலானான் பாலு.
கதை. 104
அலைபேசியின் அவஸ்தையும்.... இன்டர்நெட்டின் இம்சையும்....
அடடா! இந்த பட்டுச்சேலை எவ்வளவு அழகாக இருக்கே என்று மாலா வாட்ஸ்அப்பில் அவள் தோழி சாருவின் ஸ்டேட்டஸை பார்த்துக் கொண்டிருக்கையில், திடீரென ஒரு மேசேஜ் முகநூலில் வந்தவுடன் மாலா வாட்ஸ்அப்பிலிருந்து தாவி முகநூல் பக்கத்தில் வந்த காணொளிகளைப் பார்த்து கொண்டிருக்கும் சமயத்தில், மாலா...மாலா... என்று அவரது தந்தை அழைத்தார். ஐயையோ! அப்பா டீ போட்டு தர சொல்லிருந்தாங்களே.. மொபைல் பார்த்து கிட்டே பால், டீத்தூள் போட்ட நான் அடுப்பு ஆன் செய்ய மறந்து விட்டேனே என்று தலையில் அடித்து கொண்டு அடுப்பை ஆன் செய்து டீ கொண்டு போய் தந்தையிடம் கொடுக்க, என்னமா டீ போட ஒரு மணி நேரமா என்று கேட்டுக் கொண்டிருக்கையில் சுடுடா...சுடுடா... அவனை என்று பக்கத்தில் உள்ள அறையில் இருந்து சத்தம் வந்ததை கேட்ட தந்தை கதவை திறந்து பார்த்தால் இன்டர்நெட்டில் விளையாடி கொண்டிருந்தான் வருண். ஆன்லைன் வகுப்பில் யாரை சுட்டு கொண்டிருக்கிறாய் என்று கோபத்தில் அவனது தந்தை கேட்க, தன் மூக்கு கண்ணாடியை அணிந்து பாடம் படிக்க துவங்கினான் வருண்.
அக்காலத்தில் அலைபேசியும், இன்டர்நெட் பயன்பாட்டில் இல்லாத போது நூறில் ஒருவர் தான் மூக்கு கண்ணாடி அணிவார்கள். இக்காலத்தில் சிறுவயதிலே குழந்தைகள் மூக்கு கண்ணாடி அணியும் நிலை உருவாகியுள்ளது. காரணம் தெருவில் ஓடி, ஆடி விளையாட வேண்டிய குழந்தைகள் இன்டர்நெட்டில் விளையாடி கொண்டிருக்கின்றனர்.
அவசர தேவைக்காக கண்டுபிடிக்கப்பட்ட அலைபேசியும், இன்டர்நெட்டும் அத்தியாவசிய தேவையாக மாறியது மட்டுமில்லாமல் அநாவசியமாகவும் பயன்படுத்தபடுகிறது. பலரின் வாழ்வில் மாற்றத்தையும், சிலரின் வாழ்வில் ஏமாற்றத்தையும் ஏற்படுகிறது. அலைபேசியையும், இன்டர்நெட்டையும் தேவைக்கு மட்டும் பயன்படுத்தினால் உடல் நலமுடனும், மனநிறைவுடன் வாழலாம்!!! அனைத்தும் நம் கைவசம் தான் உள்ளது. சிந்தித்து செயல்பட வேண்டும்.
கதை. 103
உள்ளாடை
அது வாரத்தின் இறுதி நாள் முடிந்தவுடன் மனைவி கொடுக்கும் காபியை குடித்து விட்டு காலை நீட்டி நிம்மதியாக இன்னும் ஒரு மணி நேரம் தூங்கலாம் என்ற ஆனந்தத்தில் ஒவ்வொரு ஆண்மகனும் திளைக்கும் நாள். ஆனால் ஆணுக்கு இருப்பது போலவே பெண்ணுக்கு அந்த நாள் ஓய்வு நாளாக இருப்பதில்லை.
இப்படியாகத்தான் ராஜேஸ்வரியின் விடியல் பல்வேறு (வீட்டு) வேலை பளுவுடன் தொடங்கியது.காலை எழுந்தவுடன் வீட்டில் இருப்பவருக்கு காபி போட்டு தருவதில் இருந்து துவங்கியது அந்த நாளுக்கான ஓட்டம்.
ஏய் ரேவதி இன்னும் நீ படுக்கையைவிட்டு எந்திரிகளயா?வீட்டில் ஆம்பளைங்க தான் இவ்வளவு நேரம் தூங்குறாங்கனா, பொட்ட புள்ள நீயும் எரும மாடு மாதிரி இவ்வளவு நேரமா தூங்குறது?நாளைக்கு கல்யாணமாகிப் புகுந்த வீட்டுல இவ்வளவுவு நேரம் தூங்கிட்டு இருந்தா, உன்னோட மாமியார்காரி ஒன்னே ஒன்னும் சொல்ல மாட்டா, பிள்ளைய வளர்த்து இருக்கா பாருன்னு ஊருக்கே தண்டோரா போட்டு என்னோட பேரு தான் சந்தி சிரிக்க வச்சுடுவா.
எவ்வளவு சொல்றேன் இன்னும் எந்திரிக்குருக்கிறாளா பாரு? (அடுப்பங்கரையில் இருந்து பறந்து வந்தது தோசை கரண்டி)
இப்ப என்னம்மா உனக்கு பிரச்சனை? அப்பா, அண்ணன் எல்லாரும் இன்னும் தூங்கிட்டு தான இருக்காங்க ,என்னை மட்டும் நொய்நொய்யினு ஏதாவது சொல்லிக்கிட்டே இருக்க?
விடிஞ்சதும் வாயைத் திறக்காத ரேவதி, போய் முகத்தக் கழுவிட்டு வாஷிங் மிஷின்ல இருக்கிற துணி எல்லாத்தையும் எடுத்துட்டு போயி வெயிலில் காய போட்டுட்டு வா. தோசை சுட்டு வைக்கிறேன்.
(இவர்கள் வசிக்கும் குடியிருப்பு சீட்டுக்கட்டை அடுக்கி வைத்தாற்போல் இருக்கும் அடுக்குமாடி குடியிருப்பு. எல்லோருக்கும் பொதுவானதாக தான் இருந்தது துணி காயப் போடுவதற்காக இடம்)
வாஷிங் மிஷின் துவைத்த துணிகளை காயப் போடுவதற்காக வெளியே வந்தாள் ரேவதி. அங்கே 5 வாலிபர்கள் நின்று பேசிக் கொண்டு இருந்தார்கள்.அவர்களை கடந்து செல்வதற்கே ரேவதிக்கு சங்கோஜமாக இருந்தது. தலையை குணிந்தார்போல் ஒவ்வொரு
துணியாக எடுத்து காயப்பட்டு கொண்டே இருந்த ரேவதிக்கும் அந்த தர்மசங்கடமான சூழ்நிலை ஏற்பட்டது.
அந்த வாரம் முழுவதும் சேர்த்து வைத்த உள்ளாடைகள் அனைத்தையும் ஒன்றாக துவைத்து வைத்திருந்தாள் அம்மா.
அந்த பசங்களுக்கு முன்னாடி இதை எப்படி எடுத்து காய போடுறது? ரேவதிக்கு ஒரு மாதிரியாக இருந்தது.
(அப்போது ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்த அம்மா சத்தம் போட்டு சொன்னாள்) ஏய் ரேவதி, உன்னோடு உள்ளாடைகள் எல்லாத்தையும் நல்லா விரிச்சு வெயில் படும் இடத்தில காயப்போட அப்பதான் சுத்தமா இருக்கும்.
ரேவதிக்கு அழுகையே வந்துவிடும் போலிருந்தது. உள்ளாடைகளை கையிலெடுக்கும் போது அங்கே நின்று கொண்டிருக்கும் பசங்க பார்த்துடுவாங்கலோ? ரோட்டுல போற யாராவது பார்த்துவிடுவார்களோ? தயங்கித் தயங்கி எப்படியோ காயப்போட்டு முடித்தாள். வரிசையாக அணிவகுத்து நின்ற உள்ளாடைகள் அந்த பசங்களை பார்த்து பல்லிளித்து.
(மதியம் மூன்று மணி) ஞாயிற்றுக் கிழமைக்கான கரிவிருந்து திருப்திகரமாக முடிந்தது.
ஏய் ரேவதி, காயப்போட்ட துணி எல்லாத்தையும் போயி எடுத்துட்டு வந்துரு. இந்நேரம் நல்லா காஞ்சு இருக்கும்.
இப்போதாவது யாருக்கும் தெரியாமல் வேகமா எடுத்துட்டு வந்துருவோம். (வேகமாக ஓடினால் ரேவதி)
எதிர் வீட்டு பையன் சரியாக அதே இடத்தில் அமர்ந்து போன் பேசிக் கொண்டிருந்தான். நிமிர்ந்து பார்ப்பதற்கு கூட சங்கோஜப்பட்ட ரேவதி , வேகவேகமாக உள்ளாடைகளை எடுத்தாள்.அப்போது அடித்த காற்றில் ஒரு உள்ளாடை பறந்து சென்று சரியாக அந்த பையனின் காலடியிலேயே விழுந்துவிட்டது .அவன் அதைப் பார்த்துவிட்டதை உணர்ந்த ரேவதி, உடம்பெல்லாம் கூசியவளாய், அந்த உள்ளாடையை வெடுக்கென்று எடுத்து தன் கையால் மறைத்துக் கொண்டாள்.
செய்யக்கூடாது எதையோ செய்து விட்டார் போலும் உடம்பெல்லாம் வியர்த்தது.இனி அந்த பையன் முகத்தில் எப்படி விழிப்பது என்று வெட்கி தலைகுனிந்தவளாய் வீட்டில் நுழைந்தாள் ரேவதி.
இந்த சங்கோஜம் உணர்வைத் தன் அம்மாவிடம் கூட மனம் விட்டு சொல்ல முடியாதவளாய் மீண்டும் மறுநாள் காலையில் அதே உள்ளாடைகளை விரித்து காய போட வேண்டிய நிலையிலிருந்தாள் ரேவதி.
கதை. 102
க்வாரன்டைன்
என் அறையின் ஜன்னல் கதவை மெதுவாகத் திறந்து, ஹாலில் யார் இருக்கிறார்கள் என்று பார்த்தேன்.பேத்தி ஸ்ருதிக்கு கைகளில் மருதாணி வைத்துக் கொண்டிருந்த மருமகள் இனியா, சப்தம் கேட்டு ,"என்ன மாமா ஏதாவது வேண்டுமா" என்றுகேட்டாள்..."கொஞ்சம் குடிக்கத் தண்ணீர் வேண்டும்..." என்றேன்.
"ஸ்ருதி…. எழுந்து போய் பேனடியில் சோபாவில் உட்கார்ந்து டிவி பாரு.." என்று மகளை அனுப்பிவிட்டு ,இனியா உள்ளே சென்றாள்... கைகளைக் கழுவிக்கொண்டு , தண்ணீர் பாட்டில்கள் இருந்த அட்டைப் பெட்டியிலிருந்து இரண்டு பாட்டில்கள் எடுத்து வந்து என் ஜன்னல் மேடையில் வைத்தாள்..இதற்கு கூட ஒருவரை ஏவுகிறோமே என்றிருந்தது..என்ன செய்ய...நான் தான் எங்கள் வீட்டிலேயே ஒரு அறையில் என்னைத் தனிமைப் படுத்திக் கொண்டிருக்கிறேனே...வேளா வேளைக்கு எனக்கு சாப்பாடு காப்பி, எல்லாம் இந்த ஜன்னல் மேடைக்கு வந்துவிடும்..எல்லாம் டிஸ்போஸபிள் பாத்திரங்களில் தான்.ஏறக் குறைய பதின்மூன்று நாட்களாக இப்படித்தான்..மூன்று மாதங்களுக்கு முன்பு என் நெருங்கிய சிநேகிதனின் பிள்ளை கல்யாணத்திற்காக பெல்லாரிக்குச்சென்றவன் கொரோனா ஊரடங்கால் அங்கேயே அவர்கள் வீட்டிலேயே தங்கும்படி ஆகிவிட்டது.வேறு வழியில்லை.
அவர்களுக்கும் எங்களுக்கும் ஒரு சகஜமான நெருக்கமான தொடர்பு இருந்ததால் பிரச்னை இல்லை . என் அப்பாவின் திதிக்குள் நம் ஊருக்கு நம் வீட்டுக்குப் போய் விடவேண்டுமென்று
எனக்கு ரொம்பக் கவலையாக இருந்தது.ஒன்று,இரண்டு,மூன்று என்று ஊரடங்கு தொடர்ந்து கொண்டே இருந்ததால் அப்பாவின் திதி நடக்கணும் என்று ஒரே டென்ஷன்...நல்ல வேளை இந்த ஈபாஸ் முறை வந்ததால் என் மகன் தெரிந்தவர்கள் மூலம் எனக்கு ஈபாஸ் வாங்கி ஒரு பிரைவேட் டாக்சியில் நான் இங்கே வந்து சேர ஏற்பாடு செய்து நானும் சௌகரியமாக வீட்டுக்கு வந்து சேர்ந்து விட்டேன்.
ஈபாஸில், உங்கள் இடம் போனதும் நீங்கள் உங்களை பதினாலு நாட்களுக்கு தனிமைப் படுத்திக் கொள்ள வேண்டும் என்று ஒரு கண்டிஷன் மாதிரி எழுதியிருந்தது.
எனக்கு உடம்பில் சுகர்,பிரஷர், போன்ற எந்தக் கோளாறும் கிடையாது.இந்த எழுபத்தைந்து வயதுக்கும் தினமும் இரண்டு மைல் நடைப் பயிற்சி செய்வேன்.எங்கள் வீடு இரண்டாம் தளத்தில் இருந்தாலும் கீழே இறங்க,மேலே ஏற மாடிப் படிகள் தான் உபயோகப் படுத்துவேன். லிப்ட் பக்கமே போக மாட்டேன். இப்பொழுதும் எனக்கும் சரி, .நான் தங்கியிருந்த வீட்டிலோ ஏரியாவிலோ யாருக்கும்கொரோனாத் தொற்றுக்கான அறிகுறி ஒன்றுமில்லை.
என்மகனும் மருமகளும் கூடச்சொன்னார்கள்..."அப்பா,நீங்கள் வெளியில் வாசலில் என்று தான் போக க்கூடாது. வீட்டுக்குள்ளேயே தனியாக இருந்தால் போதும்.. அவ்வளவுதான். இப்படி ஜெயில் மாதிரி அடைந்து கிடக்க வேண்டாம் ." என்று.
ஆனால் நான் ஒத்துக் கொள்ளவில்லை.. அரசாங்கம் ஒரு ரூல் போட்டால் நாம் அதை மதித்து நடக்கணும். மீற க்கூடாது என்று சொல்லி, ஊரிலிருந்து வந்ததும் இந்த அறைக்குள் புகுந்து கொண்டேன். இன்னும் இரண்டு நாட்களில் என் அப்பாவின் திதி வருகிறது..
"அப்பா, உங்கள் ஜெயில் வாசம் முடிந்து விட்டது.. வெளியே வந்து தாத்தாவுக்குப் படையல் போடுங்கள்."என்று கூறிக்கொண்டே என் அறை க் கதவைத் திறந்து விட்டான் என் மகன்..
அப்பாடா...நான் சட்டப்படியும் நடந்து கொண்டேன்..என் மனஸுப் படி என் அப்பாவுக்கு திதியும் கொடுக்கப் போகிறேன்.... இனி கொரோனாவெல்லாம் ஓடிப்போய்விடும் என்று என் மனத்தில் அசைக்க முடியாததொரு நம்பிக்கை தோன்ற நிம்மதியாக குளியலறைக்குச்சென்றேன்.
கதை. 101
பாட்டி
சென்ற வெள்ளிக்கிழமை மாலை. உலக மகா அதிசயமாக எங்கள் வீட்டில்.. அப்பா,நான், என்தம்பி ,என்தங்கை ,அம்மா ,பாட்டி உள்பட எல்லோரும் ஒன்றாக ஹாலில் அமர்ந்து டிவி பார்த்துக் கொண்டிருந்தோம் . ஹைதர் காலத்துப் படம் ஒன்று எனோ தானோன்னு ஓடிக் கொண்டிருந்தது.
"நீ ஆயிரம் சொல்லுடா சத்யா சிவாஜி க்கு நிகர் சிவாஜிதாண்டா... கலைஞர் எழுதிய மனோகரா வசனத்தை வேற யாரால பேச முடியும் சொல்லு ". பாட்டி மட்டும் தான் ...அப்பாவிடம் சொல்வது போல் தனக்குத் தானே ரசித்துக் கொண்டு
படத்தோட ஒன்றிப் போய் அமர்ந்திருந்தார்.
பாட்டிக்கு ஈடு கொடுத்து அப்பாவால் படத்தில் கவனம் செலு
த்த முடியவில்லை. டின்னர் நினைவு வந்து விட்டது."இந்திரா ...ராத்திரிக்கு . என்று ஆரம்பித்தவர் சாப்பிடுவதற்கு என்ன செய்யப் போறே என்பதை சைகையால் கேட்டார்...பாட்டிக்கு டிஸ்டர்ப் செய்யக் கூடாதாம்.
" என்ன செய்யறது... தினமும் யோசிச்சு யோசிச்சு அலுப்பாயிருக்கு... உப்புமா தான் செய்யணும் ...."அம்மாவின் இந்த பதிலுக்குத்தான் காத்திருந்ததுபோல் உடனே அப்பா, " இந்திரா ..நீ கஷ்டப் படாதே.. இன்று நாமெல்லாம் வெளியில் போய் சாப்பிட்டு வரலாம்.என்று சொல்லவும் "ஹாய் .ஜாலி ..விடுதலை ப்ரம் உப்புமாவுடன் சண்டை."
நாங்கள் மூவரும் கையைத் தட்டிக் கத்தினோம் .
"ஏண்டா பசங்களா இப்படிக் கத்தறேள்..சிவாஜி பேசறது காதில விழாதபடி..."பாட்டி அலுத்துக்கொண்டாள்.
"சிம்மக் குரலோன் சிவாஜி சாரின் கர்ஜனை தெருவுக்கே கேக்கறது.. உங்க காதுக்கு உங்களைவிட ரொம்ப வயசாயிடுத்து பாட்டி ..உங்களுக்கு பேசாம எங்க கம்பெனியிலிருந்து ஒருமெஷின்கொண்டு வந்து தரேன். காதிலே தோடு மாதிரி பொருத்தி க்கோங்கோ ."என்றேன் ."போடா நீ காது மெஷின் தயாரிக்கும் கம்பெனியில் வேலை செய்யறேன்னு பாட்டியை ரொம்பக் கலாய்க்காதே. பாட்டிக்கு காது,கண் எல்லாம் பர்பெக்ட்டாத்தான் இருக்கு ." அம்மா
பாட்டிக்கு சப்போர்ட்.
"சரி சரி எல்லாம் கிளம்புங்கோ.இன்னிக்கு வெள்ளிக்கிழமை கராமா பக்கம் டிராபிக் ரொம்ப ஜாஸ்தியாயிருக்கும். போற வழியிலே எந்த ரெஸ்ட்டாரெண்ட்ன்னு முடிவு பண்ணிக்கலாம். "அப்பா எங்களை விரட்டினார்.
"டிவியை மூடிட்டுக் கிளம்பும்மா. கேட்ச்சப் சேனல்லதானே ஓடிண்டிருக்கு. வந்து தொடரலாம்.."பாட்டியையும் முடுக்கினார்.
"ஆமாமில்லே. இந்த துபாயில் இது ஒரு சௌகரியம்.மகராஜன் கேட்ச்சப்னு ஒரு வசதி குடுத்திருக்கான்.. விட்டுப் போகாம எல்லாத்தையும் பாக்க முடியறது ......"பாதில கிளம்ப வேண்டிருக்கேன்னு புலம்பாம பாட்டியும் கிளம்பிட்டா.
எங்களுக்கு மிகவும் பழகியரெஸ்ட்டாரெண்டுக்குப் போனோம். முதலில் அப்பா எல்லாருக்கும்சூப் ஆர்டர் பண்ணினார். "எனக்கு சூப்பெல்லாம் வேண்டாண்டா. அதுவே வயறு நெறைஞ்சுடும்னு " எப்பவும் போல பாட்டி நிராகரிச்சுட்டா.
எங்களுக்கெல்லாம் ஹோட்டலுக்கு சாப்பிட வந்தால் சூப்பை சூப்பிக் குடிக்கிறதிலிருந்து ஆரம்பிச்சாத்தான் ஜென்ம சாபல்யம்..
அடுத்து மெயின் அயிட்டங்கள் தயாராகி வர நேரமாகுமே.. அதுவரை அக்கம் பக்கம் டேபிள்
காரர்கள் சாப்பிடுவதை நாக்கில் ஜலம் ஊறப் பார்த்துக் கொண்டிருக்க முடியுமா.. மெனு கார்டைப்பார்ப்பதற்கு முந்தியே வெய்ட்டர், எங்களை பற்றி நன்கு தெரியும் அவருக்கு "சார், குழி ப்பணியாரம் ஒரு பிளேட், இன்றைய ஸ்பெஷல் .... உப்புமாக் கொழுக்கட்டை. ஒரு பிளேட் .ரெண்டுமே கொண்டு வரவா.. சாப்பிட்டுக் கொண்டே இருங்க. அதுக்குள்ளே நீங்க எல்லார் கேட்டதும் ரெடியாயிடும்." என்று சொல்லும்போதே; .. "அய்யய்யோ ...உப்புமா கொழக்கட்டை .. வேண்டவே வேண்டாம்" பாட்டி அவசரமாய்இடை மறித்தாள் .
"சரிப்பா .....இரண்டு பிளேட் குழி ப் பணியாரம் கொண்டு வந்துடு."அப்பா அவரை அனுப்பினார்.
"ஏம்பாட்டி..உப்பும்மா கொழக்கட்டைமேல உனக்கு என்ன அவ்வளவு கோபம் " தம்பிக்கு பாட்டியை கலாய்க்கிறது ரொம்ப பிடிக்கும்.
"எனக்கென்னடா சாப்பாட்டுப் பொருள் மேலே கோபம்...அது. எனக்கு ரொம்ப பிடிச்ச அயிட்டம்.நிறையபேர் உப்புமாக் கொழக்கட்டையை வேகாம பண்ணிடறா. வேகாத பொருளை சாப்பிட்டு வயித்தைக் கெடுத்துக்க முடியுமா... எதுக்கு ரிஸ்க்.. சென்னையிலே போரூர் சரவணபவனில். போடுவாங்க பாரு. உப்புமாக் கொழுக்கட்டை .. அப்படியே பூவாட்டம் வெந்து சூப்பரா இருக்கும் ."
"சரி..பாட்டி அடுத்தமுறை சென்னை போகும்போது கண்டிப்பா அங்கு போய் சாப்பிடலாம்.. அதுவரை உப்புமாக் கொழக்கட்டைக்குத் தடா."தம்பி கிண்டலடிக்க, ,அதற்குள் வெயிட்டர்
இரண்டு பிளேட்டுகளில் சுடச்சுட குழிப்பணியாரங்களைக் கொண்டு வந்தார்.கூடவே எல்லாருக்கும் தனித்தனி பிளேட்டுக்கள்...ஷேர் பண்ணிச்சாப்பிட.அதோடு நன்கு பழக்கமானவராதலால், எல்லோருக்கும் தனித் தனி கிண்ணங்களில் வெள்ளை சட்னி, சிவப்பு சட்னி ,சாம்பார் உள்பட கொண்டு வந்தார். "சூப் குடித்த எச்சில் கையோடு தொடாதீர்கள்" என்று எங்களை. ஓரங்கட்டிய பாட்டி ,வெயிட்டரையே எல்லாருக்கும் பணியாரங்களை சமமாக ப்பிரித்து பரிமாறச்சொன்னார்.
பாட்டி வழக்கம்போல் தோசை...என் தங்கை எப்பவும் புலாவ் தான்,..மற்றவர்களில், அப்பா. ருமாலிரோட்டி . நான்,நான்.. தம்பி ஆலு பராத்தா..அம்மாவும் எப்பவும்போல் இடியாப்பம் ..என்று ஆர்டர் செய்தொம் ...
பாட்டி," சத்யா ,எனக்கு இந்த தட்டிலேயே தோசையைப் போடச்சொல்லு.சட்னி, சாம்பாரலாம் இருக்கு..."
"போம்மா..அந்தத்தட்டை அப்படியே நகத்தி வை ...புதுசா ஒரு பிளேட்டிலெ எல்லாம் வெச்சுத் தருவா.."
" போடா. வேண்டாம். வேண்டாம். நான் வீணடிக்க மாட்டேன் .. வெய்ட்டர்கிட்டே நானே சொல்லிக்கிறேன்னு ".பாட்டி தன்பக்கம் தட்டை இன்னும் இழுத்துக் கொண்டார்...அப்பா பிடுங்கி வைத்து விடுவாரோன்னு..
பக்கத்து டேபிளில் உட்கார்ந்திருந்தவர்.. எங்களையே பார்த்துக்கொண்டிருந்தார் .. எனக்கு என்னவோ போலிருந்தது."ஏன். பாட்டி, வீட்டிலே பண்ணறமாதிரியே இங்கே வந்து. இப்படி. ....ரகளை ..எல்லாத்துக்கும் சேத்துத்தான். நாம் காசு கொடுக்கிறோம்.பேசாம இருங்கோ .."
பல்கலைக் கடித்துக் கொண்டு சொன்னேன்.
"ஏண்டா ..நீ காசுகொடுக்கறேங்கிறதுக்காக பொருளை வீண் செய்யலாமா.. கடுமையா உழைச்சாத்தான் காசு கிடைக்கும்.. அந்தக் காசினாலதான் இந்தப் பொருளெல்லாம் வாங்கறோம். அதை நீ வேஸ்ட் செய்தால் உன்னுடைய உழைப்பை நீ மதிக்கவில்லை. அதேபோல் நாம் சாப்பிடும் ஒவ்வொரு உணவிலும். அடி மட்டத்திலிருந்து எத்தனை பேருடைய உழைப்பு அடங்கியிருக்கு.யோசித்துப் பார்.தானியமாக ..விதைத்துப் பயிராக்கி யம்,
செடி கொடிகளை நட்டு காய் கனிகளாகவும் விளைவித்து சிறிய கடைகள் ,பெரிய மார்க்கெட்டுகள் என்று பலர் உழைப்பில் பல நிலைகள்சென்று சமைப்பவர் முன் வந்து ,அவர் அவைகளை சுவைபடசமைக்கவும், ஓடி ஓடி பரிமாறவும் என்று ..அப்பப்பா. அத்தனை பேருடைய உழைப்புக்கும் நீ நன்றி சொல்லி மதிக்கவேண்டும்.அலட்சியம் செய்யக்கூடாது.
இந்த உணவுதானே நம் உயிர் நாடி...இதற்குத் தானே இத்தனை பாடும்...."
பாட்டி முழு வீச்சில் பேசத் தொடங்க "பாட்டி போதும் உங்க லெக்ச்சர், எல்லாரும் வேடிக்கை பார்க்கிறார்கள்" என்று மெதுவாக கூறினேன்.,
"பார்த்தால் என்னடா, நான் சொல்வதை அவர்களும் தெரிந்து கொள்ளட்டுமே. " பாட்டி விடவில்லை. தண்ணீர் பாட்டிலை எடுத்த தங்கையை.."ரம்யா ,எச்சில் பண்ணாதே. தூக்கிக் குடின்னு " ஒரு அன்பு மிரட்டல்.
,பிங்கர் பௌலில் கை கழுவி ஒரு வழியாக எல்லோரும் டின்னரைமுடித்தோம். பாட்டிமட்டும். கை அலம்பிக்கணும்,வாய் கொப்பளிக்கணும் என்று அம்மாவை அழைத்துக் கொண்டு ஹேண்ட் வாஷ் இடத்துக்குப் போய் வந்தார். தங்கை ஆர்டர் செய்த புலாவில் பாதியளவுக்கு பௌலிலேயே மீதமிருந்தது. பாட்டி விடுவாரா. அதற்குத்தான், முன் ஜாக்கிரதையாக பாதியை மட்டும் வெயிட்டரையே பரிமாறச் சொல்வார். வெயிட்டரைக் கூப்பிட்டு அதை பேக் பண்ணித் தரச்சொன்னார்.பாட்டி இப்படி செய்வது யாருக்கும் பிடிக்காது.
சொன்னால் கேட்கவும் மாட்டார். கொண்டு போய் பிரிட்ஜில் வைத்தால் பசி வேளைக்கு. அமிர்தமாயிருக்கும் என்பார்..இல்லையெனில் துப்புரவு பணியாளருக்கு க் கொடுக்கலாமே என்பார்..அவர் வாயைக் கிளற வேண்டாம் ...ஏற்கெனவே ஒரு பெரிய லெக்சுர் கொடுத்தாச்சுன்னு எல்லோரும் நைசாக வாசலுக்கு நழுவினார்கள்..
நான் மட்டும் பாட்டியை அழைத்துப் போவதற்காக உட்கார்ந்திருந்தேன்.அப்பொழுது எங்களையே பார்த்துக் கொண்டிருந்த பக்கத்து டேபிள்காரர் "நான் இங்கு உட்கார்ந்தால்
உங்களுக்கு தொந்திரவு இல்லையே " என்று கொஞ்சம் கொச்சைத் தமிழில் கேட்டுக் கொண்டு எங்கள் பக்கம் வந்து உட்கார்ந்தார் ."நான் அமெரிக்காவிலிருந்து துபாயை சுற்றி பார்க்க வந்திருக்கிறேன்." என்று என்னிடம் தன்னை அறிமுகப் படுத்திக்கொண்டவர், நான் ஏதும் பதில் சொல்வதற்குள் பாட்டியைப் பார்த்துப் பேச ஆரம்பித்தார்.
"பெரியம்மா,நீங்கள் பேசுவதையெல்லாம் நான் கேட்டுக் கொண்டிருந்தேன். நான் போன வருஷம் உங்கள் இந்தியா போயிருந்தேன். எனக்குப் பிடிச்ச நாடு அது.
அதிலும் உங்கள் மதக் கோட்பாடுகள், சனாதன தர்மம் என்ற உங்கள் வாழும் நெறிமுறைகள் என்னை மிகவும் கவர்ந்த விஷயங்கள். நான் கொஞ்ச நாள் உங்கள் தமிழ் நாட்டில் தங்கியிருந்து தமிழ் கற்றுக் கொண்டேன். எனக்கு உங்களிடம் சில விஷயங்கள் கேட்கணும் என்று தொடரவும், பாட்டி முகத்தில் பெருமை பிடிபடவில்லை. எனக்கு ஒரு போன் கால் வரவும் ,"மன்னிக்கவும்". என்று அவரிடம் சொல்லிவிட்டு அங்கிருந்து சிறிது தூரம் தள்ளி வந்தேன்.
அடுத்தடுத்து மூன்று அழைப்புகள் வந்ததில் அரை மணி நேரம் போல் ஓடிவிட்டது. அடடா.. அப்பாவும் மற்றவர்களும் காத்திருப்பார்களே..பாட்டியை கூட்டிண்டு போகணுமே..பரபரப்பாய் பாட்டி அருகில் வந்தேன்.அப்பொழுதுதான் அந்த மனிதர் பாட்டியிடம் விடைபெற்று எழுந்து போய்க் கொண்டிருந்தார்..
"பாட்டி. வா..வா.. நேரமாயிட்டது..அப்பா திட்டுவார் " நான் சொன்னதும் பாட்டியும் அவசரமாய் பார்சலை எடுத்துக் கொண்டு கிளம்பினார்..காரில் ஏறியதும் நான் சொன்னேன்..." "அப்பா நம்ம பக்கத்து டேபிளில் இருந்த அமெரிக்கர் தான் பாட்டி யிடம் .இத்தனை நேரமா பேசிக் கொண்டிருந்தார் . "பாட்டி. அப்படி அவர் உன்கிட்டே என்ன பேசினார்......"
"ஆமாம்பா , நம்ப சாஸ்திரங்கள் ,பழக்க வழக்கங்களை ப் பற்றியெல்லாம் கேட்டுக்கொண்டிருந்தார்"
"பாட்டி,மடி..விழுப்புன்னெல்லாம் அளந்து விட்டிருப்பியே..."தம்பி கிண்டலடிக்கவும்,"பேசாம வாங்கடா.. பெரியவாங்கற மட்டு மரியாதையில்லாம.."ன்னு அப்பா ஒரு அதட்டல் போடவும்
அமைதியாக வீடு வந்து சேர்ந்தோம். இரண்டு மாதங்கள் ஓடி விட்டன.
ஒரு நாள் அதிசயமாக பாட்டி பெயருக்கு ஒரு கொரியர் தபால் ....அதுவும் அமெரிக்காவிலிருந்து ...
...பிரித்தால் ஒரு அமெரிக்க வார இதழ் ,ஒரு கடிதம் ,நூறு டாலருக்கான ஒரு காசோலை எல்லாம் இருந்தன. அப்பா பெயரில் கடிதம்..."சார், என் பெயர் ஜான். மைக்கேல்.எனக்கு இந்தியக் கலாச்சாரம் ,பண்பாடு ரொம்பப் பிடிக்கும்.உங்கள் தாயாரிடம் பேசி நிறைய விஷயங்கள் தெரிந்து கொண்டேன்.நான் இந்த புத்தகக் கம்பெனியின் (அவர் குறிப்பிட்டிருந்தது உலகளவில் மிகவும் புகழ் பெற்றது ..)எம் டி .அதோடு இந்த பத்திரிக்கையும் நடத்துகிறேன்.
நானும் உங்கள் தாயாரும் உரையாடிய விஷயங்களை ஒரு கட்டுரையாக இந்த இதழில்
பிரசுரித்திருக்கிறேன்.பார்க்கவும்..உங்கள் தாயாரிடமும் விவரம் தெரிவித்து,இத்துடன் நான் அனுப்பியிருக்கும் இந்த சிறு தொகையையும் என் அன்பு பரிசாக ஏற்றுக் கொள்ள சொல்லவும்.அவருக்கு என் வணக்கங்கள்.நன்றி.
இதழின் உள்ளே.. பாட்டியின் போட்டோபோட்டு .."இந்தியப்பாட்டியும் கலாச்சாரமும் '" என்ற தலைப்பில் ஒரு பெரிய கட்டுரை .தண்ணீரை ஏன் தூக்கிக் குடிக்க வேண்டும்.. எப்படி சாப்பிட வேண்டும் ......எப்படி உறவுகளை மதிக்கணும்.....பிரிட்ஜே இல்லாத அந்தக் காலத்தில் ஊறுகாயை . நீண்ட நாட்கள் கெட்டுப் போகாமல் எப்படி பாதுகாத்தார்கள்..என்று, அந்தக் காலப் பழக்கங்கள் என்று நாங்கள் பாட்டியை கேலி செய்யும் எல்லா விஷயங்களையும் பாட்டி
அறிவியலோடு சம்மந்தப் படுத்தி அழகாக விளக்கியிருந்தார்.அட. நம்ப பாட்டிகிட்டே இவ்வளவு விஷயம் இருக்கே.. நாங்கள் எல்லோருமே பெருமைப் பட்டோம்.
திடீரென்று எனக்கு ஒரு சந்தேகம்.. "பாட்டி நம்ப வீட்டு அட்ரஸ் எப்படி அவருக்குத் தெரிந்தது..."
நான் இந்த ஊருக்கு வந்த புதுசுல நீ ஒரு பேப்பரில் நம்ம வீட்டு அட்ரஸ் எழுதி ,
"பாட்டி ....... வாக்கிங் போறப்பல்லாம் .. இதை பத்திரமா வெச்சுக்கோ..சமயத்துக்கு உபயோகப்படும்னு " கொடுத்தியே ...அது என் கைப் பையிலேயே இருந்தது. அன்னிக்கு அவர் "நீங்கள் எங்கே இருக்கிறீர்கள் " என்று கேட்டதும் , நான் அந்த அட்ரஸ் பேப்பரை எடுத்துக் காட்டினேன். அவர் அதை போனில் போட்டோ எடுத்துக் கொண்டிருப்பாரோ . என்றார் பாட்டி கூலாக.
கதை 86
ஒழுக்கல்
" என்ன ஆச்சு ஏன் ஒரு மாதிரியா பேசுற "
"ஒன்னும் இல்ல "
" சொல்லு "
"சரி.. நான் கொஞ்சம் இக்கட்டாஇருக்கேன் ..வேற சொல்ல முடியல"
" எதுவா இருந்தாலும் சொல்லு...எங்கிட்ட சொல்லாம வேற யார்கிட்ட சொல்லுவ .."
" சரி சரி ...சொல்றன்… அவசரமா ஸ்கூலுக்கு வந்துட்டேன்,எதிர்பாராம பீரியட் வந்துடுச்சு...இப்ப என்ன பண்றதுன்னு தெரியல ..நாப்கினும் இல்ல…" அவஸ்தையில் நெளிந்தபடி சொன்னவள் செங்கு.
" சரி... அதனால் என்ன? டீச்சருங்க யாராச்சும் வச்சிருப்பாங்கள்ல…" பொறுப்போடு கேட்டவன் ரமணா.
"அது இல்லடா.. நான் அவசரத்துல வந்துட்டேன். இன்னர்கூட போடல .. அதான் சங்கடமா இருக்கு…" பேசிக்கொண்டே இருக்கப்ப எதிரே இன்சார்ஜ் வந்து விட்டார் . சட்டெனப் போனை வைக்க வேண்டியதாயிற்று.என்ன நெனக்கறானோ அவன்ற வருத்தமும் என்னோட ஒட்டிக்கிச்சி, பிசின் போல இதுவும்...
நானே ரொம்ப அவஸ்தைல நெளியறேன். தொடைக்கு இடையில் ஊத்திட்டே இருக்கும் அந்தச் சிவப்பு மையை அழிக்க என்ன செய்யறது? கீழே தரையில் ஒழுகினா அசிங்கமாகிவிடுங்கற சங்கடம் வேற மனசுல அல்லாட்டமா இருக்கு. மாணவர்கள் மத்தியில வகுப்பு எடுக்கற கட்டாயத்துல நிக்கறேன். மாணவர்கள் பாத்துட்டா..சே..சே... அப்படிலாம் நடக்கவிடக்கூடாது. ஒரு எச்சரிக்கையாக இருந்தே ஆகணுங்கற முடிவுக்கு வந்திருந்தேன்.
எனக்குக் கூட தெரியல. ஒரு வகுப்பிற்கு போகும்போதுதான் ஒரு மிஸ் வந்து , மிஸ்..இங்க வாங்க, வாங்க என்று அவசரமாக அழைத்தார். என்ன அப்படின்னு கேட்டேன் .பின்னாடி பாருங்க ,ரெட்பேட்ச் இருக்குது அப்படின்னு சொன்ன உடனே திரும்பிப் பார்த்தேன். சேலையில் பின்னாடி பக்கம் கறை பட்டு இருந்தது.
உடனே பாத்ரூம் போயிட்டு கிளீன் பண்ணனேன். அதுக்குப் பிறகுதான் கஷ்டத்திற்கு மேல் கஷ்டம் . இன்னிக்கு பார்த்து தொடர்ந்து வகுப்பு .என்ன பண்றது ? யாராச்சும் புது ஜட்டி வைத்திருப்பார்களா என்ன? கண்டிப்பா வைத்திருக்க மாட்டாங்க. இருந்தாலும் கேட்டுப் பார்த்துட்டேன்.யார்ட்டயும் இல்ல.ஆ
ஒரு மாஸ், ஜட்டிக்கூடவா போடாம வருவீங்கன்னு எளக்காரமா கேட்டாங்க . எதுக்குப் போடணும்? ஏற்கனவேதான ஒடம்ப பிராகுள்ளயும் , உள்பாவாடக்குள்ளயும் பூட்டி, பொடவைல உழுது வச்சிருக்கோமேன்னு நெனச்சனே தவிர சொல்லல. சொன்னா வம்பாயிடும். வாதம் பண்றதுக்கான மனநெலயும் இப்ப இல்ல.
ஏன்னா... கொஞ்ச வருசத்துக்கு முன்னாடி ஜட்டியா போட்டு இருந்தோம். இடுப்புல ஒரு கயிறு கட்டி, கிழிஞ்சப்புடவையை கிழிச்சிக் கோவணம் மாதிரியில்ல கட்டிப்போம். இப்பதான் நாப்கின் , ஜட்டின்னு விளம்பரம் பண்ணி, பொம்பள புள்ளங்களுக்குக் கர்ப்ப்பைக்கட்டின்னு சகஜமாகிப் போச்சு. நாப்கின்ல இருக்க அபாயம் தெரியாம இந்தக்கால பொண்ணுங்க இருக்காங்க.
ஆனாலும் இன்னைக்கு அந்த ஜட்டியோடு அருமை புரிந்தது . ஜட்டி இல்லாம நாப்கின் வைக்க முடியாது. இடுப்புல ஒரு கயிறுகட்டி அத வைக்கவும் முடியாது. சாயங்காலம் முழுக்க எப்படி இப்படியே இருக்க முடியும் ?..புரியல... பிரின்ஸ்பால்கிட்டப் போய் லீவ் எல்லாம் கேட்க முடியாது. சரியான சிடுமூஞ்சி. எக்ஸாம் நடக்கிற டைம் வேற . யோசிச்சி யோசிச்சி மண்டவலி அதிகமாச்சு. அதுக்குமேல இந்த அடிவயித்துவலி .பொரட்டுது, வாந்தி வரமாதிரியிருக்கு. பொண்ணு பொறந்ததுக்கு இத்தனை அவஸ்தையா?...என்ன பாவம் செஞ்சமோ?...
கணவரும் ஊர்ல இல்ல வெளியூர் போயிருக்காரு.
கடைக்குப் போய் வாங்கிட்டு வரலாம்னா, இது ஒரு வனாந்திரத்தில் இருக்கிற ஒரு பள்ளிகூடம். அதனால்தான் இங்கே தொடர்ந்து நான் வேலையும் செய்கிறேன். ஏன்னு சொல்றனா, ஒரு மணி நேரம் டிராவல் பண்ணிதான் இந்த பள்ளிக்கு வரணும். ஸ்கூல் பஸ்ல வரப்ப அழகான வயல்வெளிகள் ,தென்னந்தோப்பு , மாந்தோப்பு ,சவுக்குத் தோப்பு இதையெல்லாம போகும்போது தினம் அவைகளைப் பார்க்கறது ரொம்ப பிடிக்கும்.
ஒவ்வொரு மரத்தோட கிளைல எத்தனை காய் இருக்கு ? எத்தனை பூ பூத்திருக்கு? எத்தனை பழம் இருக்கு? என்பதெல்லாம் எனக்கு அத்துப்படி. .அந்த அளவிற்கு அவைகளோடு பேசிக்கொண்டே தினமும் போவேன். அந்த ஒரு மணி நேரம் என்பது எனக்கு அது சொர்க்கத்தில் போற மாதிரி இருக்கும். இயற்கையை விட்டு ரொம்பதூரம் வந்துட்டோங்கற குற்றவுணர்வை அது போக்கறதா நெனச்சிப்பேன். அதனாலேயே இந்த பள்ளில தொடர்ந்து வேலை செய்யறேன்.
பள்ளியைச் சுற்றி பார்த்தா, அடப்போங்க...கரும்பு தோட்டம், வாழை மரத் தோட்டம் , மீன்குட்ட, வாத்துகள் மேய, மாடுகள் மேய, கொக்குங்க கொளத்தாண்ட நிக்க ,அத பாத்து நான் சொக்க...வகுப்பு மாணவங்க என்னப் பாத்துக் கெக்கேபிக்கேன்னு சிரிக்க...அப்படியான ரம்யமான இடங்க அது.
ஒரு குடும்பமோ ஒரு குடிசையோ இல்லாத ஒரு கிராமம் அது... அதுக்குள்ள தான் இந்தப் பள்ளிக்கூடம் . அந்த இயற்கை அழகோட இறுமாந்து நிக்கிது. இங்க வர மைனா, அணில், கொரங்குங்கதான் எனக்கு டீச்சர்.ஒவ்வொருநாளும் அதுக்கிட்ட நிறைய கத்துக்கறேன். சரி, அதுபோவட்டும் இப்ப நான் என்னதான் பண்றது?.. ஒழுகிற ஓட்டப் பானைய அடைக்கலாம். இத அடைக்க முடியுமா?..
டூவீலர் எடுத்துட்டு போனாலும் கிட்டத்தட்ட ஐந்து கிலோமீட்டர் போகணும். இவன் வேற கேட்டு தொலைச்சான். அவந்தான் என் நண்பன் ரமணா. அவன் பேசிட்டே இருக்கும்போதே வரந்தா வழியா பிரின்சிபால் வந்ததால கட் பண்ணிட்டேன். அவன் என்ன நெனக்கறானோ?..
ஒரு பத்து வயசு இருக்கும் போதே அவனை எனக்குத் தெரியும். நாங்க ரெண்டு பேரும் ஒன்னாதான் பள்ளிக்கூடம் போவோம் , வருவோம். அப்படி பள்ளி விட்டு வரும்போது குட்ஸ் ரயில் சில நேரத்தில் குறுக்கால நின்னுடும் . அது மேலே ஏறி இறங்கி்தான் தோணி புடிக்கப் போவணும். வரும்போது ஒரு நாளு அந்த ரயிலு பாதைல அடிச்சி வச்சிருக்க கட்ட கால் வெரல்ல குத்திடுச்சி. கால்ல இரத்தம் கொட்டிச்சி . அதோடு அழுதுட்டு இருக்கும்போது அவன் தான் வந்து புடுங்கி போட்டு வீட்டுக்கு அழைத்து வந்தான். ரத்தமா ஊத்துச்சி. அந்த நேரத்துல ஒரு துணியை எடுத்து கால்ல கட்டிவிட்டு , என்ன வீட்டுக்கு அழைச்சிட்டு வந்தான்.
ஆனாலும் அவன் விடறதா இல்ல. நீ கால கழுவிட்டு வான்னு சொல்லிட்டு வீட்டாண்ட அழைச்சிட்டு போய், அந்த முள்ளு குத்தின இடத்த ஊக்கால கெளறிவிட்டான். வலி தாங்கள். அந்த பாரு பச்சிலைன்னு சொல்லிட்டு, கட்ட வெரல்ல உப்பு வச்சு ,தீக்குச்சியை கொளுத்திச் சுட்டான்.
சுளீர்னு இருந்துச்சு. ஏன்னா நீ வந்து அதை சுட்டு்ட்டினா, அடுத்தடுத்து நாள் சீழ் பிடிக்காது. அதுக்குதான் அவன் இப்படி செஞ்சேன்னு சொன்னான்.வலி சுத்தமா இல்ல. நல்லா நடந்தேன் அப்பவே. அன்னைக்கு தொடர்ந்த நட்புதான் இன்னிக்கு வரைக்கும் போயிட்டு இருக்கு.
ஒருநாள் என்னைக் காதலிக்கிறியாடான்னு கேட்டுச் சிரிச்சேன். அதுக்கு என்னா சொன்னாந் தெரியுமா?..காதலிக்கலாம் வேண்டாம். கடைசிவரை இப்படியே இருப்போம்னான். எனக்கும் அப்படித்தான் தோணுச்சி. எப்படி இருக்க? என்ன பண்ற? அப்படின்னு பேசிட்டு போகும் நெருக்கமான அந்த அன்புக்கு என்ன பேர் சொல்றது?...
பிறகு எனக்கு கல்யாணம் ஆயிடுச்சு.. அவனுக்கும் கல்யாணம் ஆயிடுச்சு . ரெண்டு பேருக்குமே குழந்தை குட்டிகள்னு பொறந்தாச்சு. ஒருநாள் அப்படித்தான் முன்னாடி நான் வேலை செஞ்ச ஸ்கூலுக்கு வந்துட்டு நீ சீக்கிரம் வா பர்மிஷன் போட்டுக் கூப்பிட்டான். என்னடா இது இந்த நேரத்துல கூப்பிடுறேன்னேன். அதெல்லாம் தெரியாது நீ வா என்றவுடன் அவன் வண்டி அவன் வீட்டுக்குப் போச்சு. வண்டியில் எறங்கி வீட்டில் போனா ...அவனோட மகள் வயசுக்கு வந்து இருந்தா. நீதான் என்ன செய்யணும்னு சொல்லு. இவ வெளங்காதவன்னு மனைவிய குத்தம் சொல்லிட்டுப் போயிட்டான். நாலு பேர கூப்டு நான்தான் நலங்கு செஞ்சேன். இரவு வீட்டுக்கு வர லேட்டாயிட்டுதுன்னு அவனைத் திட்னா எங்கணவர் அவனுக்குத்தான் வக்காலத்து வாங்கிப் பேசினாரு. அப்பேர்பட்ட ஒறவு எங்க ஒறவு.
" டீச்சர் புள்ளங்க கத்திக்கிட்டிருக்காங்க. நீங்க என்னதான் பண்றீங்க" இன்சார்சு கேட்டபொறவுதான் நினைவுக்கு வந்தேன். பழய நினைவுகள் ஓட, இதுவும் கீழே வழிய...வகுப்ப விட்டு , டாய்லெட்ல ஓட வேண்டியதா போச்சு. அந்த நேரம் பாத்தா பிரின்சிபால் ரவுண்ட்சு வரணும். வகுப்பிலும் கடுப்பிலும் இருந்தார். வகுப்பு முடிஞ்சதும் என் அறைக்கு வாங்கன்னு கடுகடுத்து விட்டுப் போனார்.
வகுப்புல என்னால நிக்கவே முடியாத அளவுக்கு வயிறு வலி வேற . 'அழுவற வூட்ல இருந்தாலும் இருந்திடலாம் ஒழுகுற வீட்ல இருக்க முடியாதுங்கற பழமொழியா' என் நெலமை...ஒழுக்குற ரத்தத்தை எத்தனை தடவைதான் பாத்ரூம் போயிட்டு கழுவிட்டு கழுவிட்டு வந்து முழுக்க ஈரம் ஆகிடுச்சு. பாவாடையை தொடை இடுக்கில் வைத்துக்கொண்டு நடக்கறது எத்தனை சிரம்ம்னு பட்டுப்பாத்தவங்களுக்குத்தான் தெரியும். அந்த பிரின்சிபால்கிட்டப் போயி என்னாத்த சொல்றது? எதயும் காதுல வாங்காத மடச்சாம்புராணி அவர்.
யோசிச்சபடியே வகுப்பறை விட்டுப் படியிறங்கினேன். என் கஷ்டம் எனக்குத்தானே தெரியும். எதையாவது செய்து எப்படியாவது இந்தச் சனியனை சரி பண்ணனும்னு யோசிச்சா..நடுவுல இந்தாளு வேற. எல்லாந் தலயெழுத்துன்னு நடந்த, ப்யூன் எதுர்ல வராரு. ரிசப்சன்ல கூப்புடறதா சொன்னதும், என்னடா இது பிரச்சனை மேல பிரச்சினைன்னு மனசு அடிச்சிக்குது. எதுக்கு ரிசப்சன்ல கூப்டறாங்க? மாணவர்களுடைய பெற்றோர்கள் யாராச்சும் வந்து வம்பு பண்றாங்களோ...பயம் படபடக்க ஒரு கணம் எங்க போறதுன்னு நின்னுட்டேன்.
.பிரின்சிபால பாக்க போறதா, ரிசப்சனுக்குப் போறதான்னு தவிச்சேன். என்னடா இது வேற தொல்லை? பெண்ணுக்கு இது ஒரு சாபக்கேடா? இயற்கையா நடக்கற விசயம் இவ்ளோ சங்கடத்த தரணுமா? ஒரு ஜட்டி போடலங்கறதுதான் இத்தன பிரச்சனைக்கும் காரணமா?..
பாவாடை தாவணி போட்டக் காலத்துல ஜட்டியா போட்டோம்?. தீட்டு வந்துட்டா பழயத்துணிய கொடுப்பாங்க அம்மா. இடுப்புல கயிறு கட்டி, கோவணம் போல சொருகிக்கனும். அப்படித்தான் அன்னிக்கி பாவாடை தாவணிக்குள்ள கோவணம் கட்டி கிட்டு பள்ளிக்கூடம் போய்க்கிட்டு இருந்தேன். சரியா வைக்கத் தெரியாம நடுரோட்டில் அந்த தீட்டுத்துணி கீழே விழுந்துட்டுது. அப்ப அழுகை அழுகையா வந்துச்சு. அதை எங்க போடறதுன்னு தெரியாத காலத்தில் ரோட்டுல ஒரு மூலைல அந்த வெச்சுட்டு போயிட்டேன். அத எந்தப் பாம்பு தீண்டுச்சோ? ... அந்தத் தோசம் என்னைத் தொடருதோ? …
அத எந்த ஆம்பள கண்ணுலயும் படாம தொவச்சி வேலியோரத்துல காயவக்கச் சொல்லுவா அம்மா. சில நேரங்கள்ல தீட்டு துணியைத் தொவைக்க தோணாது . வெளிக்காட்டுக்குப் போயி மண்ணுல பொதச்சிவெச்சிடுவேன். சில நேரத்துல அடுத்த நாள் போய் பார்த்தா நாயோ , எலியோ தோண்டி வெளில போட்டுருக்கும்.நம்ம தீட்டுத் துணிய பாக்க நமக்கே சகிக்காது. மத்தவங்க பாத்தா..? .
ரொம்ப காலத்துக்கு முன்னாடி அப்படித்தான் பக்கத்து வீட்டு பொண்ணுக்கு ஒன்னு நடந்துச்சி. ஐயோன்னு ஒரே கத்து கத்துச்சி. அந்த பொண்ணு என்ன பண்றதுன்னே தெரியாம பாவாடையை புடிச்சிட்டு நின்னுட்டு இருந்தா. அவ அழுவுற அப்போ ஆம்பளைங்க வந்தாங்க. ஆம்பளைங்க எல்லாம் போக சொல்லிட்டு அக்கா ஒருத்தி அவ பாவாடைய ஒதறினா. அப்போது தீட்டுத் துணி உள்ளிருந்து ஒரு பல்லி ஓடுச்சு . அவ அலறி அடிச்சி மயக்கமாயிட்டா. மனநெல சரியில்லாமலும் ஆயிட்டா. வேப்பல அடிச்சாங்க. பயம் தெளியாம இராத்திரில அலறினா. அவளுக்கு அன்னிக்கி அந்த நெல. இன்னிக்கி எனக்கு இந்த நெல….
கொஞ்ச நேரம் எனக்காக ஒரு மிஸ்ஸ வகுப்புல நில்லுங்கன்னு சொல்லிட்டு வந்தேன். அவங்க என் வகுப்புல இருக்காங்களோ என்னவோ ? இப்ப மொதல்ல எங்க போறது ? எச்எம் ரூமுக்கா, ரிசப்சனுக்கா? ரிசப்ஷனில் கூப்பிட்டு இருக்காங்க என்னன்னு போய் மொதல்ல அத பார்த்துட்டு அதுக்குப் பொறவு பிரின்சிபால் ரூமுக்குப் போகாலாமுன்னு முடிவு பண்ணி, மெதுமெதுவா அடியெடுத்து வச்சி நடந்தேன்.
பாவாடை ஈரமாகி அது பிசுபிசுப்பாக ஒட்டிக் கொண்டு நடக்க முடியாம ஒரு வேதனையை எரிச்சலை உண்டு பண்ணிக் கொண்டே இருந்தது. ஒவ்வொரு அடியும் ஒரு வித வலியோடு கடக்க வேண்டி இருக்குன்னு யார்ட்ட சொல்லி அழ?..
உங்களை யாரோ பார்க்க வந்திருக்கிறார்" கைக்காட்டினா ரிசப்சனிஸ்டு. எங்கேன்னு திரும்பி பார்த்தா , அட நம்ம பயபுள்ள ரமணா வந்து நிக்கறான். இந்த நேரத்துல இவன் வேறன்னு எரிச்சலோட அவனருகில் போனேன்.
"என்ன பரவாயில்லையா உடம்புக்கு" ன்னு கேட்டுட்டு, ஒரு பொட்லத்த நீட்னான்.
என்ன சொல்றது கடலில் மூழ்கி உயிர் போயிட்டு இருக்கும்போது முடியை பிடித்து இழுத்து வந்து வெளில போட்டா எப்படி இருக்கும் ? ஒடனே அவனை இழுத்துக் கன்னத்துல முத்தம் கொடுத்தேன். அப்பவே ஈரமானதெலாம் காய ஆரம்பிச்சிடுச்சி. காஞ்சது ஈரமாக ஆரம்பிச்சது.
கதை .85
வேண்டாமே வாகனப்புகைசூரிய வெயில் சுட்டொிக்குதே அம்மா….அம்மா காலில் செருப்பில்லாமல் குழந்தை ஓடி வந்தது. அம்மா உடனே தூக்கினாள். ஐயோ, கால்கள் பொத்து புண்ண போய்ச்சே! ஏய் கயல் செருப்பு போட்டு போக வேண்டியதுதனா! என்றால் அம்மா.
அதற்கு கயல் விம்மி விம்மி அழுதவாறு நடந்து வந்து அம்மா அமா்ந்தாள். பின்னர், கால்களுக்கு மருந்து தடவி வேண்டாம் அம்மா…….இனிமேல் மறந்துடமா செருப்பு போட்டு போகனும் என்றால் அம்மா……
சாிங்க அம்மா…… என்றாள்? கயல். இப்போது எல்லாம் வெயில் இப்படி சுட்டெரிக்குதே காரணம் ஏன்? அம்மா அதற்கு அவள் அம்மா முன்னாடி காலத்தில் இப்படி வெயில் அடிக்காது பாப்பா. அந்தந்த பருவத்திற்கேற்ப தான் வெயில், மழையும் இருக்கும் பாப்பா.
அப்புறம் ஏம்மா? இப்பயெல்லாம் மாறிமாறி நடக்குது…… அது வேறயென்னும் இல்லை பாப்பா இப்ப இருக்கிறா! சூழ்நிலை அந்த மாறி இருக்க இது பாப்பா……
சூழ்நிலையினா! என்னம்மா , முன்னாடி எல்லாம் மாட்டு வண்டி, இல்லை என்றால் நடந்தே ஒரு இடத்துக்கு போவாங்கப்பா! அப்போ, எல்லாம் விலங்குகளையே போக்குவரத்து வண்டியா, உபயோகிப்பாங்க; இப்பயெல்லாமே தலைகீழா மாறிருச்சு பாப்பா……
அதற்கு அப்புறம் சைக்கிள்,இரயில் பயணம் சென்றாா்கள். தற்போது அனைவருமே மோட்டாா் சைக்கிள், பஸ், வேன் போன்ற பல்வேறு நவீன வளர்ச்சி அடைந்த உயா்தர வாகனங்களை மக்கள் விரும்பி பயன்படுத்துகின்றனர்..
அவங்க இவங்க எதுக்கு சொல்லிக்கிட்டு உன் அப்பாவே வீட்டில் மூன்று வண்டி வைத்திருக்கிறார். பாா்த்தயா பாப்பா……
ஆமாம் அம்மா…….
அதில் எத்தனை தடவ கீழே விழுந்து கை,கால் அடிப்பட்டிருந்துச்சு அப்பாவுக்கு ம்ம்ம்ம் ஆமாம் அம்மா……. அதுமட்டுமா குடித்து விட்டு வாகனத்தை ஓட்டி எத்தனை பேர் சாவுறாங்க டிவி பார்க்கிறோம் பாப்பா……
அச்சச்சோ பாவம் அம்மா…… நானும் பாா்த்திருக்கிறேன் அம்மா…….
அதற்கும் வெயில் சுட்டொிப்பதற்கும் காரணம் என்னம்மா! இது எல்லத்திற்கும் காரணம் இந்த வண்டிகள் தான் பாப்பா……
இப்போது அதிக வண்டிகள் இருப்பதால் அதிலிருந்து வரும் வாகனப்புகை, இரைச்சல் அனைவருக்குமே நோய்களை ஏற்படுத்துகிறது பாப்பா…..
இதுமட்டுமா! அதிக அளவில் புகை வருவதால் ஓசோன் படலத்தில் ஓட்டையே போட்டுருச்சுனா! பாா்த்துகா பாப்பா…. அதனால் கடுமையான வெயில் பருவகால சூழ்நிலை மாறிவிட்டது. இது மட்டுமா நான் உபயோகப்படுத்துறா குளிா்சாதனப்பெட்டி மிச்ச ஓட்டை பெரிசா ஆக்கி விட்டது பாப்பா…..
என்னம்மா சொல்லிரீங்க இதனாலா இவ்வளவு பிரச்சனை இருக்கா! முன்னாடி காலத்தில் ஏதும் இல்லாமல் கூட எளிமையான வாழ்க்கை வாழ்ந்து நம்மாக நிறைய வளங்களை மிச்சப்படுத்தி வச்சங்க நம்ம பெரியோ்கள்…..
ஆனால் நம் இப்போ! நோய்களை மிச்சப்படுத்தி வச்சுருக்கோம்…..வண்டியில் இருந்து வர இரைச்சல் மூலம் நம் செவி புலனே இன்னும் சில நாட்களில் இழந்துவிடுவோம்………
அம்மா இதனாலா இதன் இப்படி வெயில் அடிக்குதமா அம்மா…. இது மட்டும் இல்லா நிறைய காரணம் இருக்கு பாப்பா, குப்பைகள், தொழிற்சாலை கழிவுகள், என்று சொல்லில் கொண்டே போகலாம் பாப்பா……
சாிங்கம்மா இனிமேல் அப்பா கிட்ட சொல்லி இந்த மோட்டாா் சைக்களிலா விற்க சொல்லி சைக்கிள் வாங்க சொல்றேம்மா…….
இனிமேல் எங்கு போனாலும் செருப்பு போட்டு நடந்தே போறேம்மா…..
சாி வா……..நம்ம வேளையா! பாா்க்கலாம்
வாகனப்புகையை குறைப்போம்! சுத்தமான காற்றை சுவாசிப்போம்!!
கதை. 72
வாழ ஒரு வீடு.........( யாவும் கற்பனை. யாரையும் குறிப்பிடுவனவல்ல )
****************
“ பிள்ளைகள் நீங்கள் இரண்டு பேரும் நாங்கள் வரும்வரை கவனமாக இருங்கள். யாரும் தெரியாத முகங்கள் வந்தால் கதவைத் திறக்க வேண்டாம்” என்று கூறுவிட்டு சந்திரனும்,
உமாவும் தங்களுக்கு நடைபெற இருக்கும் ‘ நிலமற்ற குடிமக்களுக்கு அதுவும் அரசாங்க ஊழியர்களுக்கு மூன்று பேர்ச் நிலம் வழங்கல் ‘ நேர்முகத் தேர்வுக்கு ‘ காணிக் கச்சேரிக்கு செல்கிறார்கள்.அவர்கள் இருவரும் நன்கு படித்தவர்கள் தான். ஆனால், சந்திரன் மாத்திரம் தான் வேலை பார்த்தார். உமாவும் பன்னிரண்டாம் வகுப்புவரை படித்துச் சித்திபெற்றவள். இரண்டொரரு வேலைகளுக்கு விண்ணப்பித்து வேலை கிடைக்கவில்லை. ‘பார்த்தால்...அரசாங்க வேலை தான்
பார்ப்பது....தனியார் நிறுவன வேலை வேண்டாம்’ என்ற லட்சியத்தில் இருந்து விட்டாள்.அப்படியே வயதும் இருபத்தியிரண்டு முடிந்ததும் சந்திரனுடன் விவாகமும் நிறைவேறி விட்டது.சந்திரன் அரசாங்கப் பாடசாலையொன்றில் உதவியாசிரியராக கடமையாற்றிக் கொண்டிருந்தான்.
கஷ்டப்பிரதேசத்தில் ஐந்து வருடம் கடமையாற்ற வேண்டும் ‘ என்ற அரசாங்கச் சட்டப்படி மலையகத்தில் கந்தப்பளை என்ற இடத்தில் கடமையாற்றிய பின்னர் ....வடபகுதியாகிய வ வுனியாவுக்குமாற்றல் கிடைத்தது. அங்கு வந்த பின்னரும் வசிப்பதற்கு வாடகை வீடு ஒன்றினை குருமண்காடு
பகுதியில் தேடி எடுத்து தமது வசிப்பிடமாக்கிக் கொண்டனர்.
இந்தக் காலகட்டத்தில் மூத்த குழந்தை வயிற்றில் உதயமானான். அவனையடுத்து இரண்டு வருடங்கள் கழிந்த பின்னர் சாந்தியும் பிறசாந்தியும் பிறந்து விட்டாள். குழந்தைகள் இரண்டு பேர். கணவனின் பணிவிடைகள்....சமையல், சாப்பாடு வீட்டு நிர்வாகம்.....இந்த நிலைமையில் வேலை தேடிப் போவது என்ற தேவையே இருக்க வில்லை. இப்படியே வருடங்களும் ஓடி ....மூத்த நிர்மலன் வயது இருபது....மற்றவள் சாந்தி வயது பதினெட்டு நிறைவு பெற்று விட்டனர். சந்திரன் உழைத்த பணமெல்லாம் வீட்டு வாடகை....சாப்பாட்டுச் செலவு என்று கரைந்து போய் விட்டது. இல்லையென்று சொல்லாமல் இரண்டு பிள்ளைகள் பேரிலும் மாதம் ஐம்பது ரூபா வீதம் போட்டுவைத்த தபாற்கந்தோர் சேமிப்பு புத்தகத்தில் கொஞ்சக் காசு உண்டு.அவ்வளவு தான்.
நிலமற்ற ஏழைகளுக்கு அதாவது வறுமைக் கோட்டுக்கு கீழேயுள்ள குடும்பங்களுக்கு நிலம்கொடுத்த பின்னர் ....சொந்த வீடோ...சொந்த நிலமோ அற்ற அரசாங்க ஊழியர்களுக்குநிலம்....அதாவது...சம்பளத்தில் பத்து வீதம் கடன் அடிப்படையில் வழங்குதல் என்ற ரீதியில் நடைமுறை சாத்தியமாகியது. அதன் அடிப்படையில் தான் சந்திரனும் மனைவியும் புறப்பட்டனர் வீடு திரும்பும் போது வெற்றிக் களிப்புடன் திரும்பினர். முப்பத்திரண்டாயிரம் சம்பளத்தில் மாதாந்தம் பத்தாயிரம் வாடகை செலுத்தி வாழ்ந்தவர்கள்....
இனி அந்த் அரசாங்க காணியில் ஒரு பெரிய தகரக் கொட்டகையை அமைத்து அதற்குள் வாழ்ந்து கொண்டு.....வீடு அமைக்கும் நிலத்தைத் தவிர, வெற்றிடங்களுக்கு ...தென்னை, வாழை போன்ற பயன்தரு மரங்களை நாட்டினர். அரசாங்கம் ...ஒவ்வொரு மூன்று பேர்ச்’ நிலத்திற்கும் முதலே கிணறும், மலசல கூடமும் அமைத்துக் கொடுத்ததுடன் ,சுற்றிவர முட்கம்பி எல்லை வேலி, முன்பக்கத்துக்கு மதில், தெருவில் மின்சார வசதி ஆகிய வாழ்வா
தார அவசியங்களை பூர்த்தி செய்து இருந்தது. இந்த வசதிகள் அரசாங்க ஊழியர்களுக்கு மிகப் பெரிய ஆறுதலாக இருந்தது. ஆகவே, மிக விரைவாக....புதிய இடத்திற்கு ...சந்திரன் குடும்பம் இடம் பெயர்ந்தது. கிணற்று நீரும் நன்னீராக கிடைத்தது அதிஷ்டம் தான் என குல தெய்வத்தை மனதார வாழ்த்திக் கொண்
டு ஒரு நல்ல நாளிலே ...தகர வீட்டிற்கு இடம் பெயர்ந்து வந்து விட்டனர். தங்களுடைய சொந்த வளவு என்ற ஆனந்தத்தில்....பிள்ளைகள் தக்காளி, வெண்டி, கத்தரி, மரவள்ளி, கீரை, கறிமுருங்கை மர கிளை, சொற்ப மாத்த்தில் காய்க்கும் ப்ப்பா விதைகள், ஆகிய வற்றை விவசாய கந்தோரில் பெற்று....அவற்றை நிலத்தில் விதைத்தும், ஊன்றியும் ஆரவாரமாக செயற்படத் தொடங்கினார்கள். சுற்றிவர இருக்கும் முள் வேலியில் பாகல் விதை, கருக்குப பீர்கவிதை, புடோல் விதை, சுரை, நீற்றுப் பூசணி விதை, தர்ப் பூசணி, குறிஞ்சாக் கொடி, மணத்தக்காளி,கொவ்வை, முசுட்டை ஆகிய இலை வகைகளை உற்பத்தி செய்து பெரு வெற்றியும் கண்டனர். அண்ணன், தங்கை இருவரும் சதா நேரமும் தோட்ட வேலை...நீர் ஊற்றுதல் , நிழலுக்கு குழைநாட்டுதல் என்ற கைங்கரியத்தில் ஈடுபட்டதனால்...சாப்பிடவும் மறந்து வேலை...வேலை...என்றே இருந்தனர். இதனால் பெற்றாருக்கும் பெரிய மன நிறைவாக இருந்தது. அயலில் உள்ள குடு
ம்பங்களும் சந்திரன் மாஸ்டரின் பிள்ளைகளின் ஊக்கத்தை தாங்களும் முன்னோடியாகத் தழுவிக் கொண்டனர். கீரைக் கொட்டைகள் சிந்திய மேடைக்கு பக்கத்தில் மிளகாய் விறைகள் சிந்தி அவைகளும் நன்கு வளர்ந்து பூத்துக் காய்க்கத் தொடங்கி விட்டன. பூச்சி பிடிக்கா
மல் இருப்பதற்காக வேலியில் உள்ள வேப்பிலைகளையும், சீமைக்கிழுவை இலைகளையும் துவைத்துச் சாறு எடுத்து ...இயற்கை வழியில் மருந்து தெளிக்கும் வழி வகைகளை மற்றவர்களுக்கும் காட்டும் வழி காட்டிகளாக விளங்கினர். இஞ்சி இலை, மஞ்சள் இலைகளையும் உற்பத்தி செய்து ஒவ்வொரு ஐப்பொங்கலுக்கும் விற்றுப் பெருமளவில் பணம் சேர்த்துக் கொண்டனர்.முளைக் கீரை நன்றாக பச்சைப் பசேல் என்று நாட்கணக்கில் வளர்ந்து வீட்டுத் தேவை
யையும் பூர்த்தி செய்து....அயலவர்களின் அன்பையும் பகிர உதவியது.முருங்கை மரக் கிளையை ஒரு ஆடி மாத்த்தில் நாட்டினார்கள். அடுத்த ஆடிக்கு இடையில் நூற்றுக் கணக்கான காய்களை காய்த்துக் கொடுத்தது. வாழைக்குலைகளுடன், சுற்றிவர பல குட்டிகளும் தோன்றின. ஒன்றுரண்டு குட்டிகளைத் தவிர மற்றவற்றைப் பெயர்த்து வெற்றிடங்களில் நாட்டினர். அன்றாட கறிவகைத் தேவைகளை சொந்த நிலத்திலிருந்து தன் பிள்ளைகள் உற்பத்தி செய்து கொடுப்பது ....பெற்றாருக்குப் பெரு மகிழ்ச்சியைக் கொடுத்தது. பிள்ளைகளின் விடாமுயற்சியைக் கண்ட சந்திரன் கிணற்றுக்கு மோட்டர், தண்ணீர் தாங்கி
ஆகிய வசதிகளை செய்து கொடுத்ததுடன்....வீட்டிற்கும் நிலம் எடுத்து...வீட்டுடன் குளியல் அறை, மலசல கூடம் ஆகிய வற்றிற்கான வரைபடங்களை கீறுவித்து .....வீட்டுக்கடனுக்கும் விண்ணப்பித்தார்....பிள்ளைகளுக்கும் பெரிய மன நிறைவு....மரக்கறிகள் வீட்டுத் தேவை, அயலவர் கொடுப்பனவு....இவற்றையும் மீறி க்கிடைப்பதனால் கடைக்கும் கொடுத்து அரிசி,சீனி, மா, மல்லி, பருப்புவகை ஆகிய தேவைகளைப் பூர்த்தி செய்தனர்.பிள்ளைகளுக்கு ஆடு, மாடு வளர்க்க ஆவல்தான். இருந்தும் ....அவை ...கன்று காலிகளைத்தின்றுவிடும் என்ற அச்சத்தில் அந்த எண்ணத்தைக் கைவிட்டனர். தோட்டத்தில் கிடைக்கும்
உலர்ந்த சருகுகளை ஒரு கிடங்கு வெட்டி ...அதற்குள் அவற்றைச் சேமித்து இயற்கை உரத்தை உண்டாக்கிக் கொண்டனர்.வரைபடத்தின்படி....வீட்டுக்கட்டும் ஆரம்பமானது. மொத்தக் கணக்கு பத்துலட்சம். சந்திரனுக்கு இப்போ ஐம்பது வயது. மற்றைய பத்து வருடங்களுள் லோன் கட்டி முடித்து விடலாம்’ என்றஉற்சாகத்துடன் காரியத்தில் இறங்கினர். ஒரு வருடத்துள்....வீட்டுக்கட்டு மும்முரமாகநடைபெற்றது. ஒவ்வொரு கட்டிட அமைப்பும் பார்வையிடப்பட்டு பணமும் கைக்குவர கட்டிடவேலை...மேற்கூரை வேலை....நிலக் காறை வேலை....சுவர்ப் பூச்சு வேலை என கிடு...கிடு வென வீட்டுக்கட்டும் நிறைவு பெற்றது. பிள்ளைகள் இரண்டு பேரும் தாங்களும் ஒரு மேசன்மாதிரி பங்கு பற்றி தங்கள் வீட்டை அழகாகவும், சிக்கனமாகவும் செய்து முடித்தனர். சந்திரன்தனக்கு மாமன், மாமி கொடுக்க இருந்த சீதன வீட்டினை தனது மைத்துனிக்கு கொடுக்கும்படி கூறிவிட்டார். மாமன்,மாமி அவரை வாழ்த்தினார்கள்.
பிள்ளைகள் தங்கள் பெயரில் தபாற் கந்தோர் சேமிப்பு புத்தகத்தில் பணம் அதிகம் வைப்புச் செய்யப்பட்டுக் கிடந்ததைக் கண்டு , வியப்புற்று, தந்தையிடம் வினவினர். “ உங்கள் வியர்வைசிந்திய காசு தான் அது. இரண்டு உதவியாட்களின் வேலையை நீங்கள் செய்து முடித்த தாக பெரிய மேசன் கூறினார். அது உங்கள் உழைப்பின் பணம்” என்று மனம் மகிழ்ந்து மக்களைப்பாராட்டினார்.சந்திரன் மாஸ்டர் வீட்டுக் குடிபூரல் நாளைக் காலையில் நடைபெற இருப்பதால். நாங்களும் போவோம்....வீட்டினை வாழ்த்தி...எல்லோருக்கும் ‘வாழ ஒரு வீடு’ அவசியமென மனமார ஆசீர்வதிப்போமாக....!
நன்றி.....
38 வது கதை
தாயம் !!!
மதிய வேளை,உணவை குடும்பதினருடன் உண்டு களித்து வேலை விஷயமாக வெளியூர் செல்லவிருந்தாள் கயல் .
" தேவையானதை எடுத்து வைத்துக்கொண்டாயா"என்று கடலில் அம்மா கேட்டார்
"ஹ்ம்ம்" என்றாள் கயல் .
காரில் சென்ற கயல் தனது பயணத்தை தொடர்ந்தாள்.இரவை கடந்த நிலையில் திடீரென்று அவளின் கார் பழுதடைந்து நின்றது .இறங்கி வந்து காரை பார்க்கையில் ஒரே புகைமண்டலம் போல் மிகப்பெரிய சேதாரம் .நடுஇரவு, நெடுஞ்சாலையில் தனிமை.
பயம் அவளை மெல்ல மெல்லச் சூழ்ந்தது.
அவ்வழியே வரும் ஓரிரு வாகனங்களை நிறுத்த முயற்சித்தாள் . இருப்பினும் எவரும் செவிசாய்க்கவில்லை.சிறிது நேரம் கழித்து ஒருவர் அவ்வழியே இருசக்கர வாகனத்தில் வந்தார் .இப்பெண்ணை பார்த்தவுடன் தனது வாகனத்தை நிறுத்தி விட்டு அருகே சென்றார் .
என்னம்மா ? என்னவாயிற்று? என்று கேட்டார்
முன்பின் தெரியாத நிலையில் இருக்கும் போது எப்படி சொல்வது ?மேலும் பயமும் இருந்தநிலையில் சூழ்நிலையை கூற சற்று தயக்கம் கொண்டாள்.அவளின் எண்ணத்தை புரிந்து கொண்ட ஐம்பது வயதை மதிக்கத்தக்க அம்மனிதர் தன்னை அறிமுகம் செய்து கொண்டார்.
பயப்படாதமா நான் இதுபோன்ற பழுதுகளை சரிபார்ப்பவன் தான் .கவலைகொள்ளாதே என்று கூறி தன் பணிகளை தொடங்கினார்.சிறிது நேரம் கழித்து பழுது சரிபார்க்கப்பட்டது .
மிகவும் மகிழ்ச்சி அடைந்தாள் கயல் .தங்களுக்கு என்ன உதவி வேண்டும் ஐயா எதிர்பாராமல் உதவி செய்ததற்கு .அவர் வேண்டாம் என்று கூற, மறுபடியும் சிறு தொகையை எடுத்து அவரிடம் கொடுத்தாள்.
ஒரு துண்டு சீட்டில்" தேவையை வேண்டுபவர்களுக்கு தேவையை பூர்த்தி செய்" என்று எழுதி கொடுத்து .இதுவே நீ எனக்கு செய்யும் உதவி என்றார்.
பிறகு அங்கிருந்து புறப்பட்டு சென்றாள் கயல் .வழியில் வயதான ஒரு மூதாட்டி வெயிலில் தனது காலில் செருப்பு கூட இல்லாமல் ஐந்து ரூபாய் உணவு பொட்டலத்தை விற்றுக் கொண்டிருந்தார்.அதை பார்த்த அவளுக்கு அப்பெரியவரின் ஞாபகம் வந்தது.உடனே தனது வாகனத்தை நிறுத்தி விட்டு அருகே சென்றாள்.
பாட்டி "இவை அனைத்தும் எனக்கு வேண்டும்" என்று கூற , மகிழ்ச்சி அடைந்தாள் அம்மூதாட்டி.
மீண்டும் புறப்படலானாள் கயல் . ஓர் இடத்தின் வழியில் "அன்னை இல்லம்"இருந்தது அங்கே வாகனத்தை நிறுத்தி விட்டு அம்மூதாட்டியிடம் பெற்ற உணவு பொட்டலத்தை அனைவருக்கும் கொடுத்து மகிழ்ந்தாள்.அங்குள்ள அனைவரும் ஆசிர்வதித்தனர்.
பிறகு சற்று நேரம் யோசித்து பார்த்தால் கயல் . எத்துணை அழகிய தருணங்கள் இன்று நம் வாழ்வுதனில்.மீண்டும் மீண்டும் மனிதனாக பிறப்பது போன்ற ஒரு நெகிழ்வு.ஏதோ சாதித்துவிட்டோம் என்று எண்ணி தனது பயணத்தை தொடர்ந்தாள்.
பிறகு தனது காரை ஒரு ஓட்டலின் அருகே நிறுத்தி விட்டு உள்ளே சென்றாள்.உணவை எடுத்து வரும் வேளையில் சற்று நேரம் சுற்றி பார்க்கத் தொடங்கினால்.அப்போது ஒரு சிறுமி தான் கையில் வைத்திருந்த பிஸ்கெட் துண்டுகளை அருகில் இருந்த நாய்களுக்கு வீசிவிட்டு தன் பசியை அந்நாயோடு பகிர்ந்துக்கொண்டாள்.கடைக்கு அருகே உள்ள 'மெனு போர்டை" ஏக்கத்துடன் பார்த்தாள் .இதையொல்லாம் பொறுமையாக கவனித்த கயல் ,அச்சிறுமியை அருகே அழைத்து 'மெனு கார்டை' கொடுத்தாள் .தன்னை அழைத்து அரவணைப்பதை புரிந்து கொண்ட சிறுமி மிகவும் மகிழ்ந்தாள்.பிறகு இரண்டு உணவு பொட்டலங்களை தேர்வு செய்து தனக்கு பார்சல் வேண்டும் என்று அச்சிறுமி கயலிடம் கூறினாள்.
உன் பசித்தேவையை இங்கேயே பூர்த்தி செய்யலாமே?.என்றால் கயல்
தன் தாய் மற்றும் தந்தை உடல் ஊமுற்றவர்கள் .தினமும் அவர்களுக்கு தேவையான உதவிகளையும் , உணவுகளையும் கொடுப்பேன்.சில நாட்களில் உணவே கிடைக்காத கசப்பான நாட்களையும் கடந்து வந்துள்ளோம்.பெரும்பாலான நாட்களில் தண்ணீர்தான் எனக்கு கிடைத்த உணவு என்று சிறுமி கூறினாள்.
இதை கேட்ட கயல் மிகவும் மனவேதனைக்குள்ளானாள்.பிறகு தனக்கு தெரிந்த நண்பர் ஒருவர் பள்ளி மற்றும் கல்லூரி நடத்தி வருவது நினைவுக்கு
வந்தது.அவரின் முகவரி மற்றும் தகவல்களை ஒரு காகிதத்தில் எழுதி அச்சிறுமியிடம் கொடுத்தாள்.பிறகு தனது கைபேசியில் அந்நபரிடம் சிறுமி பற்றிய விபரத்தை எடுத்து கூறினாள்.அச்சூழ்நிலையை புரிந்து கொண்ட பல நலத்திட்டங்கள் செய்து வரும் அந்நபர் இலவச கல்வி அளிக்க ஒப்புக்கொண்டார்.மனநிறைவுடன் கயல் அவ்விடத்தை விட்டு சென்றாள் .பிறகு தான் சென்ற பணிகளை முடித்து விட்டு தன் சொந்த ஊருக்கு திரும்பினாள்.
சாலையில் வரும் வழியே ஒர்இடத்தில் மக்கள் கூட்டமாக இருந்தனர் .கயல் தனது காரை நிறுத்தி அவ்விடத்தின் அருகே சென்றாள்.அங்கே ஒரு பெண் தலையில் அடிப்பட்டு விபத்துக்குள்ளாகியிருந்தார்.இதை பார்த்து அதிர்ந்து போன கயல் அப்பெண்ணை தனது காரில் ஏற்றிக் கொண்டு தான் பணிப்புரியும் மருத்துமனைக்கு சென்றாள் .அங்கு அப்பெண்ணுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது . அப்பெண்ணின் சம்பந்தபட்டவர்களுக்கு தகவல் சொல்லப்பட்டது . பிறகு அப்பெண்ணிற்கு சம்பந்தபட்ட நபர் ஒருவர் மருத்துவரை காண மருத்துவர் அறைக்கு சென்றார் .கதவை திறந்தவுடன் அவர் ஒருகணம் அசையாமல் நின்றுவிட்டார் .
அந்நபர் வேறுயாருமில்லை ,கயலின் கார் பழுதடைந்து அவள் ஆபத்தான நிலையில் இருந்தபோது அவளுக்கு உதவிபுரிந்த நபர்தான்.அழுதுக்கொண்டு கயலை கைகூப்பி வணங்கினார் .ஓடிவந்து அவரின் கைகளை பிடித்து கொண்டு நன்றி தெரிவித்தால் கயல் .
கருப்பொருள் : அந்நபர் விதைத்த உதவி என்னும் விதை ,பல இடங்களில் பரவி பலருக்கு பயனளித்து ,விருட்சமாய் வளர்ந்து அவரை சேர்ந்தது .
36.வது கதை
செருப்பு
பசியுடன் முனியம்மா வீட்டில் படுத்து கிடந்தாள் ரேஷனில் நாளைக்குதான் அரிசி போடுவாங்க அது இருந்தா கஞ்சி காய்ச்சியாவது இன்னைக்கு பொழுத கழிச்சிடலாம்
கையில் அஞ்சு பைசா கூட இல்லை
கந்தை உடையில் எண்ணெய் காணாத தலை சோர்ந்த முகமாய் செருப்புத் தைக்கும் கந்தன் காணப்பட்டான்
நூலகத்தை ஒட்டியிருக்கும் புங்க மரத்தடியில் வெகுநேரம் சாக்கு பை போட்டு அதிலே செருப்புத் தைக்க தேவையான நூல், ஊசி, பாலிஸ் வகையறாக்களை வைத்தான்
வெகுநேரம் அவ்வழியே செல்லும் ஜனங்களின் கால்களை ஆவலாய் பார்த்துக்கொண்டிருந்தான்
மிடுக்கான, மினுக்கான புது செருப்போடு நடந்து கொண்டிருந்த எவரும் அவனை கண்டுகொள்ளவில்லை
இப்பொழுதெல்லாம் அறுந்த செருப்புகள், தேய்ந்து செருப்புகள் வருவதே அபூர்வம் ஆயிற்று
முன்பெல்லாம் டயர் செருப்பு வேணும்னு கிராமத்திலிருந்து வரும் விவசாயிகள், ஆடு மேய்க்கிற பசங்க வருவாங்க
பெரும்பாலும் செருப்பு கடைக்கு போக மாட்டாங்க அளவு கொடுத்து காத்து இருப்பாங்க ரெண்டு நாள் கழிச்சு கூட வந்து வாங்கிக்குவாங்க
இப்ப காலமே மாறிடுச்சு எல்லாருக்கும் அவசரம் கால்ல சுடு தண்ணி பட்ட மாதிரி அவசரப்படறாங்க
காத்திருக்க யாருக்கும் பொறுமை இல்லை எல்லாம் ரெடிமேடா வந்துடுச்சு என மனதுக்குள் துயரம் கொண்டான்
சில நேரங்களில் ச்சீய் என்னடா பொழப்புன்னு தோணும் அவனவன் கண்ட கருமத்ததெல்லாம் மிதிச்சிட்டு வந்து கொடுப்பாங்க
மூக்கைப் பொத்திக் கிட்டு தைக்க வேண்டி இருக்கும் தைக்க மாட்டேன்னு நாசுக்கா சொல்ல முடியாது அப்படி சொன்னா அன்னைக்கு கஞ்சித்தண்ணிக்கு வர்ற காசும் வராம போய்டும்
"நல்லா தைச்சு குடுய்யா" சிலர் ஜம்பமாய் பேசுவார்கள்
"சரி சாமி" என பதிலுரைத்து அவர்களிடம் இருபது ரூபாய் வாங்குவதற்க்குள் உயிர் போய் உயிர் வந்துவிடும்
இந்த தொழிலில் யாரிடமும் மதிப்பை எதிர்பார்க்க முடியாது அந்தந்த நாளுக்கு ஐம்பது ரூபாய் கிடைக்கிறதே பெருசு
கிடைக்கிற காசுல்ல முடிவெட்ட, தாடியை சவரம் பண்ண மனசு வராது
வீட்டில வயசுக்கு வந்த பொண்ணு
பத்மா குந்திட்டிருக்கா அவள நேரம் காலத்துல எவனுக்காவது புடிச்சு கொடுக்கணும் கையில ஒரு நாலஞ்சு பவுனாவது இருக்கணும்
எங்க வர்ற காசு சோத்துக்கே பத்த மாட்டேங்குது
மழைக்காலத்தில நாலாபுறம் வீட்டு மண் சுவர் ஊறிக் கிடக்கும் அது எப்ப யார் தல மேல விழுமோ அது ஒரு கவலை போதாக்குறைக்கு மனசுல வந்து உட்கார்ந்துக்கிச்சி
பத்மாவுக்கு ரோல்டு கோல்டுல மூக்குத்தி, செயின் வாங்க கூட கதி இல்ல
நானெல்லாம் என்ன மனுஷன் தனக்குள்ளே திட்டிக் கொண்டான்
அவனுக்கு அவனையே பிடிக்கவில்லை அடிக்கடி வானத்தை பார்த்து
"கடவுளே பூமிக்கு பாரமாக என்னைய ஏன் வெச்ச" அந்த கேள்விக்கு இதுவரை பதில் கிடைத்தபாடில்லை சாகவும் துணிவு இல்லை
ஒண்டிக்கட்டையா இருந்தா தூக்கு மாட்டியோ, மருந்து குடிச்சோ வாழ்க்கைய முடிச்சுக்கலாம்
ஆனா பெத்த புள்ளையையும், பொண்டாட்டியையும் விட்டு போக மனசு என்னமோ ஒத்துழைக்க மாட்டேங்குது
இவங்க பாசக்கயிறு இழுக்கிறது நாளதான் உயிரைக் கையில புடிச்சிகிட்டு வாழ வேண்டியிருக்குன்னு நொந்து கொண்டான்
வழியில் புது செருப்புகளை காலில் அணிந்து கொண்டு போகும் மக்களை பார்க்கும் பொழுது அவனுக்கு கடுப்பாக தான் இருக்கும்
பழைய தேய்ந்துப்போன, கழன்றுப்போன செருப்புடன் தன்னிடம் வருபவர்களை தெய்வமாக பார்த்தான்
"இன்னைக்கு ஒருத்தர் கூட செருப்பு தைக்க வரலையே கடவுளே யாரையாவது அனுப்பி வையுங்க "அவனுக்கு தெரிந்த படி மனசுக்குள் கும்பிட்டான் தன் தேவைகளை முன்னிறுத்தினான்
எத்தனையோ தேவைகள் அவனுக்கு உண்டு அவைகள் நிறைவேறாத பட்சத்தில் கனவுகள் என்பது எட்டாத கனிக்கு கொட்டாவி விடுகிற கதையாக இருந்தது
அடிக்கடி செத்துப்போன தன் தகப்பனின் போட்டோவை பார்த்து நொந்து கொள்வான்
யோவ் படிக்க வச்சிருந்தா நானும் சமுதாயத்தில ஒசந்து இருந்திருப்பேன்
நீயோ குடிச்சிட்டு வந்து தலையில் குட்டிக் குட்டி இந்தத் தோல்ல செருப்பு தைக்கிற தொழிலுக்கு ஆளாக்கிட்ட
அன்னைக்கு உனக்கு வரும் படி இருந்தது இன்னைக்கு இத வச்சு ஒன்னும் செய்ய முடியாது
செருப்புத் தைக்கிற நூலையும் ஊசியையும் தோலையும் மூலதனமாக விட்டுட்டு போயிட்ட
இத்னூண்டு இடத்தை தூங்கி எந்திரிச்சுக்க விட்டுட்டு போய்ட்ட உன்பாடு நிம்மதி சிவனேன்னு கண்மூடிக்கிட்டு தனியா என் பதிமூணு வயசுல தவிக்க விட்டுட்டு போயிட்ட சொல்லி அழுவான்
போட்டோவில் பதிலுக்கு அவன் அப்பன் சிரித்தபடியே கிடப்பான்
சிரிப்பு மட்டும் உனக்கு குறைச்சலில்லை குடிபோதையில் அவன் கன்னத்தைக் கிள்ளுவாள்
அடிக்கடி அவன் வீட்டில் இப்படியெல்லாம் கூத்து நடக்கும்
" அப்பா ஏம்பா இப்படி நடந்துக்கிறிங்க" மகள் வேதனைப் பிணைந்த அக்கறையோடு கேட்பாள்
"என் தங்கமே" மகள் பக்கம் பார்த்து அவன் "நீ பெரிய ராசா வீட்டில பிறக்க வேண்டிய இந்த சாபம் பிடிச்ச அப்பன் கிட்ட வந்து ஏம்மா பிறந்த" தலையை சுவற்றில் நங்கு நங்கு என்று இடித்துக்கொண்டு அழுவான்
மகளோ "அழாதப்பா நான் இருக்கேன் நீ ஒன்னுக்கும் கவலப்படாதே" அவனின் கண்ணீரை துடைத்து ஆறுதலின் வார்த்தைகளால் தோளைத் தட்டி தேற்றுவாள்
அவனோ தன் கண்ணீரைத் துடைத்துக் கொண்டு "நம்ம குடும்பத்துல நீயாவது நல்லா படிச்சு வேலைக்கு வாம்மா" என்பான்
பத்மா அந்த ஊர் மேல்நிலைப் பள்ளியில் பனிரெண்டாம் வகுப்பு படித்து வந்தாள்
பத்தாம் வகுப்பில் அந்தப் பள்ளியில் பத்மா தான் முதல் மதிப்பெண் பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்தவள்
வாழ்வில் சாதிக்க வேண்டும் எனும் வைராக்கியம் கொண்டவள் தன்மானத்தோடு வாழ நினைப்பவள்
அவளின் அப்பா சோர்ந்து போகும்போதெல்லாம் ஆறுதல் சொல்வாள்" அப்பா கவலைப்படாதே நான் படிச்சு வேலைக்கு போய் உன்னை ராஜா மாதிரி வச்சிக்கிறேன்"
நூல் பிடித்து, பாலிஸ் போட்டு, செருப்பு தைத்து தேய்ந்துபோன அவனின் கரத்தை கையில் பிடித்து தன் கன்னத்தில் ஒற்றி கொண்டு முத்தம் தருவாள்
அவன் மனம் ஆறுதல் கொள்ளும் அப்படியே அவள் பேச்சில் கவலை மறந்து குடி போதையில் இரவு உணவை மறந்து கோரைப் பாயில் சரிந்துவிடுவான்
பத்மாவுக்கு இந்த சூழலை மாற்ற வேண்டும் என்னும் எண்ணம் நாளுக்கு நாள் அக்கினிப் பிழம்பாய் எரிந்துகொண்டிருந்தது
பத்மா மனசுக்குள் நாங்களும் மனுஷங்கதானே எங்களை இழிவு நினைக்கிறவங்க மத்தியில சாதிச்சு காட்டுவேன்
இந்த பொண்ணு செருப்புத் தைக்கிற கந்தனுடைய பொண்ணுன்னு யாரும் சொல்லக்கூடாது
எங்க அப்பாவையும் அவர் செய்ற தொழிலையும் இழிவா நினைக்கிற மக்கள் கலெக்டர் பத்மாவின் அப்பான்னு சொல்லனும் அதுதான் என் லட்சியம் அடிக்கடி அவளுக்குள்ளே மனப்பாடம் செய்த வசனமாய் சொல்லிக் கொள்வாள்
அரசாங்கம் இலவச பஸ் பாஸ், பாடப்புத்தகம், லேப்டாப், ஸ்காலர்ஷிப் கொடுக்குது
ஊக்கப்படுத்த பள்ளியில் நல்ல ஆசிரியர்கள் இருக்காங்க கடவுளே உங்களுக்கு நன்றி இதய நான் சரியாக பயன்படுத்தி வாழ்க்கையில் முன்னேறும் ஞானம் புத்திய எனக்கு குடுங்க' என்பாள்
வருஷத்துக்கு ஒரு தடவை புதுசா கலர்ல இரண்டு செட் டிரஸ் அந்தப் பள்ளிக்கூட த்துல ஆங்கில ஆசிரியர் சுப்புலட்சுமி அம்மா பத்மாவுக்கு வாங்கி கொடுப்பாங்க
இவளோ வாங்க மறுப்பாள்
அந்த அம்மாவோ "எங்க ஆத்துல எனக்குன்னு சொந்தம் பாராட்டிக்க சொல்லிக்க ஒரு மக இல்ல மறுக்காதே இந்த வாங்கிக்கோ என கொடுப்பார்கள்
பத்மாவினாள் மேற்கொண்டு எதுவும் பேச இயலாது நன்றி சொல்லி முழு இருதயத்தோடு சந்தோசமாய் வாங்கிக் கொள்வாள்
மனிதநேயமிக்க அந்த சுப்புலட்சுமி ஆசிரியை பள்ளி பிள்ளைகளை அதிகமாக நேசிக்கும் ஆசிரியை இயலாதவர்களுக்கு உதவி செய்யயும் மனப்பான்மை கொண்டவர்
அந்த டீச்சருக்கும் மன திருப்தி ஏற்படும்
இது ஒவ்வொரு வருடமும் நடக்கிற காரியம்
"எதுனாலும் கேளு பத்மா கூச்சபடாதே" என அந்த டீச்சர் பத்மாவிடம் அடிக்கடி கேட்பார்கள்
வேண்டாம் டீச்சர் எல்லாம் இருக்கு என சமாளிப்பாள் இப்படியாய் நாட்கள் நகர்ந்து கொண்டிருந்தது
பத்மாவுக்கு அத்தை பையன் ஒருத்தன் அதே தெருவில் இருந்து வந்தான் அவன் குடிகார பையன் ஊதாரித்தனமாக சுற்றிக் கொண்டிருப்பவன்
அவனுக்கு பத்மா மேல எப்பவும் ஒரு கண்ணு அவ பள்ளிக்கூடம் போகும் போதெல்லாம் பின்னாடியே போவான் சும்மாச் சும்மாவே பேச்சை கொடுப்பான்
பத்மாவோ பொறுக்க முடியாமல் ஒரு நாள் "வேணாம் மாமா இது நல்லா இல்ல எல்லாரும் பாக்குறாங்க" என்றாள்
"யாரு பார்த்தா என்ன நீ என் சொந்த அத்தை பொண்ணுதானே" என்றான்
"எந்த இடத்தில எப்படி நடந்துக்கணும்னு உனக்குக்குத் தெரியாதா"சொல்லிப் பார்த்தாள்
அவனோ "ஐ லவ் யூ பத்மா"ன்னு சொல்லிக்கொண்டு அருகே வர
பத்மாவுக்கு வந்ததே கோபம் செருப்பை எடுத்து அவனை ஓங்கி அடிக்க முற்பட்டாள்
அவன் தப்பித்தோம் பிழைத்தோம் என ஓட ஆரம்பித்துவிட்டான் எப்படியோ அவளிடம் செருப்படி வாங்காமல் அவன் தப்பினான்
அன்றிலிருந்து அவன் மாமன் மகன் அடங்கிப்போனான் வாலை சுருட்டிக் கொண்டான்
பத்மாவின் லட்சியம் முழு மூச்சு எல்லாம் படிப்புதான் அது மட்டுமே இந்த சமுதாயத்தில் தன்னை உயர்த்திக் காட்டும் அந்தஸ்தைக் கொண்டு வரும்
கல்விதான் அழியாச் செல்வம் படித்து நாலெழுத்து தெரிந்தவரை மட்டும்தான் இந்த சமுதாயம் மதிக்கும்
பல ஆண்களால் இளிவாய் நடத்தப்படும் ஒவ்வொரு பெண்ணும் படித்தவளாக இருந்தால் மட்டுமே இந்த சமுதாயத்தில் உயர்ந்த ஸ்தானத்தில் வைக்கப்படுவாள்
ஒரு பெண் கல்வி கற்றால் அந்த குடும்பத்தின் வறுமையை இருள், அறியாமையின் இருள் அகல்கிறது
ஆகவே பத்மா இரவும்,பகலும் படிப்பதில் தன்னை முனைப்பாய் ஈடுபடுத்திக் கொண்டாள்
அறியாமைல் விதியென வாழும் தன் சமூகத்தை நிலைநிறுத்த, தானும் சிறந்து விளங்கிட கல்வி எனும் வெளிச்சம் அவசியம் என்பதை உணர்ந்தவளாய் காணப்பட்டாள்
நன்றாக படிக்கும் அவளுக்கு அந்த பாலக்கோடு அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்கள் தொடர்ந்து ஆதரித்தார்கள்
"உன்னால் முடியும் பத்மா, நீ வெற்றி பெறுவதற்காகவே பிறந்தவள், தோல்வி மனப்பான்மையை அகற்றிவிடு அடிக்கடி சுப்புலட்சுமி டீச்சர் சொல்லி பத்மாவின் மனதில் மலையாய் இருக்கும் பிரச்சினைகளை பனி போல உருகச் செய்துவிடுவார்கள்
தொடர்ந்து அவன் அடையவேண்டிய லட்சிய பாதையில் அவளை வழி நடத்தி செல்வார்கள்
ஒவ்வொரு வகையிலும் அந்தப் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்கள் அவளை மனதளவில் ஊக்கம் கொடுத்தார்கள்
ஆகவே ஆசிரியர்கள் மீது அவள் பெருமதிப்பு வைத்திருந்தாள்
அவளின் பள்ளி நூலகத்தில் அவள் படித்த ஓர் கவிதையை மனதுக்குள் எப்பொழுதும் நினைத்துக் கொள்வாள்
அந்தக் கவிதை
"உயிர் கற்களை
சொல்உளிக்கொண்டு
பிரமிக்கும்
அறிவுச் சிற்பங்களாய்
உருவாக்கும்
இறைச் சிற்பிகளே
ஆசிரியர்கள்"
அவள் பள்ளிக்கு செல்லும் போது எல்லாம் வீட்டின் கஷ்டங்களை மறந்து விடுவாள்
பாடம் படிப்பதிலும், தன் சிநேகிதிகளோடு மனம் விட்டு சிரித்து பேசுவதிலும் ஆசிரியைகளின் ஊக்குவிப்பிலும் மனம் புதிய நம்பிக்கை கொள்ளும்
அங்கு படிக்கும் பல பிள்ளைகளுக்கு
எப்பொழுது பள்ளியில் விடுமுறை கிடைக்கும் என ஆவலோடு காத்திருப்பார்கள்
இவள் மட்டும் விடுமுறை முடிந்து எப்பொழுது பள்ளி திறக்கப்படும் என காத்திருப்பாள்
வீடு அவளுக்கு பிடிப்பதில்லை வீட்டின் வறுமை, அப்பாவின் இயலாமை புலம்பல், நோய்க்கு ஒடுங்கிப்போய் குழிவிழுந்த கண்களில் நம்பிக்கையற்ற தாய், சுற்றிலும் வீண் கதை பேசி நேரத்தை வீணாய் கழிக்கும் உறவு கூட்டங்கள் இவைகள் அவளுக்கு ஒவ்வாதவைகளாகவே காணப்பட்டது
பலரைப் போல நேரத்தை தொலைக்காட்சிப் பெட்டியின் முன் உட்கார்ந்து கடத்த வீட்டில் தொலைக்காட்சிப் பெட்டியும் கிடையாது
விடுமுறையில் அம்மாவுக்கு வீட்டு வேலைகள் எல்லாம் பத்மா செய்வாள்
அம்மாவின் சமையல் அப்பாவுக்கு பிடிப்பதில்லை பத்மாவுக்கு பள்ளி விடுமுறை என்றால் அவளின் அப்பாவுக்கு கொண்டாட்டம்
"என் தங்கமே நாக்கு செத்துப் போச்சு இன்னைக்காவது தேங்காய்ய மைய அரைச்சி, சுறுசுறுன்னு காரம் வச்சி மசாலா குழம்பு செய்யுடா" அவளின் அப்பா அவளிடம் கெஞ்சுவதைப் போல கேட்பார்
"நீ கேக்குற மாதிரியே செஞ்சு தரேம்பா" என்பாள்
செய்து முடித்ததும் அம்மா செய்த ராகி களி உருண்டையை சூட்டோடு ஆவி பறக்க தட்டில் வைத்து அவன் அருகே பத்மா வைப்பாள்
அப்படியே மெய்மறந்து கந்தன் சாப்பிடுவான் தொண்டையில் இதமானன சூட்டில் களி திருநெல்வேலி இருட்டுக்கடை அல்வாவைப் போல எந்த தங்குத் தடையும் இன்றி இறங்கும்
நன்றியோடு மகளை ஏறிட்டு பார்ப்பான் கன்னங்களில் கண்ணீர் மிதக்கும்
பத்மா "ஏம்பா" என்பாள்
"ஒன்னுமில்ல" என தன் துண்டால் கன்னத்தை ஒற்றி எடுப்பான்
"செத்துப்போன நாக்குக்கு இப்பதான் உசுரே வந்திருக்குமா" என்பான்
அதேப் போல் கருவாட்டுக்குழம்பு வாசம் வீட்டில் மணக்கையில் அப்படியே அவன் பசி மனத்தாலே ஆறிவிடும்
அவனுக்கு கருவாடு என்றால் உசுரு அதுலையும் நெத்திலி கருவாடு எங்க கிடைச்சாலும் கடன் சொல்லியாவது வாங்கி வந்து விடுவான்
கருவாட்டை குழம்பாய் செய்ய முடியாத நேரங்களில் தக்காளி, வெங்காயத்தை நறுக்கி அவைகளை அம்மிக்கல்லில் அரைத்து எண்ணெயில் வதக்கி கழுவிய கருவாட்டை கொட்டி வேக வைத்து உச்சுக் கொட்டி சாப்பிடுவான்
ரச சாதம் என்றாலும் நாலு வாய்க்கு ஒரு தடவை கருவாட்டை கடித்து ருசிப்பான் கருவாடு சாப்பிடுவதில் அப்படி ஒரு அலாதி இன்பம் கொள்வான்
ஆனால் இன்று வீட்டில் ஒரு பொட்டு அரிசி இல்லை பருப்பு தீர்ந்து போய்விட்டது
அவன் மகள் பத்மா பசியோடு பள்ளிக்கூடம் போய் விட்டாள் மனைவியோ படுத்த படுக்கையாய் கிழிந்த கோரைப் பாயில் வியாதியோடு சுருண்டு கிடக்கிறாள்
இன்னைக்கு எந்த சாமியும் செருப்பு தைக்க வரலையே என மனதுக்குள் உசுரை புடுங்கி சாகும் அளவுக்கு நொந்து போயிருந்தான்
போதாக்குறைக்கு பக்கத்திலேயே ஒருத்தன் தார்பாய் விரித்து பெரிய குடையை நேராக்கி மண்ணில் குத்திட்டு நிறுத்தினான்
கொண்டு வந்திருந்த புது செருப்புகளை வரிசையாய் அடுக்கி வைத்து கூவி அழைத்துக் கொண்டிருந்தான்
" சார் ஜோடி செருப்பு நூறு ரூபாய் வாங்க சார் வாங்க"
ஒரு பத்து நிமிடம்தான் கூவியிருப்பான் கூட்டம் கூடியது செருப்பின் தரத்தை யாரும் பார்க்கவில்லை
நூறு ரூபாய்தான என பணத்தை அங்கு கூடியிருந்த மக்கள் ஒரு பொருட்டாக எண்ணாமல் வாங்கினார்கள்
இரண்டு மணி நேரத்திற்குள் கல்லா கட்டினான்
கொண்டுவந்திருந்த அறுபது ஜோடி செருப்புகளை அறாயிரம் ரூபாய்க்கு விற்றான்
பக்கத்தில் நூலும், தோலுமாய் உட்கார்ந்திருந்த கந்தனை பார்த்து சிரித்தான் "என்ன பெரியவரே அப்படி பார்க்கிறிங்க எதையோ யோசிக்கிறீங்க டீ சாப்பிடுறீங்களா" என்றான்
வேண்டாமென சொல்ல நினைத்தாலும் வயிற்றுப் பசி கிள்ளியது தலையை ஆட்டினார்
"நான் சந்தோசமாய் இருக்கிறேன் பெரியவரே எனக்காக டீ சாப்பிடுங்க"
சைக்கிளின் பின் கேரியரில் ஸ்டீல் டிரம்மில் டீயை வைத்துக் கொண்டு அங்குமிங்கும் அலைந்து கொண்டிருந்த பெரியவரை அழைத்து "ஐயா இரண்டு டீ குடுங்க" என்றான் ஐம்பது ரூபாய் நோட்டை நீட்டினான்
"தம்பி சில்லரை இல்லிங்களே இப்பதான் முதல் போணி நீங்கதான்" என்றார் பெரியவர்
"பரவால்ல பெரியவரே வச்சுக்கோங்க"
என்றான்
அவரோ வாயெல்லாம் பல்லாக "நீங்க நல்லா இருக்கணும் சாமி என கும்பிட்டு அந்த இடத்தை விட்டு கடந்து சென்றார்
கந்தனின் கையில் டீ கொடுத்தான் பசியை அடக்க அந்த டீ சூடாய் வயிற்றில் இறங்கியது
வீட்டில் முனியம்மா என்ன பண்றாளோ அவளுக்கு வீசிங் மருந்து வாங்க கூட காசு இல்ல
ஒரு பொட்டு அரிசி இல்ல வீட்டு பக்கம் போக கந்தனுக்கு மனசு இல்ல ஏதேதோ யோசனைகளில் அவன் மனம் மூழ்கியிருந்தது
செருப்பு விற்ற வாலிப பையன் கந்தனையே பார்த்துக் கொண்டிருந்தான் "என்ன பெரியவரே பலத்த யோசனையா இருக்கீங்க" என்றான்
சுயநினைவுக்கு வந்தவராய் "ஒன்னும் இல்லப்பா" என்றார்
"சரி உங்கள பாத்தா பாவமா இருக்கு கை செலவுக்கு வச்சுக்கோங்க" கையில் நூறு ரூபாயைக் திணித்தான்
வாங்க மனம் மறுத்ததுது சுய கௌரவம் தடுத்தது மனதுக்குள் இன்னொரு குரல் "டேய் கந்தா உனக்கெல்லாம் எதுக்குடா இந்த தன்மானம்,ரோஷம் முதல்ல காச வாங்குடா" என்றது
கை வாங்க மறுத்தது வீட்டின் நிலைமையோ வாங்க சொல்லிற்று
"வேண்டாம் தம்பி" என்றார்
"பெரியவரே உனக்கு ஒரு மகன் இருந்து கொடுத்தா வாங்க மாட்டியா"
அவன் சொன்ன வார்த்தையில் மனம் குளிர்ந்தது பிறகு எதையும் மறுத்து பேசாமல் "வாங்கிக்கிறேன் சாமி" என கையை முன் நீட்டினார்
அவன் கையை தொட்டு கும்பிட்டு வாங்கிக்கொண்டார்
"பரவாயில்ல பெரியவரே நான் ஒன்னும் அவ்வளவு பெரிய ஆள் இல்ல உனக்கு கொடுக்கணும்னு தோணுச்சு உன்ன பார்க்க அசப்புல எங்க அப்பா போலவே இருக்கிற" என்று அந்த வாலிபன் தன் கண்களில் கண்ணீர் கசிய கூறினான்
"அழாத சாமி ஏன் அழற" என்றார்
எங்க அப்பா என் மேல உசுரையே வச்சிருந்தாரு அவரை காப்பாத்த முடியல வீட்டை அடமானம் வச்சு வைத்தியம் பார்த்தேன் அப்பவும் முடியல" என மேற்கொண்டு அவனால் பேச முடியாமல் தேம்பினான்
"அப்படி அது என்ன நோவு சாமி"கரிசனையொடு கேட்டார்
"இரத்த புற்று நோய் உடம்புல இரத்தம் எல்லாம் கட்டியா மாறிட்டே இருக்கும் நாளாக ஆக இரத்திரி எல்லாம் தூங்க முடியாது
நோவு உயிர் போற மாதிரி வலிக்கும் அப்பா வலியால கத்துற சத்தம் யாரையும் தூங்க விடாது நரக வேதனை
ஹீமோதெரபி கொடுத்து கொடுத்து ஆளே அடையாளம் தெரியாம போயிட்டாரு அவரையே அவருக்கு பார்க்க பிடிக்கல தலையில,உடம்புல எல்லாம் முடி உதிர்ந்திடுச்சி"அதற்குமேல் அவனால் ஒன்றும் பேச முடியாமல் தேம்பி அழுதான்
"கஷ்டம்தான் சாமி பணக்காரர்களுக்கு வர்ற நோவு ஏழைகளுக்கு வந்தா எப்படிக் காப்பாத்த முடியும்" துக்கத்தோடு கூறினார்
தான் பெற்ற மகன் ஒருவன் இருந்தால் எப்படி அவன் மீது கரிசனையாய் இருப்பாரோ அப்படியாய் அவன் மீது மனதுருகினார்
இப்பொழுது அந்த இளைஞனைக் குறித்து தான் வைத்திருந்த எண்ணங்கள் அவரை விட்டு கலைந்து போயிற்று
மேலும் அந்த இளைஞன் கந்தனை விடுவதாயில்லை தன் கருப்பு பேன்ட்டின் பின் பாக்கெட்டில் இருந்து மணி பர்சை எடுத்து அதைப் பிரித்து உள்ளே இருக்கின்ற தன் அப்பாவின் படத்தை கந்தனிடம் காண்பித்தான்
கந்தன் அசந்து போனான் அப்படியே அசப்பில் அவனையே உரித்து வைத்ததைப் போல இருந்தது
"அப்பாவும் உங்களை போல செருப்புத் தைக்கிற வேலைதான் செஞ்சார்" என்றான்
கந்தன் வியந்தான் "அப்படியா என்னால எதுவுமே நம்ப முடியல சாமி எல்லாம் மாயாஜாலம் மாதிரி இருக்கு"
"நம்ம கையில என்ன இருக்குதுங்க எல்லாம் கடவுளுடைய திருவிளையாடல்"
"சரி சாமி நீங்க எப்படி இந்த தொழிலுக்கு"
"நான் டிப்ளமோ லெதர் டெக்னாலஜி முடிச்சிருக்கேன் கைவசம் பிராஜக்ட் வச்சிருக்கேன் காலம் கை கூடி வரும்போது அது நடக்கும் அதுவரைக்கும் காலத்தை ஓட்டனுமே அதனாலதான் இந்த பிசினஸ்"
"நல்லது உன் மனசுக்கு எல்லாம் நல்லபடியா நடக்கும்"
பெரியவரே உங்க கஷ்டம் நஷ்டம் எல்லாம் எனக்குத் தெரியும் புரியும் ஏன்னா நான் கண்கூடா எங்க அப்பா வாழ்க்கையில பார்த்து நொந்து போய் இருக்கேன்
இந்த சமுதாயம் நம்மள மதிக்கணும் நம்ம புள்ளைங்க எல்லாம் படிச்சே ஆகணும்" என வெறி கொண்ட பார்வையோடு பெரியவரைப் பார்த்தான்
"அதான் சாமி என் பொணண கஷ்டப்பட்டு படிக்க வைக்கிறேன்"
பெரியவரிடம் அவன் "படிப்ப மட்டும் பாதியில நிறுத்திவிடாதிங்க கடல்ல மூச்சடைக்கி முத்து எடுக்கிற மாதிரி உசுர கொடுத்தாவது படிக்க வச்சிடணும்" என்றான்
"ஆமா சாமி உன்ன மாதிரிதான் என் பொண்ணு பத்மா படிச்சு பெருசா சாதிக்கணும்னு அடிக்கடி சொல்லுவா"
"பெரியவரே உங்கள அப்பான்னு கூப்பிடணும் போல தோணுது கூப்பிடலாமா"அனுமதி கேட்டான்
"தாராளமா கூப்பிடலாம் சாமி என் மனசு குளிரும் எனக்கு ஆம்பள பையன் இல்ல"முகம் மலர்ந்தான்
"கவலைப்படாதீங்க அப்பா எனக்கு ஒரு தங்கச்சி இருந்தா நான் படிக்க வைக்க மாட்டேனா இனிமே எதுனாலும் எந்த உதவின்னாலும் என் கிட்ட தயங்காம கேளுங்க
நீங்க யார் எவருனே எனக்கு தெரியாது ஆனா பாருங்க என் அப்பா மாதிரியே அச்சா இருக்கிறீங்க அதனால அப்படியே இந்த நிலையிலையே உங்கள விட்டுட்டு போக எனக்கு மனசு வரல" என்றான்
சூரியன் மறையும் மாலை நேரம் "அப்பா உங்க வீடு எங்க இருக்கு சொல்லுங்க நான் கொண்டு போய் உங்கள விட்டுட்டு போறேன் என்றான்
தன்னுடைய ஆக்டிவ் ஹொண்டாவில் பெரியவரிடம் இருந்த கந்தல் துணிப் பையை வாங்கி முன்னாடி வைத்துக்கொண்டான் கந்தனோ உட்காருவதற்கு சங்கோஜப்பட்டார்
"உட்காருங்க என்ன யோசிக்கிறீங்க உங்க வீடு எங்க"
"எம்ஜிஆர் நகரில் நாளாவது வீடு"
ஐந்து நிமிடத்தில் வண்டியை பெரியவரின் வீட்டு நிலைப்படி அருகே கொண்டுபோய் நிறுத்தினான் அந்த இளைஞனான மகேஷ்
அந்த வீட்டை தன் கண்களால் அளவெடுத்தான் வீட்டுக்குள் முனகல் சத்தம்
"என்னப்பா சத்தம் அம்மாவுக்கு உடம்புக்கு முடியலையா"
"ஆமாப்பா" என குரல் தழும்ப கூறினார்
அந்த வீட்டின் ஏழ்மை கோலம் அங்கிருந்த அம்மாவின் சுருண்டு படுத்திருக்கும் ஒல்லியான தேகம் பார்க்க மகேஷின் மனமும் கசிந்தது
மகேஷை பார்த்ததும் அந்த அம்மா எழ முடியாமல் விருட்டென்று எழுந்து கும்பிட்டது "வாங்க தம்பி"
"இதா தம்பிக்கு காப்பி, தண்ணி ஏதாவது போடு" என்றான் கந்தன்
"வேணாம்பா"
"முதல் தடவையா வீட்டுக்கு வந்திருக்க"
"அதெல்லாம் எதுவும் வேணாம் அம்மாவுக்கு என்ன" என்றான்
"ஆஸ்துமா குளிர்காலம் வந்தா மூச்சு இளைக்கும் அப்புறம் டாக்டரை பார்த்து மருந்து மாத்திரை வாங்கி போட்டுக்கிட்டா சரியா போயிடும்" என்றார்
மகேஷின் மனம் அந்த இடத்தை விட்டு கடந்து செல்ல ஒத்துழைக்கவில்லை
மணி பர்சை எடுத்து மீண்டும் பிரித்து ஐநாறு ரூபாய் நோட்டை பெரியவரின் கையில் நீட்டினான்
"முதல்ல ஒரு ஆட்டோவ வச்சு அம்மாவா ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டு போங்க மத்ததெல்லாம் அப்புறம் பார்த்துக்கலாம்" என்றான்
வாங்க மறுத்த பெரியவரின் கையில் நோட்டு திணிக்கப்பட்டது
கந்தனால் அழாமல் இருக்க முடியவில்லை தனியாய் போய் ஓவென அழ வேண்டும்போல தோணிற்று
கைகளால் வாயை பொத்தி அடக்கிக் கொண்டு கண்களிலிருந்து கன்னக் குழிகளில் தேங்கின கண்ணீரை கட்டுப்படுத்த இயலவில்லை
"திரும்பவும் நாளைக்கு வரேன்" என்று சொன்ன மகேஷ் அச்சூழலில் அந்த இடத்தில் அதிக நேரம் இருக்க மனம் அவனுக்கு ஒத்துழைக்கவில்லை அங்கே இருந்தால் அவனும் அழுது விடுபவன் போலவே காணப்பட்டான் ஆகவே புறப்பட்டான்
பிறகு கந்தன் ஆட்டோவில் தன் மனைவியை உட்கார வைத்து பக்கத்து மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று ஊசி போட வைத்து மருந்து மாத்திரை வாங்கிக் கொண்டு வீடு திரும்பினான்
மாலை நேர பள்ளி டியூசன் முடிந்து வீட்டிற்கு வந்த தன் மகளிடம் நடந்த அத்தனை நிகழ்வுகளையும் கந்தன் பிசகாமல் கூறினான்
மகளின் கண்கள் ஆச்சரியத்தில் விரிந்தன "அப்படியா அந்த அண்ணன பார்க்கணுமே" அவளுக்குள் ஆவல் அதிகரித்தது
நாளைக்கு அந்த அண்ணன் வரும்மா
இரவெல்லாம் அவளுக்குத் தூக்கம் வரவில்லை
தன்னுடன் பிறக்காத அந்த பாச அண்ணன் எப்படி இருப்பார் எப்படி பேசுவார் என தன் மனதுக்குள் ஆயிரம் யோசனைகள் அவளுக்குள் ஓடியது
அடுத்த நாள் பள்ளி விடுமுறை என்பதால் பத்மா வீட்டிலே ஆவலோடு காத்திருந்தாள்
மகேஷ் வந்தான் வீட்டுக்குள் நுழைய கந்தன் தன் மகளிடம் மகேஷை அறிமுகப்படுத்தினான்
"வாங்க அண்ணா" என்றாள்
அம்மாவுக்கு எப்படி இருக்குமா உன் படிப்பு எப்படி போகிறது உன் எதிர்கால லட்சியம் என்ன சகலமும் பல மணி நேரங்கள் அங்கெ இருந்து பேசப்பட்டது
குறுகிய நேரத்திலே பழகின அவர்கள் அதிக நாட்கள் பழகின பந்தம் போல் உணர்ந்தார்கள்
"கவலைப்படாதே நான் உனக்கு ஒரு அண்ணனா இருந்து சகலத்தையும் செய்து வைக்கிறேன்" என்றான்
அந்த வார்த்தை அவளுடைய மனதிற்குள் அசைக்க முடியாத நம்பிக்கை எனும் வேரை ஊன்றிற்று
பிறகு அடிக்கடி அவன் அங்கு வந்து அந்த குடும்பத்தின் நலனை விசாரித்தான் அவர்களின் தேவைகளை சந்தித்தான் அந்த குடும்பத்தில் ஒருவனாகவே ஆகிவிட்டான்
"இனிமே அப்பா நீங்க செருப்பு தைக்க போக வேணாம் நானே செருப்பு கடை ஆரம்பிக்கிறேன் நீங்க தான் அதுக்கு முதலாளி" என்றான்
"என்னால எப்படிப்பா முடியும் எனக்கு படிப்பு ஒன்னும் இல்லையேப்பா" என்றார்
"உங்களால் எல்லாம் முடியும் உங்க மேற்பார்வையில அந்த கடை நடக்கும்" என்றான்
பிறகு ஒரு சில மாதத்தில் மகேஷ் புட் வியர் எனும் பெயரை பஸ் ஸ்டாண்டில் முக்கியமான இடத்தில் திறக்கப்பட்டது
மகேஷ் வாங்கி தந்த வேட்டி, சட்டையில் கந்தன் மினுமினுப்பாய் கடையில் ஜொலித்துக் கொண்டிருந்தார்
சிரித்த முகத்துடன் கஸ்டமர்களை வரவேற்று அவர்கள் தேவைகளை பூர்த்தி செய்வதில் கந்தன் தன்னை அர்ப்பணித்துக்கொண்டார்
செருப்பு கடை எப்பொழுதும் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது
மகேஷ் தன் சொந்த அம்மாவை கவனிப்பது போல கந்தனின் மனைவியை ஒரு நல்ல தனியார் மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை பெற செய்தான் அவள் முன்னேற்றம் கொண்டாள்
பத்மாவின் அனைத்து படிப்பு செலவுகளையும் மகேஷ் பொறுப்பெடுத்துக் கொண்டான்
பத்மா பள்ளியில் படிக்கும் தன் சக மாணவிகளிடம் இவர்தான் எங்க அண்ணன் மகேஷ் என அறிமுகப்படுத்தினாள் அவனை உரிமை கொண்டாடினாள்
பத்மாவிற்கு எதிர்காலத்தைக் குறித்து அசைக்க முடியாத நம்பிக்கை பிறந்து வளர்ந்தது
எப்படியும் நான் கலெக்டர் ஆகி விடுவேன் அதில் துளியும் சந்தேகம் இல்லையென அவள் படிப்பைத் தொடர்ந்தாள்
கந்தனின் கவலை தோய்ந்த மனைவியின் முகம் இப்பொழுதெல்லாம் மலர்ச்சியை கொண்டிருந்தது
இப்ப இருக்குற இடம் சுத்தம், சுகாதாரம் இல்லையென மகேஷ் அவர்களை புது வாடகை வீட்டில் குடியமர்த்தினான்
கந்தன் பரந்த மனதோடு கண்களை ஏறெடுத்து வீட்டு வாசலில் இருந்து வானத்தை அண்ணாந்து பார்த்து இரு கரங்களை அகலமாய் விரிவாய் நீட்டினான்
கண்ணீரோடு "கடவுளே நீர் நல்லவர் இந்த பூமியில் பிறந்ததின் பலனை கண்டு கொண்டேன் நீர் கொடுத்த உறவுகளுக்காக நன்றி என்றான்
34 வது கதை
தாத்தாவின் தோட்டம்
33.வது கதை
என்ன ஆவது?
அது ஒரு அதிகாலைப் பொழுது குருவிகள் ஒலி எழுப்பின, காகங்கள் கரைந்தன. கரைந்த காகம் ஒன்று ஒரு மரத்தின் மீது போய் அமர்ந்தது அந்த மரத்தின் அருகே ஒரு குடிசை வீடு. அவ்வீட்டில் ஒரு தாயும் மகனும் வசித்து வந்தனர். கணவனை இழந்த அத்தாய் வேலைக்கு போகும் நிர்பந்ததில் உள்ளார். அவள் சென்னை மாநகராட்சியில் துப்புரவு பணியாளராக பணியாற்றி வருகிறாள். அத்தாயக்கு பத்து வயதில் ஒரு மகன் அவன் அரசு உயர்நிலைப்பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்து வருகிறான்.
தந்தையை இழந்த அச்சிறுவன் தாயின் அரவனைப்பில் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகின்றான்.
ஒருநாள் அச்சிறுவன் பள்ளி செல்வதற்காக அதிகாலையில் எழுந்து குளித்து முடித்து விட்டு பள்ளி சீருடையை அணிந்து கொண்டு காலை உணவுக்காக தன் தாயை அனுகினான்.
சமையலறையில் அவன் தாய் சுடச்சுட இட்லி செய்து கொண்டு யிருந்தார்.
அம்மா பள்ளிக்கு சீக்கிரம் போகனும் சாப்பாடு தாங்க என்றான்.
இதோ முடிஞ்சிருச்சி பா என்று தட்டில் வைத்திருந்த இட்லியை தன் மகனுக்கு ஊட்டி விட்டார். அதை அவனும் ஆவளுடன் ஊட்டிக்கொண்டான். வயிறு நிறைந்த பின் பள்ளிக்கு செல்ல அயுத்தமானான்.
அம்மா நா பள்ளிக்கு போய்ட்டுவரேன் என்றான்.
அம்மா ஒங்கிட்ட ஒன்னு கேக்கானும் நீ பெரிய ஆளா ஆன என்ன ஆகா போற?
அச்சிறுவனுக்கு அம்மாவின் அந்த கேள்வி குழப்பத்தை தந்தது அதற்கு அவனிடம் பதில் இல்லை. அம்மாவிடம் நா மாலை வந்து சொல்றேன் என்று கூறி சமாளித்து விட்டான்.
சரிப்பா பாத்து கவனமாபோய்ட்டுவா என்றாள் தாய்.
தன் வகுப்பு தோழனுடன் பள்ளிக்கு நடக்க தொடங்கினான். பள்ளி சுமார் 2 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது. அப்போது அவன் மனதில் அன்னை கேட்ட கேள்வி நினைவு வந்தது. அவன் தனக்கு தானே கேட்டுக் கொண்டான்.
அம்மா என்ன பாத்து என்ன ஆகபோறேன்னு கேட்டாங்க என்னவாக ஆகுறது ? என்று யோசித்துக் கொண்டே நடந்தான்.
அப்போது சாலையில் மக்கள் கூட்டமாக நின்றுகொண்டு இருந்தனர். ஆர்வமிகுதியால் அவனும் அவன் நண்பனும் அந்த கூட்டத்தில் நுழைந்து பார்த்தனர். அப்போது அங்கே ஒரு மனிதர் மயங்கிய நிலையில் உணர்வற்று இருந்தார். என்ன நடந்தது என்று இருவரும் நினைக்கையில் கூட்டத்தில் ஒருவர் முநுமுநுத்தார் மயங்கி இருக்கும் மனிதர் மின்சார ஊழியர் என்றும் மின்கம்பத்தை பழுது நீக்கும் போது மின்சாரம் தாக்கியதில் மயங்கி கிழே விழுந்தார் என்றார். இதை கேட்ட சிறுவன் வருந்தினான் பின் மயங்கி கிடந்த மனிதரை ஆம்புலன்ஸ் ஏற்றிச் சென்றது.
சிறுவன் அங்கிருந்து அகன்று நடக்க தொடங்கினான்.
சற்று தூரத்தில் ஒரு வயதான நபர் கழிவு நீர் தொட்டியில் இறங்கி கழிவுகளை சுத்தம் செய்துக்கொண்டு யிருந்தார். அதை கண்டவாரே நடந்து சென்றான் சிறுவன்.
ஒருவழியாக சரியான நேரத்தில் பள்ளியை அடைந்தான். தன் வகுப்புபறைக்குள் சென்று அமர்ந்தான்.
அறிவியல் ஆசிரியர் வந்தார் அறிவியல் படம் நடந்தது.
அறிவியல் இன்று நம் வாழ்க்கையில் ஒன்றோடு ஒன்றாக கலந்தது விட்டது. முன்னோருக்காலத்தில் சாதாரண மக்கள் பயணம் செய்வதற்கு நடைபயணமாக தான் செல்ல வேண்டும் ஆனால் இப்போது அறிவியலின் உதவியால் இருசக்கர வாகனம், கார் என பயணம் செய்வதற்கு வாகனங்கள் உருவாகி உள்ளது. அதுமட்டுமின்றி சமுகத்தின் வளர்ச்சிக்கும் அறிவியல் பெரும் உதவி புரிந்துள்ளது.
என்று ஆசிரியர் கூறினார்.
இவற்றை எல்லாம் நன்கு கவனித்துக் கொண்டிருந்தான் சிறுவன். அறிவியல் வகுப்பு முடிந்தது. சிறுவன் வகுப்பறையில் தன்னிடத்தில் அமர்ந்து கொண்டு அந்த மின் ஊழியர் மின்சாரம் தாக்கி மயங்கி விழுந்ததையும் , வயதான முதியவர் கழிவு நீர் தொட்டியை சுத்தம் செய்ததையும், அறிவியல் ஆசிரியர் கூறிய சமுகவளர்ச்சிக்கு அறிவியலின் முக்கியத்துவத்தையும் எண்ணி யோசித்துக் கொண்டு யிருந்தான் . அறிவியல் மூலம் சமுபிரச்சனைகளுக்கு தீர்வுக்கான முடியும் என்று புரிந்து கொண்டான் அதுமட்டுமின்றி அன்னை கேட்ட கேள்விக்கும் பதில் கிடைத்தது. பள்ளி முடிந்தவுடன் வீட்டிற்கு சென்றான் அங்கு அவனுடைய அம்மா அவனுக்காக காத்திருந்தாள்.
இன்னைக்கு எப்படி போச்சு வகுப்பு என்றாள் தாய்.
நல்ல போச்சு மா அம்மா இன்னைக்கு நீங்க ஒரு கேள்வி கேடிங்கல அதுக்கு பதில் கிடைச்சிருச்சு நா ஆராய்ச்சியாளர் ஆகபோரேன்.
இதை கேட்ட தாய் தன் மகனை கட்டி அனைத்துக் கொண்டாள்.
32 வது கதை
இறைவன் கொடுத்த வரம்
ரமணனுக்கு மே மாதம் இருபத்தி இரண்டாம் நாள் வருஷம் இரண்டாயிரத்து ஐந்து அன்று தான் திருமண வைபவம் நடந்தது
அப்ப ஒரு பவுன் தங்கத்தின் விலை வெறும் நாலாயிரத்து ஐநூறு ரூபாய் மட்டுமே
இருந்தாலும் அப்ப அது அதிக ரூபாய்தான் வாய் பிளந்து யோசிக்கும் அளவுக்கு பெரிய விலை என்றும் சொல்லிவிட முடியாது
இன்றைக்கு இருக்கும் தங்கத்தின் விலையை ஒப்பிட்டுப் பார்க்கும் பொழுது இன்று ஒரு கிராம் தங்கமே நாளாயிரத்து எட்டுனூறு பிளக்காத வாயை பிளக்க வைக்கிறது
தங்கம் ஒரு பவுன் சேர்ப்பதற்கு நடுத்தர வர்க்கத்திற்கு உயிர் போய் உயிர் வருகிறது ஒவ்வொரு மாதமும் ஒரு கிராம் என எட்டு மாதம் சேர்த்தால்தான் ஒரு பவுன் ஆகிறது
ரமணனுக்கு கூடப்பிறந்த அக்கா மாலா அந்த திருமண நாளில் ஒரு பவுனில் மோதிரம் செய்து போட்டாள்
நிறைய பேர் மொய்யாக பணத்தை வைத்தார்கள் மொய் பணம் என்பது அவனுக்குப் பெரிய பிரச்சனை இல்லை அன்றைக்கு நூறு ரூபாய் வைத்தவர்களுக்கு இன்று கூடுதலாய் இருநூறு வைத்தாலும் பற்றாக்குறை எனும் நிலை வராது
பவுன் வைத்தவர்களுக்கு என்ன செய்வது என மண்டைக்குள் எண்ணங்கள் வண்டாய் குடைந்து கொண்டிருந்தது
கொரோனா காலம் ரமணன் ஒரு தனியார் பள்ளியில் எட்டாங்கிளாஸ் தமிழாசிரியராகப் பணியாற்றி வந்தான் தொடர்ந்து பள்ளி திறக்காத இந்த ஒன்பது மாதங்களில் நான்கு மாதங்களுக்கு பாதி சம்பளம் வந்தது
மீதி ஐந்து மாதங்கள் பள்ளி நிர்வாகம் "எங்களால் இப்போ ஒன்னும் முடியாது" என கைவிரித்து விட்டார்கள்
ரமணன் தன் மனைவியிடம் இருந்த கொஞ்ச நகைகளையும் குல்லா போட்டு வயிறு பெருத்த ஒரு சேட்டிடம் அடமானம் வைத்து பணத்தை வாங்கி அன்றாட பிழைப்பு நடத்தி வந்தான்
தன் குடும்பத்தை காத்தான் வீட்டில் இரண்டு பெண் பிள்ளைகள் ஒருத்தி பத்தாம் வகுப்பு படிக்கிறாள் இன்னொருவள் எட்டாம் வகுப்பு படிக்கிறாள்
மொத்தம் வீட்டில் நான்கு நபர்கள் இருந்தார்கள் நல்லது கெட்டது என சொந்தக்காரர்களின் கல்யாணம் கச்சேரிகளுக்கு சென்று செலவு செய்யவே நகைகளின் அடமான பணம் சரியாய் இருந்தது
வட்டிக் கடையில் வைத்த நகைகளை மீட்க முடியவில்லை குல்லா போட்ட சேட்டோ வெளியே ரமணனுக்காக பரிதாபப் பட்டாலும் மனதுக்குள் வந்த வரை லாபம் என குதூகலித்துக் கொண்டிருந்தான்
கரடு முரடான தேவை நிறைந்த வாழ்வின் பாதையில் ஓட வேண்டிய நிர்பந்தம் மனிதனாய் ரமணன் கூடவே அவன் மனைவி, பிள்ளைகளும்
வாத்தியார் வேலை இழந்து, நகைகளுக்கு வட்டி கட்ட முடியாமல் நகைகளையும் இழந்து, கொரோனா காலத்தில் வாழ வேண்டிய கட்டாயத்தில் இருந்த ரமணனுக்கு
ஒரு போன் கால் வந்தது "தம்பி ரமணா எப்படிடா இருக்க"
அவன் என்ன சொல்வான் வழக்கமாய் எவரிடமும் கேட்கும் கேள்விக்கு வழக்கமான பதிலையே உதித்தான் "நல்லா இருக்கேன் நீ எப்படி இருக்க"
அவனோடு தொடர்ந்து அவனின் அக்கா பேசினாள்" நம்ம சதீஷ்க்கு கல்யாணம் வச்சிருக்கேன்"
"நல்லது எப்ப எங்க"
"கொரோனா காலம் எல்லார்கிட்டயும் சொல்லள பத்திரிக்கை அடிக்கல முக்கியமானவங்களுக்கு மட்டும் டிரேவல் பேசியிருக்கோம் அஞ்செட்டி பக்கம் ஒரு மலை மேல இருக்கிற முருகன் கோயிலில் திருமணம் மறக்காம உன் பொண்டாட்டி, பிள்ளைகளோட முந்தின நாளே நம்ம வீட்டுக்கு வந்துடு" என மூச்சு விடாமல் பேசி முடித்தாள் அவளின் அக்கா மாலா
இவனுக்குதான் மூச்சு முட்டியது வைத்த நகையை மீட்க முடியாமல், வட்டி கட்ட முடியாமல் இருக்குற இந்த நேரத்துல அக்கா என் கல்யாணத்தில் போட்ட அந்த நகையை எப்படி திரும்ப நான் கொடுக்க போறேன்
அவள் போட்ட அந்த நகைக்கு ஈடாக அந்த வருஷ கணக்கின்படி நாலாயிரத்து ஐநூறு அதை இப்ப பணமா கொடுத்தா ஒத்துக்க மாட்டா "நீ எல்லாம் ஒரு தாய் மாமனா? போட்ட நகைய திரும்ப தர வக்கில்ல" என வாய் கூசாமல் திட்டுவாள்
அந்த வசைப் பாட்டை என்னால் எப்படி கேட்க முடியும் நான் என்ன செய்ய அவன் மனதுக்குள் வலி உண்டாயிற்று இந்த வலிக்கான நிவாரண மருந்து பணம்தான்
அந்தப் பணம் கிடைக்காததால்தான் குடும்பத்திலும், உறவினர்களிடமும் மனக்கசப்பு, சண்டை, பிரிவுகள் எல்லாம் உண்டாகிறது இந்த உறவு கூட்டங்களில் இருந்து நிம்மதியாய் பிரிந்து தப்பிக்க வாழவும் இயலாது என யோசனையோடு இருந்த அவனின் யோசனையை களைத்தது அக்கா மாலாவின் புருஷனும் மொபைல்
" மாப்பிள எப்படி இருக்கீங்க உங்களுக்கு ராம்ராஜ் வேட்டி சட்டை எடுத்திருக்கோம் மறக்காம வந்துடுங்க தங்கச்சி, பிள்ளைகளையும் கூட்டிட்டு வந்துடுங்க" என அவர் பங்குக்கு அவர் சொல்ல
"சரி மாமா" என்றான்
போக மனசு இல்லை கையில் பணமும் இல்லை கெத்தா நகை போட வக்கில்லாத எனக்கு எதுக்கு ராம்ராஜ் வேஷ்டி சட்டை என மனதுக்குள் தனிமையாய் அழுதான்
தனக்குள்ளே தொடர்ச்சியாய் பேசினான் அக்கா நீ அன்னைக்கு ஆசையா எனக்கு ஒரு பவுன் மோதிரம் செஞ்சு போட்ட நான் ரொம்ப சந்தோஷப்பட்டேன் ஆனா இப்ப அந்த சந்தோஷம் எனக்கு முள்ளா குத்துது
என்ன செய்ய உன் அவசரம் உனக்கு கல்யாணத்தை தள்ளி போட முடியாது உன் பையனுக்கு வயசு ஆயிட்டே போகுது அமஞ்ச பொண்ண விடக்கூடாதுன்னு இருக்க தப்பில்லை என பேசிக் கொண்டான்
சரி அக்காவுக்கு இன்னும் ரெண்டு பசங்க இருக்காங்க இந்தப் பையனுக்கு அரை பவுன் போட்டுடலாம் மத்த பசங்களுக்கு மீதிக்கு மேல வசதி வந்த பிறகு பார்ப்போம் இப்ப இருக்கிற சூழல் மாறும் என முடிவு செய்தான்
பிறகு தன் மனைவி லட்சுமியை பார்த்தான் அவளும் அவனைப் பரிதாபமாகப் பார்த்தாள் "என்னங்க செய்யறது" என்றாள்
"எனக்கு ஒன்னும் யோசிக்க முடியல" என்றவனின் கண்களில் வறுமையின் வெளிப்பாடாய் கண்ணீர் துளிகள்
"அழாதீங்க" என்று சொன்ன லட்சுமியின் கைகளில் அரைப்பவனுக்கு உரிய தாலி குழல்கள் இருந்தன "இந்தாங்க இதோட கொஞ்சம் கூட பணம் போட்டு நாலு கிராம் தங்க காசு வாங்கிலாம்" என்றாள்
அவன் மேலும் "லட்சுமி நான் உன் தாலிய கூட காப்பாத்த முடியாத பரதேசி ஆயிட்டேன்" என்றான்
"இதுல போய் என்ன இருக்குங்க நீங்க வேற நான் வேறயா உங்களுக்கு ஒரு கஷ்டம்னா அது என்னைய பாதிக்காதா" என்றாள்
இப்பொழுது அவளின் தாலிக்கயிற்றில் ஒரு பொட்டுத் தங்கம் கூட இல்லை
அவள் தாலியின் தங்க குழல்கள் அரைப் பவுன் தங்கக் காசாக மாறி இருந்தது
யாவரும் அஞ்செட்டி மலையில் ஒரு முருகன் கோயிலில் கூடியிருந்தார்கள் ரமணன் தன் அக்கா மகனுக்கு திருமண பரிசாக அரைப் பவுன் தங்கக் காசை கொடுத்தான்
ரமணனின் அக்கா அங்கிருந்தவர்களிடம் "என் தம்பி அரை பவுன் தங்கம் மொய்யா வச்சிருக்கான்" என வாய் நிறைய சந்தோஷத்தோடு பெருமையாய் சொல்லி சிரித்துக் கொண்டிருந்தாள்
ரமணனோ வெளியே சிரித்தாலும் மனதுக்குள் தன் மனைவியின் தங்கம் இல்லாத தாலியை நினைத்து அவளுக்காக உள்ளத்துக்குள் அழுதுகொண்டிருந்தான்
ரமணனின் மனைவி லட்சுமி தன்னுடைய இழப்பீடுகளை பெரிதாக எண்ணாமல் அந்தக் கல்யாணத்தில் இருக்கும் யாவரின் சந்தோஷத்திலும் பங்காக இருந்தாள்
தன் கணவனின் புது வேட்டி, சட்டையை பார்த்து "நீங்க தான் இப்ப மாப்பிள்ளை மாதிரி ஜம்முனு இருக்கீங்க" என சிரித்த முகத்துடன் கேலி செய்து தன் கணவனை சந்தோஷப்படுத்திக் கொண்டிருந்தாள்
ரமணனோ ஒப்புக்கு சிரித்தவனாய் மாப்பிள்ளை கோலத்தில் இருந்த தன் அக்கா மகனிடம் "நல்ல மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் உன் மனைவிய கண்கலங்காம பார்த்துக் கொள்" என்றான்
அவ்விடத்தை விட்டு வெளியே வந்தவனின் கண்கள் கலங்கி கொண்டிருந்தது
கலங்கின கண்ணீரைத் துடைத்தாலும் அவன் மனைவி லட்சுமியின் பாச நிகழ்வுகள் நில்லாமல் மனதுக்குள் படமாய் ஓடிக்கொண்டே இருந்தது
சங்கீதா சுரேஷ்
5வது கதை
ஒற்றுமையின் பலம்
*******************
தமிழ் சிறுகதை ( எழுதியவர். வள்ளியம்மை சுப்பிரமணியம் )
4 வது கதை
3 வது கதை
2. வது கதை 15.12.2020
சித்திரப்பூ
————-
அன்று ஒரு வெள்ளிக்கிழமை ஆறு நாட்கள் மிகுந்த பனிப்பொழிவுகளுக்குமத்தியிலும் கப்பல்களில் இருந்து கொண்டுவந்து தரையில் இறக்கப்படும் மீன்களை பார ஊர்திகளுக்கு ஏற்றி தொழிற்சாலைக்கு கொண்டு சென்று அங்கு வைத்து நொருக்கிய ஐஸ் கட்டிகளுக்குள்மீன்களை மறைத்து பொதிசெய்யும் வேலையில் மிகத்தீவிரமாக ஈடுபட்டுக்கொண்டிருந்தார் தங்கராசாண்ணை. ஊரில சேட்டைக்கழட்டி தோளில் மடித்துவைத்துக்கொண்டு பனங்குற்றிகளையும் தண்டவாளக்குற்றிகளையும் லாவகமாக தூக்கிச்சுமந்த மனுசனுக்கு இந்த சின்ன குளிர் பெட்டியில் அடைக்கப்பட்ட மீன்களை -12 பாகை குளிருக்குள் நின்றபடி தூக்கிக்காவி வேலை செய்வது சிரமமாகத்தான் இருக்குது. கொம்பனி தந்த கையுறையையும் மீறி கையைக்குத்தி விறைக்கவைக்கிற குளிருக்கு அவர் மட்டுமல்ல அகதியாக வந்த எல்லோரும் தங்களை மாற்றிக்கொண்டுதானே ஆகவேண்டும்.
ஓயாத வேலைகளுக்கு மத்தியில் அவருக்கு பக்கத்தில் வந்த ஈசன் “என்ன அண்ணை இந்தமாச காசு கொடுத்திட்டீங்களோ”அன்று தங்கராசாண்ணையின் காதுக்குள் கேட்டான்.”இல்லடாப்பா,இந்த கொரோணாவால என்ர கீப்பில வேலைசெஞ்ச மூண்டு சுகர்கார வேலையாட்கள் சோமாஷ் பார்சையில நிக்கினம். அதால பத்ரோன் என்ன தொடர்ந்து வேல செய்ய சொல்லிப்போட்டான்” என்றபடி அவரது வேலையில் துரிதமாக ஈடுபட்டுக்கொண்டிருந்தார்.
தங்கராசாண்ணை போனமாதம் இடம்பெற்ற அந்தோனியார் கோயில் திருப்பலி ஒன்றில் கலந்து கொண்டபோது அவருக்கு உடம்பில சீனி குறைஞ்சதால தலை சுற்றி கோவில் வாங்கிலேயே சரிந்துவிட்டார்.அதுக்குப்பிறகு அம்புலன்ஸ் வந்து வைத்தியசாலைக்கு ஏற்றிக்கொண்டு போனதுவரை அது வேறகதை.
ஆரும் கேட்டால்; “என்ன செய்வது நாங்க அகதிகள்தானே;வெள்ளக்காரன் மாதிரியே! எங்களுக்கு சொந்த பந்தம், குடும்பம் என்று எத்தினை பொறுப்புக்கள் இருக்கு” என்பார்.”தற்போது ஏற்பட்டுள்ள கோவிட்19 உலக நெருக்கடியில லொக்டவுனுக்குள்ள இருக்கிற எங்கட சனத்த காப்பாத்திற பொறுப்பும் கடமையும் வெளிநாட்டில வாழுற எங்கட சனத்தின்ர கையிதானே இருக்கு அதனால அந்தக்கடமையில என்ர பங்கும் இருக்கவேணும் என்றதால; நாட்டில எத்தனையோ மலேரியா செங்கமாரி எல்லாம் தாங்கின உடம்புக்கு இந்த கொரோணா வந்து என்னத்தப்பண்ணிப்படைக்கப்போகுது; கிடைக்கிற சந்தர்ப்பத்த பயன்படுத்தி எங்கட மக்கள காப்பாத்திப்போடணும். கொடிய யுத்தத்தாலையும் திட்டமிட்ட இனப்படுகொலைகளாலயும் பாதிக்கப்பட்ட எங்கட மக்களை இப்ப இந்த இயற்கையும் ஒரு வழிபண்ணி அழிக்கப்பார்க்குது. அதற்கும்மேலாக யுத்தத்தால ஏதிலிகளான மக்களை வீட்டோட அடைச்சு வைச்சா அதுகளுக்கு யார் ஒரு நேர சாப்பாடு போடுறது?இந்த நேரத்திலயாவது அதுகளுக்கு நாங்க இருக்கிறோம் என்ற நம்பிக்கைய ஊட்டவேணும் தம்பி!” என்று எல்லோருக்கும் சொல்லுவார் தங்கராசண்ணை.
அன்று ஞாயிற்றுக்கிழமை, ஆறு நாளும் ஓவர்ரைம் வேலைசெய்து களைத்திருந்த தங்கராசாண்ணையின் தூக்கத்தை கலைப்பது போல் அவரது கையடக்கத்தொலைபேசி காட்டுக்கத்தல் கத்திக்கொண்டு இருந்தது.ஏற்கனவே வேலைக்காக அலாம் வைத்து விட்டு; வைத்த அலாம் அடிக்குமா, இல்லையா?எனும் சந்தேகத்தில் அடிக்கடி தூக்கத்தில் இருந்து எழுந்து ரெலிபோனில் நேரத்தை பார்த்துக்கொண்டிருந்தே இரவை விரட்டிக்கொண்டிருக்கும் தங்கராசாண்ணைக்கு, அலைபேசியில் அழைப்பு ஒலி கேட்டதும் மனுசனுக்கு வேலைக்கு தாமதமாகிவிட்டது என்ற பயமே முதலில் ஏற்பட்டிருந்தது. பின்னர் இன்றைய நாள் அவரது ஓய்வு நாள், என்ற ஞாபகம் மூளையில் படர, மனதுக்குள் நச்சரித்துக்கொண்டே அலை பேசியில் இருந்த குரல் பதிவினை கேட்டபடியே தேனீர் கேத்திலை சூடேற விட்டுவிட்டு அவர் உறைந்துபோனார்.
“வணக்கம் அண்ணை எனக்கு பொசிற்றிவ் என்று வந்திருக்கு.முதலில தெரியாது. இப்ப மூச்சுவிட கஸ்ரமாயிருக்கு. சரியான காய்ச்சல். நானும் மனுசியும் ஒரு அறையிலும் பிள்ளைகள் ஒரு அறையிலும் தனிமையில் இருக்கிறோம். பிள்ளைகளுக்கு ஒழுங்கா சாப்பாடுகொடுத்து இரண்டு நாளா போயிற்றுது .நீங்கள் எங்கட மக்களின் வாழ்வாதாரத்திற்கு உதவ காசு கேட்ட நீங்கள். அதனான் ஒண்லைன் மூலமாக உங்கட கணக்கிற்கு மாற்றிப்போட்டன்.ஒருக்கா உங்கட எக்கவுண்ட செக்பண்ணுங்கோ”என இருமலும் மூக்கடைப்புமாகப்பேசி ஈசன் குரல் பதிவிட்டிருந்தான்.ஈசனுக்கும் இரண்டு பிள்ளைகள். முள்ளி வாய்க்காலில் தமிழரின்ட கடைசி இருப்பும் முடிவடைந்து நிர்வாணமாய் கரயேறிய ஆண்டிற்கு சற்று ஆறுமாதங்களுக்கு முன்பாகவே பிரான்சிற்கு வந்திருந்தான்.வெளி நாடு வருவதற்கு முன்னர் கொழும்பில் ஏஜென்சிக்காக காத்துக்கிடந்தபோது சீவம் லொஜ்ஜில வைச்சு சீ.ஐ.டி.இரவோடுஇரவாக கண்ணைக்கட்டி கொண்டுபோய் புலியா என்று கேட்டு; எஸ். லோன் பைப்பிற்குள் முள்ளுக்கம்பியை விட்டு; மலவாசலுக்குள் தள்ளி போட்டு; பைப்ப வெளியில் இழுத்து கம்பியை முறுக்குற போது குடல் பிஞ்சு வெளியில் வருவதுபோல் இருக்குமாம் என்பான். இரண்டு கால் பெருவிரலையும் கட்டித்தூக்கிப்போட்டு குதிகாலில அடிச்ச அடியில் இப்பவும் கால் விறைப்பு மாறம கொஞ்சம் சைற் இழுவையில்தான் நடப்பான். சித்திரவதைக்குப்பிறகு வந்த மூல வருத்தம் இன்னும் மாறவில்லை.இரண்டு தரம் ஒப்பிறேசனும் பண்ணிப்போட்டன்.
பிரான்ஸில் அவனது அகதி வாழ்க்கையப்பொறுத்தவரை சிமிற்சம்பளம்தான்.வாடகைக்கு வீடு எடுப்பதென்றால், ஒருமாத வாடகை,ஒருமாத அட்வான்ஸ் தேவைப்படும் அதைவிட வாடாகையில் இருந்து குறைந்தது மூன்று மடங்காவது சம்பளத்தாளின் பெறுமதி இருக்கவேண்டும். இதனாலேயே இன்றுவரை எழுதாதவீட்டில், கார் கராஜ் ஒன்றில் குடித்தனமாக இருக்கின்றான்.ஒவ்வொரு மாதமும் வாய,வயிற்றைக்கட்டி தனது உழைப்பில ஒருபகுதியை நாட்டில யுத்தத்தாலும் அனர்த்தங்களாலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கென ஒதுக்கிவிடுவான்.தங்கராசரின் பொதுவாழ்விற்கு உறுதுணையாக இருப்பவர்களில் ஈசனும் ஒருவன் என்பதால் ஈசனின் நிலைமை அவரைப்பொறுத்தவரை துயர்படிந்ததாகவே இருக்கும்.
ஈசனின் குரல் பதிவை கேட்டபின்னர் ஒயில் கீற்றரின் கதகதப்பிற்குள்ளும் பனியாய் உறைந்திருந்தார் தங்கராசாண்ணை.யன்னலில் வெளியே குளிர் காற்றின் அறைதலில் படபடத்துக்கொண்டிருந்த சட்டறை விலக்கி யன்னலை மூடும்போது யன்னல் வளியாக அறையில் படந்த குளிரால் உடல் உதற வெளிக்கிடுவதுபோல இருந்தது அவருக்கு .அவரை அறியாமலே அவரது கைகள் புள் ஓவரை துளாவிக்கொண்டிருந்தது. பனி உறுஞ்சிய இலையற்றமரக்கிளையில் அமர்ந்திருந்த “மேக்பை” துணையிழந்த ஒற்றைப்பறவை கொடுகிக்கொடுகி அதனது அகதி வாழ்வை நொந்து புலம்பிக்கொண்டிருந்தது. சிந்தனையில் இருந்து ஒரு முடிவிற்கு வந்த தங்கராசாண்ணை பத்மினி அக்கவை தட்டியெழுப்பி “இஞ்சாரப்பா உவன்ஈசனுக்கும் கொரோணா கெண்போமாம். அவன்ர ரெண்டு பிள்ளயளையும் தனியறயில பிரிச்சு வைச்சிருக்கானாம். நாமதான் அவனையும் கவனிக்கோணும் அவனுக்கு இஞ்ச வேற ஆரு இருக்கா. முதல்ல ஏதாவது சாப்பாடு செய்யப்பா”என்று கூறிவிட்டு சீனி போடாத தேநீரில் சக்கரையாய் கரைந்துகொண்டார்.
ஊரில் சில்லாலையில பத்மினிஅக்கா குடும்பம் என்றால் சனத்துக்கு ஒரு மரியாதை.அவரது தகப்பனார் தந்தை செல்வா காலத்தில் இருந்து ஒரு தமிழ் தேசியவாதி. அதுக்குப்பிறகு போராளிகள் ஆயுதம் தூக்கியபின்னாடி போராளிகளுக்கு சமைத்துப்போட்டே பத்மினி அக்கா பழக்கப்பட்டிருந்தவா.சிங்கள ராணுவம் எப்போது அந்த குடும்பத்தை புலி எண்டு தேடிச்சினமோ அப்பவே இளம் வயதில் வெளிக்கிட்டு வந்தவதான் பத்மினி அக்கா.இப்ப கொரோணாக்காலத்தில சாப்பாடு இல்லாது கஸ்ரப்படும் (எஸ்.டே.௭வ்.)சொந்த முகவரிகளை தொலைத்துவிட்டு வீதியில் வசிப்பவர்களுக்கு ஒவ்வொரு வெள்ளியும் சாப்பாடு கொண்டு கொடுப்பா.அது சரி நாங்களே முகவரியில்லாமல் திசைகள் தொலைத்த அகதிக்குப்பயாக அலைந்து திரிகின்றோம். அந்த வலி நமக்குத்தானே தெரியும்.
வீட்டில் சமைச்ச சாப்பாட்டையும் இரண்டு தண்ணிப்போத்தல்களையும், ஜோக்கற்றுக்களையும் எடுத்துக்கொண்டு புறப்படத்தயாரானார் தங்கராசாண்ணை. காரில் படிந்திருந்த ஐஸ் படிவை சுறண்டிக்கொட்டிக்கொண்டு காருக்குள் நுழைந்து அமர்ந்தபோது, தங்கராசஅண்ணைக்கு, டீ பிறீசருக்குள் இருப்பதுபோல் இருந்தது. இருந்தாலும் அதற்கெல்லாம் மனுசன் பழக்கப்பட்டவராச்சே. உள் ஒழுங்கையில் இருந்து பிரதான வீதியை அடைந்தபோது லூவர் ஆற்றை அண்டிய கரையில் பழுத்துக்கருகிய இலைகளை கிழறிக்கொண்டிருந்தன அழகிய மஞ்சள் செரின் பறவைகள். 15 வருடங்களைக்கடந்து இன்றுதான் முதன் முதலில் இந்தப்பறவைகள் நகருக்குள் வந்திருக்கின்றன.அதியசயம்தான் என மனதுக்குள் எண்ணங்களை ஓட்டிக்கொண்டு பதிந்து கிடந்த கரு நீலத்தொடுவானை ரசித்தபடி ஈசனின் வீட்டை அடைந்து விட்டார். ஈசன் எவ்வளவுதான் மறுத்து பேசியபோதும் மனுசன் விடாப்பிடியாக நின்று ஈசனை பார்த்து ஒருசில ஆறுதல் வார்த்தைகளாவது பேசிவிட்டு குழந்தைகளுக்கு தினமும் உணவு கொடுக்கும் பொறுப்பையும் ஏற்றுக்கொண்டிருந்தார்.
ஈசனின் வீட்டு அழைப்புமணியை அழுத்தியபோது அருகில் இருந்த வீட்டுக்காரரின் எரிந்து விழும் பார்வையை அவரது மனம் நிதானத்துடன் சமாளித்துக்கொண்டது.கதவின் வளியே ஒரு பூச்செண்டு தலைகாட்டியதுபோல் இருந்தது .”bonjour மாமா” என்றபடி நிசாக்குட்டி தங்கராசாண்ணையின் கைப்பையை ஆவலுடன் பார்த்தாள். இரண்டு நாட்களாய் பிறிஜ்ஜில் கிடந்த ஏதேதோவெல்லாம் சாப்பிட்டு வயிற்றை நிரப்பிய அந்த பிஞ்சுகளுக்கு சாப்பாட்டைக்கண்டதும் ஏற்பட்ட சந்தோசம் அவர்களது உடல் மொழியில் தெரிந்தது.அவர்கள் தலைவாராமல், குளிக்காமல் இருந்தது உண்மையிலேயே அகதிவாழ்வை அப்பட்டமாக காட்சிப்படுத்தியது.நிசாக்குட்டிக்கு ஏழு வயசுதான்இருக்கும் .தனக்கு தெரிந்த வகையில் ஒருவாறாய் முயற்சி செய்து அவளது கூந்தலை சரிபண்ணியிருந்தாள்.அடுத்தவன் தமிழ் ஐந்து வயது. அவர்களது அறையைப்போல் அவனது உடைகளும் சொக்குலா, மற்றும் கலர் பேனைகளின் கை வண்ணத்தில் அவனது ஆடைகள் குழம்பிப்போய் இருந்தது.
இரண்டு நாட்களுக்கு முன்னர் இந்த வீடு நன்கு சுத்தப்படுத்தப்பட்டு ஒழுங்குபடுத்தி இருந்தது என்பது. தங்கராசாண்ணைக்கு நன்றாக தெரியும். இரண்டு குடும்பங்களும் நன்மை தீமைகள் என்றால் வந்து போய் பழகுவார்கள். அந்த அளவிற்கு இருந்தது அவர்களது உறவு. சிறியவன் தமிழ் தங்கராசாண்ணையை கண்டதும் ஒடிவந்து தான் வரைந்த அழகிய சூரியகாந்தி சித்திரப்பூவை ஆவலோடு காட்டினான். உடனே பதிலுக்குஅவனில் இருந்து சில மீற்றர்கள் தூரம் இடைவெளியை பேணி எச்சரிக்கையுடன் நடந்து கொண்டு “இது நல்ல அழகாய் இருக்கு மாமாக்கு தாறீங்களோ”என்றதும் வர்ணம் பூசிமுடிய தருகின்றேன் என்று குழந்தை மறுத்துக்கொண்டு வரையும் வேலையுள் மறைந்து போனான்.
பக்கத்து அறையில் இருந்தவாறே ஈசன் தங்கராசரை கண்டித்தபடி “சாப்பாட்டை வைச்சிட்டு கெதியா இஞ்ச இருந்து வெளிக்கிடுங்கோண்ணை. எங்களுக்கு பூரணமாக குணமடைந்ததும் ஆறுதலாக பேசலாம்” என்று கண்டித்தான்.இடையில் குறுக்கிட்ட சத்தியா “இவர் தன்னில் கொஞ்சமும் அக்கறையில்ல. பாட்டைமா தமிழ்கடையில வேலசெய்யப்போய் ஆரிடமோ இருந்து தொற்றிப்போட்டுது அண்ணா.எனக்கு கொஞ்சம் பரவாயில்லை இவர்தான் மூச்செடுக்க கஸ்ரப்படுறார்.மணம் குணம் ஒண்டும் தெரியாதாம் சாப்பிடுறாருமில்ல.”என்று மனக்குறைகளையெல்லாம் கொட்டித்தீர்த்தார் ஈசனின் துணைவியார் சத்தியா.
ஈசன் குடும்பத்தின் மனக்குறைகளை கேட்டறிந்தபடி “சரிதம்பி; நான் நாளைக்குவாரன். நீ கடையில வேலை என்ட பிறகுதான் எனக்கு ஒரு ஞாபகம் வருகுது உவன் “அரசியல்” ஒரு ஐம்பதுயூரோ எங்கட சனத்துக்கு வாழ்வாதார உதவிக்காக அன்பளிப்பா தாரன் எண்டவன். அவனையும் பாத்திற்று வீட்டபோகணும்” என்றபடி புறப்பட்டார்.அரசியல் என்பது பட்டப்பெயர் குமார் என்றுதான் எல்லாரும் கூப்பிடுவினம். குமார் காலையில பத்துமணிக்கு தமிழ்க்கடையில வேலைக்குப்போனால் இரவு பதினொரு மணிவரைக்கும் ஆறு நாளும்வேலை. வேலை முடிஞ்சதும் ஏதாவது கண்டதையும் மலிவில் வாங்கி குடித்துவிட்டு அரசியல் பேச வெளிக்கிட்டுவிடுவாவான்.அதனால் அந்த சுற்று வட்டாரத்தில் இருக்கின்ற தமிழர்கள் அவனை அரசியல் என்றே பேர் சொல்லி அழைக்கின்றனர்.அவனுக்கு விசா இல்லை என்பதால் எமது ஆட்கள் பதிவு செய்யாமல் வேலை வாங்குகின்றனர். இதில் சொல்லப்போனால் இரண்டு பகுதிக்கும் பிரச்சனைதான் அறா வட்டிக்கு யாரிடமும் பணத்தை வாங்கி கடைய போட்டுவிட்டு வட்டி கட்டுறதே அவர்களுக்கு வாழ்க்கையாய் இருக்கு; எங்கட தமிழ் முதலாளிமாருக்கு. இப்படி விசாஇல்லாத குமார் போன்ற பல்லாயிரக்கணக்கான அகதிகள் லச்சக்கணக்கில் கடன்பட்டு வெளிநாடுவந்திருப்பினம்.அவர்கள் வேறு வழியின்றி இப்படியான வேலைகளை விசா இல்லாமல் செய்து தங்கட வாழ்கையையும் ஊரில் குடும்பத்தையும் பார்க்க வேண்டி கிடக்கிறது.
ஈசன் வீட்டிற்கு கடந்த பத்துநாட்களாக சாப்பாடு கொண்டுவந்த தங்கராசாண்ணை ஒரு நாள் காலையில் ஈசனுக்கு போன்பண்ணி “இஞ்சாரு தம்பி நாளையில இருந்து பத்மினி சாப்பாடு கொண்டுவருவா அவாவ சுணக்காம அனுப்பி வைடாப்பா எனக்கு கொஞ்ச நாளைக்கு லீவெடுக்காம பத்தரோன் வேலை செய்ய சொல்லிப்போட்டான்”என்று கூறி தொடர்பை முடித்துக்கொண்டார். அன்றிலிருந்து பதினைந்து நாட்களாக சத்தியா பத்மினியக்காவிடம் தங்கராசாண்ணையைப்பற்றி விசாரிக்கும்போதெல்லாம். “அவர் சுகமா இருக்கிறார். ஆளுக்கு சரியான வேலை” என்றதோடு மட்டும் முடித்துக்கொண்டு அவசரமாக திரும்பிவிடுவா பத்மினியக்கா. ஈசனும் ஒருவாறாக இந்த கொடிய கொரோணாவில் இருந்து தப்பிப்பிழைத்து தங்கராசரின் வீட்டை எட்டிப்பாக்க போனபோதுதான் தெரிஞ்சுது கடையில் வேலை செய்த அரசியலிடம் காசுவாங்கப்போனபோது அவன் நாடிக்கு கீழ் மாஸ்கை போட்டுக்கொண்டு தங்கராசரின் முகத்துக்கு நேரே இருமியிருக்கிறான். தங்கராசரும் காருக்குள்தானே என்று மாஸ்க்கை அணியாமல் இருந்திருக்கின்றார்.”என்னடாப்பா இருமிக்கொண்டிருக்கின்றாய்” என்று கேட்க “இல்லையண்ண சும்மா சளிக்காச்சல்” என்று சொல்லியிருக்கிறான் அரசியல்.”எதுக்கும் ஒருக்கா செக்பண்ணுடாப்பா” என்று விட்டு வீட்டுக்குப்போன தங்கராசாண்ணை “இஞ்சரப்பா அரசியல் என்ர முகத்துக்குநேர இருமிப்போட்டான். அவன்ர நடவடிக்கைய பார்க்க எனக்கு கொஞ்சம் ஐமிச்சமாத்தான் இருக்கு. எதுக்கும் நான் குளிச்சுப்போட்டு வந்து தனியறையில இருக்கிறன்” என்று சொல்லிப்போட்டு தனிமையில் இருந்த மனுசனுக்கு மூன்றுநாளில வருத்தம் கூடி; அம்புலன்சில கொண்டுபோய் இன்றைக்கு பதினைந்துநாள். கொரோணா கூடி வைத்தியசாலை சென்ற வரைக்கும் பத்மினியக்கா கூறி முடித்திருந்தார்.இருந்தாலும் பத்மினியக்கா, ஆட்களுக்கு சாப்பாடு கொடுப்பதை இன்றுவரை நிறுத்தவில்லை.
பிற்பகல் ஐந்துமணியை தாண்டிவிட்ட பனிக்காலத்து கும்மிருட்டு. இலங்கையில் ஏற்பட்டுவரும் சீன ஆக்கிரமிப்பு தொடர்பான காணொளி ஒன்றை பார்த்துக்கொண்டிருந்த ஈசனின் கை அலை பேசி ஒயாது மூன்று தடவைகளுக்குமேல் ஒலித்துக்கொண்டே இருந்தது. வேண்டா வெறுப்பாக அலை பேசியை அழுத்தினார் சத்தியா. ஈசன் ,அது பத்மினி அக்காவின் குரல் என்பதை அறிந்து கொண்டதும் தன்னை ஆசுவாசப்படுத்திக்கொண்டு சத்தியாவிடம் இருந்து அலை பேசியை வாங்கியதும் “வணக்கம் அக்கா!என்ன இந்த நேரத்தில போன் எடுத்திருக்கிறீங்க அண்ணைக்கு என்னமாதிரி”என்று அவனே கேள்விகளை கேட்கத்தொடங்கினான்.”வைத்திய சாலையில் இருந்து போன் பண்ணினவை!இவரபார்க்க வரச்சொல்லி !ஐஞ்சுபேருக்குமேல வரக்கூடாதாம்.அந்த வைத்தியசாலைக்கு போறதெண்டால் கார்வேணும் இவர்ர கார்வீட்டிலதான் இருக்கு ஒருக்கா என்னைநாளைக்கு கூட்டிக்கொண்டு போவியே தம்பி!”என்றபடி அழுது அழுது பேசியதை கேட்டு ஈசனும் சத்தியாவும் கூடவே அழுதே விட்டனர்.
மறு நாள். வேளைக்கே ஈசனும் சத்தியாவும் தங்கராசர் வீட்டுக்கு அவசர அவசரமாக வெளிக்கிட்டபோது சின்னவன் தமிழ் “அப்பா அந்தமாமாவை பார்க்க நாங்களும் வரவேணும்,நாங்களும் மாமாவை பார்த்து கன நாளாகுது”என்று அடம்பிடித்தான்.நிசாவோ “மாமா இப்படி நீண்ட நாளாய் எங்களை பார்க்காம இருக்கமாட்டார் நாங்களும் வரப்போறம் “என்று நிசாக்குட்டியும் அடம்பிடிக்க தமிழும் ஒத்து ஊதிக்கொண்டிருந்தான். அதனால் வேறு வழியின்றி அனைவருமாக பத்மினி அக்காவுடன் வைத்திய சாலையை அடைந்திருந்தனர்.
காலை பத்துமணி. வெண்பனி முகத்தின் விறைத்த உடல்மீது எறும்புகள் அரித்துக்கொண்டுருந்தன.
வைத்தியசாலை அலுவலகத்தில் விசாரணை செய்தபோது கோவிட்19 அவசர சிகிச்சைப்பிரிவு பெயர்ச்சுட்டிவழியாக செல்லுமாறு ஊழியர்களால் அறிவுறுத்தப்பட்டது. நிலைமை தீவிரம் என்பதை பத்மினியக்கா புரிந்திருக்கவேண்டும்.அதனால்தான் அவர்அடக்கிவைத்திருந்த அழுகை அவவையும்மீறி கண்வழியே ஒடிக்கொண்டிருந்தது.பின்னர் தீவிர சிகிச்சைப்பிரிவின் அலுவலகத்தில் விசாரணை செய்தபோது அவர்களை தனியொரு இடத்தில் அமர வைக்கப்பட்டனர். ஒரு தாதியரும் வைத்தியருமாக பத்மினியக்காவிடம் வந்து “உங்கள் கணவருக்கு இறுதியாக என்ன சொல்ல விரும்புகின்றீர்கள்,அவர் இனி உயிர் பிழைக்கமாட்டார்.அத்தோடு அவர் உங்களுக்கு ஒரு செய்தியை சொல்லும்படி கூறியிருந்தார். தன்னை நினைத்து கவலைப்படவேண்டாம். மரணத்தின் பின் கூட நாம் இணைந்து கொள்வோம்.என்னுடன் இணைந்து இத்தனைகால இன்ப துன்பங்களிலெல்லாம் பங்கெடுத்து சந்தோசமான வாழ்க்கையை தந்தமைக்காக உமக்கு இறுதியாக எனது நன்றிகள் !எங்கள் மக்களுக்கு உதவி செய்யும்பணியில் முழுக்க முழுக்க நீ என்னோடு இருந்தாய். எமக்கு ஒரு நேர உணவு தர இந்த நாடு உள்ளது.எங்களின் மக்களது நிலை அப்படியில்லைதானே பத்மினி.எனது மரணத்தின்பின்னும் உனக்கு கிடைக்கின்ற சிறு தொகையில் ஒரு பங்கை எமது மக்களின் வாழ்வாதாரத்திற்காக சேமித்து அனுப்பு,நீ என்னோடு சேரும்வரை நமது பிள்ளைகள் உன்னை நன்றாக பார்த்துக்கொள்வார்கள்” என்று கூறி இருந்தார்.
அனைரும் கூடி சில மணி நேர அழுகையின் பின்னர் வைத்தியர்களின் தேற்றுதல்களுக்கப்பால் ஒவ்வொருவருக்கும் உடற்காப்பு உறை, கையுறை, முகக்கவசம் என்பவைகள் வழங்கப்பட்டு தம்பிராசர் இருக்கும் அறைக்கு அருகாமையில் அனைவரும் அழைத்துவரப்பட்டிருந்தனர்.ஒரு கண்ணாடி அறைக்குள் தம்பிராசர் குப்புற வைக்கப்பட்டிருந்தார்.வாயால் விணாசல் தள்ளிக்கொண்டிருந்தது ,கடைவயிறு எக்கி ,எக்கி விரிந்துகொண்டிருந்தது.வைத்தியர் ஏதோ கூறியதும் சிரமப்பட்டு தலையை நிமிர்த்திப்பார்தார்.அவரது உயிர் பிரியும் நிலையை அறிந்து கொண்ட பின்னரும்.அனைவரையும் பார்த்து ஒரு சோகப்புன்னகையுடன் அழுதுகொண்டிருந்த பத்மினி அக்காவிற்கும்,ஈசனுக்கும்,சத்தியாவிற்குமாக அழாமல் இருக்குமாறு சோர்ந்துபோன தன் கைகளால் சைகை காட்டிக்கொண்டிருந்தார்.
ஈசனின் குழந்தை; தமிழ் அவனது ஜக்கற்றில் மறைத்து வைத்திருந்த,வரைந்த சித்திரப்பூவை திடீரென தாதியர் மூலமாக தம்பிராசரிடம் கொடுக்கமுனைந்தான். அப்போது அதனை பறித்துக்கொண்ட நிசா அதன்கீழ் “மாமா இனி எப்ப வீட்டுக்கு வருவீங்க இப்படிக்கு, நிஷாக்குட்டி”. என கிறுக்கி விட்டு தாதியரிடம் கொடுத்து அனுப்பினாள்.தமிழ் வரைந்த சித்திரப்பூவையும் நிஷாவின் கிறுக்கல் கேள்விகளையும் பார்த்துவிட்டு அத்தனை நாளும் தான் மறைத்துவைத்த அழுகையை ஒன்றுதிரட்டி தங்கராசரின் கடைக் கண்களிலிருந்து அசைவின்றி நீர் வடிந்தது. மீண்டும் ஒருமுறை சிரமப்பட்டு குப்புறப்படுத்தபடியே தலையை நிமிர்த்திஅனைவரையும் இறுதியாக பார்த்தார்.அவரது முகத்தில் இத்தனை நாள் தனிமையின் துயரும் நிச்சயிக்கப்பட்ட மரணம்பற்றிய எதிர்பார்பின் சோகமும் அப்பியிருந்தது.மழலைகளை பார்த்தபடியும், சித்திரப்பூவிற்குமாக தனது வலுவிழந்த விரல்களை மாறி மாறி முத்தமிட்டு விடைபெற்றார் தங்கராசர்.
கண்ணாடி அறைக்கப்பால் பத்மினியக்கா கதறியழுததையும் பல்லாண்டு கால திருமணபந்தத்தில் அவர்களுக்குள் மரணம் தந்த பிரிவும் பத்மினி அக்காவை நிலை குலையச்செய்திருந்தது.பத்மினியக்கவை கைத்தாங்கலாக காருக்குள் அழைத்திச்சென்றான் ஈசன்.தங்கராசர் இறுதியாக பார்த்த பார்வையையும், அவர் இன்னும் மரணிக்காமலேயே மரணத்தை நோக்கிச்சென்ற அந்த நிமிடமும் ஈசனின் கண்முன் நிழலாடிக்கொண்டே இருந்தது.
சுபம்.
1 வது கதை
"குயில் தோப்பு"
நொய்யல் ஆற்றங்கரையின் ஓரத்தில் நாச்சிவலசு கிராமத்தில் வசித்து வந்தாள் தைலம்மா. மூப்பனுக்கும், வடுகச்சிக்கும் ரோசாப்பூ போல வம்சம் தழைக்க பூத்து நின்ற மகள் தைலம்மா மீது கொள்ளைப்பிரியம். அவர்களைவிட தத்தா வீரய்யனுக்குத் தான் பேத்தி மீது கணக்கில் அடங்காத பாசம்.
தைலம்மா பிறந்த நாளில் மஞ்சக்கொல்லை தாண்டி காட்டுக்குள் கருக்கலில் போகும் பழக்கம் ஆரம்பித்தது வீரய்யனுக்கு. பேத்தி வளர வளர வீரய்யன் தாத்தாவின் காட்டு போக்கு வரத்தும் கூடிக் கொண்டே போனது.
"அப்படி என்ன தான் வயசான காலத்துல காட்டுக்குள்ள வேல?" என்ற மகன் மூப்பனின் கேள்விக்கு புன்முறுவல்தான் பதிலாகக் கிடைக்கும்.
விடிந்து ஆரஞ்சு நிறத்தில் வானம் தெளியத் தொடங்கும் பொழுதில் இடுப்பில் குடுவையைக் கட்டிக் கொண்டு பனந்தோப்பு நோக்கி மூப்பன் கிளம்பும் போது, சொம்பு நிறைய நீச்சுத் தண்ணியை குடித்துவிட்டு காடு நோக்கி வேட்டியை தார்பாய்ச்சி கட்டிக் கொண்டு கிளம்பிவிடுவார் வீரய்யன் தாத்தா.
"பனி கொட்டுது. இந்த கருக்கல்ல காட்டுல என்ன வேல மாமா?" என்ற மருமகள் வடுகச்சி கேள்விக்கும் புன்னகை தான் பதிலாகக் கிடைக்கும். தனது வயதொத்த கிராமத்து பெரியவர்களிடம் மட்டும், "காட்டுக்குள்ள குயில் தோப்பு இருக்கு. நாள் தவறாம தோப்பை பார்த்து வந்தா தான் நாலு வாய் கஞ்சி இறங்கும்" என்பார் வீரய்யன்.
மூப்பன் இடுப்பு குடுவையில் பதனீர் சீவும் அருவா பெட்டி இருக்கும். ஒரு நாளைக்கு ஐம்பது பனைக்குக் குறையாமல் ஏறி இறங்கிவிடுவான் மூப்பன். மூப்பன் இறக்கும் பதனீரை பானையில் நிறைத்து நாச்சிவலசு கிராமம் முழுக்க விற்று வருவாள் வடுகச்சி. மிஞ்சும் பதனீரை காய்ச்சி கருப்பட்டி ஆக்கி பரணில் சேமித்து வைத்து விற்று காசாக்கிவிடுவாள் கைகாரி வடுவச்சி.
பதனீர் ஊற்றிக் கொடுக்க பட்டை பிடிக்க அளவாக வெட்டிய பச்சை ஓலைகள் குடிசை வாசலில் கிடக்கும். ஓலைகளின் நரம்பில் ஒட்டி இருக்கும் சாமைகள் காற்றில் அசைவதைப் பார்த்தபடியே வளர்ந்தாள் தைலம்மா. நாச்சிவலசு மாதா கோவில் குருத்தோலை ஞாயிறுக்கும், புனித வெள்ளிக்கும் தைலம்மா குடிசையில் இருந்துதான் பனை ஓலை குருத்துக்கள் போகும். தைலம்மா வீட்டு பனை ஓலைப் பட்டையில் கஞ்சி ஊற்றித்தான் மாதா கோவில் திருவிழாவில் கிராமத்து மக்கள் குடிப்பார்கள். தைலம்மா வீட்டு குருத்தோலைகள் தந்த நிறத்தில் மின்னும்.
மேரி மாதாவும் குறைவில்லாத அறிவை தைலம்மாவுக்கு அருளினாள். ஆத்தாவுக்குத் துணையாக கருப்பட்டி காய்ச்ச விறகுக்காக ஓடித் திரியும் நேரம் போக மற்ற நேரங்களில் பாடப் புத்தகத்துக்குள் மூழ்கிவிடுவாள் தைலம்மா. சுக்குக் கருப்பட்டி, புட்டுக் கருப்பட்டி, ஓலைக் கருப்பட்டி என விதவிதமான கருப்பட்டிகளை விற்று தைலம்மாவை படிக்க வைத்தாள் வடுகச்சி. குடிசைக்குள் நீருற்றுப் பெட்டி, பனையோலைப் பெட்டி, பனைப்பாய், கடகம் என விதவிதமான பனைஓலையில் முடையப்பட்ட பொருள்கள் சிதறிக் கிடக்கும்.
நாளெல்லாம் மூப்பனும், வடுகச்சியும் உழைத்தும் கைக்கும் வாய்க்கும் சரியாகத்தான் இருந்தது. இதெல்லாம் தெரியாமல் சீவப்பட்ட பாளையில் இருந்து பால் சுரப்பது போல தைலம்மா அறிவு சுரந்து கொண்டிருந்தது. பள்ளி இறுதி வகுப்பில் சிறந்த மதிப்பெண் எடுத்த தைலம்மாவுக்க நகரத்து மருத்துவக் கல்லூரியில் எளிதாக இடம் கிடைத்துவிட்டது. கல்லூரி படிப்புக்கு கட்ட வேண்டிய தொகையைக் கேட்டு மூச்சே நின்றுவிட்டது மூப்பனுக்கும், வடுகச்சிக்கும். உடைமர முள் தைத்த வேதனையோடு விட்டத்தை வெறித்து நின்ற மகனையும்,
மருமகளையும் தனது வழக்கமான புன்னகையோடு பார்த்தார் வீரய்யன் தாத்தா. குயில் தோப்பு ரகசியத்தை அன்றுதான் உடைத்தார் தாத்தா. தைலம்மா பிறந்த போது காட்டுப் பகுதி நிலத்தில் பத்து மாமரம் நட்டு வளர்க்க ஆரம்பித்து இருந்தார் வீரய்யன் தாத்தா. மூன்று ஆண்டுகளில் பூத்தும் காய்த்தும் பத்து மரங்களும் தைலம்மாவோடு வளர்ந்து பெரிய தோப்பாக மாறியிருந்தது. வருஷ வருமானத்தை ரகசியமாக சேமித்து வைத்திருந்தார் வீரய்யன் தாத்தா.
பேத்தியை மருத்துவ கல்லூரியில் சேர்க்க கொஞ்சமும் மலைக்கவில்லை வீரய்யன் தாத்தா. மேரி மாதா அருளும், குயில் தோப்பு மாம்பழ வாடையும் அவருக்குள் தித்திப்பாக நிறைந்து இருந்தது.
சுபம்
பண்ணாம்.கொம் 15 வது ஆண்டு விழா சிறுகதைப் போட்டி நடுவர்களின் புள்ளிகள் வழங்கும் முறை.
6 நடுவர்கள் 5 நாடுகளிலிருந்து நடுவர்களாக கடமைசெய்கிறார்கள் அவர்களை போட்டி முடிந்த பின் விழாவின் போது உங்களுக்கு அறிமுகம் செய்யப்படுவார்கள். இகதைகள் நூல் வடிவம் பெறும். எனவே உங்கள் கதைகளின் பார்வை என நடுவர்கருத்துக்களும் வாழ்த்துக்களும் நூலில் இடம்பெறும்.
1.கதை சமூகசிந்தனை கொண்டதாக இருப்பின் அதன் தாக்கத்திற்கமைய புள்ளிகள் 1முதல் 20 வரை வழங்கலாம். 20 % புள்ளி
2. கதை நடைமுறைச் சாத்தியம்கொண்டதாக, யதார்தத்தை உள்வாங்கியதாக இருப்பின் புள்ளிகள் 1முதல் 20 வரை வழங்கலாம். 20 % புள்ளி
3.கதைப் புனைவு ,பாத்திர சித்தரிப்பு ,கதை யோட்டம். புள்ளிகள் 1முதல் 20 வரை வழங்கலாம். 20 % புள்ளி
4. கதை நூட்பங்கள் ,கவர்ச்சி ,தேவையற்ற விபரிப்பு நீட்சி புள்ளிகள் 1முதல் 20 வரை வழங்கலாம். 20 % புள்ளி
5. கதையின் மொழி நடை ,மொழிப் பண்புகள் , மொழி கையாளும் தன்மை புள்ளிகள் 1முதல் 20 வரை வழங்கலாம். 20 புள்ளி
----------------
மொத்தப்புள்ளிகள் 100% புள்ளி
தங்களின் தமிழ்ச் சேவைக்கு பண்ணாகம் இணையம் தலை வணங்குகிறது.