வெறுப்பூட்டும் இராகுலன்பங்குபற்றும் பாத்திரங்கள்
கோகுலன்
தாமோதரன்
யசோ
பரதன்
தாமோதரனின் கடைக்குக் கோகுலன் வந்தான்.
'என்ன மாதிரி சிலோன்.... நீங்களெல்லாம் பெரியாக்கள். ரெலிபோன் எடுத்தாக் குறைஞ்சு போவீங்கள்.' கிண்டலாகக் கேட்டார் தாமோதரன்.
'என்னண்ணை நீங்கள்.... அங்கை போய் ஒரே விசிற்றேஸ். பாக்க வந்த சொந்தக்காரச்சனமெல்லாம் சாப்பிட வரச்சொல்லி ஒரே ஆக்கினை. அம்மாவுக்குக் கொஞ்சம் ஏலாது. டொக்டரிடம் போய் வந்தது ஒருபக்கம்... பொம்பிளை வீட்டுக்காரர் இண்டைக்கு வருவினம் நாளைக்கு வருவினமெண்டு அது பெரும் இழுபாடு! கோவிக்காதேங்கோ அண்ணை!' என்று சமாளித்தான் கோகுலன்.
'அதில்லை கோகுலன், கொஞ்சம் உடுப்பு எடுத்திருக்கலாமெல்லே!'
'கொஞ்சமெண்டு... இரண்டு சூட்கேஸ் கொண்டு வந்தனான்... காருக்குள்ளை இருக்கு. பாருங்கோவன்!'
'போடா! நீயாவது... சூட்கேஸாவது....' என்று நம்ப மறுத்தார் தாமோதரன்.
'உண்மையாத்தான் சாமான் கொண்டு வந்தனான்.'
தாமோதரன் உண்மையை அறிய, கடையைவிட்டு இறங்கி நடந்து, கோகுலனின் காரையடைந்து, எட்டிப் பார்த்தார். கோகுலனும் வந்து காரைத் திறந்தான்.
இரண்டு சூட்கேஸ்கள் இருந்தன.
'நீ பொல்லாத கில்லாடியடா...!' என்று முகத்திலே சந்தோசம் சொரிய, அவன் முதுகில் தடவிவிட்டார்.
'ஓ!' என்று கூறிவிட்டு, தாமோதரனும் கோகுலனும் சூட்கேசுகளைத் தூக்கிக்கொண்டு போய் கடைக்குள் வைத்தார்கள்.
ஆக்கள் நின்றதால், 'பிறகு கதைப்பம்!' என்றவர்,
'மாதவன்ரை கணக்கு என்ன மாதிரி.... கதைச்சனியே...?' கேட்டார்.
'நாளைக்குக் கதைக்கிறன்.'
'நான் அலுவல் முடிச்சிட்டன். வாறமாதம் திறப்புவிழா... மாதவனைச் சம்மதிக்க வைக்கிறது உன்னிலை தான் இருக்கு! உன்னை நம்பித் தான் கடை எடுத்திருக்கு. சரியே!' என்றார் தாமோதரன்.
சாமான்களை எடுத்துக்கொண்டு, இருவர் காசைக் கொடுக்க தாமோதரனிடம் வர,
'நீங்கள் பிஸியாக நிக்கிறீங்கள்... நான் நாளைக்கு வாறன்!' என்று கோகுலன் வீட்டுக்குச் செல்லக் கிளம்பினான்.
தாமோதரன் பொருட்களைப் பார்த்து, அவற்றிற்கு உரிய காசை வாங்கியவாறு,
'கோகுலன் ஒரு கதை!' என்று அவசரமாகக் கணக்கை முடித்து, அவர்களைப் போகவிட்டு, அவனிடம் வந்து,
'இவன் இராகுலன் கொக்காவோடை சேட்டை விடுகிறான் போலைக் கிடக்கு! உன்ரை சொந்தக்காரன் எண்டதிலை நீயே பாத்துக்கொள்! வேறை ஆருமெண்டால் நானே நாரியைக் கழட்டியிருப்பன்.' என்று ஜானகி அவனுக்கு வெளியிட விரும்பாத இராகுலனின் அட்டகாசத்தை அவிழ்த்துவிட்டார்.
கோகுலனின் முகம் கோபத்தில் சிவந்தது.
'அவனுக்கு என்ன அக்காவோடை பிரச்சனை..! அவன்தானே உந்த மன்றத்துக்குத் தலைவர்.... அது இது எண்டு மதிப்பா இருக்கிறான். இப்பிடி அதுவும் எங்கடை வீட்டிலை வந்து அக்காவோடை தனகியிருக்கிறான் எண்டா... கமலாக்காவுக்குத் தெரியாதோ..?'
'நல்லாத் தெரியும். ஜானகி நேரை சொல்லி, அடுத்தமுறை சொந்தமெண்டும் பார்க்கமாட்டன் பொலிசுக்குப் போவன் எண்டு எச்சரித்து விட்டிருக்கிறாள்!'
'ஏன் அக்கா சொல்லேல்லை...?'
'நீ சண்டைக்குப் போவாயெண்டுதான்! உன்ரை குணம் தெரியும்தானே அவளுக்கு! எனக்குக்கூடச் சொல்லேல்லை. யசோ மனம் பொறுக்கமுடியாமல் சொல்லியிருந்தாள். உனக்குச் சொல்லக் கூடாதாம், தெரிஞ்சமாதிரிக் காட்டிக்கொள்ளாதை!'
'இப்ப போய் அவன்ரை மூஞ்சையை உடைக்கப் போறன்.'
'போ! போய் உடைச்சிட்டு வா! பேய்க்கதை கதைக்கிறாய். ஆளிலை ஒரு கண் வைச்சிரு எண்டதுக்காகச் சொன்னனானே ஒழிய, அவன்ரை மூஞ்சையை உடைக்கச் சொல்லேல்லை.
'அப்ப அந்த றாஸ்கலை சும்மா விடச்சொல்லுறீங்களோ? நான் இல்லாத நேரம் பாத்து இப்பிடி நடந்திருக்கிறான் நாய்! அவனைச் சும்மா விடச் சொல்லுறீங்கள்!'
'சும்மா விடச்சொல்லேல்லை. நேரம் பார்த்துச் செய்யவேணும். ஆள் ஒரு வண்வே!'
'வண்வே எண்டா எனக்கென்ன.. உடைச்சு நூறாக்கி விட்டிடுவன்... உவங்களையெல்லாம் சும்மா விடக்கூடாது தாமோதரனண்ணை.'
'அது சரி! பிரச்சனையளைப் பெரிசுபடுத்தி விடாதை. ஏற்கனவே நீ சரியாக் கஸ்டப்படுகிறாய். இனி அடிதடி.. பொலிஸ் வழக்கு.... எண்டு இழுபடேலுமே! அதோடை அவனுக்கு நாலு மச்சான்மார் இருக்கிறாங்கள். மன்றம் அதுஇது எண்டும் கரிதாஸ் அதுவெளியையும் கொஞ்ச ஜேர்மன்காரர்களை வைச்சிருக்கிறான். அவன் ஒரு நரி... பொறி போட்டு விழுத்தவேணும்... நான் சொல்லுறதைக் கேள்!'
கோகுலனுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. அருகேயிருந்த சீமெந்துக்கட்டில் இருந்தவிட்டான். தாமோதரன் சொன்ன காரணங்களை அவனும் யோசித்துப் பார்த்தான்.
'எல்லாம் கஸ்டகாலம்....' என்று தலையையாட்டினான்.
'தெரியுதெல்லே... கவனமா யோசிச்சு நட! பிரச்சனையள் வரேக்கை மூளையைக் கூர்மையா வைச்சிருக்க வேணும். இல்லாட்டி நிமிர முடியாது.'
'சரி, நான் வீட்டை போறன்.'
'ஓ!' வீட்டிலை ஜானகிக்கோ யசோவுக்கோ தெரிஞ்சதாக் காட்டிக் கொள்ளாதை.'
கோகுலனுடன் கதைக்க வேண்டுமென்றிருந்த பரதன் அவனின் வீட்டுப்பக்கமாகக் காரில் வரும்போது அவன் கார் நிற்பது கண்டு, தன் காரை ஓரமாகப் பாக்பண்ணிவிட்டு இறங்கி வந்து, வீட்டுமணியை அழுத்தினான்.
கோகுலன் வந்து வீட்டுக்கதவைத் திறந்தான்.
உள்ளே யசோ இருந்தாள். பரதன் அவளை அங்கு எதிர்பார்க்க வில்லை. 'ஏன் இப்ப வந்தேன்' என்று அவன் மனம் சங்கடப்பட்டது.
'வாங்கோ பரதனண்ணை!' என்று ஆவலாக கோகுலனும்
'வாங்கோ அண்ணா!' என்று யசோவும் முகம்மலர அழைத்தபோது அவன் சங்கடம் சற்றுத் தணிந்தது.
'மாறிமாறி ஒரே பிரச்சினையாக் கிடக்கு!' என்றான் கோகுலன்.
'என்ன பிரச்சனை... சிலோனுக்குப் போனனீர்? கலியாணம் குழம்பினது வரை கேள்விப்பட்டனான்.'
'கலியாணம் குழம்பினதுக்காக நான் கவலைப்படேல்லை. அதுக்குப் பொம்பிளை சொன்ன காரணம்தான் எனக்குக் கவலை.'
'கோகுலன்! கவலைப்படாதை. அவளுக்கு உன்னைத் தெரியாது. உன்னைப் பற்றி முழுசாகத் தெரிந்து கொள்ளாத ஒருத்தி மாட்டன் எண்டு சொல்ல வேணுமெண்டதுக்காக நுனி நாக்கிலையிருந்து எறிந்த சொற்களுக்கு நீ கலங்குவது அர்த்தமில்லை.'
'அதொரு பக்கம் கிடக்க சீட்டு முறிஞ்சு... அது வேறை கடனாளியாக்கிப் போட்டுது!'
'எவ்வளவு காசு வேணுமெண்டு கேக்க என்னாலை முடியாமல் கிடக்கு! ஏனெண்டா நீ ஐந்நூறு மார்க் கேட்டாலும்கூட தாற நிலையிலை நான் இண்டைக்கு இல்லை. கொள்ளையடிச்ச மாதிரி மனிசிக்காரி கிடந்ததையெல்லாம் வழிச்சுக்கொண்டு போனதும் பத்தாதெண்டு பாங்கிலும் கடன் வைச்சிட்டு ஓடியிட்டாள்.' என்று பரதன் சொல்ல,
'ஓமண்ணை! உங்கடை கஸ்டம் எனக்குத் தெரியும்தானே!' என்றான் கோகுலன்.
'உந்தச் சீட்டெல்லாம் அநாவசியம்... தேவையில்லை எண்டு சொல்ல நினைச்சாலும் கையிலை காசில்லாதவைக்கு ஏஜென்ஸிக்குக் கட்டி ஆளைக் கூப்பிடவோ அக்கா தங்கச்சிக்கு சீதனம் குடுக்கவோ அவசரத்துக்குக் கைகுடுக்கத்தான் செய்யும். நல்லா நடக்கிறதும் இருக்கு... இடையிலை முறியிறதும் இருக்கு... உன்னுடைய கஸ்டகாலம்.'
'இதெல்லாம் என்னாலை சமாளிக்க முடிஞ்சிட்டுது, ஆனா இப்ப ஒரு ஆளை வெட்டியிட்டு ஜெயிலுக்குப் போகவேண்டியவன் நான். அதுதான் யசோவும் நானும் கதைச்சுக் கொண்டிருந்தம்.'
'ஆரை வெட்டவேணுமெண்டு யோசிக்கிறீங்கள்....! அப்பிடி என்ன செய்திட்டார் அந்த ஆள்...?'
'இராகுலனைத்தான்...'
'உங்களுக்கு அவர் சொந்த மச்சானெல்லே!'
'ஊத்தையன். சொந்தக்காரன் எண்டு சொல்லவே நாக் கூசுது.'
'என்ன சொல்லுறாய்! அவர்தானே கூட்டம், விழா எண்டு லெவலா ஏதோ செய்து கொண்டிருக்கிறார். நீ உப்பிடிச் சொல்லுறாய்...!'
'படிச்சவனாயிருக்கலாம்.... பேச்சாளன் அதுஇதெண்டு திறமை இருக்கலாம். மனசு சுத்தமாக இருக்கவேணும். அவனிட்டை அது இல்லை. அக்கா தானும் தன்பாடுமெண்டு இருக்கிறா. அவவோட சேட்டை விடுகிறான். மனிசிக்காரி கண்டும் காணாமல் இருக்கிறாள். இதுவும் ஒரு குடும்பம். கிலுசு கெட்டதுகள்!' என்று ஆத்திரம் கொட்டக் கூறியவன், யசோவைக் காட்டி,
'எவ்வளவோ கஸ்டப்பட்டு எடுத்த றெயினிங்கைக்கூடக் கெடுத்துப் போட்டான்.'
'ஏன் இப்பிடியெல்லாம் செய்யிறான்... சீ!' என்று முகத்தில் வெறுப்புக் குவிய, பரதன் மேலும் சொன்னான்.
'வந்த புதிசிலை அப்ப, 'ராம்... நான் எல்லாம் எவ்வளவு உதவி செய்திருப்பம். சாமான் வேண்டாமல் சமைக்காமல் இருப்பான். பாவம் என்று எத்தனைநாள் சாப்பாடு குடுத்திருப்பம். நன்றி மறந்து போய் ஏதோ பெரிய அறிஞன் என்று தலைக்கனத்தில் திரியிறது போதாதெண்டு சும்மா இருக்கிற ஆக்களோடை ஏன் தனகிறான்? என்று தன் கோபத்தை வெளிப்படுத்தினான்.
'அக்காவோடை இருக்கிற கோபத்திலை யசோவின்ரை வேலைக்கு உலை வைச்சிருக்கிறான் எண்டால் இவனை ஒரு மனிசன் எண்டு எப்பிடிச் சொல்லுறது...!' என்றான் கோகுலன்.
'என்ரை வேலை போனால் பறவாயில்லை. ஜானகியக்காவை யெல்லே நிம்மதியா இருக்கவிடாராம். அவரவர் செய்யிறது அவரவருக்கு... கடவுள் பாத்துக்கொள்வார். விட்டிட்டு எங்கடை அலுவலைப் பாப்பம்.' என்று கவலையுடன் பகர்ந்தாள் யசோ. இதனைப் பெரிசுபடுத்தினால் அடிதடிவரை போயிடும் என்று பயந்தாள் அவள்.
கோகுலன் அவளை நிமிர்ந்து பார்த்துவிட்டு,
'உங்களுக்கு பாதர் இரக்கப்பட்டு அங்கை இங்கை கேட்டு, ஒரு படிப்பை ஒழுங்குபண்ணித்தர, அதைத் தன்ரை செல்வாக்கைப் பயன்படுத்தி பாழாக்கிவிட்டிருக்கிறான். இப்பிடிக்கொத்தவனை கடவுள் பாத்துக் கொள்ளட்டும் எண்டு எங்களைக் கைகட்டச் சொல்லுறீங்கள்!' என்று கேட்டான்.
'வேறை என்ன செய்யப்போறீங்கள்...? அவரோடை போய்ச் சண்டை பிடிக்கப் போறீங்களா...? இப்ப இருக்கிற பிரச்சனையளுக்கை இது தேவையா? விடுங்கோ! '
'அவன் ஒரு பயந்தாந்கொள்ளி யசோ. அவனை இவனைத் தெரியுமெண்டிட்டு நெஞ்சை நிமிர்த்திக்கொண்டு திரியுறான். வழமாச் சந்திக்கட்டும். குடுக்கிறன்!' என்ற பரதன், கோகுலனைப் பார்த்து,
'நீ ஒண்டும் செய்து போடாதை! கொஞ்சம் பொறுமையாத்தான் இவன்ரை விசயத்திலை நடக்கவேணும்.' என்று அவனைச் சமாதானப்படுத்தினான்.