WELCOME TO PANNAGAM.COM & PTV

பண்ணாகம் இணையம்

News-6

எதிர்வரும் ஏப்ரல் மாதம் இடம்பெறவுள்ள விலை திருத்தத்தில் எரிபொருள் விலையை குறைக்க எதிர்பார்த்துள்ளதாக அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

இதன் மூலம் மக்களுக்கு நிவாரணம் கிடைக்கும் என எதிர்பார்ப்பதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

விலை சூத்திரம்

விலை சூத்திரத்தின்படி, ஒவ்வொரு மாதமும் எரிபொருள் விலையில் திருத்தம் செய்யப்படுகிறது.

இதன்படி எதிர்வரும் ஏப்ரல் மாதம் இடம்பெறவுள்ள விலைத் திருத்தத்தில் எரிபொருள் விலையை குறைக்க எதிர்பார்த்துள்ளதாக அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

தற்கால டொலர் வீழ்ச்சியுடன், எரிபொருள் இறக்குமதியில் மக்களுக்கு நிவாரணம் வழங்கப்படும் எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மகனின் மரண செய்தி கேட்டு அதிர்ச்சியில் தாய் உயிரிழந்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

இந்த சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளது.

நேற்று முன்தினம் வவுனியா நெடுங்கேணி பகுதியில் மாடு முட்டி படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நபர் நேற்று உயிரிழந்துள்ளார்.

மரண சடங்கு

இராசரட்ணம் கனகராஜா என்ற 43 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தையான குறித்த நபர் நேற்று உயிரிழந்துள்ளார்.

குறித்த மரண செய்தியை இன்று அறிந்த குறித்த குடும்பத்தரின் தாயாரான இராசரட்ணம் வீரம்மா என்ற 82 வயதுடைய முதியவரும் அதிர்ச்சியில் உயிரிழந்துள்ளார்.

இருவரது மரண சடங்குகளும் கிளிநொச்சி மயில்வாகனபுரம் பகுதியில் இடம்பெறவுள்ளது.

தற்போதைய பிரதமர் தினேஷ் குணவர்தனவை நீக்கி புதிய பிரதமராக மீண்டும் மகிந்த ராஜபக்சவை கொண்டு வருவதற்கான முயற்சிகள் எடுக்கப்படுவதாக கூறப்படுகின்றது.

இதனை, நாடாளுமன்ற உறுப்பினர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.

இதற்காக ஆளுங்கட்சியிலுள்ள பலர் தமது ஆதரவுகளை கோரியதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

கசியவிட்ட ஆளுங்கட்சி

பிரதமர் பதவியை மாற்றுவதற்கான திட்டங்களை ஆளுங்கட்சியில் உள்ள சிலர் தமக்கு தெரியப்படுத்தி உள்ளதாகவும் சன்ன ஜயசுமன கூறியுள்ளார்.

பிரதமர் பதவியை மாற்றுவதால் மாத்திரம் இந்த நாட்டின் பிரச்சனை தீரப்போவதில்லை, முழு அரசாங்கமும் வீட்டிற்கு செல்ல வேண்டும், அப்போதுதான் பிரச்சனைக்கு தீர்வு வரும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

திட்டமிட்டவாறு மார்ச் 9ஆம் திகதி உள்ளூராட்சித் தேர்தலை நடத்த முடியாது என உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள போதிலும், கட்டுப்பணத்தை மீள வழங்க முடியாது என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார்.

வேட்புமனுக்களை இரத்துச் செய்வதற்கு அரசாங்கம் நாடாளுமன்றத்தில் சட்டமூலமொன்றை சமர்ப்பிக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இல்லையெனில் எல்லை நிர்ணயம் வர்த்தமானியில் வெளியிடப்பட்டால் மட்டுமே வேட்புமனுக்கள் இரத்து செய்யப்படும் எனவும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், உள்ளூராட்சித் மன்றத் தேர்தல் நடத்தப்பட மாட்டாது என இதுவரை குறிப்பிட்ட அறிக்கை எதுவும் வெளியிடப்படவில்லை எனவும், தற்போது அறிவிக்கப்பட்டுள்ள திகதியில் அதனை நடத்துவதில் பொருளாதார  சிரமம் குறித்து மாத்திரமே உயர் நீதிமன்றத்திற்கு தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கடந்த 6 ஆம் திகதி துருக்கி - சிரியாவில் ஏற்பட்ட நில நடுக்கத்தால், அங்கிருந்த 15 இலங்கையர்களும் பாதுகாப்பாக மீட்கப்பட்டிருந்ததுடன், இலங்கையை சேர்ந்த பெண்ணொருவர் காணாமல் போயிருந்தார்.

காணாமல் போயிருந்த குறித்த இலங்கைப் பெண்ணைத் தேடி தொடர்ந்து தேடுதல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டிருந்தன.

இந்தநிலையில், காணாமல் போன இலங்கைப் பெண்ணின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக துருக்கியிலுள்ள இலங்கை தூதரகம் தெரிவித்துள்ளது.

கண்டி - கலகெதரவில் இருந்து 20 வருடங்களுக்கு முன்னர் துருக்கிக்கு சென்று அங்கு வசித்து வந்த 69 வயதுடைய இலங்கைப் பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த பெண்ணின் சடலம் தற்போது அவரது மகளால் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவுஸ்திரேலியாவில் பிரபலமான வழிபாட்டுத்தலமான புத்த கோவிலில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

தென்கிழக்கு மாகாணம் விக்டோரியாவின் தலைநகர் மெல்போர்னில் உள்ள இந்த புத்த கோவில் 32 ஆண்டுகளுக்கு முன்பு அடுக்குமாடிகளுடன் கட்டப்பட்டு உள்ளூர் புத்த சமூகத்தினர் இடையே பிரபலமான வழிபாட்டு தலமாக விளங்கி வருகிறது.

 திடீரென தீப்பிடித்தது

இந்த நிலையில் உள்ளூர் நேரப்படி நேற்று முன்தினம் இரவு இந்த கோவிலில் திடீரென தீப்பிடித்தது. மளமளவென கொழுந்துவிட்டு எரிந்த தீ கண் இமைக்கும் நேரத்தில் அடுத்தடுத்த தளங்களுக்கும் பரவியது.

இதுபற்றிய தகவல் கிடைத்ததும் 80-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் தீயணைப்பு வாகனங்களில் அங்கு விரைந்தனர். அவர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டனர்.

பல மணி நேர போராட்டத்துக்கு பின்

பல மணி நேர போராட்டத்துக்கு பின் தீ முழுமையாக கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. அதிர்ஷ்டவசமாக இந்த தீ விபத்தில் உயிரிழப்போ அல்லது காயமோ ஏற்படவில்லை. தீ விபத்துக்கான காரணம் என்ன என்பது உடனடியாக தெரியவராத நிலையில் இதுபற்றி மெல்போர்ன் நகர காவல்துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.  


கோவை மாவட்டத்தைச் சேர்ந்த ஸ்ரீவித்யா என்ற 27 வயது பெண்  7 மாதங்களில் 105 லிட்டர் தாய்ப் பால் தானம் செய்து சாதனை படைத்துள்ளதாக 'ஏசியா புக் ஆஃப் ரெக்கார்டஸ்' அங்கீகரித்துள்ளது. 

ஸ்ரீவித்யா தனக்கு சுரந்த அதிகமான தாய்ப்பாலைச் சேகரித்து கோவை அரசு மருத்துவமனையில் உள்ள தாய்ப்பால் வங்கியில் தானமாக வழங்கியுள்ளார் என்று அந்த மருத்துவமனையைச் சேர்ந்த மருத்துவர்கள் பிபிசி தமிழிடம் உறுதிப்படுத்தியுள்ளனர்.

இவ்வளவு தாய்ப்பாலை தானம் செய்ய அவரால் எப்படி முடிந்தது? இவ்வளவு அதிகளவில் தாய்ப்பால் தானம் செய்யலாமா? தானம் செய்யப்படும் தாய்ப்பால் குறித்து நிலவும் தவறான நம்பிக்கைகள் என்ன?

விரிவாகப் பார்ப்போம்.

ஸ்ரீவித்யா 'ஹைப்பர் லேக்டேடிங்' (Hyper lactating condition) என்று சொல்லப்படும் அதிகமாகப் பால் சுரக்கும் நிலை கொண்ட தாயாக இருந்தார். இதனால் அவர் தனது குழந்தைக்கு கொடுத்தது போக, மீதம் சுரந்த பாலை சேகரித்து தானமாக கொடுத்தார் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர். கோவை அரசு மருத்துவமனையில் 2015 ஆம் ஆண்டு முதல் தாய்ப்பால் வங்கி செயல்பட்டு வருகிறது. கடந்த ஏப்ரல் 2022 முதல் அக்டோபர் 2022 வரை, ஸ்ரீவித்யா தனக்கு தினமும் அதிகமாக சுரக்கும் தாய்ப்பாலைச் சேகரித்து, தன்னார்வலர்கள் மூலமாக கோவை அரசு மருத்துவமனையில் உள்ள தாய்ப்பால் வங்கிக்கு கொடையாக அளித்துள்ளார். இரண்டாவது முறை கருவுற்ற சமயத்தில், தாய்ப்பால் தானம் குறித்து கேள்விப்பட்ட ஸ்ரீவித்யா, தனது குடும்பத்தினர் ஒப்புதலுடன் தானம் செய்ய முடிவு செய்ததாக கூறுகிறார்.

என்ன சொல்கிறார் ஸ்ரீவித்யா?

''என்னுடைய குழந்தைக்குப் பாலூட்டிய பின்னர், நான் மெஷின் வைத்து பம்ப் செய்து அதிகமாகச் சுரந்த பாலை சேகரித்தேன். அதிகமாக சுரக்கும் தாய்ப் பாலை குழந்தைக்கு புகட்டாமல் இருப்பது தவறு என்றும் அவ்வப்போது வெளியேற்றினால்தான் மீண்டும் பால் சுரக்கும் என்றும் மருத்துவர்கள் அறிவுரை கூறினர்.

அதுவே தாய்ப்பாலை தானம் செய்வதற்கு எனக்கு ஊக்கம் அளித்தது. நான் சரிவிகித உணவை எடுத்துக்கொள்கிறேன், என் பெற்றோர் மற்றும் கணவர் உதவியால்தான் நான் தொடர்ந்து தாய்ப்பால் தானம் செய்தேன். என் குடும்பத்தார் அளித்த ஊக்கம்தான் எனக்கு உதவியது,'' என்கிறார் அவர். அதிகமாக சுரக்கும் பாலை எப்படி எடுப்பது, சேகரிப்பது என்பது குறித்து மருத்துவர்களிடம் பலமுறை கேட்டு விளக்கம் பெற்றதாக கூறுகிறார் ஸ்ரீவித்யா.

ஹைப்பர் லேக்டேட்டிங் நிலை என்பது என்ன?

கோவை அரசு மருத்துவமனையில் உள்ள தாய்ப்பால் வங்கியைக் கண்காணிக்கும் மருத்துவர் செந்தில் குமார் பிபிசி தமிழிடம் பேசியபோது, `ஸ்ரீவித்யா 'ஹைப்பர் லேக்டேடிங்' என்ற நிலையைக் கொண்டுள்ள தாயாக இருப்பதால், ஏழு மாதங்களில் 100 லிட்டருக்கு மேற்பட்ட பாலை அவரால் தானம் செய்ய முடிந்தது` என்கிறார்.

அவர் மேலும் கூறும்போது ''ஒரு சில தாய்மார்களுக்கு அதிக அளவில் பால் சுரக்கும். அவர்களால் அதை தடுக்கமுடியாது. ஒரு சில தாய்மார்களுக்கு தாய்ப்பால் சுரப்பது மிகவும் குறைவாக இருக்கும். இதில் ஸ்ரீவித்யா முதல் வகையைச் சேர்ந்தவர் என்பதால் தானம் கொடுக்க முடிந்தது.

இதை எல்லா தாய்மார்களிடமும் எதிர்பார்க்க முடியாது. இதுபோன்ற தானம் செய்யப்பட்ட தாய்ப்பாலை இரண்டு முறை 'பாக்டீரியா கல்ச்சர் சோதனை` உள்ளிட்ட பலவிதமான அறிவியல் ரீதியான சோதனைகளுக்கு உட்படுத்திய பின்னர்தான் தேவைப்படும் குழந்தைகளுக்குத் தருவோம் '' என்று தெரிவித்தார்.

ஸ்ரீவித்யா ஏழு மாதங்களில் 105 லிட்டர் தாய்ப்பால் தானமாக கொடுத்துள்ளதற்கான தரவுகள் அரசு மருத்துவமனையில் பதிவு செய்யப்பட்டுள்ளன என்றும் அவற்றை இரண்டு முறை ஆய்வு செய்த பின்னர்தான் 'ஏசியா புக் ஆப் ரெகார்டஸ்' நிறுவனத்திற்கு ஸ்ரீவித்யாவின் தானம் பற்றிய சான்று வழங்கப்பட்டது என்றும் அவர் குறிப்பிட்டார்.

ஒவ்வொரு மாதமும் அதிகபட்சமாக 100 தாய்மார்கள் தங்களது குழந்தைகளுக்கு கொடுத்தது போக, மற்ற நேரங்களில் சுரக்கும் பாலை அரசு தாய்ப்பால் வங்கியில் செலுத்துவதாக கூறுகிறார் அவர். ஆனால் ஸ்ரீவித்யாவைப் போல தொடர்ந்து தானம் கொடுக்கும் தாய்மார்கள் மிகவும் குறைவு என்கிறார்.

இந்த தாய்ப்பால் வங்கியில் ஒரு நேரத்தில் 400 லிட்டர் வரை இருப்பு வைக்கிறோம். அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ள தாய்மார்கள் மட்டுமின்றி, தனியார் மருத்துவமனையில் உள்ளவர்களும் இந்த வங்கியில் தாய்ப்பாலை தானமாக செலுத்தும் வசதி உள்ளது என்று கூறினார் செந்தில்குமார்.

சாதனைக்காக செய்தாரா?

ஸ்ரீவித்யா மிக அதிக அளவில் தாய்ப்பால் தானம் செய்துள்ளது பிறரை ஊக்குவித்தாலும், சாதனை செய்வதற்காக அவர் தாய்ப்பாலை தானம் கொடுக்க முன்வந்தாரா என்ற கேள்வியும், அவரது உடல்நலன் மற்றும் அவரது குழந்தையின் உடல்நலன் குறித்த கேள்விகளும் எழுந்துள்ளன.

ஆனால், தன்னுடைய தனிப்பட்ட விருப்பத்தின் பெயரிலும், தாய்ப்பால் இல்லாத குழந்தைகளின் நலனைக் கருத்தில் கொண்டும்தான் இந்த தானத்தில் ஈடுபட்டதாக ஸ்ரீவித்யா நம்மிடம் தெரிவித்தார்.

வல்லுநர்கள் கருத்து என்ன?

தாய்ப்பால் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வரும் நிர்மலா ஒரு தாய்ப்பால் ஆலோசகர் (lactation consultant). தாய்ப்பால் சுரப்பு, தாய் பாலூட்டும் முறைகள், பணியிடங்கள் மற்றும் பொது இடங்களில் தாய்ப்பால் கொடுப்பதற்கான வசதிகள் குறித்த நிகழ்வுகளை ஒருங்கிணைத்து வருகிறார் இவர். எடை குறைவாக பிறக்கும் குழந்தைகளுக்கும், பால் சுரக்காத நிலையில் உள்ள தாய்மார்களின் குழந்தைகளுக்கும் தானம் செய்யப்படும் தாய்ப்பால் உயிர் காக்கும் பொருளாக உள்ளதால் ஸ்ரீவித்யாவின் செயலில் தவறில்லை என்று கருதுகிறார் அவர்.

''ஸ்ரீவித்யா தனது குழந்தைக்குக் கொடுத்தது போக, மீதமுள்ள பாலை தானமாக கொடுக்கிறார் என்பதால், அதில் வேறு எந்த உள்நோக்கமும் இருப்பதாக எனக்கு தோன்றவில்லை. அவர் ஆரோக்கியமாக இருக்க வேண்டும், அவரது குழந்தைக்குத் தேவையான ஊட்டச்சத்து கிடைப்பதை உறுதிசெய்ய வேண்டும்.

'ஹைப்பர் லேக்டேடிங்' என்ற நிலையில் சில பெண்களுக்கு அளவுக்கு அதிகமான பால் சுரப்பு இருக்கும். அதனை நல்ல முறையில், தானம் கொடுத்து பல உயிர்களைக் காப்பாற்ற அவர் உதவுகிறார் என்பதை வரவேற்கலாம். இது எல்லா பெண்களுக்கும் சாத்தியமில்லை. மிகவும் அரிதாக நடக்கும் நிகழ்வு,'' என்கிறார் நிர்மலா.


தாய்ப்பால் ஆலோசகர் 'சக்தி' பிரியா

திருவள்ளூரில் பணிபுரியும் மற்றொரு தாய்ப்பால் ஆலோசகரான சக்திபிரியா, தாய்ப்பால் தானம் குறித்த சில மூடநம்பிக்கைகள் தற்போதும் சமூகத்தில் நிலவுவதாக சொல்கிறார்.

''பிறந்த குழந்தைக்கு தாயின் பாலை மட்டும்தான் தரவேண்டும். அதற்கான வாய்ப்பில்லை என்னும்போது, இதுபோல தானமாகக் கிடைக்கும் தாய்ப் பாலை அந்த குழந்தைக்கு தருவதற்கு மருத்துவர்கள் பரிந்துரை செய்வார்கள்.

பலர்  இதை ஏற்றுக்கொள்கிறார்கள். சில பெற்றோர் அதனை ஏற்றுக்கொள்வதற்கு சிரமப்படுவார்கள். தானமாக கிடைக்கும் பாலை குழந்தைக்குத் தருவது குறித்து பல விதமான சந்தேகங்களுடன் எங்களிடம் பெற்றோர்கள் வருவார்கள்,'' என்று கூறிய அவர் பெற்றோருக்கு வரும் சில சந்தேகங்களைப் பட்டியலிட்டார்.

அவர் பட்டியலிட்ட அனுபவங்கள்:

1) சமீபத்தில் ஒரு பெற்றோர், பாலை தானமாகக் கொடுத்த நபரின் சாதி என்ன என்று அறிய முற்பட்டார்கள், அது ஒரு கசப்பான அனுபவமாக இருந்தது. ஒருவேளை தானம் கொடுத்த பெண் சாதிப் படிநிலையில் தங்களது சாதியைவிட கீழே இருந்தால் அவரிடம் இருந்து பெற்ற பாலை எப்படி கொடுப்பது என்று அவர்கள் யோசித்தனர்.   2) ஒரு சிலர், தங்களது குழந்தைக்கு ஏதாவது நோய் வருமா என்று கேட்பார்கள். தானமாகப் பெற்ற பாலை கொடுப்பதால், பாலை வழங்கிய தாய்க்கு இருக்கக்கூடும் சாத்தியமான பாதிப்புகள் தங்களது குழந்தையையும் தாக்குமோ என்ற சந்தேகம் இருக்கும். 3) சில தாய்மார்களுக்கு தொடக்கத்தில் பால் சுரப்பு இருக்காது, சில நாட்களில் சுரப்பு தொடங்கிவிடும் என்பதால், சில நாட்களுக்கு தானமாக பெறப்பட்ட பாலை கொடுக்கவேண்டும். அதனால், தன்னுடைய குழந்தை தன்னிடம் குடிக்க மறுத்துவிடுமோ என்ற சந்தேகம் இருப்பதைப் பார்த்துள்ளேன்.


இவ்வளவு தாய்ப்பால் தானம் செய்யலாமா?

தாய்ப்பால் குறித்த கட்டுக்கதைகள் சமூகத்தில் தொடர்வதாகக் குறிப்பிட்ட சக்திபிரியா, தாய்ப்பால் தானம் குறித்த விழிப்புணர்வுதான் இதற்குத் தீர்வு என்கிறார்.

இப்படி அசாதாரணமான அளவில் தாய்ப்பால் தானம் செய்வது தாயின் உடலில் என்னவிதமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று சக்தி பிரியாவிடம் கேட்டோம்.

“தன் குழந்தைக்கு கொடுத்தது போக மீதம் கிடைக்கும் பாலை தானம் செய்வதற்கு நாங்கள் ஊக்குவிக்கிறோம். பால் சுரப்பது எப்படி செயல்படுகிறது என்றால், உங்கள் குழந்தை அதிகமாக குடிக்கத் தொடங்கும்போது அதற்கு ஏற்றபடி தாயின் உடல் அதிகம் சுரக்கத் தொடங்கும்.

குறிப்பிட்ட காலத்துக்குப் பிறகு பால் சுரப்பது இயல்பாக குறையும்.

தானம் செய்யவேண்டும் என்பதற்காக ஒருவர் அபரிமிதமாக பம்ப் செய்தால் அதற்கு ஏற்ப பாலும் அதிக அளவில் சுரக்கத் தொடங்கும். இதனால் பால்சுரப்பது தாமாக மட்டுப்படும் நடைமுறை தாமதமாகும். அபரிமிதமாக சுரக்கும் பால் தாய்க்கு சில நேரங்களில் சுமையாக மாறக்கூடும்," என்றார். மேலும் இது பற்றிப் பேசிய சக்தி பிரியா, "ஸ்ரீவித்யா இப்படி அபரிமிதமாக தாய்ப்பால் தானம் செய்திருப்பது தாய்ப்பால் கிடைக்காத பல குழந்தைகளுக்கு உதவியாக இருந்திருக்கும். அவர் இதன் மூலம் ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்த விரும்புகிறார் என்றால், தாய்ப்பால் தானம் செய்யவேண்டும் என்பதற்கான விழிப்புணர்வாக மட்டுமே இதை நாம் எடுத்துக்கொள்ளவேண்டும்," என்கிறார்.

"இவ்வளவு அதிகமாக ஒருவரே தானம் செய்யலாம் என்பதற்கான செய்தியாக எடுத்துக்கொள்ளக்கூடாது. நிறைய பேர் தாய்ப் பால் தானம் செய்யவேண்டும். ஒருவரே இவ்வளவு நிறைய செய்வது தேவையற்றது. செய்கிறவருக்கு சிரமங்களைத் தரக்கூடியது.

ஆனால், இந்த தாய்ப்பாலை தானமாகப் பெறும் குழந்தைக்கு எந்த பாதிப்பும் இல்லை” என்கிறார் சக்திபிரியா.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மூன்று பங்காளிக் கட்சிகளும் தனித்தனியாகப் போட்டியிட்டால் கூடுதலான ஆசனங்களை கைப்பற்ற முடியும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தில் வைத்தே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்திய குழுவில் எடுக்கப்பட்ட தீர்மானத்தை ஆமோதித்து – அதனை நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற வகையிலேயே கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் இந்தக் கூட்டத்தில் கருத்து வெளியிட்டுள்ளார்.

ஒரு கட்டத்தில் பங்காளிக் கட்சிகளான புளொட் மற்றும் ரெலோவை நோக்கி, நீங்கள் தமிழரசுக் கட்சியை சிதைக்கப் பார்க்கின்றீர்களா என்று கோபத்துடன் சம்பந்தன் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதன்போது ரெலோவின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன், “நீங்கள் கூட்டமைப்பின் தலைவர். ஒரு கட்சி சார்பாக நடக்காதீர்கள்” என்று பதில் வழங்கியுள்ளார்.

நுவரெலியாவில் பனிப்பொழிவுடன் கூடிய காலநிலை ஏற்பட்டுள்ளது.

நுவரெலியாவில் பல்வேறு பகுதிகளில் துகள் பனிப்பொழிவு பதிவு ஏற்பட்டுள்ளது. இது குறித்து சுற்றுலா பயணிகள் தெரிவிக்கையில்,

“தற்போது ஐரோப்பிய நாடுகளில் பனிப்பொழிவு காலநிலை ஆரம்பித்துள்ளது.

மாறுபட்ட காலநிலை

இந்நிலையில் நுவரெலியாவை பார்க்கும் போதும் அவ்வாறான உணர்வு ஏற்படுகிறது.”என தெரிவித்தனர்.

அண்மைக்காலமாக நாட்டுக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

மேலும், இலங்கையில் நிலவும் மாறுபட்ட காலநிலை மாற்றம் அவர்களை மிகவும் கவர்ந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வளிமண்டவியல் திணைக்களம்

மலையகத்தில் கடும் குளிரான காலநிலையும் ஏனைய பகுதிகளிலும் கடும் வெப்பமான காலநிலையும் நிலவுகிறது.

இதேவேளை காலை வேளையில் நுவரெலியா மாவட்டத்தில் பனிமூட்டமான காலநிலை நிலவும் என வளிமண்டவியல் திணைக்களம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.  



பண்ணாகம் அண்ணா கலைமன்றத்தின் முன்பள்ளி விளையாட்டு விழா 2022

பண்ணாகம் முன்பள்ளி விளையாட்டு விழா 29.3.2022 மாலை 3.00 மணிக்கு முன்பள்ளி மைதானத்தில் நடைபெற்றது. பிரதமவிருந்தினராக பண்ணாகம்.கொம் பிரதம ஆசிரியர் ஊடகவித்தகர் திரு.இக.கிருஷ்ணமூர்த்தி அவர்கள் கலந்து மங்கலவிளக்கேற்றி, பாடசாலையை நிர்வகிக்கும் அண்ணா கலை மன்றக் கொடியேற்றி  விளையாட்டுக்களை ஆரம்பித்தார். மன்றத்தலைவர் திரு.குகலிங்கம் அவர்கள் தலைமையில் விழா நடைபெற்றது . வரவேற்புரையை திரு .தி.சிறீஸ்காந்தமூர்த்தி அவர்களும் நன்றியுரையை செயலாளர் திரு.அஜித்குமார் அவர்களும் நிகழ்த்தினார். பிரதவிருந்தினர் இக,கிருஷ்ணமூர்த்தி அவர்கள் பிரதம உரையாற்றினார் மற்றும் போசகர் பொறியியலாளர் திரு.த,துரைலிங்கம் அவர்களும், முன்பள்ளி இணைப்பாளர்  திருமதி சத்தியரூபி அவர்களும், மன்ற உறுப்பினர்கள் து.அருள்லிங்கம், திரு.குமரகுரு ஆகியோர் உரையாற்றினார் பாடசாலையில் படிக்கும் அனைத்து மாணவர்களும் விளையாட்டுப் போட்டியில் பங்கு கொண்டு பல பரிசில்களைப் பெற்றனர்.விசேட வரவேற்புரையை தமிழிலும் ஆங்கிலத்திலும் இரண்டு மாணவர்கள் மிகத் திறமையாக நிகழ்த்தினர் அவர்களை ஊக்குவிக்க பிரதமவிருந்தினர் தலா 1000ரூபாய்களை வழங்கி சிறுவர்களைக் கொளரவித்ததைப் பலர் பாராட்டினர். விழாவில் இறுதியில் விணோதஉடைப்போட்டி நடைபெற்றது. விழாவில் பல பொதுமக்கள்  கலந்து சிறப்பித்தார்கள்.