WELCOME TO PANNAGAM.COM & PTV

பண்ணாகம் இணையம்

NEWS - 2 

ஜனாதிபதி பதவியிலிருந்து கோட்டாபய ராஜபக்சவை பெண்கள் சக்தியே வெளியேற்றியது என ஐக்கிய மக்கள் சக்தியின் பெண்கள் அமைப்பின் உறுப்பினர் ஹிருணிகா பிரேமசந்திர தெரிவித்தார்.

எனவே, ரணில் – ராஜபக்சவை விரட்டுவதற்கான ஆட்டத்தையும் விரைவில் ஆரம்பித்து, சஜித் பிரேமதாசவை ஜனாதிபதியாக்குவோம் என்றும் குறிப்பிட்டார்.

தலவாக்கலை பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். “ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கும், ஐக்கிய தேசியக் கட்சிக்கும் தற்போதைய சூழ்நிலையில் தேர்தலுக்கு முகங்கொடுக்க முடியாது. ஏனெனில் தோல்வி உறுதியாகியுள்ளது. அதனால்தான் தேர்தலை பிற்போடும் முயற்சியில் ஆளுங்கட்சி இறங்கியுள்ளது.

தேர்தல் இல்லை என்பதற்காக நாம் ஒரு அடியேனும் பின்வாங்கிவிடக்கூடாது. அவ்வாறு நடந்தால் ஏனையக் கட்சிகள் இரு அடி முன்நோக்கி நகரக்கூடும். எமது பிரச்சாரத்தை தொடர வேண்டும். நாளொன்றுக்கு 5 புதிய வாக்காளர்களையாவது நாம் எம்பக்கம் இழுக்க வேண்டும்.

ரணில் விக்கிரமசிங்க எந்நேரத்தில் எந்த முடிவை எடுப்பார் என்றும் தெரியாது. சிலவேளை அவசர தேர்தலொன்றுக்கு செல்லாம். தேர்தல் இல்லையென நாம் ஒதுங்கியிருந்தால் அவ்வேளையில் எமக்கு சிக்கல் ஏற்படும். எனவேதான் தயார் நிலையில் இருக்குமாறு கோருகின்றேன்.

ரணில் விக்கிரமசிங்கவை தமிழ், முஸ்லிம் மக்களும் நம்பினர். ஆனால் ராஜபக்சக்களை காப்பாற்றப்போய் அவர் அந்த நம்பிக்கையை இழந்துவிட்டார். தற்போது மக்கள் மனம் வென்ற ஒரே தலைவர் சஜித் பிரேமதாசதான். அவருக்கு எதிராக ஊழல் குற்றச்சாட்டுகள் இல்லை. வாங்கும் சம்பளத்தை மக்களுக்கே வழங்கிவருகின்றார்.

கோட்டாபய ராஜபக்சவை ஐக்கிய மக்கள் சக்தியின் மகளிர் அமைப்பு உள்ளிட்ட பெண்களே விரட்டினர். ரணிலையும் விரட்டுவதற்கான நடவடிக்கையை நாம் முன்னெடுப்போம். அதுமட்டுமல்ல சஜித் பிரேமதாசவை ஜனாதிபதி கதிரையில் பெண்கள் சக்தியே அமர வைக்கும் என்பதையும் கூறிவைக்க விரும்புகின்றேன்” என்றார்.

பழமைவாய்ந்த கீரீமலை சிவன் ஆலயம் முழுமையாக இடித்து அழிக்கப்பட்டு அதிபர் மாளிகை அமைக்கப்பட்டுள்ள விடயம் தற்போது வெளிவந்துள்ளது.

வலி. வடக்குப் பகுதியில் உள்ள கீரிமலை கிருஸ்ணன் ஆலயத்தின் ஆலய நிர்வாகத்தினர் சிலரை கடந்த வெள்ளிக்கிழமை மாலையில் கடற்படையினர் பாதுகாப்பு வலயத்திற்குள் அழைத்துச் சென்று ஆலயத்தின் தற்போதைய நிலையை காண்பித்துள்ளனர்.

இவ்வாறு கீரிமலை கிருஸ்ணன் ஆலய நிர்வாகத்தினர் கடந்த வெள்ளிக்கிழமை முதல் தடவையாக சென்று ஆலயத்தை பார்வையிட்டனர்.

இவ்வாறு ஆலயத்தை சென்று பார்வையிட்ட ஆலய பரிபாலன சபையினருடன் கிராம சேவகரும் பயணித்துள்ளார்.

ஆதிசிவன் ஆலயம் இடித்து அழிப்பு

இதன் போது, ஆலயத்தின் வசந்த மண்டபம் இல்லை, முழுமையாக இடித்து தள்ளப்பட்டுள்ளது. எஞ்சிய பகுதிகள் உள்ளன. அதேபோல் ஆலய விக்கிரகங்களில் பிள்ளையார், முருகன் என்பனவற்றை காணவில்லை. எஞ்சியவை உள்ளது. இதேநேரம் அருகில் இருந்த மிகப் பழமைவாய்ந்த சிவன் ஆலயம் முழுமையாக காணவில்லை. அந்த இடம் வரைஅதிபர் மாளிகை அமைந்துள்ளது. கதிரை ஆண்டவர் ஆலயம் அதன் அருகே இருந்தது. அதனை பார்க்க முடியவில்லை.

மேலும், கீரிமலையில் இருந்த ஆதிசிவன் ஆலயம் இடித்து அழிக்கப்பட்ட செய்தி சைவ மக்களை பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளதாக ஆறு திருமுருகன் தெரிவித்தார்.

கீரிமலையில் போர்த்துக்கீசர் காலத்தில் இருந்தே அமையப்பெற்ற ஆதிச்சிவன் ஆலயமானது அதன் அருகே பாதாளகங்கை எனப்படும் நன்நீர் கிணற்றுடன் கூடிய சிவன் ஆலயம். இதன் அருகே சித்தர்களின் தியான மடமும் இருந்தன.

அதிலே நல்லூர் தேரடிச் சித்தர் என எல்லோராலும் அறியப்பட்ட சடையம்மாவின் சமாதியுடன் சடையம்மா மடம் என்பனவும் இருந்தன.

இதேபோன்று அப்பகுதியிலே நல்லை ஆதீனத்தின் முதலாவது குரு முதல்வரான மணி ஐயரின் குருவின் சமாதி என்பன அங்கே மிக நீண்டகாலமாக இருந்தது.

அதேபோன்ற பழமையான கதிரை ஆண்டவர் ஆலயமும் இருந்தது. இவ்வாறான ஆன்மீக அடையாளங்கள் அனைத்தையும் அழிக்கப்பட்டுத்தான் ஒரு ஆடம்பர மாளிகை அமைக்கப்பட்டுள்ளது என்பதனை அறியும்போது சைவ சமயந்தவர்களின் நெஞ்சம் தாங்க மறுக்கின்றது.

இவை தொடர்பில் மிக நீண்டகாலமாகவே நாம் கோரிக்கை விடுத்தபோதும் தற்போதுதான் உண்மை வெளிவந்துள்ளது. இவற்றை அழித்த செயலை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது.

இவற்றை மீள அமைத்தே ஆக வேண்டும். அந்த ஆலயங்கள் வரலாற்று சின்னங்கள் இருந்த இடங்கள் விடுவிக்கப்பட வேண்டும் என்பதோடு, அவற்றினை அழித்தமைக்கும் எமது வன்மையான கண்டனங்களையும் நாம் பதிவு செய்கின்றோம்.- என்றார்.

இலங்கையிலுள்ள இந்து மதத்தின் தனித்துவத்தைப் பாதுகாப்பது தொடர்பில் ஆராய வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்றைய தினம் (29) விசேட உரையொன்றை நிகழ்த்திய போதே அவர் இந்தக் கருத்தை வெளியிட்டார்.

இந்து ஆலயங்களில் மாத்திரமன்றி, பௌத்த விஹாரைகளிலும் இந்து தெய்வங்களை வழிபட்டு வருகின்றனர் என ஜனாதிபதி இதன்போது சுட்டிக்காட்டினார்.

யாழ்ப்பாணத்தில் சிவ வழிபாடு பொதுவானது என்பதுடன், இலங்கையின் தென் பகுதியில் விஷ்ணு கடவுளை வழிபடுவது பொதுவாகக் காணப்படுகின்றது என ரணில் கூறுகின்றார். மேலும், தென் பகுதியில் பல இந்து கடவுள்களை மக்கள் வழிபட்டு வருவதாகவும் ஜனாதிபதி தெரிவிக்கின்றார்.

விஷ்ணு, முருகன், பத்தினி (அம்மன்) உள்ளிட்ட பல தெய்வங்களை, தென் பகுதியில் மக்கள் வழிபட்டு வருவதாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.

இந்தியாவிலுள்ள இந்து மதத்திற்கும் இலங்கையிலுள்ள இந்து மதத்திற்கும் இடையில் தனித்துவங்கள் காணப்படுகின்றன.

இலங்கையிலுள்ள இந்து மதம் குறித்து, அறிக்கையொன்றை தொகுத்து வழங்குமாறு, விடயத்திற்கு பொறுப்பான அமைச்சரிடம் தான் கேட்டுக் கொள்வதாகவும் அவர் கூறுகின்றார்.

இந்த நடவடிக்கைகளுக்கு ஏனைய கட்சிகளும் உதவிகளை வழங்க வேண்டும் என ஜனாதிபதி பகிரங்க கோரிக்கை விடுக்கின்றார்.

அத்துடன், வட இந்தியாவிற்கும் தென் இந்தியாவிற்கும் இடையில் இந்து மதத்திற்கு வித்தியாசம் காணப்படுவதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

இலங்கையில் வரலாற்று ஆய்வு நிறுவனத்தை ஸ்தாபித்தல்

இலங்கையில் வரலாற்று ஆய்வு நிறுவனமொன்றை ஸ்தாபிக்க வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, நாடாளுமன்றத்தில் கூறியுள்ளார்.

''நாம் வரலாற்றை மறந்து விடுகின்றோம். எனவே, வரலாறு குறித்து அறிவையும் ஆராய்ச்சியையும் முன்னெடுப்பதற்காக இந்த நிறுவனம் செயற்பட வேண்டும். மகா வம்சத்துடன் நாம் அறிந்த வரலாற்றில் பெரிய வித்தியாசம் இருக்கின்றது.

தகா வம்சத்தில் உள்ள தேதிகளை மாற்ற முடியாது. மகா வம்சத்தில் ஒரு தரப்பினரின் கருத்துகளே உள்ளன. வெளியே மாறுப்பட்ட கருத்துகள் காணப்படுகின்றன.

இவற்றை கருத்தில் கொண்டு, இலங்கையில் வரலாற்று நிறுவனமொன்றை ஆரம்பிக்க வேண்டும்" என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவிக்கின்றார்.

ஜனாதிபதியின் தீர்மானத்தை வரவேற்கும் இந்துக்கள்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தீர்மானத்தைத் தான் வரவேற்பதாக இலங்கை இந்து குருமார் அமைப்பின் தலைவர் கலாநிதி சிவஸ்ரீ கு.வை.கா.வைதீஸ்வர குருக்கள் தெரிவித்தார்.

''இதுவொரு நல்ல விடயம். நாட்டின் தலைமைத்துவ பொறுப்பில் இருக்கக்கூடிய ஒருவர், ஜனாதிபதியாக இருக்கக்கூடிய ஒருவர் நாடாளுமன்றத்தில் பகிர்ந்துள்ள கருத்து, வரவேற்கப்பட வேண்டிய ஒன்று. இலங்கை தீவிலே நாம் பல விதமான இன்னல்கள், சமூக பிரச்னைகள், சமய பிரச்னைகள், இனப் பிரச்னைகள் என்று பலவற்றை எதிர்கொண்டு வந்திருக்கின்றோம்.

அண்மைக் காலமாக சைவ மக்களாகிய நாம், மிகுந்த சவால்களை எதிர்நோக்கி இருந்திருக்கின்றோம்.

சமய ரீதியிலான புறக்கணிப்புக்கள், இன ரீதியிலான புறக்கணிப்புக்கள், அதேபோல், சமய தலங்கள் மீதான ஆக்கிரமிப்புக்கள், அந்தத் தலங்களை புனர்நிர்மாணம் செய்யும் போது, அதற்கு ஏற்படுத்தப்படுகின்ற தடைகள், அந்தத் தலங்களுக்கு உரிய சொத்துக்களில் குறிப்பிடக்கூடிய வகையில் காணப்படுகின்ற சொத்துக்கள் ஏனைய ஒரு தொகுதியினரால் எல்லையிடப்படுகின்றமை என்று பல விடயங்களை நாம் மிகுந்த வேதனையுடன் பார்த்துக் கொண்டிருந்தோம்.

அவ்வாறான காலங்களை நாம் கடந்து வந்திருந்தோம். இவை இப்போதும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இந்த நிலையில் ஜனாதிபதி இவ்வாறான கருத்தைக் கூறியிருப்பது, சைவ சமயம் சார்பில் நான் வரவேற்கின்றேன்.

அமைக்கப்படுகின்ற குழுவோ, அல்லது எதுவாக இருந்தாலும் நிதானமான போக்குடன், பக்கச்சார்பு அற்ற நிலையிலே, இலங்கை தேசத்தில் இந்து சமயத்தின் தொன்மையை, பௌத்த சமயத்தின் தொன்மையை ஒவ்வொன்றாகப் பகுப்பாய்வு செய்து, உரிய வகையிலே அது அறிக்கையிட வேண்டும்.

அவ்வாறு அறிக்கையிடப்படுகின்ற பொழுது தான், ஜனாதிபதி கூறியிருக்கக்கூடிய கருத்தினுடைய உண்மையை நடைமுறை சாத்தியமாக்க முடியும் என நான் நினைக்கின்றேன்.

இந்து மதம் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற விடயத்தில், இந்து மதம் எவ்வாறு பாதுகாக்கப்பட வேண்டும் என நீங்கள் நினைக்கின்றீர்கள் என கேட்டதற்கு இலங்கை இந்து குருமார் அமைப்பின் தலைவர் கலாநிதி சிவஸ்ரீ கு.வை.கா.வைதீஸ்வர குருக்கள்


''இந்த விடயத்தை இரண்டு, மூன்று பகுதிகளாகப் பார்க்கலாம். தனித்துவங்கள் பேணப்படுதல், அவர்களுடைய தனித்துவத்தில் எந்தவித தலையீடுகளும் இல்லாமல், அவரவர் வழியிலேயே விட்டு விடுதல் ஒன்று.

அடுத்தது, எனக்கு என்று சொல்லிச் சில பொருட்களை வைத்திருப்பேன். அதை இன்னொரு பகுதியினர் வந்து, தேவையற்ற விதத்திலே ஆக்கிரமிக்கவோ அல்லது அதைப் பறிமுதல் செய்யவோ முடியாது, கூடாது, இயலாது.

ஆனால், அப்படியான சில சம்பவங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. ஒரு சில சம்பவங்கள் நடந்தால் கூட அது வேதனை. ஆகவே, ஒவ்வொரு சமயத்திற்கும் இருக்கக்கூடிய தனித்துவங்கள் பேணப்பட வேண்டும் என்பதே என்னுடைய கருத்து" என்று அவர் பதிலளித்திருந்தார்.

இலங்கையிலுள்ள பல இந்து ஆலயங்கள், கடந்த காலங்களில் சேதப்படுத்தப்பட்ட சம்பவங்கள், இந்துக்களின் தொல்பொருள்களைப் பாதுகாக்க முடியாமை, வரலாற்றுச் சிறப்புமிக்க இந்து ஆலயங்களின் தொன்மை பாதுகாக்கப்படாமை உள்ளிட்ட பல்வேறு சம்பவங்கள் கடந்த காலங்களில் பதிவாகியிருந்தன.

இவ்வாறான சூழ்நிலையிலேயே, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, இந்து மதத்தின் தனித்துவத்தைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சபையில் நேற்றைய தினம் கூறியிருந்தார்.

வவுனியா குட்செட் அம்மா பகவான் வீதியில் அமைந்துள்ள வீடு ஒன்றிலிருந்து ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு பேர் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் இன்று காலை சடலங்களாக மீட்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

இரண்டு குழுந்தைகள் தாய் மற்றும் தந்தையே இவ்வாறு சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர். தந்தை, இரு பிள்ளைகள் மற்றும் மனைவியை கொலை செய்த பின்னர் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், 

இன்றையதினம் வீட்டின் உரிமையாளருக்கு அவரது நண்பர் ஒருவர் தொலைபேசி அழைப்பினை ஏற்படுத்தியுள்ளார். எனினும் அவர் பதிலளிக்கவில்லை. இதனையடுத்து அவரது வீட்டிற்கு சென்றுள்ளார்.

மர்ம மரணம்

இதன்போது குறித்த வீட்டினுள் குடும்பஸ்தர் அவரது இருபிள்ளைகள், மனைவி ஆகியோர் மர்மமான முறையில் உயிரிழந்திருந்தமையைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.

சம்பவம் தொடர்பாக வவுனியா பொலிசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டிருந்தது. சம்பவ இடத்திற்கு சென்ற பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர்.


இந்த சம்பவத்தில் அதேபகுதியை சேர்ந்த சிவபாதசுந்தரம் கௌசிகன் வயது 42, வீட்டின் விறாந்தை பகுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டதுடன், அவரது மனைவியான கௌ.வரதராயினி வயது 36, இருபிள்ளைகளான கௌ. மைத்ரா வயது9 ,கௌ.கேசரா வயது3 ஆகியோர் உறங்கியபடியும் சடலமாக மீட்கப்பட்டனர்.

தீவிர விசாரணை

மீட்கப்பட்ட சடலங்களை சட்டவைத்திய பரிசோதனைக்கு உட்படுத்துவதற்கான நடவடிக்கைகளை காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளையும் வவுனியா காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.

குறித்த சம்பவம் வவுனியாவில் பல்வேறு அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. 

கிளிநொச்சி பரந்தன் புகையிரத நிலையத்திற்கு அருகில் யாழ் ராணி புகையிரத்துடன் மோதுண்டு முதியவர் ஒருவர் இன்று மாலை பலியாகியுள்ளார்.

கிளிநொச்சியிலிருந்து யாழ் நோக்கிச் சென்றுகொண்டிருந்த புகையிரத்துடன் பரந்தன் 1/4 ஏக்கர் திட்டம் உமையாள்புரம் பகுதியில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

மேலதிக விசாரணை

இதன் போது இராமலிங்கம் இராஜேஸ்வரன் (வயது - 74) என்பவரே உயிரிழந்துள்ளார்.

இறந்தவரின் உடல் ஆனையிறவு புகையிரத நிலையத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இவ் விபத்து தொடர்பாக மேலதிக விசாரணையை கிளிநொச்சி காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.


உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்பு மறு அறிவித்தல் வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்று தேர்தல்கள் ஆணைக்குழு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்கவின் கையொப்பத்துடன் இன்று வெளியான அறிவிப்பில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, எதிர்வரும் 22, 23, 24 மற்றும் 28 ஆம் திகதிகளில் தபால் மூல வாக்கெடுப்பு இடம்பெறாது என்றும், அதற்கான உத்தியோகபூர்வ திகதிகள் பின்னர் அறிவிக்கப்படும் என்றும் அந்த அறிவிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தபால் மூல வாக்கெடுப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர் ஒருவர் சில நாட்களுக்கு முன்னர் அறிவித்திருந்தார்.

எனினும், வாக்கெடுப்பை ஒத்திவைக்கப்பதற்கான காரணிகள் தற்போது இல்லை என்று முன்னதாகத் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமால் புஞ்சிஹேவா தெரிவித்திருந்தார்.

இந்தநிலையில், தபால் மூல வாக்கெடுப்பு, மறு அறிவித்தல் வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் ஆணைப்படி தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க இன்று உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்.

குறித்த அறிவிப்பில், உறுதியளித்தவாறு அரச அச்சகத்தால் உரிய வாக்குச்சீட்டுகள் வழங்கப்படாமையால் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாநகர சபையின் இறுதி அமர்வு இடம்பெற்றுக்கொண்டிருந்த போது திடீரென குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது தமிழத்தேசிய கூட்டமைப்பின் ஆளுகைக்குள் இருக்கும் மாநகர சபையின் இறுதி அமர்வு இன்றைய தினம் இடம்பெற்றது.

இதன் போது நிதிக் குழு அறிக்கை ஒன்றை சமர்ப்பிக்க முற்பட்ட போதே கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளுக்குள் குழப்பம் ஏற்பட்டு, சபை அமர்வில் இருந்து ரெலோ வெளியேறியுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், 

மட்டக்களப்பு மாநகர சபையின் இறுதி அமர்வு இன்று காலை 9.30 மணி அளவில் தொடங்கியது. இதன்போது மட்டக்களப்பு மாநகர சபை முதல்வர் நிதி குழு அறிக்கை ஒன்றை சமர்ப்பித்து, அதை நிறைவேற்றுமாறு சபையில் கோரிய போது, சபையில் இருந்த உறுப்பினர்கள் வாக்கெடுப்புக்கு விடுமாறு கூறியிருந்தனர்.

சபை அமர்விலிருந்து வெளிநடப்பு

அதனையடுத்து வாக்கெடுப்பு நடத்துவதாக முதல்வர் தெரிவித்த நிலையில் சபையில் அமைதியின்மை ஏற்பட்டது. இதன் போது ஏற்பட்டுள்ள பங்காளி கட்சிகளின் மோதல் காரணமாக தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பிரதி முதல்வர் உட்பட மாநகர சபை உறுப்பினர்கள், ரெலோ, தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் உறுப்பினர்கள் என பலர் வெளியேறிச் சென்றுள்ளனர்.


கடந்த நான்கு வருடங்களாக ஊழலற்ற மாநகர சபையாக திகழ்ந்த மட்டக்களப்பு மாநகர சபை, இன்றைய தினம் மிகவும் ஒரு கேவலமான முறையில் சென்றுள்ளதாக விசனம் வெளியிடப்பட்டுள்ளது.

உறுப்பினர்களிடையே அதிருப்தி

அதேவேளை இன்றைய தினம் சபையில் உறுப்பினர்கள் நடந்து கொண்ட விதமும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகள் நடந்து கொண்ட விதமும் மாவட்டத்திற்கும் மாநகர சபைக்கும் அபகீர்தியை ஏற்படுத்தியுள்ளது எனவும் உறுப்பினர்கள் அதிருப்தி வெளியிட்டுள்ளனர்.

உக்கிர மோதல்

தமிழ் தேசிய கூட்டமைப்பிலிருந்து பிரிந்து சென்ற தமிழரசு கட்சிக்கும் தற்போது புதிய கூட்டணியாகவுள்ள தமிழ்த் தேசிய கூட்டமைப்பிற்குள்ளும் முரண்பாடுகள் உக்கிரம் அடைந்துள்ளமையை அண்மைக்காலமாக அவதானிக்கக்கூடியதாகவுள்ளதும் சுட்டிக்காட்டத்தக்கது.

75ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு அதிபர் ரணில் விக்ரமசிங்க நாட்டு மக்களுக்கு விசேட உரையினை வழங்கியுள்ளார்.


சுதந்திர தின நிகழ்வுகள் காலி முகத்திடலில் ரணில் விக்ரமசிங்க தலைமையில் இன்று முற்பகல் இடம்பெற்றது.

இன்று முற்பகல் இடம்பெற்ற சுதந்திர தின நிகழ்வில் அதிபர் உரையாற்றியிருக்கவில்லை. இதன்படி, தற்போது விசேட உரையினை வழங்கியுள்ளார்.

விசேட உரையின் முழுமையான பகுதி


சங்கைக்குரிய மகா சங்கத்தினர் உள்ளிட்ட மதத் தலைவர்களே, அன்பான நாட்டு மக்களே, உலகெங்கிலும் வாழும் இலங்கையர்களே, அன்புள்ள குழந்தைகளே, நான் இன்று நிகழ்த்தப்போவது பாரம்பரிய சுதந்திர தின உரை அல்ல. சுதந்திரம் கிடைப்பதற்கு அர்ப்பணித்த, கடுமையாக உழைத்த டி.எஸ். சேனநாயக்க உள்ளிட்ட அனைவருக்கும் மரியாதை செலுத்தி, நான் பேசப்போவது எமக்கு கிடைத்த சுதந்திரத்தைப் பற்றி அல்ல. இன்று நாம் இழந்திருக்கும் சுதந்திரத்தை மீளப்பெறுவது பற்றியே நான் பேசப்போகிறேன்.

75 ஆண்டுகளுக்கு முன்னர் இலங்கை சுதந்திரம் பெற்றபோது, புகழ்பெற்ற "லண்டன் டைம்ஸ்" நாளிதழின் ஆசிரியர் தலையங்கம் இவ்வாறு கூறியது: "இலங்கை விரைவில் கீழத்தேயத்தின் சுவிட்சர்லாந்தாக மாறுவதைக் காண்பதே எமது எதிர்பார்ப்பாகும்." வேறு எந்த கீழத்தேய நாட்டைப் பற்றியும் அவர்கள் அத்தகைய எதிர்பார்ப்பை கொண்டிருக்கவில்லை. ஆனால் தற்பொழுது எமக்கு என்ன நேர்ந்துள்ளது?

இன்று நாம் வரலாற்றில் ஒருபோதும் கண்டிராத பாரிய பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ளோம். அண்மைக்கால வரலாற்றில் இவ்வாறானதொரு பாரதூரமான நிலையை நாம் எதிர்கொண்டதில்லை.

நமக்கு ஏன் இவ்வாறானதொரு நிலை ஏற்பட்டது? இந்த நிலைக்கு யார் பொறுப்பேற்க வேண்டும்? நாம் உண்மையைப் பேசுவோம். இந்த நிலைக்கு நாம் அனைவரும் குறைவாகவோ அதிகமாகவோ பொறுப்புக் கூற வேண்டும்.

நாம் யாரும் விரல் நீட்டி ஒருவரை ஒருவர் குற்றம் சொல்ல முடியாது. நாம் ஆரம்பத்திலிருந்தே தவறு செய்தோம். அந்த தவறை சரி செய்ய முயற்சிகள் எடுக்கப்பட்டன. பாடுபட்டோம். ஆனால் நூறு சதவீதம் சரி செய்ய முடியவில்லை. சுதந்திரம் பெறுவதற்கு டி.எஸ். பின்பற்றிய வழிமுறை, இலங்கையர் அனைவரையும் ஒன்றிணைப்பதாகும்.

சுதந்திரத்திற்குப் பிற்பட்ட பிளவு

சிங்களவர், தமிழர், முஸ்லிம், பறங்கியர் என யாராக இருந்தாலும் இலங்கையர்களாக நாம் முன்னோக்கிச் செயற்பட வேண்டும் என அவர் அன்று தெரிவித்தார். ஆனால் சுதந்திரத்திற்குப் பிறகு நாங்கள் பிளவுபட்டோம்.

இனம், மதம், பிரதேச ரீதியாக பிரிந்தோம். ஒருவரையொருவர் குறித்து சந்தேகம், வெறுப்பு ஏற்படும் வரை பிரிந்தோம். பல்வேறு குழுக்கள், அதிகாரத்தைப் பெறவதற்கு இந்தப் பிரிவைப் பயன்படுத்தின. அதிகாரத்திற்காக மேலும் மேலும் பிளவுகளை ஏற்படுத்தினர். நாம் அவர்களை நிராகரிப்பதற்கு பதிலாக அவர்களுக்கு அதிகாரம் அளித்தோம்.

அரசியலில் உண்மையைச் சொல்லாமல் பொய் சொன்னார்கள். உண்மையைச் சொன்ன அரசியல்வாதிகளை மக்கள் நிராகரித்தனர். நாட்டின் உண்மை நிலையைச் சுட்டிக்காட்டி அதற்கான பரிகாரம் தேடுபவர்களுக்கு இடம் கிடைக்கவில்லை. பொய்களால் மகிழ்விப்பவர்களுக்கு அதிக அங்கீகாரம் கிடைத்தது.

நாம் வாக்குறுதி அரசியலில் சிக்கிக்கொண்டோம். எங்களுக்குச் சொந்தமில்லாத கடன் வாங்கிய வளங்களை நம்பியிருந்தோம். மேலும் மேலும் கடன் வாங்கினோம். "அரசாங்கமென்பது வளங்களின் ஊற்று" என்ற மனப்பாங்கை நாங்கள் ஏற்படுத்திக் கொண்டோம். அந்த ஊற்றுக்களில் இருந்து கிடைக்கும் பல்வேறு வளங்களை மக்களுக்குப் பகிர்ந்தளிப்பதே ஆட்சியாளர்களின் கடமை என்று பலரும் நினைத்தனர்.

அதன்படி தொழில்கள் பகிர்ந்தளிக்கப்பட்டன. வளங்கள் விநியோகிக்கப்பட்டன. உபகரணங்கள் வழங்கப்பட்டன. பணமும் விநியோகிக்கப்பட்டது. நம்மில் பெரும்பாலானோர் வாக்களித்தது நாட்டுக்காக அல்ல. எங்களுக்கு தொழில் பெற பிள்ளையைப் பாடசாலையில் சேர்ப்பதற்கு.

விலைமனுக் கோரலுக்கு அனுமதி பெற நாம் வாக்களித்தோம். தனிப்பட்ட ஆதாயத்திற்காகவே நாம் தேர்தல் வேட்பாளர்களுக்காக பணியாற்றினோம். நம்மில் பெரும்பாலானோர் தேர்தலில் போட்டியிட்டது கூட நாட்டுக்காக அல்ல. தங்களுக்காக. அதிகாரத்தை பெறவும் சலுகைகளை அனுபவிக்கவும் மேலும் சம்பாதித்துக்கொள்ளவும் தேர்தலில் போட்டியிட்டனர்.

நாம் வாக்குறுதிகளில் சிக்கிக்கொண்டோம். கோசங்களில் சிக்கினோம். இவை அனைத்தினதும் விளைவாக நாட்டின் பொருளாதாரம் நாளுக்கு நாள் வீழ்ச்சியடையத் தொடங்கியது.

கடன் முதலீட்டிற்காக அன்றி நுகர்வுக்காக அல்ல

அரசியல் வாக்குறுதிகளை நிறைவேற்றவும் கோசங்களில் தெரிவிக்கப்பட்டவற்றை உறுதிப்படுத்தவும் நாங்கள் மேலும் மேலும் கடன் வாங்கினோம். நாம் அதிகம் அதிகமாக முதலீட்டுக்காக அல்லாமல், நுகர்வுக்காகத்தான் கடன் வாங்கினோம். "கடன் முதலீட்டிற்காக அன்றி நுகர்வுக்காக அல்ல" என்று புத்தரின் போதனைகள் கூறுகின்றன.

பௌத்தத்தைப் பற்றிப் பேசிக்கொண்டு புத்தரை வணங்கி பௌத்த தர்மத்தை தாண்டிச் சென்றுவிட்டோம். சிங்கப்பூரை மீளக் கட்டியெழுப்புவது பற்றி அறிந்து கொள்வதற்காக இலங்கை வந்த லீ குவான் யூ பல வருடங்களுக்குப் பிறகு இவ்வாறு கூறினார். “தேவையில்லாமல் அரசியலுக்கு முன்னுரிமை அளித்தமையே உங்கள் நாட்டில் இந்த நிலை ஏற்பட காரணம்.” உங்கள் நாட்டை முன்னுதாரணமாக கொண்டிருந்தால் சிங்கப்பூர் அழிந்திருக்கும்''.

உண்மையில், நாம் இப்போது அழிவு நிலையை நோக்கி சென்றுள்ளோம். இந்த காயத்தை தொடர்ந்து வைத்திருக்க விரும்புபவர்களும் உள்ளனர். ஆனால் நான் அதனை விரும்பவில்லை. ஒரு சத்திரசிகிச்சை செய்து இந்த காயத்தை சுகப்படுத்திக் கொள்வோம். இது கடினமானது. வேதனையானது. கஷ்டமானது. ஆனால் அந்த சோகத்தையும் வேதனையையும் சிறிது காலம் அனுபவித்தால், காயத்தை முழுமையாக குணப்படுத்த முடியும்.

சில அரசியல் கட்சிகள் சுட்டிக் காட்டும் குறுக்குவழிகளால் இந்த நெருக்கடியிலிருந்து எமக்கு மீள முடியாது. இந்த நெருக்கடியை சமாளித்து உண்மையான பொருளாதார மற்றும் சமூக சுதந்திரத்தை அடைய வேண்டுமானால், நாம் செல்ல வேண்டியது ஒரே ஒரு வழிதான்.

இந்தக் குழியிலிருந்து ஏறுவதற்கு எமக்கு ஒரே ஒரு ஏணி தான் உள்ளது. அரசியல் நலன்களுக்காக இந்த ஏணியை ஒதுக்கித் தள்ளினால், நமக்கு ஒரு நாடு இருக்காது, நமக்கு நாளை இருக்காது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

நாம் இன்று இருக்கும் பொருளாதார நெருக்கடியின் தீவிரத்தையும் ஆபத்தையும் இதற்கு முன்னரும் நான் பல சந்தர்ப்பங்களில் சுட்டிக்காட்டியிருக்கிறேன். இந்த ஆண்டின் முதல் ஆறு மாதங்கள் மிகவும் கடினமாக இருக்கும் என்று நான் முன்கூட்டியே கூறியுள்ளேன்.

இந்த இக்கட்டான சூழலை நாம் விருப்பமில்லாத நிலையிலும் கூட எதிர்கொள்ள வேண்டியுள்ளது. நாட்டின் நலனுக்காக நாம் அந்த இக்கட்டான நிலையை தாங்கிக் கொள்ள வேண்டியுள்ளது.

அரசியல் இனிப்புப் பேச்சுகளால் இந்நிலைக்குத் தீர்வு கிடைக்காது. இலவசக் கல்வியினால் இந்நாட்டில் பெருமளவிலான மக்கள் வறுமையிலிருந்து விடுபட்டு நடுத்தர வர்க்கத்தினராக மாறினாலும் இன்று அவர்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற முடியாத நாடாக இலங்கை மாறியுள்ளது.

தோளோடு தோள் நின்று உழைக்க வேண்டிய இளைஞர்கள் இன்று கடவுச் சீட்டுகளைப் பெற வரிசையில் நின்று கொண்டிருப்பதை நான் பார்க்கிறேன். அதை நாம் மாற்ற வேண்டும். அப்படியானால், நாம் இந்தப் பொருளாதாரத்தை நவீனமயமாக்கி, உலகிற்கு திறந்துவிட வேண்டும்.

முறைமை மாற்றம்

மக்களை ஏமாற்றி அவர்களை நிரந்தர ஏழைகளாகவும், தங்கி வாழ்பவர்களாகவும் மாற்றும் ஊழல் அரசியல் வாதத்தை தோற்கடிக்க வேண்டும். இந்நாட்டு இளைஞர்கள் நீண்டகாலமாக எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் "சிஸ்டம் சேன்ஞ்" என்ற முறைமை மாற்றம் இது தான். அதற்காக எனது அரசாங்கம் புதிய சீர்திருத்தப் பாதையில் பிரவேசித்துள்ளது. அதற்காக எடுக்கப்படும் முடிவுகள் சிலநேரம் வேதனை தருவதாக இருந்தாலும், இந்த நெருக்கடியில் இருந்து வெளிவர அந்த வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும்.

இந்த நெருக்கடியை வெற்றிகொள்ள வேண்டுமாயின், நாம் குறுகிய அரசியலில் இருந்து விலகிச் செல்ல வேண்டும். நாம் ஒரு தாயின் பிள்ளைகளாக ஒற்றுமையாக இந்த சவாலை எதிர்கொள்ள வேண்டும். சவாலை வெற்றிகொள்ளும் பாதையை வலுப்படுத்த நம்மால் முடிந்த அளவு பங்களிக்க வேண்டும்.

அனைத்து வேற்றுமைகளையும் புறந்தள்ளிவிட்டு இலங்கையர்களாக நாம் அனைவரும் முன்னேறிச் செல்ல வேண்டும். அதன் மூலம் வலுவான புதிய பொருளாதாரம் ஒன்று உருவாக்கப்பட வேண்டும். அதற்கான அடிப்படைப் பணிகளும், அடித்தளமும் தற்போது தயார்படுத்தப்பட்டுள்ளன.

சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவைப் பெறுவதற்குத் தேவையான கடினமான பணிகளை நாங்கள் வெற்றிகரமாகச் செய்து வருகிறோம். விரைவில் அவர்களின் இணக்கப்பாட்டைப் பெற்றுக்கொள்ள எதிர்பார்க்கிறோம்.

பொருளாதாரத்தை வலுப்படுத்துவதால் மட்டும் எம்மால் திருப்தி அடைய முடியாது. ஒட்டுமொத்தக் கட்டமைப்பிலும் நாம் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும். இந்த அரசியல் முறைமை, நாடாளுமன்றம், நிறைவேற்று அதிகாரம், அரச பொறிமுறை ஆகிய அனைத்து துறைகளும் காலத்திற்கு ஏற்றவாறு மாற்றப்பட வேண்டும். இந்த மாற்றம் நாட்டுக்கும் நமக்கும் நல்லதாக அமைய வேண்டும்.

புதிய முறைமையில் இளைஞர்கள் மற்றும் பெண்களின் கருத்துக்களுக்கும் பிரதிநிதித்துவங்களுக்கும் கூடுதல் முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும். இந்த முறைமை மாற்றத்துக்கு அவசியமான பல்வேறு சட்ட ஏற்பாடுகளை நாம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளோம்.

வடக்கு, கிழக்கு மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள்

அது போன்றே வடக்கு, கிழக்கு மக்கள் எதிர்நோக்கும் விசேடமான பிரச்சினைகள் தொடர்பில் உடனடி நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். அதற்கான அமைச்சரவை உபகுழுவை ஏற்கனவே நியமித்துள்ளோம். அங்கு எடுக்கப்படும் தீர்மானங்கள் மற்றும் நடைமுறைப்படுத்தப்படும் காலப்பகுதி, அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் அறிவிக்கப்படும். அவர்களது கருத்துகளின்படி, அந்தப் பணிகள் முன்னெடுத்துச் செல்லப்படும்.

காணிகளை மீளக் கையளித்தல், கைதிகளை விடுதலை செய்தல் உள்ளிட்ட செயற்பாடுகளுக்கு நாம் முன்னுரிமை அளித்துள்ளோம். அது போன்றே ஒற்றையாட்சி அரசில், அதிகபட்ச அதிகாரப் பகிர்வுக்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

எனினும் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் இந்த நாட்டைப் பிளவுபடுத்துவதற்கு நாம் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம். நான் முயற்சிப்பது மேலோட்டமாக தெரிகின்ற நோய்க்கு வலி நிவாரணிகளை வழங்க அல்ல. நோயின் மூலக்காரணியை நிவர்த்தி செய்யவே. அது சிரமமானது.மிகவும் கடினமானது. எனினும் நாம் செல்ல வேண்டிய ஒரே வழி அதுதான்.

நான் அதிபராக பதவியேற்றதிலிருந்து

நான் அதிபராக பதவியேற்றதிலிருந்து எனக்கு எடுக்க நேரிட்ட பல தீர்மானங்கள் பிரசித்தமான தீர்மானங்கள் அல்ல என்பதை நான் அறிவேன். ஆனால் அந்தத் தீர்மானங்களால், இன்று இந்த நாட்டின் எந்தக் குடிமகனும் எரிபொருள் வரிசைகளில் நீரின்றி இறக்கவில்லை. சமையல் எரிவாயு இல்லாமல் பட்டினியில் இல்லை. உரம் இல்லாமல் சாபம் இடவில்லை.

எனவே, அராஜக அரசியல் சக்திகள் எத்தகைய தடைகளை ஏற்படுத்தினாலும், இந்த நாட்டை நேசிக்கும் பெரும்பான்மையான மக்களுடன் இணைந்து இந்தப் புதிய சீர்திருத்தத் திட்டத்தை முன்னெடுப்பேன்.

சமாதானத்தையும் நல்லிணக்கத்தையும் மனதில் கொண்டு ஒற்றுமையுடன் திட்டமிட்டு முன்னேறினால் 2048 ஆம் ஆண்டளவில் அபிவிருத்தியடைந்த நாடாக மாறலாம். உலகில் வேறு எந்த நாட்டிடமும் கையேந்தாத அபிவிருத்தி அடைந்த நாடாக மாறலாம். உண்மையான சுதந்திரத்தையும் அடைய முடியும்.

நமது பிள்ளைகள் உலகுடன் போட்டி போடும் வகையில் புதிய நாட்டை உருவாக்குவது நம் அனைவரதும் பொறுப்பாகும்.

எனவே, இந்த இக்கட்டான காலகட்டத்தை வெற்றிகொள்ள அனைத்துத் தரப்பினரையும் ஒன்றிணையுமாறு நான் அனைவரிடமும் கேட்டுக்கொள்கிறேன். நாம் ஒன்றுபடுவோம்! கைகோர்ப்போம்!

அவ்வாறு கைகோர்த்து எதிர்வரும் 25 ஆண்டுகளுக்காக நாம் தயாரித்துள்ள திட்டத்திற்கமைய ஒன்றுபட்ட பயணத்தை மேற்கொள்வோம். அனைத்து தரப்பினரின் கருத்துக்களுக்கும் ஏற்ப அந்தத் திட்டத்தை மேம்படுத்துவோம். மேலும் வலுப்படுத்துவோம். அவற்றை மேலும் முறைமைப்படுத்தி நெறிப்படுத்துவோம்.

இந்த முயற்சியில் இணைந்து கொள்ள வேண்டியது, இலங்கை வாழ் மக்களான நாம் மட்டும் அல்ல உலகின் பல்வேறு நாடுகளில் வாழும் இலங்கையர்களும் இந்தப் பயணத்திற்குத் தோள்கொடுக்க வேண்டும் - ஒன்றிணைய வேண்டும்.

இந்த இலக்குகளை அடைய அனைவரும் முடிந்தவரை பங்களிக்க வேண்டும். எனவே நாம் அனைவரும் ஒன்றாக முயற்சி எடுப்போம். ஒன்றிணைந்து அர்ப்பணிப்போம். ஒரு தாயின் பிள்ளைகள் போல் ஒன்றுபடுவோம். நமது நாடு சுதந்திரம் அடைந்து 100 ஆண்டுகள் நிறைவடையும் 2048 ஆம் ஆண்டின்போது எமது நாட்டை உலகின் தலைசிறந்த நாடாக மாற்றுவோம். உங்கள் அனைவருக்கும் நன்றி.

ஜனநாயகம் என்ற போர்வையிலே பேரினவாத ஆட்சி காரணமாகவே சுதந்திரம் கிடைத்தும் 75 ஆண்டுகளாக தமிழர்களுக்கு சுந்தந்திரம் கிடைக்கவில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

சிங்கள மக்களுக்கு அரசியல் சுதந்திரம் இருந்தாலும் இன்றைய சூழ்நிலையை பார்க்கின்ற பொழுது சிங்கள மக்களுக்கும் சுதந்திரம் கிடைக்கவில்லை என்பது தெட்டத் தெளிவாககின்றது என்றும் குறிப்பிட்டார்.

சுதந்திரதினம் என்ற போர்வையில் வெவ்வேறு நிகழ்ச்சி நிரல் நடைபெற்றுக் கொண்டிருக்கும் அதேவேளை நாடும் கடனாளியாக இருக்கின்றது நிலையில் 75வது சுதந்திர தினத்தை ஜனாதிபதி கொண்டாட விரும்புவதை அடியோடு நிராகரிப்பதாகவும் தெரிவித்தார்.

நாட்டு மக்கள் அனைவரும் சுதந்திர தின கொண்டாட்டத்தை புறக்கணிக்க வேண்டும் என்றும் வருகின்ற மாசி மாதம் 04 ஆம் திகதி மட்டக்களப்பில் கறுப்புக் கொடி போராட்டத்தை நடத்த இருப்பதாகவும் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

இதேவேளை சுதந்திர தின நாள் தமிழர்களின் வாழ்வில் கரிநாள் என்ற தொனிப்பொருளில் பெப்ரவரி நான்காம் திகதி இலங்கை தமிழரசு கட்சி, போராட்டத்தை நடத்தும் என எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

கொள்ளையில் ஈடுபட்ட குற்றத்திற்காக 4 பேரின் கைகளை வெட்டிய சம்பவம் ஆப்கானிஸ்தானில் இடம்பெற்றுள்ளது.

கந்தஹாரில் உள்ள அஹ்மத் ஷாஹி மைதானத்தில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் முன்னிலையில் குறித்த தண்டனையை தாலிபான்கள் நிறைவேற்றியுள்ளனர்.

மேலும், பல்வேறு குற்றங்களுக்காக ஒன்பது பேர் கசையடியால் அடிக்கப்பட்டதாக அந்நாட்டு முதல்வர் அலுவலக செய்தித் தொடர்பாளர் தெரிவித்திருந்தார்.

சர்வதேச அளவில் எதிர்ப்பு


குறித்த குற்றவாளிகளுக்கு 35-39 கசையடிகள் கொடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் நடந்த போது தலீபான் அதிகாரிகள், மத குருமார்கள் மற்றும் உள்ளூர் மக்கள் மைதானத்தில் இருந்தனர்.

இது போன்ற தண்டனைகளுக்கு சர்வதேச அளவில் எதிர்ப்பு ஏற்பட்டுள்ளதை அடுத்து அதை தாலிபான்கள் அரசு கண்டு கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஆப்கானிஸ்தானில் கடந்த 2021-ம் ஆண்டு ஓகஸ்டு மாதம் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றிய தாலிபான்கள் பெண்கள் மற்றும் சிறுபான்மையினரின் உரிமைகள் பாதுகாக்கப்படும் என உறுதியளித்தனர்.

பல்வேறு கட்டுப்பாடு

ஆனால் அதற்கு நேர்மாறாக பெண்களின் அடிப்படை உரிமைகளை பறிக்கும் வகையில் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றனர்.

இதற்கிடையே குற்ற சம்பவங்களில் ஈடுபடுபவர்களுக்கு கடுமையான தண்டனைகள் வழங்கப்படும் என்றும் தாலிபான்கள் சமீபத்தில் அறிவித்தனர்.

கசையடி, கை, கால் துண்டிப்பு, மரண தண்டனை அளிக்கப்படும் என்று தெரிவித்தனர்.