நடுகைக்காரி 9
ஏலையா க.முருகதாசன்
ஞானத்தின் பெற்றோருக்கு பிள்ளைகளின் குணாம்சங்கள் நன்றாகவே தெரியும்.அவர்களில் கடைசிப் பிள்ளையான ஞானசெல்வத்தின் குணத்தை யாராலுமே இவன் இதுதான் என்று எடை போட முடியாது.
மதகில் இருந்து அரட்டை அடிக்கும் போது வாய்விட்டுப் பலமாகச் சிரிக்கும் ஞானத்தை சீனியம்மானின் தேத்தண்ணிக் கடையில் தோசையும் சுண்டலும் நன்னாரித் தேத்தண்ணியும் குடிக்கும் போது பார்க்க முடியாது.
நூல்களையும், சஞ்சிகைகளையும் பத்திரிகைகளையும் வாசிப்பதில் அவன் காட்டும் ஈடுபாடும் ஆர்வமும் அவனுடைய நண்பர்கள் பலரை வாசகர்களாக மாற்றியிருக்கின்றது.
ஆங்கில மொழியிலேயே முழுப் பாடங்களையும் படித்து, அவனின் தந்தை வயதிலிருக்கும் ஆசிரியர்கள் மற்றும் அரசாங்கப் பணிகளில் இருப்போரால்கூட அவனைப் போல ஆங்கிலத்தை அழகாக உச்சரிக்கவே முடியாது.
சீனியம்மானின் தேத்தண்ணிக் கடையில் வலது கையால் சாப்பிட்டுக் கொண்டே இடது கையால் டெயிலிநியூஸ் பத்திரிகைச் செய்திகளை வாசித்துவிட்டு அதன் விளக்கத்தைச் சீனியம்மானுக்குச் சொல்லுவான்.
அவன் தான் மட்டுமல்ல தனக்கிருக்கும் மூன்று நண்பர்களும் ஆங்கிலம் தெரிந்தவர்களாக இருக்க வேண்டும் என்பதற்காக கிழமைக்கு ஒருநாள் தனது வீட்டில் வைத்து ஆங்கிலம் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்தான்.
அவனோடு அவனுடைய நண்பர்கள் ஒன்றாக இருந்து தேத்தண்ணிக் கடைகளில் தேத்தண்ணி குடிக்கும் போது அவர்களுடன் ஆங்கிலத்தில் உரையாடி காரசாரமாக விவதிப்பான்.
நீங்கள் பேசும் ஆங்கிலம் சரியா பிழையா இலக்கணச் சுத்தமாக இருக்கின்றதா இல்லையா என்பதைவிட கூச்சப்படாமலும் பயப்படாமலும் மற்றவர்கள் என்ன சொல்வார்களோ என்ற தயக்கமோ தாழ்வு மனப்பான்மையோ இருக்கவே கூடாதென்பான்.அவன் கொடுத்த உற்சாகமான வார்த்தைகளால் அவனுடைய நண்பர்களையும் ஆங்கிலத்தில் பேச வைத்தான்.
நாங்கள் விலாசத்திற்காக ஆங்கிலத்தில் கதைக்கவில்லை.அந்த மொழி எமக்குப் பரிச்சயமாக வேண்டும் என்பதற்காகவே கதைக்கிறோம் என்பான்.
அவனுக்குச் சிங்களமும் தெரிந்திருக்க வேண்டுமென்று ஆசைப்பட்ட போதுதான் அம்பனைச் சந்தியடியில் உள்ள அம்பனை ரியூட்டோரியில் சிங்களம் தெரிந்த பத்மசேகரம் என்பவர் சிங்களம் சொல்லிக் கொடுக்கிறார் என்பது தெரிய வர அவரிடம் சிங்களம் படிக்கத் தொடங்கினான்.
தெல்லிப்பழைக் கிராமசபையில் வேலை செய்கின்ற சிலரும் பத்மசேகரம் அவர்களிடம் சிங்களம் படித்தனர்.பத்மசேகரம் இராணுவத்தில் வேலை செய்து அதிலிருந்து ஓய்வு பெற்று பிறகு யாழ்ப்பாணத்தில் உள்ள கல்விக் கந்தோரில் வேலை செய்து கொண்டிருந்தவர்.இப்பாழுது அம்பனை ரியூட்டோரியலில் சிங்களம் படிப்பித்துக் கொண்டிருந்தார்.
அவரிடந்தான் ஞானம் சிங்களம் படிக்கத் தொடங்கினான்.சிங்களத்தைப் பேச வேண்டுமென்ற ஆவலில் பத்மசேகரத்துடன் அவள் சிங்களத்தில் கதைக்கத் தொடங்கியமை அவருக்கே ஆச்சரியமாகவிருந்தது.
நாளடைவில் சிங்களத்தைச் சிங்களவர் போல சரளமாக பேசியதை அவனுடைய நண்பர்கள் ஆச்சிரியத்துடன் பார்த்தனர்.
தெல்லிப்பழைச் சந்தியிலிருந்து வடக்காகப் போகும் காங்Nஎகசன்துறை வீதியில் யூனியன் கல்லூரிக்கு எதிர்ப்பக்கமான கிழக்குப் பக்கத்தில் இருக்கும் ஆனந்தா பேக்கறி ஒரு சிங்களவரால் நடத்தப்பட்டு வந்தது.அவர் பாணந்துறையைச் சேர்ந்தவர்.
சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம் என்பது சுத்தமான செந்தமிழைப் பேச வேண்டுமெனில் தமிழின் வசனக் கோர்வைகளில் காணப்படும் எழுத்துக்களை அழுத்த வேண்டிய இடத்தில் அழுத்தியும் மென்மைத்தன்மையான இடத்தில் மென்மையாகவும் குறில் நெடில் என தமிழ் மொழியைப் பேசும் போதுதான் அது செந்தமிழாக நிலைத்து நிற்கும் என்பதை பலமுறை நண்பர்களிடம் சொல்லியிருக்கிறான்.
தமிழுக்கு மட்டுமல்ல எல்லா மொழிக்கும் நாப்பழக்கம் மிக முக்கியம் என்பதை உணர்ந்தவன் ஞானம்.மொழிகளின் கம்பீரமே உச்சரிப்பில்தான் உண்டு என்பதும் அவனுக்குத் தெரியும்.
ஆனந்தா பேக்கறியின் முதலாளி உட்பட அங்கு வேலை செய்பவர்கள் அனைவருக்குமே தமிழ் நன்றாகக் கதைக்கத் தெரியும்.அந்த பேக்கறிக்கு கேக் பிஸ்கட் வாங்கவென்று அப்பப்ப போய்வரும் ஞானம் சிங்களம் படிக்கத் தொடங்கியதும், அந்த பேக்கறிக்கு போகும் போதெல்லாம் சிங்களத்தில் அவர்களுடன் கதைக்கத் தொடங்கினான்.
ஞானம் சிங்களத்தில் கதைப்பதைப் பார்த்த முதலாளியும் அங்கு வேலை செய்பவர்களும் மகிழ்ச்சியடைந்தார்கள்.உச்சரிப்புகளை திருத்திக் கதைக்கச் சொல்லிக் கொடுத்தார்கள்.பேக்கறியில் விற்பனைக்காக வைத்திருக்கும் பொருட்களைச் சிங்களத்தில் எப்படிச் சொல்வது என்பதை அவர்களிடமிருந்து தெரிந்து கொண்ட ஞானம்,கிழமைக்கு ஒருமுறை மட்டும் சிங்களம் படித்தால் போதாது என்றுணர்ந்தவன் பேக்கறி முதலாளியிடம்' நான் சிங்களத்தைச் சரியாக உச்சரித்து கதைக்க ஆசைப்படுகிறன் கிழமையிலை இரண்டு நாளைக்குச் சொல்லித் தருவீர்களா என்று கேட்ட போது, அவர் மறு பேச்சின்றி நிச்சயமாகச் சொல்லித் தருகிறன் பின்னேரத்திலை வாருங்கள், பேக்கறியின்ரை பின்பக்கத்திலை ஒரு அறைமாதிரி இடம் இருக்கிறது அங்கையிருந்து சொல்லித் தாறன் என்று சொல்லியிருந்தார்.
அத்துடன் அவர் நில்லாது பாணந்துறையிலிருக்கும் மனைவிக்கு தெல்லிப்பழைக்கு வரும்போது சிங்களப் பாடப்புத்தகங்களையும் வாங்கிவருமாறு கடிதம் எழுதி அனுப்பினார்.
பேக்கறி முதலாளியின் மனைவி வருடத்தில் நான்கைந்து முறையாவது கணவனிடம் வந்து போகிறவர்.சிங்களம் படிக்க வேண்டுமென்ற ஆர்வப்படுகிற ஞானத்திற்கு பேக்கறி முதலாளியும்; ஆர்வமாகச் சொல்லிக் கொடுக்கிறார்.
ஞானம் ஆனந்தா பேக்கறி முதலாளியிடம் சிங்களம் படிக்கத் தொடங்கிய அடுத்த கிழமையே அவரின் மனைவி பாணந்துறையிலிருந்து வந்திருந்தார்.வரும் போது சிங்கள மொழிப் பாடப்புத்தகங்களையும் வாங்கிக் கொண்டுவர அதை ஞானத்திடம் அவர் கொடுத்து பாடசாலையில் படிப்பது போன்று இலக்கணச் சுத்தமாக படிப்பிக்க விரும்பினார்.
ஆனந்தா பேக்கறி முதலாளிக்கு இரண்டு அழகான பொம்பிளைப் பிள்ளைகள் இருந்தார்கள்.தாயுடன் அவர்களும் வந்திருந்தார்கள்.பேக்கறி முதலாளி அவரின் மனைவி அவர்களின் இரண்டு பொம்பிளைப் பிள்ளைகளுடன் பேக்கறியில் காசு வாங்கும் கவுண்டரின் உள் பக்கத்தில் நின்ற போது ஞானம் சிங்களம் படிக்கவென வர முதலாளி இந்தத் தம்பிதான் சிங்களம் படிக்க வருகிறவர் என்று சிங்களத்தில் மனைவிக்கும் பிள்ளைகளுக்கும் சொல்ல மனைவியும் பிள்ளைகளும் புன்னகைக்கிறார்கள்.
பேக்கறி முதலாளி மனைவிக்கும் பிள்ளைகளுக்கும் சிங்களத்தில் இவருக்குச் சிங்களத்தைச் சொல்லிக் கொடுக்கங்கள் என்று சொல்ல ஞானத்தை அழைத்துக் கொண்டு பேக்கறி முதலாளியின் மனைவியும் பிள்ளைகளும் உள்ளே செல்கிறார்கள்.
பேக்கறி முதலாளிக்குத் தமிழ் தெரியும்.அவரின் மனைவிக்கோ பிள்ளைகளுக்கோ தமிழ் தெரியாது ஆனால் பேக்கறி முதலாளியின் மனைவிக்கும் பிள்ளைகளுக்கும் நன்றாகவே ஆங்கிலத்தில் கதைக்கத் தெரிந்ததால் அது ஞானத்திற்கு சுலபமாகப் போய்விட்டது.
தாயாரும் இரண்டாவது மகளும் அறையின் ஒரு மூலையில் உட்கார்ந்து ஏதோ கதை;துக் கொண்டிருக்க மூத்த மகள் ஆங்கிலத்தில் விளங்கப்படுத்திச் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்தாள்.அவள் ஞானத்தை வைத்த கண் வாங்காமல் பார்ப்பதும் சொல்லிக் கொடுப்பதுமாக இருந்தாள்.
ஞானத்தின் ஆங்கில உச்சரிப்பு அவளை ஆச்சரிப்படுத்தியது.எப்படி உங்களாலை இப்படிக் கதைக்க முடிகிறது என்று அவள் கேட்க, உங்களுக்குச் சிங்கள மொழியின் உச்சரிப்புக்கு ஏற்றவாறு உங்களுடைய நாக்குப் பழகிவிட்டது.அது போலத்தான் எனது நாக்கும் தமிழ்மொழி உச்சரிப்புக்குத் தக்கதாக பழகிவிட்டது.
அதனால் ஆங்கிலம் பேசும் போது உங்களுக்கு உங்கள் மொழி தொனியும் எனக்கு எங்களுடைய மொழி தொனியும் வரப் பார்க்கின்றது.நாங்கள் அதைப் புறக்கணித்துவிட்டு ஆங்கிலேயரிடம் எப்படி உச்சரிப்புத் தொனி வருகின்றதோ அப்படி உச்சரிக்க வேண்டுமென்கிறான்.
பேக்கறி முதலாளியின் மகள் அவன் சொன்ன விளக்கத்தை இரசித்துக் கேட்டவள்,நாங்கள் ஒரு மாதம் வரையும் இங்கைதான் நிற்பம் நீங்கள் பின்னேரத்திலை ஒவ்வொரு நாளும் வரலாம், நான் சொல்லித்தாறன் என்கிறாள்.மொழிகளைப் படிக்க வேண்டுமென்ற அவனிடம் காணப்பட்ட தீராத ஆர்வம், நூல்கள் பத்திரிகைகள் சஞ்சிகைகளை வாசித்தல் ஆகியவை அவனை ஒரு தர்க்கவாதியாதகவும் சிந்தனைவாதியாகவும் வளர்த்துவிட்டது.
ஞானத்திடம் காணப்பட்ட புத்திசாலித்தனத்தை அறிந்த அவனின் தாயாரின் மனதின் ஓர் மூலையில் இவன் பார்வதியில் விருப்பப்படுகிறானோ என ஊகிப்பதும், அப்படி இருக்காது அவன் அப்படிச் செய்ய மாட்டான் என்று இரண்டு மனநிலைகளுக்கிடையில் தடுமாறி, அது எப்படிச் சரிவரும் அவனுக்கும் அது தெரியுந்தானே என தன்னைத் தானே திருப்திப் படுத்திக் கொண்டாள் தாய்.
பிரைவேட்டாக எஸ்.எஸ்.சிப் பரீட்சை எடுக்கச் சொல்லி பார்வதிக்குச் சொன்னதும் அவன், படிப்பிக்கிறன் என்று அவளுக்குச் சொன்னதும் அவன்,ஆனால் தகப்பனிடம் பார்வதி பரீட்சை எடுப்பதற்கு தன்னை உதவி கேட்டது போலத்தான் அவன் தகப்பனாருக்கு வியூகம் அமைத்து விளங்கப்படுத்தினான்.
காரைநகர் கல்யாண வீட்டுக்குப் போவதைத் தவிர்த்து பார்வதியுடன் முழுநாளையும் கழிக்க வேண்டும் என்பதற்காக, தங்களுடைய தோட்டத்து வெங்காயப் பயிருக்குள் மீண்டும் புற்கள் முளைத்துவிட்டன, அறுகம்புல்லு படரத் தொடங்கினால் வெங்காயத்தை சுற்றி மூடி படரத் தொடங்கிவிடும் என்று தகப்பனுக்குச் சொல்லி நடுகைக்காரிகளைக் கூட்டிக் கொண்டு வந்து பிடுங்கிக்கிறன் என்று சொன்னான்.அதற்குத் தகப்பனும் ஒப்புக் கொண்டுவிட்டார்.
தான் சிங்களம் படிப்பதையோ தெல்லிப்பழை ஆனந்தா பேக்கறி முதலாளியின் மகள் தனக்குச் சிங்களம் சொல்லித் தருவதையோ இதுவரை அவன் பார்வதிக்குச் சொல்லவில்லை.நாளைக்கு சிங்களம் படிக்கும் நாள்.பார்வதி அவனுடன் போவாளா?
ஏன் அவனுடன் பார்வதி போக விரும்பினாள்?
(தொடரும்)
தொடர்கதை.
நடுகைக்காரி 8
ஏலையா க.முருகதாசன்
„தங்களைப் பெரிய சாதிமான்கள் என்று சொல்லிக் கொள்ளும் எங்கடை ஆட்கள் மகாஜனாவில் அனைவரும் படிக்கத் தடையாக இருக்கிறார்கள்,உண்மையில் இது பெரிய கல்வித் துரோகம்'என்று தகப்பன் சொன்னதம் அமைதியாகிறான் ஞானசெல்வம்.
தான் பார்வதிக்கு பாடம் சொல்லிக் கொடுக்கப் போவதை அவன் தாயாரிடம் சொல்லியிருந்தான்.அப்பாவிடம் கதைக்கும்படியம் தாயாரிடம் சொல்லியிருந்தான்.
தாயாரும் தகப்பனிடம் கேட்பார்தான்.ஆனால் தானும் கேட்டால் நல்லதுதான் என்று யோசித்த ஞானசெல்வம் தாயாரிடம் கண்ஜாடையால் கேளம்மா என்பது போல காட்ட தாயாரும் நீ கேள் என கண்ஜாடை காட்ட தான் கதைக்கத் தொடங்க அம்மா எப்படியும் சப்போர்ட் பண்ணுவா என்று எண்ணியவன் „ அப்பா உங்களோடை ஒரு விசயம் கதைக்க வேணும் ,இன்றைக்கு மார்க்கண்டு மாமாவின்ரை தோட்டத்துக்குப் போனனான' என்று அவன் கதையைத் தொடங்க,'நீ ஏன் அங்கை போனனி „ என்று தகப்பன் கேட்க,'சும்மாதான் போனனான்' என்றவன் தகப்பன் எதுவும் கேள்வி கேட்காமலிருப்பதற்காக' அங்கையப்பா நாலு நடுகைக்காரிகள் வெங்காயத்துக்குள்ளை புல்லுப் பிடுங்கிக் கொண்டு நின்றினம்'.
அதிலை ஒரு பிள்ளை பதுசாயிருந்தா, நான் மார்க்கண்டு மாமாவோடை கதைச்சுப் போட்டு ஆடுகால் மரத்தோடை சாத்தியிருந்த சைக்கிளை எடுக்கப் போகேக்கிலை தண்ணி குடிக்க கிணத்தடிக்குப் போன அந்தப் பிள்ளை என்ரை சைக்கிள் காண்டிலை செருகியிருந்த டெயிலி நியூஸ் பேப்பரை எடுத்து வாசித்துக் கொண்டிருந்தா, அவ என்ன வாசிக்கிறா என்று அறிய நான் கிட்டப் போய் கேட்டன் „இங்கிலீஸ் பேப்பர் படிப்பியளா என்றவுடன்,பேப்பரின் முன்பக்கத்தில் இருந்த செய்திகளின் தலையங்கத்தை வாசித்தது மட்டுமல்ல செய்தியை வாசித்துவிட்டு அதை எனக்கு தமிழில் மொழி பெயர்த்தும் சொன்னா'.
„உச்சரிப்பும் தங்குதடையின்றி வாசித்த விதமும் எனக்குச் சொக்டாயிருந்துது.அப்ப நான் கேட்டன் எங்கை படிச்சனீங்கள் என்று, தான் யூனியன் கொலிஜ்ஜிலை படிச்சது என்றும், இங்கிலீசும் இன்னும் இரண்டு பாடங்களும் சேர்த்து மூன்று பாடங்களிலை மட்டுந்தான் எஸ்.எஸ்சிச் சோதனையில் பாஸ் பண்ணினனான் என்று சொன்ன அந்தப் பிள்ளையைக் கேட்டனப்பா, நீங்கள் இங்கிலீசை தமிழ்ப் பேச்சுத் தொனியில்லாமல் இங்கிலீஸ்காரர் மாதிரி அழகாக உச்சரிக்கிறீர்கள் யாரிட்டை இங்கிலீஸ் படிச்சனீங்கள் என்று கேட்க யூனியன் கொலிஜ் பிரின்சிப்பல் ஐ.பி.துரைரத்தினத்திடந்தான் படிச்சனாம் என்று சொன்ன அந்தப் பிள்ளையிட்டை சொன்னன் பிரைவேட்டாக எஸ்.எஸ்.சி சோதனையை எடுக்கலாந்தானே என்று கேட்க அந்தப் பிள்ளை சொல்லிச்சுது தனக்கும் விருப்பந்தான்.
ஆனால் கணக்குப் பாடந்தான் தனக்குக் கஸ்டமாம் யாராவது ரியூசன் சொல்லித் தந்தால் நல்லது என்று சொன்ன அந்தப் பிள்ளை என்னிடம் கேட்டுது ரியூசன் சொல்லிக் கொடுக்கிறவை யாரையாவது உங்களுக்கு தெரியுமா என்று ,நானே சொல்லித் தாறன் என்று சொல்லிட்டன்.
அவை முன்னேற வேண்டுமப்பா நான் அந்தப் பிள்ளைக்கு ரியூசன் சொல்லிக் குடுக்கப் போறனப்பா, நீங்கள் ஒண்டும் சொல்ல மாட்டியள் என்று தெரியுமப்பா என்றவன் நிறுத்த, மகனைக் கடைக்கண்ணால் பார்த்த தகப்பன் மனைவியைப் பார்த்து மெலிதாகச் சிரிக்கிறார்.
ஞானசெல்வம் தனக்கும் பார்வதிக்கும் ஒட்டுமில்லை உறவுமில்லை என்பது போலவும் ரியூசன் தரச் சொல்லிக் கேட்கிறாள் அவ்வளவுதான் தான் யாரோ அவள் யாரோ என்பதைப் போல மகன் தகப்பனுக்கு விபரித்த அப்பாவித்தனம் கலந்த குரலை தாய் இரசித்து என்ன நடிப்பு நடிக்கிறான் என்று மெதுவாக சிரிக்கிறாள்.
„நீ அங்கை போய் படிப்பிக்கப் போறியோ இல்லாட்டி அந்தப் பிள்ளை இஞ்சை வருமோ' என்று தகப்பன் கேட்க, „எங்கையெண்டாலும் எனக்குப் பிரச்சினையில்லை, அங்கையெண்டால் நல்லது.ஏனென்டால் இஞ்சை நான் அந்தப் பிள்ளைக்குப் படிப்பிச்சுக் கொண்டிருக்க அயலட்டைச் சனம் அதைப் பார்த்திட்டு, அந்தப் பிள்ளை யாரெண்டு தூண்டில் போட்டு மீன் பிடிக்கிற மாதிரி „நீ எங்கை பிள்ளை இருக்கிறனி என்று கேட்க, அந்தப் பிள்ளையும் வஞ்சகமில்லாமல் யூனியன் கொலிஜ்ஜிற்குக் கிட்டவுள்ள சந்தையடி ஒழுங்கையிலை இருக்கிறனான் என்று சொல்ல, அந்த ஒழுங்கையிலை யாற்றை பிள்ளை என்று கேட்க அந்தப் பிள்ளையும் தயங்கித் தயங்கி அப்பா மேசன் வேலைக்குப் போறவர் அதோடை ....என்று அந்தப் பிள்ளை .......'என்று அவன் இழுக்க „ சரி சரி எனக்கு விளங்குது, நீ அங்கை போயே படிப்பி எதற்கும் நீ கவனமாக இரு....என்று தகப்பன் சொல்ல,' அப்பா இஞ்சை அந்தப் பிள்ளைக்கு நான் பாடம் சொல்லிக் குடுத்துக் கொண்டிருக்கேக்கை சில நேரம் மார்க்கண்டு மாமா இஞ்சை வந்து அந்தப் பிள்ளையைக் கண்டிட்டால் இவனென்ன நடுகைக்காரிக்கு பாடம் சொல்லிக் குடுத்துக் கொண்டிருக்கிறான் சுப்பையா வீட்டிலை எல்லாரையும் ஒழுங்குமுறையின்றி கதிரையிலை உட்கார வைச்சிருக்கினம் என்று அவர் கதை பரப்பி விடுவர்'.
„அதுமட்டுமில்லையப்பா அம்பனை வயலிலை தோட்டம் செய்யிறவை அந்தப் பிள்ளை புல்லுப் புடுங்கே;கிலையோ வெங்காயம் நடேக்கிலையோ கண்டிருப்பினம்,அந்தப் பிள்ளை இஞ்சை படிக்கிறதுக்கு வந்து போகேக்கிலை நடுகைக்காரி எங்கடை வீட்டுக்கு ஏன் வந்து போறாவெண்டு அதைப் பார்ப்பதற்கென்றே சும்மா வந்தனான் என்று சொல்லிக் கொண்டு சிலர் வருவினம்'.
„இதைவிட இன்னொரு பெரிய பிரச்சினை இருக்கு.அக்காக்களுக்கும் அண்ணைமாருக்கும் நடுகைக்காரி யார் எவர் என்று தெரிஞ்சால் போதும் நிலத்துக்கும் வானத்துக்கும் குதிப்பினம்.அதாலை அம்மாவுக்கும் உங்களுக்குந்தான் பிரச்சினை.அதாலை அங்கை போய் படிப்பிக்கிறதுதான் எல்லாத்துக்கும் நல்லது „என்று சொல்லி முடிக்கிறான் ஞானசெல்வம்.
ஏற்கனவே பார்வதிக்கு பாடம் சொல்லிக் கொடுக்கப் போவதற்குச் சரி என்று சொன்ன தகப்பன், அந்தப் பிள்ளைக்கு என்ன பெயர் என்று கேட்க திகைத்தவன், தாயைப் பார்க்கிறான், தாய் நான் சொல்ல மாட்டன் என்பது போல தலையையாட்ட' நான் அதைக் கேட்கேலையப்பா' என்கிறான்.
சாப்பிட்டு முடிஞ்சதும் மூவரும்; விறாந்தைக்குப் போய் தகப்பன் சாக்குத்துணி சாய்மனைக் கதிரையில் உட்கார்ந்திருக்க தாயும் ஞானசெல்வமும் சாய்வான பிரம்புக் கதிரையில் உட்காருகிறார்கள்.
மத்தியானச் சாப்பாட்டுக்குப் பிறகும் இரவுச் சாப்பாட்டுக்குப் பிறகும் தாய்க்கும் தகப்பனுக்கும் வெற்றிலை பாக்கு போடும் பழக்கம் உண்டு.
ஞானசெல்வம் பாக்கை எடுத்து பாக்குவெட்டியால் சீவி தட்டத்தில் வைக்கிறான்.தகப்பன் தாயைவிட செல்வம் அழகாக ஒழுங்காக பாக்குச் சீவுவான்.
பாக்கைப் பார்த்தவுடனேயே கயர்ப் பாக்கு எது வெள்ளைப் பாக்கு எதுவென்று தெரிவது மட்டுமல்ல இரவுpல் கயர்ப்பாக்கு சாப்பிடக்கூடாது என்றும் செல்வத்துக்குத் தெரியும்.
வளவுக்குள்ளேயே கமுக மரங்கள் சில இருக்கின்றன.வீட்டு வளவுக்குப் பக்கத்துக் காணியில் ஆயிரம் வெற்றிலைக் கொடிகளும் இருக்கின்றன. பாக்கு வெற்றிலைக்கு அவர்களுக்கு குறைவில்லை.
பாக்கைச் சீவி வெற்றிலைக்கு மேல் வைத்த செல்வம் தகப்பனுக்கும் தாயாருக்கும் கொடுக்கிறான்.
மிக அரிதாக வெற்றிலை பாக்குப் போடும் பழக்கம் செல்வத்திற்கு இருந்தாலும் தாய் தகப்பனுக்கு முன்னால் போட மாட்டான்.சில வேளைகள் தாய் அதைக் கண்டால் அதை ஒரு பிரச்சினையாக எடுக்கமாட்டாள்.தகப்பனும் கண்டும் காணாமல் இருந்துவிடுவார்.
தாய் தகப்பனுக்க வெற்றிலை பாக்கைச் சீவிக் கொடுத்தவனின் மனம் நிம்மதியாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்தது.
அதைக் காட்டிக் கொள்ளாமல் வெறும் பாக்குச் சீவலை வாயிலை எடுத்துப் போட்டவன்,'அப்பா இன்னொரு விசயம் வாற சனிக்கிழமை நீங்களும் அம்மாவும் காரைநகரிலை நடக்கிற கல்யாண வீட்டுக் போறதாகச் சொன்னனீங்கள் என்னையும் வரச் சொன்னனீங்கள், நான் வரேலை நீங்கள் இரண்டு பேரும் போயிட்டு வாங்கோ என்று செல்வம் சொல்லிக் கொண்டிருக்கும் போதே „ ஏன் நீ வரேலை „ என்று தாய் இடைமறித்துக் கேட்க,' அம்மா நான் அங்கை வந்து என்ன செய்யப் போறன், முழு நாளும் சும்மா ஒரு இடத்திலை உட்கார்ந்திருக்க என்னாலை முடியாது, அந்த நேரத்திலை ஏதாவது புத்தகத்தையாவது வாசிக்கலாம், காலமை வெளிக்கிட்டுப் போனமென்றால் திரும்பி வீட்டுக்கு வந்து சேர இரவாகிவிடும்.எனக்கு விசர் பிடிச்சிடும் நான் வரேலை அப்பா....'
„எங்கடை வெங்காயத் தோட்டத்துக்குள்ளை ஒரு மாதத்துக்கு முந்தி புல்லுப் பிடிங்கிவிச்சனாங்கள், ஆனால் இப்ப திரும்பவும் புல்லு நிறைஞ்சு கிடக்குது அதை அப்படியே விட்டமென்றால் வெங்காயம் சரியாய்ப பெருக்காது, வெங்காயத்துக்குள்ளை கோரையும் பசும்புல்லும் இப்ப அறுகம்புல்லும் படரத் தொடங்கிவிட்டுது'.
„அவற்றை உடனடியாகப் பிடுங்காவிட்டால் வெங்காயப் பயிர் வீணாய்ப போயிடம் நான் நடுகைக்காரிகளைக் கொண்டு சனிக்கிழமை அவற்றைப் பிடுங்கிவிக்கிறன்.நீங்கள் போயிட்டு வாங்கோ' என்றவன் தகப்பனின் முகத்தையும் தாயின் முகத்தையும் கூர்ந்து பார்க்கிறான்.
„ செல்வம் சொல்றதும் சரிதான் அவன் வந்து அங்கை என்ன செய்யப் போறான் நடுகைக்காரிகளைக் கூப்பிட்டு அவன் வெங்காயத்துக்குள்ளை கிடக்கிற புல்லைப் பிடுங்கிவிக்கட்டும், அதோடை கொழுந்துத் தோட்டப் புல்லையும் பிடுங்குவிக்க வேணும் அதற்கும் ஒருக்கா நடுகைக்காரிகளுக்கு சொல்லி வை' என்ற தகப்பன் உன்னிடம் ஒன்றை கனநாளாய் கேட்க வேண்டும் என்று நினைச்சனான், நீ எச்.எஸ்.சி படிக்க மாட்டன் என்று அடம்பிடிக்கிறாய், அதிலை படிச்சுப் பாஸ் பண்ணினால் யூனிவேர்சிற்றிக்குப் போகலாம், ஆனால் நீ அதையும் செய்யிறாய் இல்லை.
„ஏதாவது வேலைக்கு போற யோசனையும் உனக்கு இல்லை.நீ என்ன யோசனையிலை இருக்கிறாய்.வயசு போகப் போக எல்லாமே கஸ்டமாயிடம், கையைவிட்டுப் போயிடும் , ஏதாவது திட்டமிருக்குதா „ என்று தகப்பன் கேட்டதை அவன் கொஞ்சம்கூட எதிர்பார்க்கவில்லையாதலால் என்ன பதிலைச் சொல்லலாம் என அவன் மௌனமாக பதிலைத் தேடிக் கொண்டிருக்கையில் தாயார்' கொண்ணைமாரும் அவையின்ரை பெண்சாதிமாரும் அக்காமாரும் அவையின்ரை மனுசன்மாரும் நல்ல நல்ல உத்தியோகத்திலை இருக்கினம்'.
அவை இஞ்சை வருகிற போதெல்லாம் ஞானத்தை செல்லம் குடுத்துக் கெடுத்து வைச்சிருக்கிறன் என்று என்னைக் கரிச்சுக் கொட்டிப் போட்டுப் போயினம்.
புடிப்பிலை கெட்டிக்காரனை ஊர் அளக்க வைச்சிட்டு இருக்கிறம் என்று குறை சொல்லுகினம், உன்ரை அறிவை வீணாக்காதை, அந்த நடுகைக்காரிக்கு படிப்பிக்கப் போறன் என்று கேட்டாய் அது நல்ல தொண்டு என்பதற்காக யார் எவர் என்று யோசிக்காமல் ஓமெண்டு சொன்னம்.
படிச்ச படிப்பு பிரயோசனப்பட வேண்டும்.நீ சின்னப் பிள்ளை இல்லை யோசிச்சு முடிவெடு என்று தாய் சொன்னதும்' „தெல்லிப்பழை பலநோக்கக் கூட்டுறவுச் சங்கக் கடையளுக்கு மனேஜர் தேவையாம் அதற்கு அப்பிளிகேசன் போடப் போறன், அதிலை எடுபட்டால் அதிலையிருந்து கொண்டு எச்.எஸ்.சி சோதனையை பிரைவேட்டாக எடுக்கலாம் இல்லாட்டி ஏதாவது வேலைக்கு முயற்சி செய்யலாம்' என பதில் சொல்கிறான்.
„ம்' எண்ணென்டாலும் யோசிச்சு செய்ய என்று சொன்ன தகப்பன், செம்பிலையிருந்த தண்ணீரிலை வாயைக் கொப்பிளிச்சுவிட்டு படுக்கப் போய்விடுகிறார். தாயாரும் எழுந்து போய்விடுகிறார்.
மகன் காரைநகருக்கு வ7ராமலிருப்பதற்கு அவனிடம் ஏதோ திட்டம் இருக்குது என்பதை தாய் உணர்ந்தாலும் அதை அவளால் கேட்க முடியவில்லை.பிள்ளைகளின் நடவடிக்கைகளை பெற்றோர் உணர்ந்தாலும் அவர்களால் கேட்க முடிவதில்லை.
பார்வதிக்கு பாடம் சொல்லிக் கொடுக்கப் போவதை தகப்பனிடம் அவன் தாமiரை இலைத் தண்ணீர் போல விபரித்த விதம் சில வேளை இரண்டு பேருக்குமிடையில் ஏதாவது .....ச்சே அப்படி ஒன்றுமிருக்காது என்று தன்னைத் திருப்திப் படுத்தினாள்.
காதலில் ஈடுபடுபவர்கள் உண்மையையும் பொய்யையும் கலந்துதான் அதை பெற்றோர்களுக்கு வெளிப்படுத்துவார்கள்.
இரண்டு நாள் பழக்கத்திலேயே செல்வமும் பார்வதியும் காதலுக்கும் அப்பால் சென்று கணவன் மனைவியாவது என்ற நிலைக்கு வந்துவிட்டார்கள்.சிலருக்கு காதலன் காதலியாவதற்கு வருடக்கணக்காகும்.
சிலருக்கு மணித்தியாலக் கணக்காகும். பார்வதிக்கும் செல்வத்துக்குமிடையில் இரு நாட்களுக்குள் காதல் விஸ்வரூபமாக வளர்ந்து நின்றது.
இனி...?
(தொடரும்)
ஐயோ! ஐயோ!! என்ற அவலக் குரல் இரவு நேரத்தின் அமைதியைக் குலைத்துக் கொண்டதோடு எனது தூக்கததிலும் தனது கைவரிசையைக் காட்டத் தொடங்கியது. மார்கழி மாதப் பனிக்குளிரில் விறைத்துப் போன உடல் போர்வைக்குள் முடங்கிக் கொள் என்று சிணுங்கியது. யாராவது கத்தட்டும் என மறுபக்கம் திரும்பிப் படுக்கிறேன். அடிதடியோடு கலந்த அழுகைக் குரல்கள் காதில் ஒலித்து பயத்தையும் பதட்டத்தையும் ஏற்படுத்த, என்ன நடந்திருக்கும் என்ற மனதின் விசாரணையோடு படுக்கையை விட்டு எழுந்தேன். வீட்டில் யாருமே இல்லை என்பதைக் குடிகொண்டிருந்த நிசப்தம் கட்டியம் கூறியது. சத்தம் கேட்டு எல்லோரும் படை திரண்டு பாய்ந்திருப்பார்கள். நான் நித்திரை என்பதால் எனது தூக்கத்தைக் கெடுக்கக்கூடாது என நல்லெண்ணத்தோடு என்னை விட்டுவிட்டுப் போயிருக்கிறார்கள் என்ற நேர் சிந்தனையோடு மனதைச்; சமாதானப்படுத்தினேன். மீண்டும் மனக்குரங்கு சத்தம் வந்த திசை நோக்கித் தாவுகிறது.
அந்தச் சிறிய ஊரின் ஐந்தாவது ஒழுங்கையில் இருக்கும் நாற்சந்திப் பக்கமாகத் தான் சத்தம் வருகிறது. நாற்சந்தியில் நாலு நாளைக்கு முதல் செத்த வீடு நடந்தது. ஆச்சிப்பிள்ளை ரீச்சரின் மரணத்திற்காக நாலு கண்டங்களில் இருந்து பிள்ளைகள் வந்து இருக்கிறார்கள். செத்த வீட்டில் ஊராக்கள் ஒருமாதம் வரும் வரையும் கூடியிருப்பார்கள். வெளிநாட்டிலிருந்து வந்திருக்கிறார்கள் என்றால் தூரத்து உறவையும் கிட்டவாக்கிக் கொண்டு விசாரிப்பு, விடுப்பு, எதிர்பார்ப்பு இவற்றுக்குள் அடங்கிய அடங்காத வகைகளுக்குள் பலர் பிரசன்னமாயிருப்பார்கள். அவர்களுக்குள் ஏதாவது பிரச்சினை வந்திருக்குமோ? இல்லாவிட்டால் ஊர்ப்பொடியளுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டிருக்குமோ? அல்லது கள்ளர் யாரும் மாட்டுப் பட்டிருப்பினமோ? இவற்றில் எது காரணமாக இருக்கும்; என்று தீர்மானிக்க முடியாத தடுமாற்றத்தோடு பனிக்குளிருக்குப் போர்வையாக இரண்டு கைகளையும் குறுக்காகப் போட்டுத் தோளைப் பிடித்தபடி நடக்கிறேன்,
ஊருக்குப் பெருமை தருபவற்றில் மெய்கண்டான் பாடசாலையும் உள்ளடங்கும். ஒரு காலத்தில் ஊரில் உள்ளவர்கள் தான்; அங்கே செங்கோலோச்சினார்கள். அதிபரான பெரியவாத்தியார் தொடக்கம் பாட ஆசிரியர்கள் அனைவரும் ஊரைச் சேர்ந்தவர்கள். தையல், நெசவு, பன்னவேலை, சங்கீதம் போன்ற பாடங்களைப் பெண் ஆசிரியர்கள் படிப்பித்தார்கள். தையலம்மா, தையலக்கா என்று அவர்களை அழைப்பது வழக்கம்; காலப்போக்கில் தையலக்கா, அக்காவாக மாறியது. தையல் படிப்பித்த பாக்கியம் அக்கா நெசவு படிப்பித்த பொன்னம்மாக்கா, சுகாதாரம் படிப்பித்தவர்கள் கனகம்மாக்கா, நேசம்மாக்கா, சமயம் படிப்பித்த ஆச்சிப்பிள்ளையக்கா இவர்கள் தான் ஊரின் கல்வியையும் ஒழுக்கத்தையும் கட்டிக் காத்த பெண் பிரமாக்கள். சிலவேளைகளில் ரீச்சர்மார் வீட்டிலே மறந்து போய் விட்டுவி;ட்டு வந்த பொருள்களை எடுத்து வருவதற்கோ, அடுப்பில் இருக்கும் கறியை இறக்கி வைப்பதற்கோ என்னைப்போன்ற பலர் ஆபத்பாந்தவர்களாக ஆவலோடு காத்திருந்த காலங்கள் மறக்கமுடியாதவை.
ஆச்சிப்பிள்ளை ரீச்சர் நல்ல மாநிறம், சிரித்த முகம், சமயமும் பண்பாடும் கலந்த கலவையாகக் காட்சி தருவார். எடுத்ததெற்கெல்லாம்,
“அப்பா முருகா விசவத்தனையானே ; வேலவா” என்ற மந்திரத்தை உச்சரிப்பார். அன்பு, அறம், கலை, பண்பாடு அனைத்தும் அவருக்கு அத்துபடி மாணவர்களுக்கு அருகில் வரும்போது இவற்றை அள்ளித் தெளிப்பார். தனது வாழ்க்கைத் துணைவராக நடராசா வாத்தியாரைத் திருமணம் செய்ததன் பயனாக ஆசைக்கு மூன்றும் ஆஸ்திக்கு மூன்றுமாக ஆறு குழந்தைகளைப் பெற்றெடுத்தவர். குடும்பத்தையும் தொழிலையும் இரு கண்களாக மதித்த பொறுப்புள்ள பெண் என்று அவரைச் சொல்வதும் பொருந்தும். இளம் வயதிலேயே விதவைக் கோலம் அவரை விரும்பிவந்து ஒட்டிக் கொண்டாலும், அந்த வெறுமையை விரட்டுவதற்குப் புன்னகையைத் தனவசமாக்கிக் கொண்டு பாரதியின் புதுமைப் பெண்ணாக வாழ்ந்து காட்டியவர்.
ரீச்சரைப் பற்றிய எண்ண அலைகள் எனக்குள்ளே திரைப்படமாக ஓடியது. கட்டுப்பாடு நிறைந்த சமூகத்திலே கணவனை இழந்த பெண், குழந்தைகளை வளர்த்துத் தொழிலையும் பார்ப்பது சிரமமான காரியம் என்பது எனக்குத் தெரியும். படிப்பிக்கும் வேலை தான் பெண்களுக்கு நல்லதென்று ஆசைப்பட்டு நானும் ஒரு ரீச்சரைக் கல்யாணம் செய்து படும்பாடு போதும். எங்களிடம் இருக்கும் குருபக்தி இப்போது பிள்ளைகளிடம் இல்லை. தொழில் விசுவாசம் ஆசிரியர்களிடமும் இல்லை. நாளுக்கொரு முறைப்பாட்டுடன்தான் அவள் வீட்டுக்கு வருவாள். “பேசாமல் வேலையை விட்டுவிட்டு இரு” என்று கோபத்தில் நான் சொல்ல அவளும் இதே சாட்டாக வேலையை விட்டு நிற்க ஆயத்தமானாள். உண்மையாகவே அவள் வேலையை விட்டு விட்டால் நான் மட்டும் உழைத்துக் குடும்பச் செலவைச் சமாளிக்க முடியாது. ‘மனைவி வேலைக்குப் போகாவிட்டால் நீ என்ன செய்வாய்;?’ இனந்தெரியாத குரல்; எனக்குள் இன்னமும் ஒலித்துப் பயம்காட்டு;கிறது.
ஆச்சிப்பிள்ளை ரீச்சரின் கெட்டித்தனத்தை வியக்காமல் இருக்க முடியாது. சத்தியவான் சாவித்திரி நாடகம் பழக்கிய போது,
“தீபன் ! நீதான் சத்தியவானுக்குப் பொருத்தம்.”
ரீச்சர் என்னைத் தெரிவு செய்தது சந்தோசமாகத் தான் இருந்தது. ஆனால் மாணவர் மன்றத்தில் நாடகம் நடிக்க மேடையில் ஏறிய போது குலப்பன் காய்ச்சல் வந்தவன் போல உதறல் எடுத்து நடுங்கியதை சத்தியமாய் மறககமுடியாது. ரீச்சர் நடிப்பு நுட்பங்களைச் சொல்லித் தந்து நாடகம் பழக்கியபோது. மேடைக்கூச்சம் போவதற்குப் பைத்தியம் மாதிரிக் கதைக்கச் சொன்னார். நானும்; கண்ணாடி முன்னாலும், தனிமையிலும், மரந்தடிகளோடும் பேசிப் பேசி நடிப்புக்காகச் செய்த பிரயத்தனங்கள் கொஞ்ச நஞ்சமல்ல.
ரீச்சர் தனது பிள்ளைகளை, வளர்த்து நல்ல நிலைக்கு வரவைத்து அவர்கள் வெளிநாடுகளுக்கு வாழ்க்கையைத் தேடிச் செல்வதற்குப் பக்கத்துணையாக இருந்தவர். பிள்ளைப் பாசத்தையும் பிறந்த மண்ணையும் இருகண்ணாகப் போற்றியதால்; தனது இறுதிக்காலத்தை ஊரோடு இணைத்துக் கொள்ள எண்ணியிருக்க வேண்டும்.
“ஆச்சிப்பிள்ளை ரீச்சர் அமெரிக்காவில் இருந்து வந்திருக்கிறா” என்ற செய்தி அறிந்து ரீச்சரைப் பார்க்கப் போனேன்.
சாய்வு நாற்காலியில் படுத்தப்படி உறக்கத்திலிருந்தார். நெஞ்சிலே புத்தகமும் மூக்குக்கண்ணாடியும் கிடந்தது. கட்டிலிலே தலையணைக்குப் பக்கத்தில் அவரோடு கூடப் பயணிக்கும் சோனாப்பையுடன் சில சமயப் புத்தகங்களும் தினசரிப் பத்திரிகைளும் இருந்தன. கட்டிலுக்குக் கீழே தண்ணீர் போத்தல் கிடந்தது. தேவையான பொருட்களைத் தனக்கு வசதியாக வைத்துக் கொண்டு தனிமையை விரட்டுவதற்கு முற்படுகிறார் என்பது தெரிந்தது. ரீச்சரின் தூக்கம் கெட்டுவிடக்கூடாது என்பதால் சற்றுநேரம் மௌனம் காத்தேன். பூச்செடிகளுக்குத் தண்ணீர் விட்டு வளவைச் சுத்தப்படுத்தும் பெண் வந்து,
“அம்மாவைக் கூப்பிடுங்கோ எழும்புவா.” என்றாள்.
“ரீச்சர்.”
மெதுவாகக் குரல் கொடுத்தேன். எழும்புவதாகத் தெரியவில்லை. மீண்டும்,
“ரீச்சர் நான் தீபன் வந்திருக்கிறன்.”
“ஓம், ஆரது ?”
கண்களைத் திறக்காமலே கேள்வி மட்டும் வந்தது. “நான் தீபன்.” கண்களைத் திறந்து, நித்திரைத் திகைப்பு நீங்காமல் பார்த்தார்.
“உந்தக் கதிரையில் இரன். ஏன் நிக்கிறாய்?”
“ஓம் நான் இருக்கிறன் ரீச்சர்.”
கதிரை ஒன்றை இழுத்து அவருக்கு முன்னால் போட்டுக் கொண்டு இருந்தேன். தொழில், குடும்பம், பிள்ளைகள் பற்றி ஆரோக்கியமான உரையாடல் இடம்பெற்றது. ரீச்சருடன் கதைக்கும் போது பள்ளிக்காலத்தின் பசுமையான நினைவுகள் மனதில் படர்ந்தன.
“வாறகிழமை முருகனுக்குக் கொடியேற்றம்.”
ரீச்சர் சொல்லவும் கோயில் மணி அடித்தது. முருகன் தன்னுடன்தான் இருக்கிறார் என்பது போன்ற மகிழ்ச்சி பொங்க,
“அப்பா முருகா நீ தான் துணை.” கோயில் இருக்கும் திசையை நோக்கிக் கும்பிட்டார்.
“சரி ரீச்சர் எல்லாம் நல்லாய் நடக்கும், நான் வரப்போறன்.”
நான் விடைபெறப் போவதை விளங்கிக் கொண்ட ரீச்சர்,
“இஞ்ச வா………. கொஞ்சிவிடு.” இரண்டு கைகளையும் என்னை நோக்கி நீட்டியதும் நான் குனிந்து அவவின் முத்த மழையில் நனைந்தேன்.
ஒரு மனிதன் வாழ்ந்த வாழ்க்கையை நிர்ணயிப்பதில் மரணமும் முக்கியமானது என்பார்கள். ரீச்சர் குறையொன்றும் இல்லாமல் எல்லாவற்றையும் அனுபவித்துச், சொந்த மண்ணில் வந்து மரணித்தது அவவின் நிறைவான வாழ்க்கையின் அர்த்தத்தைப் பிரதிபலிக்கிறது.
நினைவுகளோடு சம்பவ இடத்தை நெருங்கினேன். கோபம் தீருமட்டும் யாரையோ அடிக்கிறார்கள் என்பதைப் புரிந்து கொண்டு முன்னால் வந்த சைக்கிளை மறித்து,
“தம்பியவை என்ன நடந்தது ?”
“இடம் தெரியாமல் வந்து மாட்டிக்கொண்டு வாங்கிக் கட்டுகினம் போய்ப்பாருங்கோ.” பதில் சொல்லியவாறு போனவர்களை எனக்;கு யாரென்று விளங்கவில்லை.
அந்த இடத்தை நான்; நெருங்கிய போது ஒரு பெரும் யுத்தம் நடப்பது போல அமர்க்களமாயிருந்தது. வாகனம் ஒன்று எறிகணையில் சிக்கிச் சிதறி உருக்குலைந்த உடலைப் போல பரிதாபமாகக் கிடந்தது. அதில் வந்த இருவர் தப்பியோடி விட மற்றைய இருவர் அபிஷேகம் ஆராதனையோடு நல்ல சாத்துப்படியில் பொலிவுற்று இருந்ததைப் பார்க்கச் சகிக்கவில்லை. ‘பொலிஸ்’ வாகனம் வந்து அடித்தவர்களையும், அடிபட்டவர்களையும் ஏற்றிக் கொண்டு சென்றது.
“இனி உயிருள்ள வரையும் ஏமாத்துப்பண்ணிக் கொண்டு இந்த ஊர்ப்பக்கம் ஒருவரும் தலை வைத்துப் படுக்கமாட்டினம்.” அங்கு நின்ற பெரியவர் ஊர் ஒற்றுமையைப் பற்றி மார்தட்டிக் கொண்டார்.
“வெளிநாட்டுக்காரர் வந்தால் ஏமாற்றிப் பறிக்கலாம் என்ற நினைப்பு இனி யாருக்கும் வராது” என்றவரை இடைமறித்து,
“வெளிநாட்டுக்காரரும் அறிவு கெட்டதனமாய், மரணஅறிவித்தலுக்குச் சுயவிபரக்கோவை நிரப்பினது மாதிரி எல்லாத் தகவல்களையும் கொடுத்தால் அவங்களுக்கும் வாசிதானே. பிள்ளையளின் பெயர்கள், வாழும் நாடு, தொலைபேசி இலக்கம் எல்லாம் பாத்து விட்டு வருவங்கள் தானே…? இனிமேல் வெளிநாட்டுக்காரரும் இப்படியெல்லாம் போடப் பயப்பிடுவினம் நல்ல பாடம்.” என்றார் இன்னொருவர்.
வாகனத்தில் வந்த நால்வர் தாங்கள் நடத்தும் ஊடகத்தில் ரீச்சரின் மரண அறிவித்தல் போட்டதாகவும் அதற்கான பணம் பதினையாயிரம் ரூபாவைத் தரும்படியும் கேட்டு வந்திருக்கிறார்கள்.
“உங்கள் ஊடகத்திற்கு நாங்கள் அறிவித்தல் தரவில்லை தகவல் தந்தவர் யார் ? குமார் தான் தகவல் கொடுத்தவர். இதோ நிற்கிறார் நீங்கள் இவர்களுடன் தொடர்பு கொண்டீர்களா?”
என்ற கேட்டபோது, குமார் இவர்களோடு நான் தொடர்பு கொள்ளவில்லையென ஒரேயடியாக மறுத்துவிட்டான். வந்தவர்கள் மரண அறிவித்தலை ‘மெபை’லில் பதிவுசெய்த ஒலிப்பதிவினை ஒலிக்கவைத்து,
“இதைக் கேளுங்கள். இது யாருடையது? எப்படி எங்களிடம் வந்தது?” என்று கேள்விகளை அடுக்கினார்கள்.
“மரியாதையாகப் போய்விடுங்கள். எப்படி வந்தது என்பதைக் காட்டுவம். தாங்கமாட்டியள் …”
வாக்குவாதம் நீடித்தது. வந்தவர்கள் மதுபோதையில் வந்திருந்ததினால் சொல்லிலும், செயலிலும் நிதானமற்றிருந்தார்கள். கெட்ட வார்த்தைப் பிரயோகங்களுடன். அங்கிருந்த பெண்களுக்குத் தமது கெட்டித்தனத்தைக் காட்டப் போயிருக்கிறார்கள். இதனால், ஊரார் கூடித் தங்களின் கைவரிசையை இவர்களுக்குக் காட்டியிருக்கிறார்கள்.
“வழக்குப்போட்டால் நட்டஈடு இலட்சக் கணக்கில் வரும். இதைவிட அவர்கள் கேட்ட பதினையாயிரம் காசைக் கொடுத்திருக்கலாம்.” கருத்துப்பரிமாறல்;கள் பலவாறாக எழுந்தன.
“எங்கட காலத்திலை இழவு சொல்லித் தானே செத்த வீடு செய்தனாங்கள். இப்பதான் கண்டறியாத அறிவித்தல்கள் வந்து மனுச வாழ்க்கையைத்; தலைகீழாக்கிப் போட்டுது. கையொழுங்கைகள் ஒண்டும் தவறவிடாமல் விடியப்புறத்தில இளவட்டங்கள் ‘காலஞ்சென்றுவிட்டார்’ என்ற இழவு சொல்லும் சத்தங்கேட்டு செத்தது யாரென்று அறிவதற்குத் தூக்கக் கலக்கத்திலும் காதுகொடுத்துக் கேட்டு விட்டுத் துடிச்சுப் பதைச்சுச் செத்தவீட்டுக்குப் போன காலங்கள் பழங்கதையாய்ப் போச்சுது.” கந்தசாமியிடமிருந்து பெருமூச்சு வெளிப்பட்டது.
“மாமா இப்பவும் ஊர்ப் பொடியள் இழவு சொல்லுறவங்கள் தானே. உங்கட காலத்தில கலியாணம் கச்சேரி எல்லாம் ஊரோட மட்டும் இருந்தது. இப்ப ஊர்விட்டு ஊர் போய் கலியாணம செய்யினம். நேற்றுப் பிறந்ததுகளும் வெளிநாட்டு மோகத்தில விழுந்தடிச்சு ஓடுதுகள். அறிவித்தல் இல்லாமல் சாத்தியப்படுமே?”
“கண்டறியாத வெளிநாட்டுப் பயணத்தாலை எல்லாம் பாழாய்ப் போச்சுது அதை விடு.” கந்தசாமி மாமா அடிமடியைத் தடவி புகையிலைச் சுருட்டை எடுத்துக்கொண்டு,
“பிள்ளை நெருப்பெட்டியைத் தா. சுருட்டுப் பத்தப் போறன்.”முன்னால் நின்ற ரீச்சரின் கடைசி மகளிடம் கேட்டார். “இந்தாங்கோ மாமா.” தீப்பெட்டியைக் கொடுத்த தங்கம் குட்டிப் பிரசங்கம் செய்யத்; தொடங்கினாள்,
“பதினையாயிரம் ரூபா கொடுத்திருக்கலாம் தான். அது பெரிய காசில்லை. நாடு நல்லாய்க் கெட்டுப்போச்சு. களவு, பொய், அநியாயம் எல்லாம்; தலைவிரிச்சாடுது. நாமும் பயந்து பயந்து கள்ளனையும் ஏமாத்துக்காரனையும் உருவாக்கத் துணை போகக்கூடாது. ஏமாத்திறவனுக்கு பதினையாயிரம் கொடுத்து ஏமாறுவதை விட ஏமாற்றினால் கிடைக்கும் தண்டனை இது என ஒரு பாடம் படிப்பித்திருக்கிறம். அதற்காக நட்டஈடு கொடுப்பது தப்பில்லை.”
“பிள்ளை ! வாகனத்தை நொருக்கியாச்சு. அடிதடிகாயங்கள் வேறு, வந்தவர்கள் செல்வாக்கானவங்கள போலத் தெரியுது. வழக்கு விசாரணையெனத் தொடங்கினால் எப்படியும் மூன்று இலட்சத்தைத் தாண்டும்.”
“அதுக்கென்ன செய்யிறது மாமா ? இழந்துதான் சிலதைச் சாதிக்க முடியும். தங்கத்தின் குரலில் இழப்பை ஏற்பதற்கான அழுத்தம் தொனித்தது. அதனை உணர்ந்துகொண்டதற்கு அடையாளமாக அவளைப் பார்த்துத்; தலையசைத்துவிட்டு வீடு நோக்கி நடக்கிறேன்.
ராணி சீதரன்-இலங்கை
மீட்சிபெறாத அடிமைகள்
-ஜுனைதா ஷெரீப்-
பாயொன்றில் படுத்திருந்த பல்கீஸ் சரேலெனக் கண் விழித்தாள். தூரத்தேயுள்ள பள்ளிவாசலொன்றில் அதிகாலைத் தொழுகைக்காக ஒலித்த பாங்கொலியின் கடைசிப் பகுதிகள் மெலிதாகத் தேய்ந்துகொண்டிருந்தன. அவளுடைய கண்கள் வலித்தன, பாரமாக இருந்தன. விலகிக் கிடந்த மேற்சீலையை கையில் பற்றி நெஞ்சகத்தை மறைத்தாள். குலைந்து கலைந்து கிடந்த முடிக்கற்றைகளை விரல்களால் கோதிவிட்டாள். உதடுகளின் வெளியே வழிந்திருந்த காய்ந்த உமிழ்நீரை விரலொன்றால் நீவிவிட்டாள். திரும்பி பக்கத்தில் மல்லாந்து படுத்திருந்த அவளது கணவன் காசீமைப் பார்த்தாள். அப்பட்டமாகக் கிடந்த அவனது நெஞ்சாங்கூடு உயர்வதும் பணிவதுமாக ஆழ்ந்த நித்திரையில் நீளநீளமான மூச்சுக்களை ஊதிக்கொண்டிருந்தான். நித்திரைக்குப் போவதற்கு முன்னால் ஆறிய அவனது மனப்பசி காரணமாகவோ என்னவோ ஆழ்ந்த துயில் அவனை ஆட்கொண்டிருந்தது.
‘இந்தாளுக்கு வேற வேலையே இல்ல. நாளாந்தம் நாளாந்தம் அந்தச் சனியனைத்தான் கேட்டுக்கிட்டிருக்கான். அதனால நான் பகல் முழுதும் படுற வேதனை இந்தாளுக்கு என்ன தெரியும்?’ மனதுக்குள் புருசனைக் கரித்துக்கொட்டியவாறே அவள் எழ முயன்ற வேளையில் அதுவரை அவளது அணைப்பில் படுத்திருந்த ஒன்றரை வயதேயான பாலகன் சடுதியாகக் கண் விழித்து கால் கைகளை நீட்டி முடக்கி பெருங்குரலில் அழத்தொடங்கினான்.
‘சரிதான். இவனும் முழிச்சிட்டான். இப்ப நான் முழுகணும். சுபஹ_ தொழணும். காலத்தாலேயே தொல்லை தொடங்கிட்டு’ நினைத்தவாறு சற்று தள்ளி கிழிந்த பாயொன்றில் சுருண்டவாறு படுத்திருந்த அவளது மகள் பரீதாவை சப்தமிட்டு எழுப்பினாள்.
“டியேய் பரிதா! எழும்புடி! எழும்புடி கெதியா!” தொடர்ச்சியாக சப்தமிட்டு அழுதுகொண்டிருந்த குழந்தையை கைகளில் காவியவாறு மெதுமெதுவாக பிட்டத்தால் அரைத்தவாறு நகர்ந்து சென்று பரீதாவின் உடலைப் பற்றி உலுக்கினாள்.
பரிதா விழிகளை திறந்தும் திறக்காததுமாக “என்னகா உம்மா. படுக்க உடமாட்டியா?” அரைகுறையாகக் கேட்டாள்.
பரிதாவுக்கு சமீபத்தில்தான் ஏழு வயது தொடங்கியிருந்தது. வீட்டுக்கு சமீபமாகவுள்ள ஆரம்பப் பாடசாலையொன்றில் இரண்டாம் தரத்தில் படித்துக்கொண்டிருக்கிறாள். அவளுக்கு நான்கு வயதாகும்போதே தாய்க்குக் கிடைத்த இரண்டாவது மகள் மஹ்மூதாவை வளர்க்கும் பொறுப்பு இவளின் தலை மீதுதான் சுமத்தப்பட்டது. இப்போது மூன்றாவதாக இன்னுமொரு ஆண் குழந்தை.
“அப்புறமா படுக்கலாம். எழும்பு கெதியா. இவனுக்கு பாலைக் கொடுத்துத் தாறன். வச்சுக்க. நான் நாலு வாளித் தண்ணிய உடம்பில ஊத்தி குளிச்pட்டு அப்படியே தொழுதிட்டும் வந்துடறேன். நீயும் நேரத்தோட மதரசாவுக்குப் போகணும்.” பல்கீஸ் கூறியவாறு போர்த்தியிருந்த மார்புச் சீலையை நீக்கி குழந்தைக்குப் பாலூட்டத் தொடங்கினாள்.
“கொஞ்ச நேரமாவது நிம்மதியா படுக்க உடமாட்டியே. நீ வருசத்துக்கு ஒன்றா பெத்துக்கொண்டிரு. நான் வளர்க்கேன்.” முணுமுணுத்தவாறு எழுந்திருந்தாள்.
“என்னடி முணுமுணுக்கிற? பொம்பிளப் புள்ளகள் நேரத்தோடு எழும்பிப் பழகணுன்டி. போயி முகத்தைக் கழுவிகிட்டு டக்குணு வா”
பல்கீஸ் கைக்குழந்தையை மூத்த மகளிடம் கொடுத்துவி;ட்டு பெயருக்கு குளியலறையாகவும் மலசலகூடமாகவும் அமைந்திருந்த உள் வெளிப் பூச்சுக்களைக் கொண்டிராத அறையொன்றை நோக்கிச் சென்றாள்.
நெய்னாகுடியில் முன்னரெல்லாம் மலசல கூடங்கள் வசிக்கும் வீட்டுக்கு வெளியே வேறாக அமைந்திருந்ததுடன், குளியல் என்னவோ நான்கு புறமும் சுற்றிவர வேலிகளைக் கொண்ட கிணற்றடியில்தான் இடம் பெற்றது. இப்போதெல்லாம் மாடிவீடுகள் பரவலாக தோன்றத் தொடங்கிய பின்னர், தென்றலும் வாடையும் தத்தமது இறகுகளால் வெற்று மேனிகளைத் தடவ அகன்ற வாளிகளால் கிணற்றில் குளிர் நீர் மொண்டு தலையில், உடலில் ஊற்றுவதனால் கிடைக்கும் இன்பமெல்லாவற்றையும் தொலைத்து அவன் பார்த்து விடுவானோ இவன் பார்த்துவிடுவானோவென்ற அச்சத்தால் குளியலறைகள்தாம்.
பரீதா கைக்குழந்தையைத் தூக்கிவாறு சமையற்கட்டினுள் போடப்பட்டிருந்த ஊஞ்சலை நோக்கி நடந்தாள். போகும் வழியில் சற்றுத் தள்ளிப் படுத்திருந்த மஹ்மூதாவின் முழங்கால்களுக்கு மேல் கலைந்து கிடந்த பாவாடையை சரிப்படுத்தி கால்கள் மறைய போட்டு விட்டாள்.
‘பாவம்! இவளாவது அயர்ந்து படுக்கட்டும்! நித்திரையில் காணும் இன்பத்தை இவளாவது அனுபவிக்கட்டும். நான்தான் மூணு வயசிலேருந்து நாலு மணிக்கும் அஞ்சு மணிக்குமாக எழும்பி எனது இன்பங்களைத் தொலைத்துவிட்டு நிப்பது போதும். இவளாவது நல்லா படுக்கட்டும்’ பரிதா மனதினுள் நினைத்துக்கொண்டாள்.
ஆடிக்கொண்டிருந்த ஊஞ்சலின் கிரிச் ஒலியுடன் குளியலறையினுள் அவளது தாயின் முணுமுணுப்பும் குழாயிலிருந்து நீர் கொட்டும் சப்தமும் தொடராகக் கேட்டன. ஊஞ்சல் கயிறுகளில் முதுகைச் சாய்த்தவாறு இன்னும் சரிவரக் கலையாத தூக்கக் கண்களுடன் கைக்குழந்தையை மடியில் கிடத்தியவாறு ஆடிக்கொண்டிருந்தாள்.
பல்கீஸ் தொழுது முடித்து தொழுத முசல்லாவை மடித்து வைத்துவிட்டு சமையலறைக்கு வந்தாள்.
“பரிதா. புள்ளய என்கிட்டே தந்துட்டு பாத்றூமுக்க போய் ஒன்டுக்கு ரெண்டுக்கு போறதென்டா போயிட்டு கெதியா வா. ஆறு மணியாகப் போகுது. மதரசாவுக்குப் போகணும். கெதியா எடு” மகளை நோக்கி கட்டளைகளை வீசினாள்.
கேட்டியால் அடிபட்ட மாட்டைப் போல பரிதா வேகவேகமாக செயற்படத் தொடங்கினாள். அசமந்தமாகச் தொழிற்பட்டால் உம்மாவின் ஏச்சுப் பேச்சுக்கு ஆளாக வேண்டி வரும் என்பது அவளுக்குத் தெரிந்திருந்தது.
பரிதா குளியலறையில் நிற்கும் போது தாயின் குரல் கேட்டது. “பரிதா. உன்ட வேலைகளை கெதியா முடிச்சுட்டு வந்து அடுப்பில தேத்தண்ணியை போடு. நான் இவனை நித்திரையாக்கி வளத்திட்டு வாறன். நீ தேத்தண்ணியை ஊத்தாத. நான் வந்து ஊத்துறன். நீ சீனியை கூடப் போட்டுடுவாய்.”
பரிதாவுக்கு உம்மா கூறியது எல்லாமே அத்துபடி. தினம் தினம் அந்த வீட்டில் நடப்பவைதான் இந்தக் காட்சிகள்.
அதிகாலை ஐந்தரை மணிக்கே தொடங்கப்படும் மதரசாவுக்குப் போவதற்காக வெள்ளைச் சீருடை அணிந்து, தலை மூடி கையில் புனித குர்ஆனுடன் பரிதா வீட்டிலிருந்தும் நீங்கினாள்.
மத்ரசா முடிந்து அவள் வீட்டுக்கு வரும்போது காலை ஏழு மணியை சற்று தாண்டியிருந்தது. சீருடை அணிந்த சில சிறுமிகள் பாரிய புத்தகப் பைகளுடன் பாடசாலைகளுக்குச் செல்வதை வீடு நோக்கி வரும்போதே பார்த்திருந்தாள்.
“என்னடி ஆமையாட்டம் ஊர்ந்து வர்றே? ஸ்கூலுக்குப் போறல்லியா? குளிச்சிக்கின்டு நின்றா நேரம் போயிடும். கெதியா புறப்படு” பரிதா வீட்டுக்கு வந்ததும் வராததுமாக உம்மா வள்த்தாள்.
குளியலறையில் பல் தேய்;த்து, முகம் கழுவி, பாடசாலை சீருடை அணிந்து நேரசூசியைப் பார்த்து புத்தகங்களை பையினுள் திணித்து, தாயார் கொடுத்த கோதுமை ரொட்டியை இரண்டு கடிகள் கடித்துஸஸ
“கெதியா தின்னுடி. பெல் அடிக்கிறதுக்கு முன்னாடி போகல்லைன்னா ஸ்கூலால திரத்தி விட்டுடுவானுகள். கெதியா எடு” தாய் மீண்டும் வள்த்தாள்.
பரிதா பாடசாலையை நோக்கி வேகவேகமாக நடந்தாள். அவளைப் போன்றே அதிகாலை மதரசாவுக்குச் சென்று திரும்பிய சிறுமிகள் பலர் ஓட்டமும் நடையுமாக முதுகில் சுமந்த புத்தகப் பைகளுடன் வந்துகொண்டிருப்பதைக் கண்டாள்.
வகுப்பில் பாடங்கள் நடைபெற்றுக்கொண்டிருந்தன. இருந்தாற்போலிருந்து பரீதாவுக்கு வயிற்றினுள் எதுவோ அசைவது போல, உருட்டுவது போல, அதை வெளியேற்ற வேண்டிய தேவை உள்ளது போலஸஸ ஓர் உணர்வு.
அதிகாலை ஐந்து மணிக்கு கண் விழித்தாலும் இது நேரம் வரை அவள் வினாடியும் ஓய்வு இல்லாமல் இயங்கியதால் காலைக் கடனை முடிக்காததை இப்போது அனுபவிக்கத் தொடங்கிஸஸ அதனால் துடித்தாள். காற்றை வெளியாக்கினால் துர்நாற்றம் வகுப்பறையைத் தூக்கலாம் என்ற பயம் அவளுக்கு. இது அவளுடைய இன்றைய ஒரு நாள் மட்டுமான பிரச்சினை அல்ல. இவளுக்கும் இவளைப் போன்ற ஓய்வு ஒழிச்சல் இல்லாதவர்களுக்கும் நாளாந்தம் ஏற்படும் பிரச்சினை.
வகுப்பை நடாத்திக்கொண்டிருந்த ஆசிரியையிடம் ஒரு விரலை உயர்த்திக் காட்டி விட்டு வகுப்பறைக்கு வெளியே வந்து அதுவரை வயிற்றினுள் திரண்டிருந்த காற்றை வெளியேற்றினாள். மூக்கை இரு விரல்களால் பொத்திப் பிடித்தாள்.
வகுப்பில் தொடர்ச்சியாக கற்பித்ததைக் கிரகிப்பதற்கு அடிக்கடி வயிற்றில் திரண்ட காற்று முட்டுக்கட்டையிட்டது.
பாடசாலை முடிந்து வீடு வந்ததும் அவசரவசரமாக சீருடைகளைக் களைந்து கயிற்றுக் கொடியில் வீசிவிட்டு சட்டையொன்றை அணிந்தவாறு கழிவறையை நோக்கி விரைந்தாள். குளியலறைக்குள் குளி;த்தாள்.
“பானைக்குள்ள சோறு இருக்கு. எடுத்து வைச்சித் தின்னு. தின்னுட்டு புள்ளையை வைச்சுக்க. மூணு மணிக்கெல்லாம் மதரசாவுக்குப் போகணும்.” தாய் கூறியவாறே ஹாலினுள் சுவர் ஓரமாகக் கிடந்த சாய்வு நாற்காலியொன்றில் பெருத்த உடம்பைக் கிடத்தினாள்.
சுவர் கடிகாரம் மூன்று தரம் அடித்து ஓய்ந்தது.
“என்னடி பரிதா குத்துக் கல்லாட்டம் சும்மா இருக்கிற? புள்ளயத் தந்துட்டு தங்கச்சியையும் கூட்டிக்கிட்டு மதரசாவுக்கு போகப் புறப்படு” தாய் தூக்கக் கண்களைத் திறக்காமலேயே கட்டளையிட்டாள்.
பரிதா தாயின் கட்டளைக்கேற்ப செயற்பட்டுஸஸ மதரசாவிலிருந்து வீட்டுக்கு வரும்போது ஐந்துக்கும் மேலாகி விட்டது.
நெய்னாகுடி பிரதான வீதியில் சிறிய தர சில்லறைக் கடையொன்றுக்குச் சொந்தக்காரரான அவளுடைய தகப்பன் பிற்பகலில் குட்டித் தூக்கமொன்றைப் போட்டுவிட்டு அப்போதுதான் கடையை நோக்கி சைக்கிளில் செல்வதைக் கண்டாள். பாதையில் அங்கும் இங்குமாக சில சிறுவர்கள் விளையாடிக்கொண்டிருந்தனர்.
வீட்டுக்கு வந்து அன்றையப் பொழுதில் மூன்றாவதாக சீருடைகளைக் களைந்து விட்டு கவுணுக்கு மாறினாள். தாய் பாயொன்றில் கைக்குழந்தையை அணைத்தவாறு படுத்துக்
கொண்டிருப்பதைக் கண்டாள். அமைதியாகப் படுத்துக்கொண்டிருந்த குழந்தை ஏனோ தெரியாது அசைந்து விழிகளைப் பிரித்துப் பார்த்துவிட்டு மீண்டும் மூடிக்கொண்டது.
“மஹ்மூதா. உம்மா நல்ல நித்திரை. வா. அவ எழும்புறதுக்கு முன்னாலே கொஞ்ச நேரத்துக்காவது; புள்ளகளோட சேர்ந்து விளையாடிட்டு வருவம். வா கெதியா” என்றாள் தங்கையைப் பார்த்து.
சகோதரிகள் இருவரும் வீட்டை விட்டும் வெளியாகப் போகும் சமயம் பார்த்து கைக்குழந்தை அரண்டு அலற, சரேலெனக் கண் விழித்த தாய் “எங்கேடி போகப் போறீங்க?” என்றாள்.
“கொஞ்ச நேரம் விளையாடிட்டு வரலாமென்று ராத்தாதான் கூப்பிட்ட” மஹ்மூதா போட்டுக்கொடுத்தாள்.
“க்கும். விளையாடி என்னத்தடி காணப் போறீங்க? மஹ்மூதா, நீ புள்ளயை வைச்சிக்க. பரீதா நீ போய் அடுப்பிலே தேத்தண்ணியைப் போடு. வாப்பா தேத்தண்ணி குடிச்சிட்டுப் போனாரோ என்னவோ. எங்கேடி அவரு?” கேட்டாள்.
“நான் வரக்குள்ள அவரு சைக்கிள்ள கடைக்குப் போறதைக் கண்டன்”
“:போயிட்டாரா? நான் கொஞ்சம் கண்ணயர்ந்துட்டன். என்ன கோபத்திலே போறாரோ தெரியா. எல்லாத்துக்கும் நான்தான் நிண்டு பிடிக்க வேண்டியிருக்கு. நீ போயி தேத்தண்ணியைப் போடு”
தேநீர் குடித்து முடிந்ததும் “மஹ்மூதா. வா போய் கொஞ்ச நேரம் விளையாடிப்போட்டு வருவம்” என்றாள் பரிதா உம்மாவுக்குக் கேட்கக் கூடியவாறு சற்று சப்தமிட்டு.
“இந்த சனியனுக்கு எவ்வளவு சொல்லியும் புரியுதில்லியே. எங்கேடி விளையாடப் போக அவளைக் கூப்பிடுறே? ஆம்பிளப்
புள்ளயளோடயா போய் விளையாடப் போறே.?’ சமையலறைக்குள்ளிருந்து நடந்து வந்துகொண்டிருந்த பல்கீஸ் கேட்டாள்.
“இல்லம்மா. பொம்புள புள்ளகள் விளையாட வருவாங்க. அவங்களோட சேர்ந்துதான்ஸ..”
“அவங்க ஒருத்தரும் வரமாட்டா. அவங்களுக்கெல்லாம் அவங்கவங்கட வீட்டுலே வேலை இருக்கும். நீ போக வாணா.”
“இல்லம்மா. நம்மிட ஊட்டுக்கு முன்னால உள்ள வளவுலே ரெண்டு மூணு புள்ளகள் நின்று விளையாடுவதை மதரசா முடிந்து வரக்குள்ள பார்த்தன்மா. அதான்ஸஸ;.”
“துப்புக்கெட்டதுகள்! அவள்கள்ட ஊட்டுல வேலைவெட்டி ஒன்டும் இல்லியாக்கும். மதரசாவுக்குப் போகாம அப்படி என்னதான் அவள்களுக்கு விளையாட்டு வேண்டிக் கிடக்கு!” பல்கீஸ் கொக்கரித்தாள்.
“கொஞ்ச நேரம் போய் விளையாடிட்டு வாரம்மா.” பரிதா கெஞ்சினாள்.
“அப்படிய்ன்னா ஒன்று செய். புள்ளய தூக்கிக்கொண்டு வாசல் கேட்டடியிலே போய் அவள்கள் விளையாடுவதை பார்த்துக் கொண்டு நின்றுபோட்டு வா. மஹ்மூதாவையும் விளையாடப் போக உடாத. சும்மா போய் நின்னுட்டு வாங்க”
மாலை நேரத் தொழுகைக்கான பாங்கொலி நெய்னாகுடியின் சகல பள்ளிவாசல்களிலிருந்தும் ஏக நேரத்தில் ஒலித்தது. ஒவ்வொன்றும் ஒவ்வொரு குரலில்! ஒவ்வொரு இராகத்தில்! பக்கத்திலுள்ள பரமக்குடியிலிருந்து நாளாந்த கூலித் தொழிலுக்காக நெய்னாகுடிக்கு வந்தவர்கள் தத்தம் சைக்கிள்களில் ஒற்றையாகவோ ரெட்டையாகவோ திரும்பிக்கொண்டிருந்தனர். மெதுமெதுவாக இருள் போர்வையை போர்த்தத் தொடங்கியது.
“பரிதா. புள்ளயைப் பார்த்துக்க. நான் தொழுதுட்டு வாறன். அப்புறம் அவனை எனக்கிட்ட தந்துட்டு நீ டியூசனுக்கு ஓடு.” பல்கீஸ் கூறியவாறு வுழு செய்வதற்காக குளியலறையை நோக்கிச் சென்றாள்.
தாய் தொழுகை முடிந்து வந்ததும் அவள் கூறியவாறே கையிலிருந்த குழந்தையைக் கொடுத்து விட்டு ஆரம்பப் பாடசாலையொன்றில் இரண்டாம் வகுப்புப் படிக்கும் பரிதாபமான பரீதா சில புத்தகங்களையும் பயிற்சிக் கொப்பிகளையும் பையொன்றில் போட்டு எடுத்தவாறு டியூசன் வகுப்பு நடாத்தும் மாஜிதா ஆசிரியையின் வீடு நோக்கி நடக்கத் தொடங்கினாள்.
டியூசன் முடிந்து வீட்டுக்கு அவள் வரும்போது எட்டைத் தாண்டியிருந்தது. ஏழு வயதுச் சிறுமியான அவள் பெரிதும் களைப்புற்றிருந்தாள். கால்களை நீட்டியவாறு எங்கேயாவது படுக்க வேண்டும் போலிருந்தது அவளுக்கு. கண்கள் நிறைய தூக்கக் கலக்கம். உடம்பில் சோர்வு.
“வந்திட்டியாடி பரீதா?” சமையலறைக்குள் நின்ற உம்மா சப்தமிட்டாள்.
“ஓம்மா”
“வாப்பா கடையிலிருந்து வந்ததுக்கப்புறம்தான் எல்லாருமா சாப்டோணும். அது வரையிலே நீ குர்ஆனை எடுத்து வைச்சு ஓது. நல்ல சத்தமா ஓது. நானும் கேட்டுக்கிட்டிருக்கன்”
பரிதாவுக்கு எரிச்சல். உம்மாவின் சொல் மீறி பாயில் படுத்துவிட்டால் அடிப்பார் என்ற பயம். தாயின் பேச்சுக்கு மறு பேச்சு பேசாமல் உள்ளுக்குள் குமுறி வளர்க்கப்பட்டவள். எப்போதுமே சுயநலமாக சிந்திக்கும் தாய்! கால்களை இழுத்து நடந்து சென்று புனித குர்ஆனை எடுத்து வந்து மெதுவாக ஓதத் தொடங்;கினாள்.
சமையலறைக்குள் நின்று தாய் எட்டிப் பார்த்தாள்.
“என்னடி முணுமுணுக்கிற? எங்கேடி தலையிலே முக்காடு? தலையை மூடிக்கொண்டு சத்தமிட்டு ஓதுடி” என்றாள்.
நாட்கள் நகர்ந்தன.
அதிகாலையில் கண்விழித்தல். தாயின் கைக்குழந்தைகளைப் பராமரித்தல், வளர்த்தல், குர்ஆன் மதரசா, பாடசாலை, வீட்டுவேலை என பரிதாவின் பொழுதுகள் கழிந்துகொண்டிருந்தன.
“ஏம்மா. எல்லாருடைய வீட்டிலேயும் ரிவி இருக்கே. நாமும் ஒன்று வாங்குவோமா?” பத்தாவது வயதில் ஐந்தாம் ஆண்டில் படிக்கும் பரிதா ஒரு தடவை தாயிடம் கேட்டாள்.
“ஓ.ஓ. அந்த முசிபத்துதான் இஞ்ச இப்ப தேவைப்படுதாக்கும். அதுலே என்னத்தடி காட்டுறானுகள்? அன்டைக்கி என்ட தங்கச்சிட ஊட்ட போனப்போ நானும் அந்தச் சனியனைப் பார்த்தேன். அவக புதுசா ஒன்டு எடுத்திருக்காக. எல்லாமே பலாய்கள்றி. அரைகுறையா உடுத்துக்கிட்டு அதையும் இதையும் காட்டிக்கிட்டு ஹைவான்களா (மிருகங்களாக) வாராளுகள்றி. உன்னைப் போல பொண் புரசுகள் பார்க்கிறமாதிரியாகவாடி இருக்கு அது? அந்த பலாய் நம்முட ஊட்ட வாணாம் வாப்பா” சில வசனங்களிலேயே பரிதாவின் மனதில் துளிர்த்திருந்த ஆசையை தாய் அறுத்து விட்டாள்.
பரிதா இப்போது பெண்கள் கல்லூரியொன்றில் ஏழாம் ஆண்டு படித்துக்கொண்டிருந்தாள். அவள் ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை சித்தியடையவில்லை. அதற்காக பெற்றோரிடமிருந்து நிறையவே வாங்கிக் கட்டிக்கொண்டாள்.
“ஏன்டி சனியன் பாஸ் பண்ணல்ல? எனக்குத் தெரிந்த எத்தனையோ புள்ளைகள் பாஸ் பண்ணியிருக்காங்க. நீ
மட்டும்தான்டி பாஸ்பண்ணாம உட்டிருக்கே. நாலு பேரு எனக்கிட்ட கேக்காங்கடி நீ பாஸ் பண்ணினயான்னு. நான் தலையை கவிழ்ந்துகிட்டு இருக்கேன்டி” என்றாள் பல்கீஸ் முகம் நிறைந்த கோபத்துடன்.
“அதுக்கு என்னை ஊட்ல படிக்க உட்டயா? புள்ளய வச்சுக்க புள்ளய வச்சுக்கன்னுஸ”
“என்னடி தொணதெணக்கிற? ஸ்கூல்ல படிச்சது காணாம டியூசனுக்கு வேற போனதவாடி நீ?”
பரிதாவுக்கு தனது மனதில் எழுவதையெல்லாம் கொட்டித் தீர்த்துவிட வேண்டும் என்ற அவஸ்தை. கூப்பிட்ட குரலுக்கு ஓடிவரும் ஓர் அடிமையாக அல்லது மனித மிருகமாகக் கருதி தாய் தன்னை வளர்த்து வருவதையும், தன் உணர்ச்சிகளுக்கும் ஆசாபாசங்களுக்கும் எப்போதுமே மதிப்புத் தராமல் விடுவதையும், தன்னைப் போன்றவர்கள் அனுபவிக்கும் அல்லது அனுபவிக்க வேண்டிய மகிழ்ச்சிகளில் துளியைத் தானும் அனுபவிக்க விடாமல் தடைகளை ஏற்படுத்துவதையும், தனக்குள் தங்கி அல்லது மறைந்திருக்கும் திறமைகளை வெளிப்படுத்த ஏதுக்களை ஏற்படுத்தித் தராததையும்ஸஸ. வெடிக்கலாமாவென நினைத்து, அப்போதும் தன்னை அடக்கிக்கொண்டாள்.
இப்படித்தான் இன்னுமொரு நாள். அவளது ஒன்று விட்ட மாமாவொருவன் வீட்டுக்கு வந்தான். தாயுடன் கதைத்துக்கொண்டிருந்தான். அவனது பையினுள் அதுவரை உறங்கிய கைபேசி சரேலெனத் துடித்து அழுதது. அவன் அதைக் காதில் வைத்துப் பேசினான்
“என்ன விலை மாமா இது?” பரீதா கேட்டாள்.
“ஏன் கேக்கே? உனக்கும் வாங்கிப் பாவிக்க விருப்பமோ? உலகத்திலே நடக்கிற பலாய் எல்லாம் இப்போ இதனாலதான்
நடக்குதாம்” என்றாள் மாமாவுக்குப் பதிலாக ஊஞ்சலிலிருந்தவாறு பல்கீஸ்.
“இது ஐயாயிரம்தான். ஆனா பல விலைகளிலேயும் விக்குது. நீ உன்;ட வாப்பாகிட்டச் சொல்லி ஒன்றை வாங்கேன்”
“அதான் உம்மாவே சொல்லிட்டாங்களே. எல்லா பலாயும் இதனாலதான் நடக்குதாம்னு. இதுக்குப் பிறகு வாப்பா வாங்கித் தரப் போறாரா என்ன?” கூறியவாறு பரிதா பெருமூச்;சொன்றை வீசினாள்
நாட்டில் இடம்பெற்ற இனப் பிரச்சினை காரணமாக நானா திசைகளிலும் வர்த்தக நிலையங்களை நடாத்திக்கொண்டிருந்த நெய்னாகுடிவாசிகள் தொடர்ந்தும் அப்பகுதிகளில் வர்த்தகம் செய்ய முடியாமல் தமது சொந்தக் கிராமத்துக்கே வந்து பிரதான வீதியிலும் அதனை அண்டியதான குறுக்கு வீதிகளிலும் வர்த்தக நிலையங்களை அமைத்துக்கொண்டனர். பரீதாவின் தகப்பனைப் போன்ற சிறிய வியாபாரிகளின் விற்பனைகள் கணிசமாகக் குறைந்து கொண்டு போனதுடன் சிலர் கடைகளையும் மூடினர். அவர்களில் ஒருவனாக பரிதாவின் தகப்பனும் கடையை இழுத்து மூடிவிட்டு பெரியதொரு சில்லறைக் கடையில் விற்பனையாளனாக ஆனான்.
பரிதா எட்டாம் ஆண்டில் படிக்கும்போதே ஆளாகிவிட்டாள்.
“இனி நீ படிச்சது போதும். வீட்ட இருந்து வீட்டு வேலைகளை நல்லா பழகு” என்றாள் பல்கீஸ்.
பரிதாவுக்கு தாய் இப்படிக் கூறியது பிடிக்கவேயில்லை. தான் தொடர்ந்து படித்து ஆசிரியையாக ஆகவேண்டுமென்பது அவளது சிறு வயதிலிந்து மனதில் உருவாக்கி வந்ததோர் ஆசை. அவளது உம்மாவின் கட்டுப்பெட்டித் தனத்திலிருந்தும், சகிக்கமுடியாத சிறுபிள்ளைத் தனமான சிந்தனைகளிலிருந்;தும் விடுபடுவதென்பது அவளைப் பொறுத்தவரை முயற்கொம்பு. மழைக்குத்தானும் பாடசாலை தாழ்வாரங்களி;ல் கூட
ஒதுங்காதவள் பல்கீஸ். தொடர்ந்து படிப்பதற்காக பாடசாலைக்குப் போய்த்தான் தீருவேன் என அவள் அடம்பிடித்தால் மகளின் உடலில் சூட்டுக்கோலால் தீட்டுவதற்கும் தயங்காதவள்.
தாயின் வார்த்தைக்கு மறுவார்த்தை பேசாமல் பரீதா மௌனியானாள். பல்கீஸ் மீண்டும் கர்ப்பினியானதால் வீட்டு வேலைகள் அனைத்துமே பரீதாவின் தலைமீது சுமத்தப்பட்டன.
காலம் ஓடியது. பரிதா உயர்ந்து அகன்று முகத்தால் விரிந்து கனியப்போகும் கொவ்வைப் பழமாக காட்சியளிக்கும் காலத்தில்தான் அவளது தகப்பன் தாயிடம் கூறியவைகளை அவளுக்கு ஒட்டுக் கேட்க முடிந்தது.
“அவன் நல்லதொரு பொடியன். வயது முப்பந்தைந்துதானாம். அவன்ட பொஞ்சாதி மௌத்தாப்போனதாலே புள்ளைகள் ரெண்டையும் வளர்க்கத்தான் ரெண்டாம் தாரமா ஒரு பொண் தேடுறாங்களாம். அதான் நம்ம பரிதாவைக் கேட்டனுப்பி இருக்காக. இதைப் பத்தி நீ என்ன நினைக்கே?” தகப்பன் தாயிடம் கேட்டான்.
“நாம இருக்கிற நிலையிலே எப்படீங்க ஒரு நல்ல இடம் பார்க்கிற? இவளுக்குப் பின்னால இன்னும் நாலு பொம்புள புள்ளைகள் வளர்ந்துகிட்டு இருக்கு. கல்யாணம் முடிக்காத ஆளைத்தான் பார்க்கணுமென்றா குமரை வைச்சுக்கொண்டு இருக்கவேண்டியதுதான். கடைசியிலே குமரு முத்தி குரங்கான கதைதான்.”
“அப்போ ஒத்துக்கலாம்னு சொல்றே?”
“வேற என்னங்க செய்றது? புதுசா ஊடு கட்டி புள்ளயை முடிச்சுக்கொடுக்கக்கூடிய நிலைமையிலேயா நாம இருக்கோம்?”
“அதான் இதுக்கு ஓம்படலாம்;னு நானும் நினைக்கேன். அவங்கட ஊடு பெரிய ஊடாம். அங்க கொண்டு போய் பரிதாவை வைச்சிக்கொள்ளுவாங்களாம்;”
“பொடியன் நல்லாவனான்னு ஒன்றுக்கு ரெண்டு தடவ நல்லா விசாரிச்சுக்கொள்ளுங்க.”
“எதுக்கும் பரிதாவிடமும் ஒரு வார்த்தை கேட்டுடலாமா?”
“எதுக்குங்க கேக்கணும்? என்னைக் கேட்டா உங்களை எனக்கு முடிச்சுத்தந்தாங்க? நாம ரெண்டு
பேரும் இத்தனை பிள்ளைகளைப் பெத்து சந்தோசமா வாழல்லியா? அவளைக் கேட்டா ஒன்டு
வேணுமென்பா. அல்லது வாணாம்பா. வாணான்டா வேற மாப்பிள்ளை அவவா பார்க்கப் போறா?
அவவா வீடு கட்டப் போறா?. எல்லாம் நாமதான் செய்யணும். அதுக்கெல்லாம் கையிலே துட்டு
இருக்கணுமே. அவளைக் கேக்கத் தேவலை. முடிச்சுக் கொடுப்பம்”
இரண்டாம் தாரமாக ஒருவனுடன் வாழப் போவது பரிதாவுக்கு கொஞ்சமேனும் விருப்பமில்லை. தாயிடம்
அதைப் பத்திக் கதைப்பதற்கே அவளுக்குப் பயமாகவிருந்தது. தனிமையாக இருக்கும்போதெல்லாம்
இதுவரை முகம் பார்க்காத ஒருவனுடன் சேர்ந்து வாழுவதைப் பற்றிய சிந்தனைகளிலேயே
மூழ்கியிருந்தாள். நடக்;கப்போகும் திருமணம் அவளது தாயின் இரும்புப் பிடியிலிருந்து அவளுக்கு
ஒருவாறு விடுதலை பெற்றுத் தரவிருந்தாலும் தான் அந்த வீட்டை விட்டும்போனபின்னர் தனக்குப் பதிலாக
அடுத்ததாகவிருக்கும் மஹ்மூதா அகப்பட்டுக்கொள்வாளே என்ற ஆதங்கமும் அவளுக்கு இருந்தது.
பெரிதான ஆடம்பரமில்லாமல் பரிதாவின் திருமணம் இடம்பெற்று முடிந்தது. அவளின் கரம் பிடித்துக்
கொடுக்கப்பட்டவன் எதிர்பார்த்ததுக்கு முற்றிலும் மாறாக கனிவானவொருவனாக அவளுக்குத் தெரிந்தான்.
திருமணம் ஆன மூன்றாம் நாள் அவளது கணவனின் வீட்டுக்கு நிரந்தரமாக வாழுவதற்காக செல்வது
தொடர்பான நடவடிக்கைகள் இடம்பெற்றுக்கொண்டிருந்தன.
பரிதாவின் கையைப் பற்றி வெளியே நிறுத்தப்பட்டிருந்த காரை நோக்கி அவளது கணவன் அவளை
அழைத்துச் செல்லும்போதுஸ..
“பரிதா. இஞ்ச கொஞ்சம் வந்திட்டுப் போ” என்றாள் மகளைப் பார்த்து பல்கீஸ்.
“என்னம்மா?”
“எல்லாம் சரிதான். இப்போ நீ புருசன்ட ஊட்டுக்கு வாழப் போகப்போறே. அவருக்கு சின்னஞ்சிறுசுகளா
ரெண்டு புள்ளைகளும் இருக்காங்க. போற இடத்திலே நாலு பேரு முகம் கோணாம பார்த்து
நடந்துக்கணும். தெரியுமா?”
பரிதா தாயை உற்றுப் பார்த்தாள். அவளுடைய பார்வை முழுதும் வெறுப்பு கரைபுரண்டது. தனக்கு
நினைவு தெரிந்த நாள் முதல் தனது மனதினுள் அடக்கி வைத்திருந்த அத்தனை உணர்ச்சிகளையும்
தாயின் முகத்தில் கொட்டிவிட்டுப் போகவேண்டுமென்ற ஆவல் குபுக்கென எழுந்தது.
“என்ன சொன்னே? பார்த்து நடந்துக்கணுமா? அதைத்தானே இத்தனை வருசமா நீ எனக்குச் சொல்லித்
தந்திருக்கே? என்றாவது ஒரு நாள் உன்ட மகளும் ஒரு பெண். அவளுக்கும் ஆசா பாசங்களும்,
உணர்வுகளும் இருக்கு. அவளும் இந்த உலகத்திலே இருக்கிற இன்பங்களையும் சந்தோசங்களையும்
அனுபவிக்கவேண்டியவள் என்று நீ யோசிச்சிருப்பியா? எனக்கு இயற்கையாகவே எழுகிற
உணர்ச்சிகளையெல்லாம் பலத்காரமாக அடக்க வைச்சி என்னை ஒரு மரக்கட்டையாக வளர்த்து
வந்தவள்தவா நீ? நீ பெத்துப்பெத்து விட உன் பிள்ளைகளை இவ்வளவு காலமும் வளர்த்தது போக
இனிமேல் எனக்கு நீ முடிச்சித் தந்தவரது பிள்ளைகளை வளர்க்கவேண்டிய பொறுப்புக்கு என்னை
ஆளாக்கினவள்தவா நீ! என் போன்ற பெண்கள் அனுபவிக்க வேண்டிய எந்த சுகத்தையோ
சுதந்திரத்தையோ எனக்குக் காட்டினியா? அப்படிப்பட்ட நீ நான் போற இடத்திலே பார்த்து
நடந்துக்கணும்னு எனக்கு புத்தி சொல்றே. இல்லியா? எனக்குச் செய்த இப்படியான கொடுமைகளை என்ட
தங்கச்சிமாருக்கு இனிமேல் செய்யாத. அவங்க படிச்சுக்கொண்டிருக்கிறாங்க. அவங்களை தொடர்ந்து
படிக்க வை. ஒன்டு மட்டும் கடைசியா சொல்லிட்டுப் போறன். அவருட ரெண்டு பிள்ளைகளையுமோ
அல்லது எனக்குப் பிறக்கப்போற பிள்ளைகளையுமோ எந்தக் காரணம் கொண்டும் அவங்கட
உணர்ச்சிகளை மழுங்கடித்து நான் வளர்க்கவே மாட்டேன். இது சத்தியம். நான் வாறன்” கூறியவாறே
அதுவரை தொண்டைக்குழிக்குள் சிக்கிக் கிடந்த சளி உருண்டையை காரி ‘தூ..’ என
உரத்துத் துப்பிவிட்டு பரிதா கணவனை நோக்கி நடக்கத் தொடங்கினாள்.
-------------------------------------
அவள்
- எலையா க.முருகதாசன்-
அவசரமாக வெளிக்கிட்டு வேகமாக கதவு வரையும் போன தர்சினியை "எங்கை அவசரமாககப் போகிறாய்" எனக் கேட்ட தாயின் குரல் தடுத்து நிறுத்துகின்றது.
"சகானா" அவசமாகக் கதைக்க வேணுமாம் வரச் சொன்னவள் அதுதான் போய்க் கொண்டிருக்கிறன்" என்று போன போக்கில் சொல்லிக் கொண்டே தர்சினி பெருந்து நிலையத்தை நோக்கி வேகமாக நடக்கிறாள்.
தன்னை அவசரமாக வரச் சொன்ன சகானாவின் குரலில் வழமைக்கு மாறான பதட்டமும் சோகமும் இருப்பதை கைத்தொலைபேசியில் பேசிய தொனியிலிருந்து அறிந்து கொண்ட தர்சினி நிலை கொள்ளாமல் தவித்தாள்.
தர்சினியும்; சகானாவும் அவர்கள் இருவரும் வசித்து வந்த அனன்பேர்க் நகரில் ஒரே வங்கியில் வேலை செய்பவர்கள்.அதனால் சகானாவின் குணத்தை அவள் அறிந்து வைத்திருந்தாள் .சகானா எளிதில் உணர்ச்சிவசப்படுபவள், வேகமாக கோபப்படுபவள். பலமுறை அது அவளுக்குப் பாதமாகவே முடிந்திருக்கிறது.என்னவாக இருக்கும், அவசரமாக கதைக்க வேணும் என்று ஏன் வரச் சொன்னவள் என அவளுடன் பழகி வரும் நாட்களில் ஏற்பட்ட நிகழ்வுகளையும் நினைவுக்கு கொண்டு வந்து அதுவாக இருக்குமோ இதுவாக இருக்குமோ என எண்ணியவாறு பேருந்து நிலையத்திற்கு வந்தவள் புறப்பட கதவு பூட்டிய நிலையில் ஆயத்தமாயிருந்த பேருந்தின் சாரதிக்குக் கையைக் காட்டி நிறுத்தும்படி செய்து வேகமாக ஏறி மூச்சு வாங்கியபடி இருக்கையில் அமர்கிறாள்.
"நான் வந்து கொண்டிருக்கிறேன்" எனக் குறுஞ்செய்தியை அனுப்பிய தர்சினி யன்னலுக்கு வெளியே பார்த்துக் கொண்டிருந்தாள்.அவளுக்கு என்ன நடந்திருக்கும் என்ற பதட்டத்துடன் அவள் வரச்சொன்ன இடத்தில் உள்ள பேருந்து நிலையத்தில் இறங்கியவள், இறங்கிய இடத்தில் உள்ள கடைத்தொகுதி சுணையின் படிக்கட்டில் சகானா உட்கார்ந்திருப்பதைக் கண்ட தர்சினி வேகமாக அந்த இடத்திற்கு போய்ச் சேருகிறாள்.அவளின் தோளில் கைவைத்தபடியே சகானாவின் அருகில் உட்காருகிறாள்.தனது தோழியைக் கண்டதும் சகானா குமுறி அழுதபடி அவளின் தோளில் சாய்ந்து விம்மி விம்மி அழுகிறாள்.
"என்னடி சொல்லு ஏன் அழுகிறாய் " என்று சொல்லியவாறு அவளின் தலையை நிமிர்த்துகிறாள். தான் இனி உயிரோடை இருக்கமாட்டன் எனச் சொல்லியவாறு தனது கைத்தொலைபேசியில் தனது பெயரில் இருக்கும் முகநூலைக் காட்டுகிறாள். சகானாவின் பெயரில் அவளின் அரைகுறை நிர்வாணப்படங்கள் இருக்கின்றன. வெவ்வேறு இளைஞர்களை கட்டியணைத்தபடி இருக்கும் படங்களும் இருக்கின்றன.
அதிர்ச்சியடைந்த தர்சினி "என்னடி இதெல்லாம்" என்று கேட்க, என்னுடைய படத்தை எங்கிருந்தோ எடுத்து யாரோ எனது பெயரில் முகநூலைத் திறந்து இப்படிச் செய்திருக்கிறார்கள்" என அழுதவாறு சொல்கிறாள். படங்களுக்குக் கீழ் ஜேர்மன் மொழியிலும், ஆங்கிலத்திலும், தமிழிலும் மிக மோசமான அருவருக்கத்தக்க கருத்துக்கள் இருந்தன.
"இது உன்னுடைய படமா" தர்சினி கேட்க,என்னுடைய முகத்தை எடுத்து யாரோ கிராபிக்கில் இதைச் செய்திருக்கிறார்கள். ஆனால் எந்த வித்தியாசமும் தெரியாமல் செய்திருக்கிறார்கள், இந்தப் படங்களை அழிப்பதற்கு நான் எவ்வளவோ முயற்சித்தும் முடியாமல் போய்விட்டது.அப்பா அம்மாவிற்கு இன்னும் தெரியாது, தெரிந்தால் என்ன நடக்குமோ தெரியவில்லை.
"நான் உனக்குக் கனநாளாய்ச் சொன்னனான் தெரியாதவர்களை முகநூலில் இணைக்க வேண்டாம் என்று.நிறைய லைக்குகள் கிடைக்க வேண்டுமென்ற பேராசையாலை அறியாதவர்கள் எல்லாரையும் இணைத்து இப்ப பார் எங்கை போய் முடிஞ்சிருக்கு என்று, பொலிசிலை போய் அறிவித்தியா" என தர்சினி கேட்க இல்லை என்கிறாள்."சரி வா என்னுடன,; பொலிசிலை போய் முறைப்பாடு கொடுத்தால் அவர்கள் யாருடைய கொம்பியூட்டரிலிருந்து இந்த முகநூல் செய்யப்பட்டது என்று கண்டுபிடித்துச் சொல்வார்கள் வா"என தர்சினி சகானாவின் கையைப் பிடித்து எழுப்புகிறாள்."தர்சினி வேண்டாம் வேண்டாம் அது எல்லாருக்கும் தெரியவந்திடும் வீட்டுக்கும் தெரிந்திடும்" என அவளைத் தடுக்கிறாள். மீண்டும் அவள் பக்கத்தில் உட்கார்ந்த தர்சினி" உன்னட்டை ஒரு விசயம் கேட்கிறன் மறைக்காமல் சொல்லு, உன்னை யாரையாவது காலித்து நீ அவனை வேண்டாம் என்று அவனுக்கு சொல்லியிருக்கியா" எனக் கேட்க, கொஞ்சம் தடுமாறிய சகானா "இல்லை இல்லை அப்படி யாரையும் நிராகரிக்கவில்லை"என்கிறாள்
சகானாவின் பதிலில் திருப்திப்படாத தர்சினி. "நீ எதையோ மூடி மறைக்கிறாய் முகமே காட்டுது" எனச் சொல்ல, "தர்சினி சொன்னால் நம்பு அப்படி ஒன்றும் இல்லை" என்கிறாள்.மனதைப் போட்டுக் குழப்பாதை, கோபத்தைக் குறைத்துக் கொள், உணர்ச்சிவசப்படாதை உன்னுடைய குணம் எனக்குத் தெரியும், வீட்டிலை போய் அமைதியாக இரு. இதை யார் செய்தது என்பதைக் கண்டுபிடித்துவிடலாம்" எனச் சொல்லியவாறு அவளையும் அழைத்துக் கொண்டு பேருந்தில் ஏறி இருவரும் போகிறார்கள். சகானா தான் இறங்க வேண்டிய இடம் வந்ததும் இறங்கி தனது வீட்டை நோக்கி நடந்து கொண்டிருந்தாள்.
தர்சினி வீட்டின் கதவைத் திறந்ததும்" தாய் பதட்டத்துடன் சகானாசை; சந்திச்சியா" என்கிறாள்" ஓமம்மா" என்கிறாள். "அங்கை ஏதோ பிரச்சினையாம் சகானாவை தகப்பன் அடிக்கப் போக அவள் கோபத்திலை நிலம் கழுவிற தண்ணியை எடுத்துக் குடிச்சிட்டாளாம். ஆஸ்பத்திரிக்கு கொண்டு போனவை ஒரு ஆபத்தும் இல்லையாம்" எனத் தாய் சொல்ல அதிர்ச்சியடைந்த தர்சினி"யாரம்மா சொன்னது" எனக் கேட்க, பக்கத்து வீட்டு சகுந்தலா சொன்னவள்" என்கிறாள்.வந்த வேகத்திலே தர்சினி சகானா இருக்கும் ஆஸ்பத்திரிக்கு ஓடுகிறாள்.
சகானாவை ஆஸ்பத்திரியில் பார்த்திட்டு வந்ததன் பின் தர்சினி அமைதியாக இல்லை. தனது தோழியின் தற்கொலை முயற்சிக்கு யார் காரணமாக இருக்கும் எண்ணியபடியே இருந்தாள். அன்றிரவு தனது லப்ரப் பழுதடைந்துவிட்டதால் தனது அண்ணனின் கொம்பியூட்டருக்கு முன்னால் இருந்து, ஒரு ஆய்வுக்கட்டுரையை பதிவு செய்வதற்காக பதியாத பென்றைவ் இருக்குதா என ஒன்றை எடுத்து கொம்பியூட்டரில் பொருத்தி கிளிக் செய்தவளுக்கு பெரும் அதிர்ச்சி. சகானாவின் முகநூலில் இருந்த அவளின் அரைகுறை நிர்வாணப்படங்கள் அத்தனையும் இருந்தன.சகானாவின் போலியான முகநூலும் அதில் இருந்தது.கோபத்தின் உச்சிக்கே போய்விட்டாள் தர்சினி.வேகமாக கூடத்திற்கு வந்த தர்சினி அங்கே தாயும் தகப்பனும் தனது அண்ணனும் தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருப்பதை; கண்டதும்" டேய் நீதானா அந்தக் கேவலமான வேலையைச் செய்தனி" என்று கோபத்துடன் அவன் சட்டையைப் பிடித்துக் கொண்டே, அவன் முகத்துக்கு நேரே பென்றைவ்வைப் பிடித்தபடி "இது என்ன" பல்லை நெருமினாள்.
அண்ணா அண்ணா எனப் பாசமாக அழைப்பவள் பத்திரகாளியாக டேய் என்று சொல்லி நின்றதைப் பார்த்து தகப்பனும் தாயும் திகைத்து நிற்க , சகானாவின் அரைநிறை நிர்வாணப் படங்களைப் போட்டு முகநூல் செய்தவன் இவன்தானப்பா, அவள் தற்கொலை செய்யப் போனதற்கும் இவன்தானப்பா காரணம், இனி எப்படி அவளின்ரை முகத்திலை விழிப்பன் என விக்கி விக்கி அழுது கொண்டே எல்லாவற்றையும் சொல்ல, "ஏனடா இந்த வேலையைச் செய்தனி" என அடிக்க கையோங்கிய கணவனைத் தாய் தடுத்து" சொல்லு ஏன் இப்படிச் செய்தனி சொல்லு, நீதான் இதைச் செய்தனி என்று மற்றைவை அறிந்தால் எங்களைக் காறித் துப்புவினமே, சொல்லடா ஏன் செய்தனி எனக் கேட்க" அவன் தலையைக் குனிந்தபடியே "அவளை நான் விரும்பினன், அதை அவளிட்டைச் சொன்னன், அதற்கு அவள் "உன்ரை மூஞ்சைக்கு நீ என்னை விரும்பிறியா" என்றாள் அதுதான்..." " அதற்காக இப்படிக் கேவலமாகவா செய்வாய" என்ற தந்தை ;. இது பாரதூரமான குற்றம்.அதுகள் பொலிசிலை அறிவித்தால் மானம்மரியாதை எல்லாமே போயிருக்கும். உனக்கும் ஒரு தங்கச்சி இருக்கிறாள் அதை நினைச்சியா, சகானாவுக்கு உன்னிலை விருப்பமில்லையென்றால் விட வேண்டியதுதானே. சகானாவின் அப்பா அம்மா எங்களுடைய குடும்ப நண்பர்கள். என்ரை கண்ணுக்கு முன்னாலை இப்ப எல்லாத்தையும் அழி...இப்ப அழிக்க வேணும்.. தந்தையின் கண்முன்னால் எல்லாவற்றையும் அழித்தான்.
இனி எப்படி அந்தக் குடும்பத்துடன் கதைக்க முடியும் எனக் கொலைக் குற்றவாளி போல நடுங்கி நின்றனர் தாயும் தகப்பனும். எனது அண்ணன்தான் இதையெல்லாம் செய்தான் என்று எப்படி என் தோழிக்குச் சொல்வேன் என எதுவுமறியாமல் தவித்து கண்ணீர் வழிய சோபாவில் ஒருக்களித்துப் படுத்திருந்தாள் தர்சினி.
நிறைவு
----------------------------------