விழுதல் என்பது எழுகையே…
பகுதி 32- 33
எழுதியவர் திரு.சக்திதாசன் டென்மார்க்
கதை தொடர்கிறது பகுதி - 33
“வடிவா யோசிச்சு முடிவெடுங்கோ! ஓ …. ஓ
எனக்கு இன்டைக்குள்ள முடிவு தெரிஞ்சால்தான் நல்லது. நாளைக்கு சீட்டு தொடங்குது!
காசைப்பற்றி நீPங்களேன் யோசிக்கிறீங்கள் ! இந்த மாதம் தரத்தேவையில்லையென்றுதானே சொல்லுறன். என்ர தாச்சி காசு தானே அதை ஆறுதலாக தாங்கோ ஒரு பிரச்சனையுமில்லை.
பேந்தும் பார் …. இதுக்கெல்லாம் நான் வட்டி வாங்கினால் நான் என்ன உழைச்சு சந்திரமண்டலத்திலயா வீடு வாங்கப்போறன் !
நீங்கள் கனநாளா என்னையும் சேருங்கோவென்டு கேட்டதாலதான் உங்களுககு ஒரு துண்டு வைச்சிருந்தனான்
வாறீங்களோ இல்லையோ என்கிறதை இன்டைக்கே எனக்கு சொல்லிப்போடுங்கோ ?
’உங்கை நாலைஞ்சு பேர் இப்பவும் கலைக்கினம்.’ கண்டவையையும் போட எனக்கு விருப்பமில்லை பதினைஞ்சு துண்டில இன்னும் இரண்டு தான் இருக்குது
’என்ர சீட்டில எந்த சீட்டு கழிவு போகாத சீட்டு …. சொல்லுங்கோ பார்ப்பம் ?’
சீட்டுக்கு வராமலேயே…. யெனிவாவில இருந்து கூடப் போடுகினம் பரமசிவத்தின்ர சீட்டென்றால் பரம விரோதிகூட பயப்படுவாங்கள்……..
ஓ …. நான் வேலையால வீட்டை போய்க்கொண்டிருக்கிறன் நீங்கள் வேலையால வரேக்க நல்ல முடிவோட வாங்கோ … இஞ்ச பஸ்சுக்குள்ள இருந்து கதைக்கிறன். சனங்கள் என்னையே …. பார்த்துக்கொண்டிருக்கினம் வைக்கிறன் !”
”ரெலிபோனை வைச்சதும் தாமதம், பக்கத்தில இருந்த சீலனைப் பார்த்து,” நீங்களும் தமிழரா ?! என கேக்கமுன்னம், ’சீலனும் தனக்கே இயல்பான புன்னகையுடன் ஆமண்ணா !’ என்று சொல்ல அண்ணா என்று சொல்லாதேங்கோ என்ர உடம்பு தான் அப்படி எனக்கு வயசு குறைவு இப்பதான 22 , என்ர பெயர் பரமசிவம் சிவமென்று தான் எல்லாரும் கூப்பிடுவினம்.
” உங்கள ஒருநாளும் காணேல்லையே இந்தப்பக்கம் நீங்களும் இஞ்சதான் எங்கயோ இருக்கிறீங்களா ? அல்லது வேற இடத்தில எங்கயாவது இருந்து வாறிங்களா ?”
”இல்லை நானும் இஞ்சதான் இருக்கிறனென்று தொடங்கி …… இப்ப வேலைக்கு பஸ்சை விட்டு …. வீடுமில்லாமல் இருக்கிற வரையில் சொல்லி முடித்தான் சீலன்.”
ஓன்றுக்கும் யோசியாதைங்கோ!
”நானும் யாழ்ப்பணம்தான்.! வந்தாரை வரவேற்று வாழ்வளித்த யாழ்ப்பாணத்தாருக்கு இப்ப உலகமெல்லாம் வீடு இனி என்ர வீடும் உங்கட வீடுதான் சீலண்ணா !
”அவன் என்ன சொல்லுகிறானென்று புரியாமல் எல்லாம் சிலேடையாக இருந்தது.”
”பகிடிக்கில்லை சீலன் அண்ணா ! என்ர வீட்டில நீங்கள் தங்கலாம். ”
’நானும் இன்னும் கலியாணம் கட்டெல்லத்தான், இஞ்சை எனக்கு சொந்தமா வீடு இருக்குது!’ என்னோட சேர்த்து ஐந்து பேர் இருக்கிறம். எல்லாரும் பொடியள்தான்!
வீட்டு வாடகையை ஐந்தாப் பிறிச்சு கட்டுறம். சமறியும் அப்படித்தான்! சமையலும் ஐந்து பேரும் ரேன் போட்டு சமைப்பம். நீங்களும் ஆறாக எங்களோட சேர்கிறதில எனக்கு சந்தோசம். உங்களுக்கொன்றும் ஆட்சேபனை இல்லையென்றால். யோசிச்சுப்போட்டு சொல்லுங்கோ?
” இதில ஒன்றும் யோசிக்கிறத்துக்கு ஒன்றுமில்லை உங்களப்போல உதவி செய்கிறவர்கள் இருக்கிறதினாலதான் எங்களைப் போலவர்களும் வாழக் கூடியதாக இருக்குது!. ஆனால், உங்களோட இருக்கிற மற்றைய ஆட்களும் இதுக்கு சம்மதிக்க வேணுமெல்லோ?”
நீங்கள் அதைப்பற்றி எதுவும் யோசிக்கத் தேவையில்லை அது என்ர வீடு நான்தான் முடிவெடுக்கிறது..
” இந்தாங்கோ என்ர விசிற்றிங் காட்”
அடுத்த ஸ்ரொப்பில நான் இறங்கப்போறன். நீங்கள் வீட்டை வாங்கோ கதைப்பம். என்று சொல்லியபடி …. சிவம் பஸ்சில் இருந்து இறங்கிவிட்டான்.!
”சீலனின் மனதில் ஒருவித ஆனந்தம்.”
ஒரு கதவை அடைக்க கடவுள் இன்னொரு கதவை திறக்கிறார்.
”தவத்தார் எப்பவோ சொன்ன வார்த்தை மனதில் முட்டிமோதி போனது’ இஞ்சை தமிழர்கள் ஒருதரும் ஒற்றுமையில்லை கண்டாலும் காணாமல்தான் போவார்கள் நீ ஆரைக்கண்டாலும் கதையாதே …. !” ஆனால் இண்டைக்கு திக்கற்று நின்றவனுக்கு தெய்வம் காட்சி கொடுத்தது போல சீலன் மனதுக்குள் சிவம் தெய்வமாக தெரிந்தான்.!
வேலை முடிந்ததும் சீலன் நேராக சிவத்தின் வீட்டுக்கே போக திட்டமிட்டான்.
”இப்ப அவசரப்பட்டு தவத்தாருக்கு ஒன்றும் சொல்லாமல் பின்னர் சொல்லுவம். முரளி அங்க அவரோட இருக்கிறதால என்று சொன்னால் அவரொண்டும் கோவிக்க மாட்டார்.”
”சிவம் வீட்டு வாசலுக்கு போய்விட்டான் சீலன்.!
உள்ளுக்;குள் பெலத்த சத்தமாக கவியரசர் கண்ணதாசனின் தத்துவப் பாடலொன்று ஒலித்துக்கொண்டிருந்தது
.எங்கே வாழ்க்கை தொடங்கும்
அது எங்கே எவ்விதம் முடியும்
இதுதான் பாதை இதுதான்
பயணம் என்பது யாருக்கும் தெரியாது!
அந்த சத்தம் அதிகமாக இருந்ததினால் இவன் அடித்த ‘பெல்´ சத்தத்துக்கு யாருமே செவி சாய்;த்ததாக தெரியவில்லை. கொஞ்ச நேரமாக அப்படியே நின்றபோது பின்னால் வந்த ஒருவன் முதுகில் தட்டி நீங்கள் தான் சீலனா ! என்றான். ஆமென்ற முதல், “தனது கையை கொடுத்து நானும் இஞ்ச தான் இருக்கிறேன் சிறிராமச்சந்திரன் என்ர அப்பா வைச்ச பெயர் இஞ்சை இவங்கள் எல்லாரும் என்னை ‘அனுமான் ‘ என்று தான் கூப்பிடுவாங்கள்.
“ வாங்க உள்ளுக்குள்ள என்று திறப்பு போடாமலே கதவை திறந்து கொண்டு முன்னுக்கு அனுமான் போக பின்னுக்கு இவனும் போனான்.’ “சீலன் மனதில் அனுமான் இடம்பிடித்துக் கொண்டான் ‘வஞ்சகமில்லாத பேர்வழி’ ” இந்த வீடு எப்பவும் பூட்டுவதில்லை …. யாரும் ‘பெல்லடிச்சு’ வாறதுமில்லை ….
“அப்ப கள்ளர் யாரும் வந்தால் ? வஞ்சமில்லாமல் கேட்டான் சீலன் ! “
“கெக்..கெக்…” கென்று …… சிரித்தான் அனுமான்!
“இஞ்சையாவது கள்ளர் வாறதாவது நாங்களே கள்ளர்! என்று அனுமான் சொன்ன வார்த்தை கேட்டு திக்கென்றது சீலனுக்கு“ டே அனுமான் சீலண்ணாவை பயப்படுத்திப் போடாதே !
“நீங்கள் வாங்கோ!”
என்று வரவேற்பறைக்கு அழைத்து சென்றான் சிவம்!
“ வரவேற்பறையில் அமர்ந்து எல்லாவற்றையும் வியப்பாக பார்த்துக் கொண்டிருந்தான் ” அகதிமுகாமில் இருந்த இவனுக்கு அவர்களுடைய வீட்டைப்பார்த்தபோது இது ஆண்கள் மட்டும் இருக்கின்ற வீடா ….. நம்ப முடியாமல் இருந்தது. வரவேற்பறையே அவ்வளவு அழகானதாக அழகுபடுத்தப்பட்டிருந்தது. ……’ வடிவேலைக்கூட அவ்வளவு வடிவாக காட்டிக்கொண்டிருந்த 50 இஞ்சியளவு ரிவியை கண் வெட்டாமல் பார்த்துக்கொண்டிருந்தவனை அனுமானின் குரல் திசை திருப்பியது. “என்ன அப்படிப்பாக்கிறீங்கள் ரீவியை?” இனி இதுகும் உங்கடதான்! ஆறாப்பிறிச்சு ஒன்றுதான். என்று சொல்லியவாறு கூல்றிங்சை அவன் முன்னால வைத்துவிட்டு சென்றான்.
“ என்னடா எதுக்கெடுத்தாலும் ஆறாப்பிரிக்கிறது என்கிறாங்கள். திரௌவுபதையின்ர நிலைமைதானோ பத்மகலாவுக்கும் …….. தன்னைத்தானே சமாதானப்படுத்திக்கொண்டு …..”
கூல்றிங்சை எடுத்து குடித்தான்.
அங்கே இருந்த ஐந்து பேரும் ஐந்து கோணங்களிலே பிசியாக இருந்தார்கள்.
ஒருவர் கண்ணதாசன் பாடலிலேயே காதை கொடுத்து ரசித்துக்கொண்டிருந்தான். இன்னுமொருவன் அதை விட சத்தமாக ரெலிபோன் கதைச்சுக்கொண்டிருந்தான். அனுமான் தான் கிச்சினுக்குள் கோழியுடன் சண்டை போட்டுக்கொண்டிருந்தான்..அவன்ர சமையல் ரேனாயிருக்குமென்று இவன் மனதுக்குள் நினைத்துக் கொண்டான்.”
இன்னுமொருவன் கையில் பியர் போத்திலுடன் அறைக் கதவை திறந்துவிட்டபடி ‘சிகறற்’ பத்துவதும் பியர் குடிப்பதுமாக இருந்தவரைப் பார்த்து ….. “உங்களுக்கு எத்தினதரமண்ண சொல்லியிட்டன் உந்தக்கோதாரியை வீட்டுக்கை நின்று பத்தாதையுங்கோவென்று” உங்களை விட எங்களுக்குத்தான் உதால வருத்தம் வரப்போகுது. !
“சிகறற்றை வெளியே வீசி எறிஞ்சுவிட்டு கிச்சினுக்குள் போய் அனுமானோட ஏதோ புறுபுறுத்துக்கொண்டு நின்றவன்ர சத்தத்தை .பின்னர் காணவில்லை. மேலே தன்னுடைய றூமுக்குள் போட்டான் போல ….
கொஞ்சம் இருங்கோண்ண வாறனென்டு ஏதோ கணக்கு பார்த்தபடி இருந்தான் சிவம்!
அவனுக்கும் மாறி,மாறி ரெலிபோன் வந்துகொண்டிருந்தது. சிலர் வந்து காசுகளும் கொடுத்துவிட்டு போய்க் கொண்டிருந்தார்கள். அந்த காசுகளை எண்ணுவதும் கொப்பியில் எழுதுவதமாக இருந்த சிவம் நீங்களும் சீட்டுப் பிடிக்கிறனிங்களா ? என்று கேட்டவுடன் ‘இல்லையண்ணா இப்பதானே வேலை தொடங்கினனான். எனக்கு உதில பெருசா அனுபவமுமில்லை’ என்று சீலன் முடிக்கமுன்னம், கிச்சினுக்குள்ள நின்ற அனுமான் ஓடிவந்து என்னண்ணை அனுபவம். எனக்கும் சீட்டைப்பற்றி ஒன்றும் தெரியாது. மூன்று சீட்டு போட்டு எடுத்துத்தான் ஊரில மருதனார்மடச்சந்தியில நிரைச்சுக்கு இருக்கிற கடை என்ரதான.;
“தோட்டக்காணியை வாங்கி கடை கட்டி விட்டன் அத்தனை கடையும் வருமானத்தை அள்ளிக் கொட்டுது.! எல்லாம் சிவமண்ணாதான்……!
சீட்டில ஒன்றும் பெரிய அனுபவம் தேவையில்லை சீலண்ணா!
ஒரு துண்டு ஆயிரம் பிராங், என்றால் பதினைஞ்சு துண்டு 15000 பிராங் முதல் சீட்டு எனக்கு தாச்சி. அதுக்கு கழிவு இருக்காது அதுக்கு பிறகு ஒரு குறிப்பிட்ட கட்டாயக்கழிவு ஆனால் அதுக்கும் மேலால கழிவு போகும்
உங்களுக்கொரு அவசர தேவையென்றவுடன் யாரிட்டையும் பல்லைக் காட்டத் தேவையில்லை உடன கழிச்சு எடுக்கலாம். மேசையில காசு. உங்களுக்கு அவசரமில்லையென்றால் நீங்கள் கடசியில எடுத்தால் முழுக்காசும் கழிவில்லாமல் எடுக்கலாம். அப்படி எடுக்கேக்க நீங்கள் கட்டிய தொகை கூட சில வேளை 10.000 பிராங் தானிருக்கும் உங்களுக்கு அப்படியே சுளையாக காசு வரும் ‘சீலனுக்கும் ஒரு நம்பாசை பிறந்தது தங்கச்சிக்கு கலியாணம் செய்ய இப்படி சேர்த்து வைத்தால் உதவும்தானே …… ஆனால் இப்ப என்னட்டை ஒரு காசுமில்லாமல் எப்படி ….. இனி வீட்டு வாடகை… அற்வானஸ் …… எல்லாத்தையும் யோசித்துக் கொண்டிருக்க …….’
என்ன யோசிக்கிறீங்கள் “சீட்டு கட்ட விரும்பினா கட்டுங்கோ” இந்த மாதம் காசுப் பிரச்சனையென்றால் நான் பார்க்கிறன் வாற மாதத்தில இருந்து என்ர காசையும் சேர்த்து தாங்கோ! என்றான் சிவம்!
“சீலனும் அதுக்கு சம்மதம் தெரிவித்து விட்டு முகாமுக்கு போக வெளிக்கிட்டான்.!”
‘காம்பில என்ர சாமானுகள் கொஞ்சம் கிடக்குது எடுத்துக் கொண்டு; ஆறுதலாக துப்பரவாக்கி கொடுத்திட்டு நாளைக்கு வாறன்.என்று புறப்பட்டு விட்டான்.’
•
வருடங்கள் உருண்டோடி.. சீலனும் சீட்டுப் பிடிக்க தொடங்கிய படியால் ஒன்றுக்கு இரண்டு மூன்று வேலை செய்யத் தொடங்கி ஓட்டமும் நடையுமாய் அவனது வாழ்வு உருண்டுகொண்டிருந்தது.
ஒரு சீட்டும் எடுக்காமல் … பிரமிப்பாய்… ‘தன் சொத்து என்;று அடிக்கடி நூறால் பெருக்கிப்பார்த்து கொள்வான்’ சிவத்தின் மீது அதிக நம்பிக்கையானபடியால் ….. சீட்டு கூறும் நேரம் கூட .. இவன் வீட்டில் நிற்பதில்லை…’ அவன் சொல்லும் காசை கொடுத்துவிட்டு தானுண்டு தன் வேலையுண்டு என இருந்து விடுவான்.
“தங்கச்சிக்கும் ஒரு நல்ல சம்பந்தம் வந்திருக்கு மோனே … ‘20 இலச்சம் காசு கேக்கிறாங்கள் ……..’ நான் உன்னோட கதைச்சிட்டு முடிவு சொல்லுறன் என்று புறோக்கறிட்டை சொல்லியிட்டன் நல்ல பொருத்தமாம் .மாப்பிள்ளை கனடாவாம் தையில இஞ்ச வர இருக்கிறாறாம்.” என்று அம்மா ஒருநாள் ரெலிபோனில் கதைக்கும் போது சொன்னவுடன் ….‘ பொருத்தமென்றால் ஓமென்று சொல்லுங்கோ ! நல்ல இடமென்றால் செய்துவைப்பம் காசைப்பற்றி நீங்கள் ஒன்றும் யோசிக்க தேவையில்லை அதெல்லாம் நான் ஒழுங்குபண்ணுறன். என்று அம்மாவிடம் முடிவாக சொல்லிவிட்டான்.
“இந்தமுறை எப்படியும் சீட்டு எடுக்க வேணும் ….. என்று, அன்றைய தினம் வேலைக்கும் இரண்டு மணித்தியாலம் லீவு எடுத்துக்கொண்டு சீட்டு தொடங்கும் நேரத்துக்கு கணக்கா வி;ட்டை வந்துவிட்டான் . சீட்டை சீலன் கேக்கத்தொடங்கியவுடன் …… அங்கே இருந்தவர்கள் எல்லாரும் சீலனைப் பார்த்து சிரித்தார்கள். அவனுக்கு ஒன்றுமே விளங்கவில்லை ….
‘ஒருவர் சொன்னார் சீலன் உம்முடைய சீட்டை எத்தினை தடவைகள் நீர் எடுப்பீர் ?
உமக்கு தெரியாதா ஏற்கனவே உம்முடைய சீட்டு எடுக்கப்பட்டுவிட்டது.
‘ஒன்றும் புரியாமல் விழிக்க …… ‘ நீர் பேசாமல் இரும் நான் பிறகு கதைக்கிறன் உம்மோட… ‘சிவம் சொன்னவுடன் எதுவுமே கதைக்காமல் எழுந்து வெளியே போய்விட்டான் சீலன்’
‘சீட்டு முடிந்து எல்லாரும் போன பின்னர்‘ தன்னுடைய அறைக்கு வந்து, கோவித்துக் கொள்ளாதேங்கோ சீலண்ணா ! உங்கட சீட்டுகளை நான் அவசரத்துக்கு எடுத்துப் போட்டன.; நாலஞ்சு மாசத்துக்குள்ள நான் தருவன் என்று சொன்னவுடனே ‘சீலனுக்கு என்ன சொல்லுவது என்று தெரியவில்லை …’
அவனிடம் வைத்த நம்பிக்கை இன்னுமிருந்ததினால் …. ‘ எனக்கு அவசரமாய் காசு தேவையாக இருக்குது. ‘வட்டிக்கெண்டாலும் தாங்கோ’ என்று சீலன் கேக்க, என்னட்டை காசு இருந்தால் நானேன் உங்கட சீட்டை எடுக்கிறன். எதுக்கும் வேற ஆக்களிட்டை கேட்டுப்பார்ப்பம்’ எழும்புங்கோ? ‘பேத்தே பாட்டீக்கெல்ல போகவேணும் நேரமாகுது. ஏன்று சிவம் எழுப்ப … ‘ இல்லை சிவம் நான் வரேல்ல எனக்கு கொஞ்சம் அமைதியாக இருக்கவேணும் போல கிடக்குது என்று இவன் மறுக்க….வலுக்கட்டாயப்படுத்தி ….. அங்க பிறன்ஸ் எல்லாரும் வருவாங்கள் அவங்களோட கதைச்சு காசும் ஒழுங்குபண்ணலாம் வாங்கோ என்று சீலனையும் அழைச்சுக்கொண்டு பேத்டே பாட்டி வீட்டுக்கு கிளம்பிவிட்டார்கள்….
அங்கே பேர்த்டே பாhட்டியென்றால் பெரிய மண்டபம் எடுத்து கேக் எல்லாம் வெட்டி நடக்கின்ற பேர்த்டே பார்ட்டியென்றுமில்லாமல் சும்மா எல்லாரும் சேர்ந்து தண்ணியடிக்கும் பார்ட்டியாக மட்டும் தானிருந்தது,
இதிலே சீலன் மட்டும் தான் தண்ணியடிக்கவில்லை ‘மற்றவர்கள் எல்லாம் அங்கே மப்பும் மந்தாரமாக இருந்தார்கள்’ சீலனுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை கொக்கோ கோலாவை சுவைத்தபடி … ஒரு மூலையில் இருக்க, ஒருவன் வந்து உந்தக் கொக்கோ கொலாவை விட இது பரவாயில்லை உது உடம்புக்கு கேடு … என ஒரு பிரசங்கமே நடாத்தி முடித்தான்.
திடீரென்று பார்த்தால் தண்ணியடிச்சுக் கொண்டிருந்த பெடியளுக்கு இடையில் வாய்த்தர்க்கம் மாறி மாறி இடம்பெற்றுக்கொண்டிருந்தது. சிவத்துக்கும் இன்னொருவனுக்குமிடையில் … வாய்த்தர்க்கம் கைகலப்பாக உருவெடுத்தது. சிவத்துக்கு இரண்டு மூன்றடி விழுந்துவிட்டது. இதை கண்ட சீலன் ஓடிப்போய் விலக்குதீர்க்க….. ‘சிவத்துக்கு அடித்தவனை எட்டிப் பிடிக்க
‘ உனக்கு வந்தாத் தான் தெரியும் கொஞ்சநஞ்ச காசா ….. வாயைக் கட்டி வயித்தை கட்டி சீட்டுப்போட்டா என்ரை சீட்டை எடுத்துப்போட்டு பேக்காட்டிக்கொண்டு திரிகிறான்.! இவங்களையெல்லாம் சும்மா விடக்கூடாது. வீடுமய்சே… என்று சீலனின் பிடியிலிருந்து திமிறி …. சிவத்துக்கு திரும்பவும் அடிப்பதற்கு முன்னம் ‘எங்கயோ மறைச்சு வைத்திருந்த கத்தியை எடுத்து அவனின் வயித்தில் ஒரு குத்து. குத்திவிட்டான் சிவம்’ இடையில் நின்ற சீலனுக்கு என்ன செய்வதென்று தெரியாமல் குத்து வேண்டியவனை காப்பாற்றும் நோக்கோடு கத்தியை பிடித்து வெளியே இழுக்க கலவரமாகி போக …. நின்றவர்களெல்லாரும் இதுதான் தருணமென்று ஆளுக்காள் ஓடிவிட்டார்கள் சிவமும் உட்பட யாரையும் காணவில்லை
அந்த பேர்த்டே பாட்டியை ஏற்பாடு செய்தவன் குழம்பி போய் அம்புலன்சுக்கு அடிச்சுப்போட்டான்.
என்ன தம்பி ‘நீர் தேவையிலாமல் உதுக்குள்ள மாட்டுப்பட்டு போனீர்?’ உம்மட கை அடையாளம் தான் பதிஞ்சு போயிருக்கப்;போகுது. ….. போகிற போக்கில ஆள் தப்பாது போல …. அம்பிட்டீரென்றால் ஏழு வருசம் உள்ளுக்குள்ள உம்மை பார்க்க பாவமா கிடக்குது. நீரெங்கயாவது ஓடித்தப்பும்.! என்று ‘அங்க நின்ற ஒரு முதியவர்’ சொல்ல …
எங்கயண்ண போவன் … ? என்னட்டை ஐந்து சதம் கூட கையில காசு இல்லை…
என்று சீலன் சொல்லிக்கொண்டு நிக்க …. ‘இஞ்ச வாரும் என்னோட,’ என்று அவனை அழைச்சுக்கொண்டு …. வந்து தன்னோட தலைமறைவாய் வைச்சிருந்து புகையிரத நிலையத்தில் வைச்சு ‘கொப்பனேகனுக்கு’ ரிக்கெற்றும் எடுத்துக்கொடுத்து மாரிமுத்து என்ற பெயரில் ஒரு பேர்த்சேட்டிபிக்கற்றும் செய்து கொடுத்து…. அங்கே.. போனவுடன உந்தப்பாஸ்போட்டை கிளித்தெறிஞ்சு போட்டு மாரிமுத்து என்ற பெயரில் பதியும்.
பாரும் உம்மட பிறன்ஸ் ….. என்று நீர் நினைச்சவர்களெல்லாம் எங்கயெண்டு பார்த்தீரே ….. உம்மைப்பற்றி தெரியும் என்றதாலதான் இவ்வளவு உதவியையும் செய்கிறன். ‘நான்தான் இவ்வளவும் செய்தனான் என்பதை ஆருக்கும் சொல்லிப்பொடாதேயும் ‘ என்று கூறி ரெயிலேற்றி விட்ட சோகக் கதையை சொல்லி முடித்தான் சீலன்.
தொடரும் ………..
பகுதி 34 எழுதுபவர் திரு.ஜெயராம சர்மா அவர்கள்,அவுஸ்திரேலியா
விழுதல் என்பது எழுகையே…
பகுதி 32
எழுதியவர் இணுவையூர் சக்திதாசன்,டென்மார்க்
அறிமுகம்
இணுவையூர் சக்திதாசன் டென்மார்க்
புலம்பெயர் படைப்பாளிகளில் ஒருவர் இலங்கையில் யாழ் தாவடியி பிறந்த இவர் இணுவிலை வசிப்பிடமாக கொண்டவர் கனகசபாபதி சக்திதாசன்.
கடந்த 25 வருடங்களா புலம்பெயர்ந்து டென்மார்க்கில் வாழ்ந்து வருகிறார்.
கொக்குவில் மேற்கு உஉவஅ தமிழ் கலவன்இ கொக்குவில் இந்துக்கல்லூரிஇ கொக்குவில் தொழில் நுட்பக்கல்லூரி ஆகியவற்றின் பழய மாணவரான இவர் தமிழில் அதிக ஆர்வம் கொண்டு பட்டிமன்றம் கருத்தரங்கம் கவியரங்கம் ஆகியவற்றில் அதிக ஈடுபாடு உடையவராக இருக்கிறார்.
இவர் புலம்பெயர்விற்கு பிறகு புதுக்கவிதையிலே அதிக ஈடுபாடு கொண்டவராக டென்மார்கில் பல மேடைகளில் தனது குரல்வளத்தால் இரசிகர்களை கவர்ந்து கொண்டவர்.
டென்மார்க்கில் தமிழ்த்தாய் நாடகமன்றம் ஒன்றின் அமைப்பாளராக இருந்து 24 வருடங்களாக பலவிதமான நாடகங்களை மேடையேற்றிக்கொண்டிருப்பவர். தனிநடிப்பில் தொடங்கி .. 25 நடிகர்கர்கள் வரை இவரது நாடக மன்றத்தில் நடித்துக்கொண்டிருக்கின்றார்கள் வருடத்துக்கு குறைந்தது 2 நாடகங்களாவது இவரது நெறியாழ்கையில் மேடையேறும்.
40 நாடகங்களுக்கு மேல் இவரது நெறியாழ்கையில் மேடையேறியிருக்கிறது. நிகழ்ச்சி தொகுப்பாளராகவும் டென்மார்கில் பல மேடைகளில் கடந்த 24 வருடங்களாக பணியாற்றிக்கொண்டிருக்கின்றார்.
ஐரோப்பிய தமிழ் வானொலி தொலைக்காட்சி பலவற்றில் இவரது கவிதைகள் இடம்பெற்றிருக்கின்றது. தொலைக்காட்சி நாடகங்கள் ஒரு சிலவவற்றில் நடித்திருக்கிறார் ... டென்மார்கில் தயாரிக்கப்பட்ட முழு நிளத்திரைப்படம் மன்னிப்பாயா என்ற திரைப்படத்தில் நகைச்சுவை நடிகராக இவர் நடித்திருக்கிருக்கிறார்.
இவரது கவிதைகள் பல சஞ்சிகைகள் பத்திரிகைகள் இணைய சஞ்சிகைகள் பலவற்றில் வெளியாகிக்கொண்டிருக்கிறது.
நெஞ்ச நெருடல் இ காற்றை கானமாக்கிய புல்லாங்குழல்இ ஒர் அகதியின் கைரேகை ஆகிய இவரது 3 கவிதைத்தொகுதிகள் புத்தகமாக வெளிவந்திருக்கின்றன
இதுதவிர ´ கவிச்சாறல்;; ´ இவரது குரலில் கவிதைகள் இறுவெட்டாக வந்திருக்கிறது.
10 பாடல்கள் அடங்கிய இசைத்தட்டு இவரது பாடல்வரிக்கு தென்னிந்திய திரைப்படப் பாடகர் மாணிக்கவினாயகம் மற்றும் சீர்காழி சிவசிதம்பரம். ஆகியோருடன் மற்ரும் பலரது குரலில் பாரதிமோகன் இசையில் வெளியாகியிருக்கிறது. இலக்கியத்துறையில் பன்முக ஆற்றல் கொண்டவராக இருந்தாலும்
டென்மார்கில் கொல்பெக் என்னும் நகரினில் வாழ்ந்து கொண்டிருக்கிறார் 1969 ம் ஆண்டு பிறந்த இவர் டென்மார்க்கில் வாடகை கார் ஓட்டுனராக பல வருடங்கள் பணியாற்றி விட்டு தற்போது ஒரு சிறிய வியாபார கடை ளரடிநச அயசமநன ஒன்றை நடாத்திக்கொண்டிருக்கிறார் .
தகவல் தொகுப்பு
பண்ணாகம் திரு.இக.கிருட்ணமூர்த்தி
திரு.எலையா முருகதாசன்
------------------------------------------------
கதை தொடர்கிறது
ஆர்ப்பாட்டமில்லாத மார்கழிமாத .. ’ காலைப்பொழுதொன்று,’ ஐரோப்பாவுக்கே உரிய மிடுக்கோடு விடிந்திருந்தது.’ பட்சிகளின் ரீங்காரமில்லை…. தென்றலின் சங்கீதமில்லை….. கதிரவனின் ஆர்ப்பரிப்;பில்லை ….
காலை 8 மணி …….
இலைகளையெல்லாம் உதிர்த்து விட்டு வெறிச்சோடிப் போயிருந்த…. மரங்களை பாரத்;தபடி …… ஐன்னல் கம்பியை பிடித்தபடி ’மாரிமுத்து’’ அவனது மனமும் வெறிச்சோடிப் போயிருந்தது.!’
” சன் கோலம் அகதிமுகாம் ”
’டென்மார்க்கிற்கு அகதித்தஞ்சம் கோரி வருகின்ற வெளிநாட்டவர்கள் அனைவரும் முதற்கட்ட விசாரணை முடியும்வரை …… தடுத்து வைக்குமிடம்!’ ”பாதுகாப்பு அதிகாரிகள், அரச அலுவலர்கள், கிறிமினல் மொழிபெயப்பாளர்களைத் தவிர ….. யாரும் உள்ளே போக முடியாது.”
’அவனும், அவனுடனிருந்த சிலரும் .. காவலதிகாரி அழைத்த பக்கமாக இன்னொரு மண்டபத்துக்கு அழைத்து செல்லப்பட்ட போது……’ கம்பி வேலிக்கு வெளியே நின்ற பலரும் …. தத்தமது உறவினர்களை பார்பதற்காக… நின்றுகொண்டிருந்தனர்.!
ஆனால் ’தமிழர்கள் ஒன்றிரண்டு பேர் மட்டும் …….. நிற்பதை ’ மாரிமுத்து கடைக்கண்ணால் அவதானிக்க தவறவில்லை அவனோடு தஞ்சமடைந்திருந்த ஒரு தமிழ் பெண்ணின் உறவினர்களாக இருக்கலாமென்று …… தனக்குள்ளே எண்ணிக்கொண்டான். ’தன்னைத் தேடி இஞ்சே யாரும் வந்திருக்கமாட்டார்கள் என்பது அவனது நம்பிக்கை.’
” பல நாட்களாக சேவெடுக்காமல் தாடி வளர்த்த முகம், முடி வெட்டாத தலை கசங்கிய உடை .. பாரக்;கப் பரதேசிக் கோலத்தில்தான் அவனிருந்தான்.
சில்லென்ற குளிர்காற்றுடன் …. அமைதியான சூழல், ’வெண்ணிற ஆடை பூண்டு .பவுடர் பூசி ... வெளிக்கிடுத்தி விட்ட பொம்மை போல … வானமாய் கதிர்களை ஆங்காங்கே …. தெறிக்க வைக்கும் சூரியன்…. ’இந்த அழகான ரம்மியக் காட்சிகளைக் கூட ரசிக்கமுடியாத மனதுடன் அவனிருந்தான்.’
”அண்ணா நீங்களும் தமிழரா .? எங்க இருந்து வாறியள்…. ? கலியாணம் கட்டியிட்டீங்களா.. ? கட்டாட்டியும் கட்டியாச்சுது என்று சொல்லுங்கோ இஞ்சை கூப்பிட்டு தருவாங்கள் ! ’கம்பி வேலிக்கு அங்கல நின்ற ஒரு பெண் இலவச ஆலோசனைகளை எறிஞ்சு கொண்டு நின்றாள்.’ ‘ எதையும் காதில் வாங்கிக்கொள்கின்ற நிலையில் அவனில்லை’ ”
’அவன் பாகிஸ்தானோ இல்லை எந்த நாடோ ….. உனக்கேன் தேவையில்லாத வேலை …. ’ஒரு ஆணின் குரலும் பின்னால் தொடர்ந்தது ….. பல நாட்டவர்களோடு இவனும் வரவேற்பு கூடத்தில் அமரவைக்கப்பட்டான். ஓவ்வொருவராக ஒவ்வொரு அதிகாரிகள் வந்து அவர்களது பெயர்களை கூப்பிட்டதும், அவர்கள் கூப்பிடுகின்ற அறைகளுக்கு அவர்களின் பின்னால் சென்றுகொண்டிருந்தனர்.
”விழுதல் என்பது எழுவதுக்கு தானென்றால்
இறைவ என்னை மட்டுமேன்
தொடந்து வீழ்த்திக்கொண்டிருக்கிறாய்
.பழுதலில்லாத வாழ்வை கேட்டதற்காக
இன்னும் எத்தனை நாட்டில்தான்
என்னை விழுத்தப்போகிறாய் .. ? ”
”மா..ரி..மு..த் ..து சி..வ..க்..கொ..ழு..ந்…து.” என்று தடக்கி தடக்கி அதிகாரி பெயரை வாசித்ததும் இவனெழுந்து போகாததால் …. அதிகாரி கிட்ட வந்து இவனை தட்டி மீண்டும் ” மா..ரி..மு..த் ..து சி..வ..க்..கொ..ழு..ந்…து.” என்ற போதுதான் சுய நினைவு வந்தவனாய் எழும்பி அவன் பின்னால் ……. சென்றான் ! ” அறையின் உள்ளே இன்னுமொரு அதிகாரி ….. இவனையொத்த நிறத்தில் இன்னுமொருவர் ’ மொழிபெயர்ப்பாளர் … இருந்தார்கள் ”
டேனிசில் வணக்கம் சொல்லி ….அதிகாரி வரவேற்க .. அதை தமிழில் மொழி பெயர்த்து மொழிபெயர்ப்பாளர் சொல்ல … தொடர்ந்த விசாரணையில் முதற்கட்ட விசாரணை முடிந்து முகாமுக்கு கொண்டு வந்து விடும் வரையில் மொழிபெயப்பாளரும் கூட நின்றார்.
” மொழிபெயர்ப்பாளர் மாரிமுத்துவையே தொடர்ந்து பார்த்துக்கொண்டே இருந்தாலும், மாரிமுத்து யாரையும் நேரே பார்க்கின்ற மனநிலையில் இல்லாமல் இருந்தான். ஏற்கனவே, விசாரனையில் இவனை உளவியல் ஆலோசகரிடம் காட்ட வேண்டுமென்றும் முடிவெடுக்கப்பட்டு, இருந்ததால் மீண்டும் நாளை சந்திப்பதாக கூறி அதிகாரியுடன் மொழிபெயப்பாளரும் விடை பெற்றுக்கொள்கின்றார். இவனுக்கு கொடுக்கப்பட்ட அறையில் நாலு கட்டில்கள் இருந்தாலும் தற்போது வேறு யாருமில்லாதது கொஞ்சம் நின்மதியாக இருந்தது.
”நேரம் மாலை ஆறு மணியாகிவிட்டதால் சாப்பாடு … ரீ ஏதாவது எடுப்பதாக இருந்தால் ஆறு மணியிலிருந்து ஏழு மணிவரைதான் கன்ரின் திறந்திருக்கும்.
பின்பு நாளை காலை ஆறு மணிக்குத்தான் திறக்குமென்று …… ’அதிகாரிகள் சொல்லிவிட்டிருந்ததால்.’அவனுக்கு பசியில்லாமல் இருந்தாலும் எடுத்துக்கொண்டு வந்து வைப்பம் என்று’ அவனுக்கு கொடுத்த கோப்பையையும் கப்பையும் எடுத்துக்கொண்டு கதவைத்திறந்து …. ’கன்ரின் நோக்கி விரைந்தான்.’….
’சீலன் என்று சத்தம் கேட்டு திடுக்கிட்டு திரும்பி பார்த்தவன்’ மீண்டும் தன்னை சுதாரித்துககோண்டு நடக்கத்தொடங்கினான் ….
”மீண்டும் மீண்டும் சீலன் ….. டேய் சீலன் ….. என்று தன்னை ஒருவன் துரத்தி வர நிற்காமல் நடந்தவனை ஓடிவந்து மறித்தவுடனே நிமிர்ந்து பார்த்தபோதுதான். காலை தனக்கு வந்த மொழிபெயர்ப்பாளர் நின்றுகொண்டிருந்ததை கண்டு திடுக்கிட்டுப்போனான். ”
ஆரயோவெண்டு நினைச்சு என்னைக் கூப்பிட்டிட்டியள் போல…’ என்று முடிக்கமுன்னம்
”டேய் உண்மையை சொல்லு என்னை தெரியேல்லையா ? உன்ர பத்மகலா எங்கயடா இருக்கிறாள் …. ? கலியாணம் கட்டிட்டியேடா ..? நான் சாந்தனடா ….. உன்னோட ஒன்றா …. ஒரே மேசையில… அருகருகாய் இருந்த சாந்தனடா இன்னும் என்னை நம்பேல்லையடா …? ”
அப்பவே நான் உன்னை அடையாளம் பிடிச்சிட்டன். அங்க நான் மொழிபெயப்பாளராக …. இருந்தபடியால் என்னையே கட்டுப்படுத்திகொண்டிருந்தன் ….. அதாலதான் வேலை முடிஞ்சும் வீட்டை போகமல் உனக்காக காத்துக்கொண்டிருந்தனான்.!
”இப்ப அதிகாரிகள் எல்லாரும் போய்விட்டினம்……. நாளைக்கும் அதிகாரிகளோடதான் வரவேணும் உன்னோட தனியக் கதைக்க முடியாது என்று தான் இஞ்ச நின்டனான”;.
”அதுக்கு பிறகுதான் சீலன் விக்கிவிக்கி அழத்தொடங்கிவிட்டான்……”
”அழாத சீலன் அழாத ….. ஊரில நீ பட்ட கஸ்ரத்தை விட இஞ்சை ஒன்றும் உயிர் போறளவுக்கு பிரச்சனையிலலை ”
”என்ன கோலமடாப்பா ! என்ன சிமாட்டான ஆள் நீ ! நானே உன்னைப்பார்த்து பொறாமைப்பட்டனான். அவ்வளவு அழகானவன் ஏனிப்படி அலங்கோலமா …..” ?
”நான்தான் நாட்டுப்பிரச்சனையென்று அப்பவே பாதியில் படிப்பை விட்டிட்டு வந்திட்டன் நீயும் பத்மகலாவும் இப்ப டொக்டராக இருப்பியள் என்று நினைச்சுக்கொண்டிருக்க ….”
”என்;னடா நடந்தது உனக்கு….. ”?
”நான் சுவிசுக்கு வந்து, அங்கே அக்சற்ப்பும் கிடைச்சு, ஒரு மக்டோனாசில வேலையும் கிடைச்சது………” சொல்லத் தொடங்கினான் சீலன். …
” தன் வாழ்வின் கடந்தகால நினைவுகள் மனத்திரையில் ஒன்றன்பின் ஒன்றாக படமாக வந்து விழ மனசு அசை போடத்தொடங்கியது.” பட்ட கஸ்ரங்கள், அவமானங்கள், நம்பிக்கைத்துரோகங்கள், நன்றிமறப்புக்கள்…. ஆதனால் அவன் எதிர்கொண்ட போராட்டங்கள்.”
”சொந்தம், பந்தம், பாசம், காதல், பின்னர் இவையெல்லாம் தாண்டி .., கண்டம் தாண்டிய பிரிவு, இப்ப .. தனிமை ஏக்கம்! என, ஒன்றன் பின் ஒன்றாக நடந்தவற்றையெல்லாம் சொல்லத் தொடங்கினான்.
முகாமில் இருக்கும் போதே வேலை கிடைச்சதில் சந்தோசம்!
வழமைபோல அன்றும் வேளையோடு படுக்கைக்கு போனாலும் பாதியில் நித்திரை குழம்பிவிட்டது. நினைவலைகளில் முழ்கினான் …. வந்த கடன் தங்கச்சியின்ர கலியாணம் எல்லாம் மிச்சம்பிடிச்சு வேளைக்கு செய்து வைக்க வேணும் அதற்குப்பிறகுதான் தன்ர வாழ்க்கை என்று ஒன்றன்பின் ஒன்றாக … நினைவலைகளில் ….இருக்க, மணிக்கூடின் மணிச் சத்தம் கேட்டு வேலை நேரத்தை ஞாபகப்படுத்துவும் சரியாக இருந்தது!”
”காலைக் கடன்களை முடித்துக் கொண்டு தேத்தண்ணியும் போட்டு எடுத்துக்; கொண்டு வந்து சோபாவில் இருக்க முன்னம் மணிக்கூட்டை பார்த்ததும் தாமதம் தேத்தண்ணியையும் குடிக்காமல் படிகளில் இறங்கி ஓடினான்.”
;ஐந்து நிமிடம் நடைதூரம்; ”பஸ்தரிப்பிடம்”இப்பவே நடக்க வெளிக்கிட்டால் தான் ”பஸ்” வருவதற்கு முன்னம்; பஸ்தரிப்பிடத்தைச் சென்றடைய முடியும். அவசரமாக இறங்கி வாசல் கதவை திறந்து கொண்டு முகாமைவிட்டு வெளியேற … ”முகாம் ஒப்பிசில் கடமையிலிருந்த அதிகாரி இவனை கூப்பிடுவதை கேட்டு திரும்பி பார்க்க, அதிகாரியே கதவைத்திறந்து வந்துகொண்ருப்பதை கண்டவுடன் அதிகாரியை நோக்கி வணக்கம் சொல்லிக்கொண்டு கை கொடுத்தான்.!
”எங்கே அதிகாலையில் போகின்றாய் ? வேலைக்கா ! என்று அவனே விடையையும் சொல்ல, ”ஆம்” என்று தலையாட்டி விட்டு அமைதியாக நின்றான் .”
எவ்வளவுதான் நல்லாப்பழகினாலும் வெள்ளைக்காறர்களின் சுபாவம் வெட்டொன்று துண்டொன்று என்று பட்டென்று முடிவுகளை சொல்லி விடுவார்கள.; இப்ப அதிகாரி சொல்லப் பொகிற முடிவும் இவனுக்கு அதிர்ச்சியாகத்தான் இருக்கப்போகிறது. ஆமாம்! நீ வேலை செய்ய தொடங்கிவிட்டபடியால் இனிமேல் இங்கே தங்க முடியாது. தனியாக வீடு எடுத்துக்கொண்டு போகும்படி அதிகாரி சொன்னதுடன் அகதி முகாமைவிட்டுப் போவதற்கு ஒரு கிழமை அவகாசம் கொடுத்தார்.
”உலகமே இருண்டது போன்ற சூனியமாக இருந்தது அவனுக்கு!”
எதுவுமே பேசாமல் தலையாட்டிவிட்டு, பஸ்ராண்டை நோக்கி நடக்க தொடங்கினாலும் அவனால் வேகமாக நடக்க முடியவில்லை … ”அதற்கு இரண்டு காரணங்கள் அதில,; ஒன்று பஸ் போயிருக்கும்! இரண்டாவது ’அவனது மனமும் சோர்ந்து விட்டது’.”
”அப்போது தான் அம்மாவின் அருமை தெரிஞ்சது.” சுடச்சுட ஆவி பறக்க …. அம்மா தரும் தேத்தண்ணி சர்க்கரையுடன் நக்கி,நக்கி குடிச்சாலும் இப்பவும் நெஞ்சுக்குள்ள இனிக்குது. ”அந்த நினைப்புத்தான் இப்பவும் தெம்பாக நடக்க உதவுகிறது.”
அடுத்த பஸ் வர இன்னும் அரை மணித்தியாலம் காத்திருக்க வேண்டும் என்ற சலிப்பு ஒரு புறமும் வேலைக்கு அரை மணித்தியாலம் பிந்தப்போகிறேனே….. என்ற படபடப்பு மறுபுறமுமாய்…. பஸ்ரான்டில் இருந்த சீலனுக்கு ”வீடெடுக்கிற பிரச்சனை பெரும் தலையிடியாய் இருந்தது.” கேட்கமுன்னம் ’தவத்தார்’ தன்னோடு வந்திருக்க சொல்லுவார்தான் ஆனாலும், ….. முரளி அங்கே இருப்பதினால் இவனுக்கு அங்கே இருப்பது விருப்பமில்லை.!”
’லப்டப்’துலைந்ததினால் ஒரு வாரமாக கலாவுடனும் கதைக்கவில்லை. என்ற கவலை ஒருபுறம் தங்கையின் கால் முறிவு மறுபுறம் ஒன்றன் பின் ஒன்றாக …..சிந்தித்துக்கொண்டிருந்ததில் அரை மணித்தியாலம் போனதே தெரியவில்லை ”பஸ் வந்துவிட்டது.!”
”ஓடிச்சென்று பஸ்சில் ஏறியமர்ந்து கொண்டு யாருமில்லாத பின் சீட்டில் உக்கார்ந்து கண்களை இறுக்க மூடிக்கொண்டு ……”பட்டாம் பூச்சியைப்போல ’மூளை ஓரிடத்தில் நிக்காமல் அங்குமிங்கும் சிறகடித்து பறக்கிறது”
அடுத்த பஸ் தரிப்பிடத்தில், பஸ் நிக்க, தமிழில் யாரோ கதைப்பது கேட்டு, விழித்து கொள்ள ”; ரெலிபோன் கதைத்தபடி ஒருவர் ஏறி ... உள்ளே வந்துகொண்டிருந்தார்!
”வாட்ட சாட்டமான ஒரு இளைஞன் ”
வைத்த கண் வாங்காமல் ‘இவன்’ அவனையே பார்த்துக்கொண்டிருக்க, ’அவனும், ஏறியவுடன் பின்னிருக்கையை நோக்கியே வந்து இவனருகில் இருந்து கொண்டாலும், வேற்றினத்தவர்கள் இருக்கின்றார்களே… என்ற கவலை சிறிது கூட இல்லாமல் சத்தமாக தமிழில் கதைத்துக்கொண்டே இருந்தான்.’
தொடரும் பகுதி -33