WELCOME TO PANNAGAM.COM & PTV

பண்ணாகம் இணையம்

  TAMIL  Cultures

சூரியன் உதிக்கும் திசை கிழக்கு என்பதே நம் முன்னோர் கூறிய உண்மை. அந்த வகையில் சூரியன் சரியாக கிழக்கு நோக்கி உதிப்பது சித்திரை மாதத்தில் தான். அதுவே சித்திரை திருநாளக கொண்டாடப்படுகிறது.

"சித்திரை முதல் நாளை முதுவேனில் காலத்தின் தொடக்க நாளாக நெடுங்காலமாக தமிழ் மக்கள் கொண்டாடி வருகின்றனர். ஐப்பசி, கார்த்திகையில் மேகங்கள் பொழியும் மழையை எதிர்கொண்டு, தமிழர்கள் கொண்டாடும் ஆண்டின் முதல் நாளான தைத் திங்களில் பொங்கல் திருவிழா கண்டு அறுவடை நடத்தி, ஆவினங்களுக்கும், நிலத்துக்கும் நன்றி செலுத்தி மாசி, பங்குனியில் வசந்தத்தையும் இளவேனிலையும் வரவேற்று மகிழ்ந்து, சித்திரைத் திங்களில் கடற்கரை மணல் வெளியில், ஆற்றுப் படுகைகளில் தமிழர்கள் விழா எடுத்து வந்துள்ளனர்.

இளைய வயதினருக்கு இச்சித்திரை மாதம் தான் வசந்த விழா காலம் என இலக்கியம் கூறுகிறது. “சித்திரை சித்திரை திங்கள் சேர்ந்தன என்றும், இதுவே இந்திர விழா எடுக்கும் பருவம்” என்றும் சிலப்பதிகாரத்தில் இளங்கோ அடிகள் வர்ணிக்கின்றார்.

வெப்பம் மிகுந்துள்ள இக்காலத்தில், குளிர்ந்த நீரையும், பழங்களையும் வழங்கி கோடையின் தகிப்பைப் போக்குதல் தமிழர்களின் வழக்கமாகும்.

தமிழர்களால் மலேசியா, சிங்கப்பூர், மொரிசியசு, தற்போது கனடா மற்றும் ஐரோப்பிய தமிழர் வாழும் நாடுகளில் கொண்டாடப்பட்டாலும் மற்ற தெற்காசிய நாடுகள் இதனை கொண்டாடுவதற்கு சங்க காலத்தில் தமிழ்ப் பண்பாடு ஆதிக்கத்தை பறை சாற்றுவதாக இருக்கிறது.


சித்திரை திருநாள் அன்று இன்று பெரும்பாலும் கோயிலுக்கு செல்வதே சாலச் சிறந்த பண்பாக பின்பற்றப்பட்டு வருகிறது. ஒவ்வொரு வீட்டிலும் சிறப்பு உணவு தயாரிப்பு நடப்பதோடு அனைத்து கோவில்களிலும் சிறப்பு வழிபாடுகள் இருக்கும். 

வாழ்த்துக்களை பரிமாறி கொள்வது, குடும்பத்தினருடன் இணைத்து ஆசி பெறுவது, வாசலில் கோலமிடுவது புத்தாடை அணிவது,  கலைகட்டும். பொதுவாக சித்திரை திருநாள் என வழங்கப்பட்டலும் சில தமிழக மாவட்டங்களில் சித்திரை கனி என்ற’ பெயரில் பழங்களை வைத்தும் வணங்கப்படுகிறது.

இலங்கையில் அத்தோடு நில்லாமல் மாட்டு வண்டி வாகனம் ஓட்டுதல், போர்த்தேங்காய் உடைப்பது, வழுக்கு மரம் ஏறுவது, கிளித்தட்டு மற்றும் கூத்துகளும் நடைபெறும். கைவிசேடம் எனும் ஆசீர்வாதம் பெறுவதும் வழக்கம்.


பல்வேறு சங்க நூல்கள் சித்திரை முதல் நாளை திருநாளாக அங்கீகரிக்கின்றன. எனினும் கொண்டாட்டம் என்பதற்காக வலுவான ஆதாரம் இல்லை. பத்தாம் நூற்றாண்டின் பின்னரே குறிப்புகள் நீள்கின்றன. 1600ன் போர்ச்சுகீசிய குறிப்புகளும் தமிழர் புத்தாண்டாக சித்திரையே சொல்கிறது.

மறைமலையடிகள் போன்ற சிலர் பழைய இலக்கியங்களை ஆராய்ந்து சூரிய நாட்காட்டியில் புத்தாண்டு என சித்திரை மாதத்தை குறிப்பிடவில்லை என்ற வாதத்தை முன்வைத்தார். பின் மதுரையில் நடந்த தமிழ் மாநாட்டை குறிப்பிட்டு திருவள்ளுவர் ஆண்டு தொடக்கமாக அன்றைய ஆளும் திமுக அரசால் 2008 ஆம் ஆண்டு தமிழ் புத்தாண்டு தை மாதத்திற்கு மாற்றப்பட்டது.

எனினும் அடுத்து ஆட்சிக்கு வந்த அதிமுக 2011 சித்திரையை நிலைநாட்டி சித்திரை திருநாளே புத்தாண்டாக கொண்டவர முனைந்தது. நீதிமன்ற வழக்காடலுக்கு பின் தற்போது அரசு விடுமுறையாக சித்திரையே நீடிக்கிறது.

வியாழன் கோளை சார்ந்து வரும் இந்த அறுபது ஆண்டு நாட்காட்டி முறை தான் தற்போது சூரிய நாட்காட்டியில் வழக்கத்தில் இருக்கிறது. அதன்படி வாரம், மாதம் போல வருடங்களும் ஒரு சுழற்சிக்கு உட்படும்.

அதாவது இந்து காலக் கணிப்பு முறையில் மொத்தம் அறுபது ஆண்டுகள் கொண்ட ஆண்டு வட்டங்கள் உள்ளன. பிரபவ ஆண்டில் தொடங்கி அட்சய ஆண்டில் முடிவுற்று மீண்டும் பிரபவ ஆண்டு தொடரும்.


தமிழ் கலாச்சாரம்தமிழ் மக்களின் பண்பாடு ஓர் உயர் குறி


தமிழ் கலாச்சாரம், தமிழ் மக்களின் பண்பாடு ஆகும். தமிழர் சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே பண்பாட்டிலும் நாகரிகத்திலும் சிறந்திருந்தனர் என்பதை சங்க இலக்கியங்கள் உணர்த்துகின்றன. மொழிக்கு இலக்கணம் வகுத்த தமிழர்கள் மனித வாழ்வியலுக்கும் இலக்கணம் வகுத்து வாழ்ந்தனர். தமிழ் கலாச்சாரம் கலை மற்றும் இந்தியா, இலங்கை, மலேஷியா, சிங்கப்பூர் மற்றும் உலகம் முழுவதும் தமிழர்கள் வாழ்க்கை வழிகளில் வேரூன்றி உள்ளது.

தமிழ் கலாச்சாரம் மொழி, இலக்கியம், இசை, நடனம், நாட்டுப்புற கலை, தற்காப்பு கலை, ஓவியம், சிற்பம், கட்டிடக்கலை, விளையாட்டு, ஊடகங்கள், நகைச்சுவை, உணவு, ஆடைகள், கொண்டாட்டங்கள், தத்துவம், மதங்கள், மரபுகள், சடங்குகள், நிறுவனங்கள், அறிவியல் வெளிப்படுத்தப்படுகிறது மற்றும் தொழில்நுட்பம் தமிழர் பண்பாடு தமிழ் மொழியின் ஊடாகவும், தமிழர் தாயகப் பிணைப்பின் ஊடாகவும், தமிழர் மரபுகள், வரலாறு, விழுமியங்கள், கலைகள் ஊடாகவும், சமூக, பொருளாதார, அரசியல் தளங்கள் ஊடாகவும் பேணப்படும் தனித்துவ பண்பாட்டுக் கூறுகளைக் குறிக்கும்.

தமிழர் வாழ்வை அகவாழ்வு, புறவாழ்வு என இரண்டாக இலக்கணம் வகுத்து வாழ்ந்தமை பண்பாட்டின் சிகரமாகக் கருதப்படுகிறது. தான் தோன்றிய கால மக்களின் நாகரிகம், பண்பாடு, பழக்கவழக்கங்கள், வாழ்க்கை முறை, அரசு, அமைச்சுர், ஆட்சிமுறை, போர், வீரம், காதல் போன்றவற்றை நமக்குக் காட்டி நிற்கின்றன. தமிழர் பண்பாடு பல காலமாக பேணப்பட்ட, திருத்தப்பட்ட, மேம்படுத்தப்பட்ட அம்சங்களைக் குறித்து நின்றாலும், அது தொடர் மாற்றத்துக்கு உட்பட்டு நிற்கும் ஒரு இயங்கியல் பண்பாடே.

தமிழர் பண்பாட்டின் அமைப்பொழுங்கானது அடிப்படையில் இரண்டு அம்சங்களைக் கொண்டதாகும். ஒன்று, அதனளவில் சார்புடையது (culture dependent). மற்றறொன்று, உலகளாவிய அமைப்பியல்புகளோடு பொருந்தக்கூடியது (culture independent). அதாவது, தமிழ்ப் பண்பாட்டின் உருவகத்தைத் தரக்கூடிய ‘புறக் கூறுகள்’ பண்பாடு சார்ந்தும், அவற்றின் ‘அகக் கூறுகள்’ உலகளாவிய அமைப்புகளோடு ஒத்திசைவு பெறுவதும் இதன் உட்பொருளாகும்.
நமக்குக் கிடைத்திருக்கும் சங்க இலக்கியங்களிலிருந்து தமிழர் பண்பாட்டை நன்கு அறிகிறோம். பண்பாட்டின் கூறுகள் சிலவற்றைப் பற்றி இங்கு காண்போம்.


வீரம்:
பண்டைய தமிழர்கள் வீரத்தைத் தொல்காப்பியப் புறத்திணை இயல் எடுத்துக் கூறுகின்றது. பெரும்பாலும் தற்காப்பு முறையில் தான் போர் நடைபெற்றது. தேர்ப்படை, யானைப்படை, குதிரைப்படை, காலாட்படை என்ற நால்வகைப் படைகளும் போரில் ஈடுபட்டன. வெட்சி, வஞ்சி, உழிகை, தும்பை என்ற நான்கு புறத்திணை பகுதிகளிலும் தமிழர்களின் போர்முறைகள் தொல்காப்பியத்தில் காணப்படுகின்றன. மேலும் வீரர் அல்லாதவர்கள், புறங்காட்ட ஓடுவார், புண்பட்டார், முதியோர், இளையோர், இவர்கள் மீது படைக்கலம் செலுத்தலாகாது என்பதும் புறநானூற்றால் அறிய முடிகிறது.


காதல்:
தமிழர் காதலை அன்பின் ஐந்திணை என்றனர். இஃது ஒருவனும் ஒருத்தியும் கொண்ட உளமொத்தத் தூயகாதல் வாழ்க்கையாகும்.இது களவு, கற்பு என இரண்டாக அமையும். ஐந்திணை ஒழுக்கத்தில் தலைமக்களாக விளங்குபவர்கள்.அறிவும், செல்வமும் உடைய நல்லகுலத்தில் பிறந்தவர்கள். இக்காதல் நாடகத்தில் தலைவன், தலைவி நற்றாய், செவிலித்தாய், தோழி, பாணன், பாடினி போன்றோரும் ஊர் மக்களும் பாத்திரங்களாக வருவர். இக்காதல் வாழ்வு அறத்திலிருந்து மாறுபடாமல் அன்பின் வழிப்பாட்டாக அமையும். மங்கலம் என்பன மனைமாட்சி மற்றதன் நன்கலம் நன்மக்கட் பேறு என்று வள்ளுவரும் காதல் வழிவந்த மனை மாட்சியைச் சிறப்பிக்கின்றார்.


நட்பு:
சங்ககாலத் தமிழர் நட்பினை பெரிதும் மதித்து வாழ்ந்தனர். திருவள்ளுவரும் உண்மையான நட்புக்கு இலக்கணம் கூறியுள்ளார். ”முகம் நக நட்பது நட்பன்று நெஞ்சத்து அக நக நட்பது நட்பு” உள்ளன்புடன் மனம் மகிழ்ந்து நட்பு கொள்வதே உண்மையான நட்பாகுமென்றார்.


விருந்தோம்பல்:
‘விருந்து’ என்ற சொல்லுக்குப் ‘புதுமை’ என்பது பொருள். உறவினரும் நண்பரும் அல்லாதவராய் புதியராக நம்மிடம் வரும் மக்களை ‘விருந்து’ என்றனர் தமிழர். அறியாதவர்களையும் அழைத்து உணவளித்து இடமளித்து உபசரித்து மகிழ்ந்தனர் தமிழர். “செல்விருந்து ஓம்பி வருவிருந்து பார்த்திருப்பான்
நல்விருந்து வானத் தவர்க்கு“ என்கிறார் திருவள்ளுவர். விருந்தினர்களை வெளியில் இருக்கச் செய்து தான் மட்டும் வீட்டின் உள்ளே உண்ணுதல் சாவாமைக்கு மருந்தாகிய அமிர்தமாக இருந்தாலும் வேண்டப்படுவதில்லை என்பதை வள்ளுவர், “விருந்து புறத்ததாத் தானுண்டல் சாவா மருந்தெனினும் வேண்டற்பாற் றன்று” என்று கூறுவதிலிருந்து விருந்தோம்பல் சங்க கால மக்களின் பண்பாக இருந்தமை அறிய முடிகிறது.

இவை மட்டுமன்றி ஈகை, கொடை, கற்புடைமை, உலக ஒருமைப்பாடு ஆகியவற்றையும் தமிழ்ப் பண்பாட்டின் கூறுகளாகக் கொள்ளலாம்


ஜெர்மனியில் பண்ணாகமும் நமது இலக்கும்..  
எழுத்தாளர் தேனம்மையின் பதிவுகள்!!
பண்ணாகம்.கொம் இணையம்பற்றி பாராட்டு மழை பொழியும் தமிழ்நாடு தந்த தங்கை தேனம்மை தனது இணையப்பக்கத்தில் யேர்மனி பண்ணாகம் இணைய அலுவலகம் தனது மகன் சபாவுடன் வருகைதந்து இங்கு கண்ட காட்சிகளையும் மற்றைய எழுத்தாளர்களின் காட்சிகளையும்  பெரும் பொக்கிசமாக பதிவு செய்து பெருமை கண்டார். அவரின் மனம் திறந்த பதிவுகளை நீங்களும் பார்வையிடலாம்

ஜெர்மனிக்குச் சென்றதும் நான் தமிழர் என்று சந்தித்தது என்னுடைய ஈழத்தமிழ்ச் சொந்தங்களையே. இவர்கள் எல்லாம் முகநூல் நண்பர்கள் என்றபோதும் என்னைத் தங்கள் உறவினராக உணரச் செய்தார்கள். சென்றதில் இருந்து திரும்பி வரும் வரைக்கும் விருந்துகளாலும் பரிசுப் பொருட்களாலும் தங்கள் அன்பாலும் மூழ்கடித்தார்கள்.

ஜெர்மனியில் திருமதி நிம்மி சிவா அவர்கள் , திருமிகு முருகையா கந்ததாசன் சார் அவர்கள், திருமிகு பண்ணாகம் கிருஷ்ணமூர்த்தி அவர்கள், ஜெர்மனி தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் செயலாளர் திருமதி கௌரி சிவபாலன் அவர்கள் , ஜெர்மனி தமிழ் எழுத்தாளர் சங்கத் தலைவர் திருமிகு அம்பலவன் புவனேந்திரன் அவர்கள், ஜெர்மனி தமிழ்க் கல்விச் சேவையின் தலைவர் திருமிகு சிறிஜீவகன் அவர்கள் ஆகியோரை சந்திக்கும் பொன்னான வாய்ப்புக் கிட்டியது. அவர்களின் அன்பும் கவனிப்பும் உபசரிப்பும் அவர்கள் தமிழ்நாட்டு எழுத்தாளராக எனக்கு அளித்த கௌரவமும்  ஈழத்தமிழ் நூல்களும் மறக்க இயலாதவை.


முதலில் பண்ணாகம் கிருஷ்ணமூர்த்தி சார் அவர்கள் பற்றி. ஹம் காமாட்சி அம்மன் கோவிலில் குடும்பத்தினருடன் சென்றிருந்தபோது அவர்களைச் சந்தித்தேன். இல்லத்துக்கு அழைத்ததோடு டோட்மெண்ட் நகர் புகைவண்டி நிலையத்துக்கு வந்து கிட்டத்தட்ட 70 - 80 கிலோமீட்டர் தூரத்தில் சுந்தர்ன், ஆன்ஸ்பர்க்கில் இருந்த  தன் இல்லத்துக்குக் காரில் அழைத்துச் சென்று பின் திரும்பவும் டோட்மெண்டுக்குக் கொண்டு வந்தும் விட்டார். அன்றைக்கு மட்டும் 300 கிலோமீட்டர்களுக்கு மேல்  அவரது கார் எங்களுக்காக ஓடியுள்ளது. இந்த அன்புக்கெல்லாம் என்ன கைமாறு செய்யப் போகிறோம். இந்த நட்பையும் அன்பையும் கடவுள் கொடுத்த பரிசாகவே எடுத்துக் கொள்கிறேன். 

பண்ணாகம் திருமிகு . கிருஷ்ணமூர்த்தி கந்தசாமி அவர்களின் வீட்டில். இது சுந்தர்ன் என்னும் மலைவாசஸ்தல நகரில் இருக்கிறது.

காய்கறித் தோட்டம், தையற்கலை, ஆன்லைன் உடைகள் விற்பனை என அசத்துகிறார் திருமதி சர்வோஜினி கிருஷ்ணமூர்த்தி அவர்களும்.

பண்ணாகம் இணையத்தை ஆரம்பித்துப் பதிமூன்று ஆண்டுகளுக்கும் மேலாக இணையத்தில் தமிழ்ச் சேவை செய்வது மட்டுமல்ல.  தமிழ் ஆலயங்களுக்கும் வார இறுதி நாட்களில் சென்று தமிழ் கற்பித்து வருகிறார்கள் இத்தம்பதிகள்.

மனமொத்த தம்பதியரின் உள்ளம் போலவே இல்லமும் குழந்தைகளும் வெகு அழகு. மிக அருமையான உணவு அளித்தார்கள்

பண்ணாகம் இணையத்தின் பத்தாம் ஆண்டு நிறைவின் நினைவுச் சின்னம்,  bundeshauptstadt berlin  என்று கூட்டாட்சி மூலதன பெர்லின் நினைவுப் பரிசு,  புடவை, தோட்டத்துக் காய்கறிகள் என எங்கள் பையை நிரப்பிவிட்டார்கள். அது மட்டுமல்ல.

நேற்று அவர்கள் இல்லத்துக்குச் சென்றது ஈழம் பற்றிப் பல்வேறு விஷயங்களையும் தெரிந்து கொள்ள வாய்ப்பாக அமைந்தது. 

இன்னும் உங்கள் சேவையில் ஜெர்மனி தமிழ் மக்கள் சிறக்க வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன் :)

திருமிகு பண்ணாகம் கிருஷ்ணமூர்த்தி சார் அவர்களின் முகநூல் பதிவு..


////ஒரு எதிர்பாராத விதமாக யேர்மனி கம்அம்பாள் ஆலயத்தில் தமிழ்நாடு நண்பி தமிழ்அறிஞர் தேனம்மையின் இனிய சந்திப்பு.

யேர்மனியில் உள்ள கம் அம்பாள் ஆலயத்தின் குருவானவரின் 25வது திருமணநாள் விழாவில் நான் என் மனைவி சர்வாஜினியுடன் கலந்துகொண்டு நின்றவேளை  அங்கு சிரித்தமுகத்துடன் ஒருபெண்மணி என்னைநோக்கி வந்து நீங்கள் பண்ணாகம் கிருஷ்ணமூர்த்தி சார் தானே என்றார்.

அவரின் பேச்சில் இந்திய பேச்சுச்சாயல் இருந்தது நான்சற்று தயங்கி நீங்கள் யார் என்றேன்

நான்தான் சார் தேனம்மை என அறிமுகப்படுத்தினார் நான் சற்றும் எதிர்பார்க்காத சந்திப்பு

இவர் 2014ம் ஆண்டிலிருந்து எழுத்துத்துறையில் நண்பராக இணையம் மூலம் இணைந்தார் நேரடியாக சந்திக்கவில்லை

இன்று அம்பாள் ஆலயத்தில் அவரின் மகன் மருமகளுடன் காட்சி தந்து எனக்கு ஆச்சரிய மகிழ்ச்சி.

இவரின் மகன் யேர்மனியில் iTபொறியிலாளர்களாக வேலை செய்கிறார்

தனது மகனையும் மருமகளையும் பார்க்க வந்திருந்த தமிழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானப் பட்டதாரியும் எழுத்தாளருமான திருமதி.தேனம்மை லட்சுமணணன் அவர்கள்  எம்மால் 26 எழுத்தாளர்களை இணைத்து எழுதிய ஒருவருடத்திற்கு மேலாக பல நாட்டு இணையங்களில் பிரசுரமான "விழுதல் என்பது எழுகையே" என்றதொடர்கதையில் இணைந்து எழுதியவர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.முகநூல் ஊடாக தொடர்புகளை பேணியே இத்தகு நல்லுறவை வளர்க்கக்கூடிய சாத்தியம் ஏற்பட்டது.

முகநூல் வழியாக நல்ல நட்பைப் பேணலாம் என்பதற்கு நானும் திரு. ஏலையா முருகதாசன் அவர்களும் உதாரணமாக இருக்கிறோம்.

இருவரும் இணைந்து "தமிழ் எழுத்தாளர் இணைய அகம்" என்ற அமைப்பை உருவாக்கி பல்நாட்டு எழுத்தாளர்களை இணைத்து வெற்றி கண்டோம். நன்றி

///எந்த நாட்டில் இருந்தாலும் தமிழ் என்ற உணர்வு இணைத்த பெருமைகொண்டவர் திருமதி .தேனம்மை இலட்சுமணன் அவர்கள்.
இந்திய பூர்வீக இடமான காரைக்குடியை சேர்ந்தவர் (கவிஞர் கண்ணதாசன் ஊர்)

இவர் தனது கணவர் இலட்சுமணன் அவர்களின் ஆதரவுடன் 10 மேற்பட்ட கவிதைகள் மற்றும் நாவல் கதைகள் போன்ற நூல்களை வெளியிட்ட தமிழ் ஆர்வலர்

அவர் எமது பண்ணாகம்.கொம். இணைய யேர்மனி அலுவலகம் வந்து எம்மை ஊக்கப்படுத்தியது எமக்கு பெருமையாகும். வாழ்க வளமுடன்///

#மிக்க நன்றியும் மகிழ்ச்சியும் சார் :)

டிஸ்கி :- இவர் பண்ணாகம் என்ற இணைய இதழோடு நமது இலக்கு என்ற பத்ரிக்கையையும் 2005, 2006 ஆம் ஆண்டுகளில் நடாத்தி வந்தவர்.  இவரது இலக்கு இன்னும் தொடரவேண்டும் என்று கோரிக்கை விடுக்கிறேன்.

இந்து சமய திருமண ஒழுங்கு

 

முறைகள்

 

ஒருவருடைய திருமணம் சுவர்க்கத்தில் நிர்னயிர்க்கப் பெறுவதாகவும், 

அது ஒவ்வொருவருக்கும் இறைவன் கொடுத்த வரம் எனவும் இந்து சமயம் கூறுகின்றது. அதனால் அதன் பெருமை அளப்பரியது. திரு' என்பது தெய்வத்தன்மை எனவும், 'மணம்' என்பது இணைதல் எனவும் பொருள்பட்டு, 'திருமணம்' என்பது மேம்மையான தெய்வீகம் வாய்ந்த இணைதல் எனப்படுகின்றது. அதாவது இரு இதயங்கள் ஒன்றாக இணைவது எனவும் கூறலாம்.

தமிழர்களின் இந்துத் திருமணம் ஆகம மரபுச் சடங்குகளுடன் சில சிறப்பு அம்சங்களையும் தழுவி நடைபெறுகின்றன. இச்சடங்குகளை நன்கு படித்த சமய குருக்கள்  முறைப்படி அக்கினி பூர்வமாக இறைவன் ஆசியுடன் நடத்தி வைக்கிறார். திருமண நிகழ்வில் முக்கியமான நிகழ்ச்சி சுபவேளையில் தாலி கட்டுதலாகும். இதனை “மாங்கல்யதாரணம்” எனக் கூறுவர். தாலி கட்டியதும் அப்பெண் “சுமங்கலி” அதாவது திருமணமானவள் என்ற அந்தஸ்தைப் பெறுகின்றாள்.

திருமண விழாவானது பல சமய கிரியைகளையும், பல மரபு சம்பிரதாயங்களையும், சடங்குகளையும் உள்ளடக்கியதாக உள்ளது. அவற்றுள் கீழ் குறிக்கப்பெற்றவை முக்கியமான நிகழ்வுகளாகும்


1 பொன்னுருக்கல்
2 கன்னிக்கால் ஊன்றல்
3 முளைப்பாலிகை போடல்
4 பந்தல் அமைத்தல்
5 மணமகன் அழைப்பு
5.1 கடுக்கண் பூணல்
5.2 தலைப்பாகை வைத்தல்
6 மணமகன் புறப்படுதல்
6.1 பலகாரத் தட்டம்
6.2 தேங்காய்த் தட்டம்
6.3 கூறைத்தட்டம்
7 பெண் புறப்படுதல்
8 மாப்பிள்ளை அழைப்பு
9 அரசாணிக்கல்
10 அங்குரார்ப்பணம்
11 இரட்சாபந்தனம் (காப்புக்கட்டல்)
12 மணமகளை அழைத்தல்
13 கன்னிகாதானம்
14 தாலி கட்டுதல்
15 மாலை மாற்றுதல்
16 பால்பழம் கொடுத்தல்
17 கோதரிசனம்
18 பாணிக்கரம் (கைப்பிடித்தல்
19 ஏழடி நடத்தல்
20 அம்மி மிதித்தல்
21 கணையாழி எடுத்தல்
22 அருந்ததி பார்த்தல்
23 பொரியிடல்
24 ஆசிர்வாதம்
25 அட்சதை
26 நிறைவு
27 ஆரத்தி
28 பூதாக்கலம்

இவையாவும் ஒரு திருமணத்தின்போது இடம்பெறும் நிகழ்வுகளாகும். இந் நிகழ்வுகள் பற்றிய விளக்கம் சைவனாக பிறந்த ஒவ்வொருவரும் அறிந்திருத்தல் மிக அவசியமாகின்றது. தனது அல்லது தனது உறவினர்களது திருமணங்கள் நடைபெறும்போது அவை அவர்களை வழிநடத்தும் என்பதனால், அவை பற்றிய விளக்கத்தினை சுருக்கமாக தருகின்றோம்.

நிச்சயார்த்தம் செய்தல்:
பொருத்தம் பார்த்தல்: இரு வீட்டாரும் முதலில் சாதகப் பொருத்தத்தை ஆராய்வார்கள். சாதகம் பொருத்தமாக அமைந்தால் பெண்பார்பார்ப்பார்கள். தமிழ்நாட்டில் பெண்பார்க்கும் படலம் போன்று இலங்கையிலும் பெண்ணைப் பொதுவிடங்களில் பார்ப்பது வழக்கம் தற்பொழுது ஆரம்பமாகியுள்ளது. மணப்பெண்; மணமகனுக்கும், மணமகன்வீட்டாருக்கும் பிடித்திருந்தால்,  பெண் வீட்டாருக்குச் தமது சம்மதத்தைத் தெரிவிப்பர். அதன்பின் நிச்சயதார்த்தத்தை உறுதிசெய்யப் பெண்வீட்டார் நல்ல நாள் பார்த்துச் தாம்பூலம், பலகாரம், பழங்களோடும் உறவினர்களோடும் மணமகன் வீட்டிற்கு செல்வர். இதன்பின் இரு வீட்டாரும் திருமணநாளைச் சோதிடரிடம் கேட்டு நிச்சயிப்பர். அத்தோடு பொன்னுருக்கலிற்கும் ஒரு நாளை நிச்சயிப்பர்.

பொன்னுருக்கல்
திருமண நாளுக்கு முன்பு ஒரு சுப நாளில் மணமகன் இல்லத்தில் அல்லது ஆசாரி தொழில் செய்யும் இடத்தில் பொன்னுருக்கல் நிகழ்வு நடைபெறும். இதில் மணமகனும், உறவினர், நண்பர்களும்; மணப்பெண்ணைத் தவிர பெண்ணின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் கலந்துகொள்வர். பெண்வீட்டார் ஓர் இனிப்புப் பண்டம் (கொழுக்கட்டை, மோதகம்) கொண்டு செல்லுதல் சம்பிரதாயம்.

மணமகன் வீட்டு வாசலில் முறைப்படி நிறைகுடம், குத்துவிளக்கு, பன்னீர்தட்டு, குங்குமம், சந்தனம் வைத்து பொன்னுருக்கும் இடத்தில் ஒரு நிறைகுடம் குத்துவிளக்குகள் தேங்காய், மாவிலைகள், வெற்றிலை, பாக்கு, வாழைப்பழம், மஞ்சள்கட்டை (துண்டு), தேசிக்காய், அறுகம்புல், பூக்கள், ஒரு சட்டியில் தண்ணீர், தேங்காய் உடைக்கக் கத்தி, விபூதி, குங்குமம், சந்தனம், பிள்ளையார் (மஞ்சளினால் அல்லது சாணத்தினால்), சாம்பிராணியும் தட்டும், கற்பூரம் முதலிய முக்கியமாகத் தேவைப்படும் பொருட்களாகும்.

திருமாங்கல்யத்திற்குரிய தங்கநாணயத்தை (பவுணை) ஆலயத்தில் (இறைவனிடத்தில்) வைத்து பூசை செய்து ஒரு தட்டில் வெற்றிலை, பாக்கு, மஞ்சள், குங்குமம், பூ, பழத்துடன் நாணயத்தையும் வைத்துக்கொண்டு வந்து பூஜையறையில் வைக்கவேண்டும். பொன்னுருக்கும் நாளன்று அதை மணமகனின் பெற்றோர் அல்லது பெரியோர் எடுத்து மணமகனிடம் கொடுக்க அவர் அதை ஆச்சாரியாரிடம் கொடுத்து உருக்கவேண்டும்.

ஆச்சாரியார் கும்பம் வைத்து விளக்கேற்றி தூபதீபம் காட்டி வெற்றிலை, பாக்கு வாழைப்பழம் முதலியவை வைத்து தேங்காய் உடைத்துப் பூசை செய்து பொன்னை உருக்குவார். உருக்கியபின் தாய்மாமன் தேங்காய் உடைத்துப் பூசை செய்து அந்த இளநீரை உருக்கிய தணலில் ஊற்றி தீயை தணிப்பார். பின் ஒரு தட்டில் வெற்றிலை பாக்கு, பழம், பூ, மஞ்சள், குங்குமம், தேசிக்காய் வைத்து வெற்றிலைமேல் உருக்கிய தங்கத்தையும் வைத்து மணமகனிடம் ஆசாரியார் கொடுப்பார். அதை மணமகன் வந்துள்ள சபையோருக்குக் காண்பித்து, அதன் பின் ஆசாரியாரிற்கு அரிசி காய்கறியுடன் தட்சணை அளித்து உருக்கிய தங்கத்தைத் திருமாங்கல்யம் செய்ய ஒப்படைக்கவேண்டும்.

பின்னர் விருந்துபசாரத்தில் அனைவரும் கலந்து கொள்வர். மணமகன் வீட்டில் இருந்து தோழி விருந்தில் ஒரு பகுதியை மணமகளின் வீட்டிற்குச் சென்று மணமகளிடம் கொடுப்பர். இதே நாளில் இரு வீடுகளிலும் திருமணத்திற்குரிய பலகாரங்கள் செய்யத்தொடங்குவார்கள். முதன் முதலாக இனிப்புப் பலகாரங்கள் செய்யவேண்டும் என்பதால் சீனி அரியதரம் செய்யலாம். அதற்குரிய மாவைக் குழைத்து வைத்தால் கன்னிக்கால் ஊற்றியபின் பலகாரம் சுடலாம். (இந்த நாளில் இருந்து திருமண நாள்வரை மணமக்கள் ஒருவரை ஒருவர் பார்க்கக் கூடாதென்பது பழையகால சம்பிரதாயம்.)

கன்னிக்கால் ஊன்றல்
இதே நாள் பெண் வீட்டிலும் மணமகன் வீட்டிலும் தனித்தனியே அவர்கள் வளவில் ஈசான (வட-கிழக்கு) மூலையில் முகூர்த்தக்கால் அல்லது கன்னிக்கால் ஊன்றவேண்டும். அதற்கு இப்போது கலியாண முள்முருங்கை மரத்தில் ஒரு தடியை வெட்டி அதன்மேல் நுனியில் 5 மாவிலைகளை மஞ்சள் பூசிய கயிறால் கட்டி, இடையில் ஒரு மஞ்சள் பூசிய வெள்ளைத் துணியில் ஒரு செப்புக்காசு முடிந்து கட்டிவிட வேண்டும்.
பெரியவர் ஒருவர் அத்தடியை நிலத்தில் ஊன்றியதும் அதற்கு தேங்காய் உடைத்து சாம்பிராணி கற்பூரம் காட்டவேண்டும். அதனடியில் நவதானியத்தொடு பவளம் அல்லது நவமணிகள் இட்டு நீர் பால் ஊற்றி (3 சுமங்கலிப் பெண்கள்) மரத்திற்குத் திருநீறு, சந்தனம், குங்குமம் சார்த்தவேண்டும். இது நன்கு வளரவேண்டும் என்று நினைத்து கும்பத்தண்ணீரை ஊற்றலாம்.

மஞ்சளில் பிள்ளையார் பிடித்து வைத்து வெற்றிலை பாக்கு பழம் வைத்து தேங்காய் உடைத்துத் தீபம் காட்டி பந்தல்கால் ஊன்றுவார்கள். பந்தல் காலைத் தொடர்ந்து பந்தல் அமைக்கும் வேலை தொடரும். மணமகள் வீட்டில் ஊன்றிய பின் மணமகன் வீட்டிற்கும் செய்யவேண்டும்.

முகூர்த்தக்கால் ஊன்றிய பின் இரு வீட்டாரும் திருமணச் சடங்குகள் முற்றாக முடிவடையும் வரை எந்தவிதமான துக்க நிகழ்ச்சிகளிலும் பங்குபெறுதல் கூடாது. (பந்தக்கால் ஊன்றுபவருக்குத் தட்சணை கொடுக்கவேண்டும்.)

முளைப்பாலிகை போடல்
பெண் வீட்டில் மூன்று அல்லது ஐந்து மண்சட்டிகளில் மண்பரப்பி நீர் ஊற்றவும். பாலில் ஊறவைத்த நவதானியங்களை 3 அல்லது 5 சுமங்கலிப் பெண்கள் அச்சட்டிகளில் தூவி நீரும் பாலும் தெளிக்கவேண்டும். (3 முறை). இவற்றைச் சாமி அறைக்குள் வைத்து திருமணத்தன்று மணவறைக்குக் கொண்டு போக வேண்டும். அநேகமாக பொன்னுருக்கலன்று செய்வார்கள் (இதை 3 நாட்களுக்கு முன்னாவது செய்தால் நவதானியம் வளர்ந்து இருக்கும்.

முளைப்பாலிகை இடுவதன் நோக்கம் திருமணம் செய்து மணமக்களும் அவர்கள் குடும்பமும் முளைவிட்டு பல்கிப் பெருகி வாழ வேண்டும் என்பதே. “விரித்த பாலிகை முளைக்கும் நிரையும்” என்கின்றது சிலப்பதிகாரம். இந்தப் பாலிகையானது திருமணத்திற்குப் பின் நதியிலே சேர்த்து விடலாம்.
நவதானியம் ஆவன நெல், கோதுமை, பயறு, துவரை, மொச்சை, எள், கொள்ளு, உளுந்து, கடலை என்பனவாம்.

பந்தல் அமைத்தல்
முகடுடைய பந்தல் அமைக்கும் பழக்கம் அக்காலத்தில் நடைமுறையில் இருந்து வந்துள்ளது. பந்தலின் உள்பகுதியில் மேலுக்கு துணிகளைக் கட்டுவார்கள். அழகுக்காகவும் திருமணச்சடங்குகள் நடக்கும் பொழுது பந்தலின் மேலிருந்து தூசி அழுக்குப் பொருட்கள், பல்லி போன்றன விழுந்துவிடாமல் இருப்பதற்காகவும் இந்த ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன. பந்தலை கமுகு, வாழை, தென்னை ஓலைகளால் அலங்கரிப்பர்.

வாழைமரம் ஒருமுறைதான் குலைபோடும் அதுபோல் எமது வாழ்விலும் திருமணம் ஒருமுறைதான் என்பதை உணர்த்துகிறது. பாக்கு கொத்துக் கொத்தாகக் காய்ப்பதால் இது தம்பதிகள் ஒற்றுமையாக வாழவேண்டும் என்பதை வலியுறுத்துகின்றது. வாழையும் தென்னையும் கற்பகதரு இவை அழியாப்பயிர்கள் ஆகும். தென்னை நூற்றாண்டு வாழக்கூடியது. “வாழையடி வாழையாக” வளர்வது தேங்காயும் வாழைப்பழமும் இறைவழிபாட்டில் முக்கியமாகின்றது. தம்பதிகள் நிலைத்து நின்று அனைவருக்கும் பயன்படக்கூடியதாக வாழவேண்டும் என்ற தத்துவத்தையே உணர்த்துகிறது.

திருமணம் வசதிக்கேற்ப பெண்வீட்டிலோ, கோயிலிலோ அல்லது வேறுமண்டபத்திலோ வைக்கலாம். அப்படி வேறு மண்டபத்தில் வைப்பதானால் இருவரது வீட்டு வாசல்களிலும் மண்டபவாயிலில் மாவிலை, தோரணம், வாழைமரங்களால் அலங்கரிக்கப்படவேண்டும்.

வாழைமரம் கட்டுவதன் நோக்கம் வாழையடி வாழையாக வாழைமரம் தழைத்து வருவது போல, நமது சந்ததியும் பெருக வேண்டும் என்பதாகும். மாவிலை தோரணங்கள் மங்கள முறையாகக் கட்டவேண்டும். வாசலில் நிறைகுடம் வைக்கவேண்டும். வசதிக்கேற்ப வீடுகளையும் மண்டபத்தையும் அலங்கரிக்கலாம். மண்டபத்தில் நன்கு அலங்கரிக்கப்பட்டே மணவறை கிழக்கு நோக்கி அமைக்கப்படவேண்டும். மணவறையின் முன்பு சுவாமி அம்பாள் கும்பங்கள், சந்திரகும்பம், விநாயக பூஜை, பஞ்சகௌவ்விய பூசைகென ஒரு கும்பம், அக்கினி கிரியைக்குரிய பாத்திரம், அம்மி, மஞ்சள் நீர் ஆகியவை வைக்கப்படும்.

அரசாணியைச் சுற்றி 4 விளக்குகள், 4 நிறைகுடங்கள், வைக்கப்படும் (4, 5, 6, 7) சந்திர கும்பத்திற்கு முன்பாக முளைப்பாலிகை சட்டிகள் வைக்கப்படும்.

குருக்கள் தன் முன்பாக புண்ணியதானத்திற்குரியவற்றை வைத்து அதன் பக்கத்தில் மஞ்சள் பிள்ளையாரும், ஒரு கிண்ணத்தில் பஞ்சகவ்வியமும் வைத்திருப்பார். அரசாணி மரமும் அலங்கரிக்கப்பட்டிருக்கும். அதற்கு ஒரு பக்கம் பாலிகைச் சட்டியும், நடுவில் அம்மியும், அதன் பின் சிவன், பார்வதி கும்பங்களும் மறுபக்கம் நவக்கிரக கும்பங்களும் ஆக முன்பாக அரசாணிப்பானையும் நான்கு கும்பங்களும் வைத்து கல்யாண மண்டபம் மேல் கூறியபடி அமைக்கப்பெற்றிருக்கும்.

மணமகனை தோயவார்த்தல்:
திருமணத்தன்று மணமகனை கிழக்குமுகமாக ஓர் பலகையில் இருத்தி அவரின் கைகளில் வெற்றிலையைச் சுருட்டி அதற்குள் சில்லைக் காசுகள் வைத்துக் கொடுக்கவேண்டும். அவருக்கு முன்னால் நிறைகுடம், குத்துவிளக்கு, தாம்பூலம் வைக்கவேண்டும். 3, 5, 7 என்ற எண்ணிக்கையில் ஆண்களும் பெண்களும் அறுகும் காசும் பாலும் கொண்ட கலவையை மணமகனின் தலையில் 3 முறைவைக்கவேண்டும். மணமகனின் தலையில் ஓர் வெள்ளைத் துண்டை விரித்து வைத்து அதன் மேல் பாலையிடலாம். முதல் பால் வைக்கும் போது வடக்கு முகமாயிருந்து தாய் மாமன் தேங்காய் உடைக்கவேண்டும். பால் வைத்ததும் மணமகன் போய் குளித்துவிட்டு வரவேண்டும். பெண்வீட்டாரும் இதில் கலந்துகொள்வார்கள். மணமகன் சாமி அறையில் சாமி கும்பிட்டு கற்பூரம் காட்டித் தாய் தந்தையரை விழுந்து வணங்க வேண்டும்.

பெண்வீட்டார் மணமகன் வீட்டிற்கு வரும்போது ஒரு தட்டில் வாழைப்பழம், ஒரு தட்டில் பலகாரம், இன்னொரு தட்டில் பூ எல்லாமாக 3 தட்டுகளுடன் வரவேண்டும். எல்லோருக்கும் விருந்தோம்பல் நடைபெறும்.

கடுக்கண் பூணல்
முன்னாளில் கடுக்கண் பூணல் என்ற சடங்கும் நடைபெற்றது இப்போது அது அருகிவிட்டது. மணமகனை கிழக்கு முகமாக அலங்கரிக்கப்பட்ட இடத்தில் இருத்தி விநாயகர் வழிபாடு செய்து தேங்காய் உடைத்து மணமகனுக்கு கடுக்கண் பூட்டு வைபவம் செய்யலாம்.

தலைப்பாகை வைத்தல்
மணமகன் கிழக்கு நோக்கி நிற்க ஒரு பெரியவரைக் கொண்டு தலைபாகை வைக்கவேண்டும். உத்தரியம் அணியவேண்டும். உத்தரியம் (சால்வை) இடும்போது இடந்தோளின் மேலாக வந்து வலப்பாக இடுப்பளவில் கட்டவேண்டும் (அந்தணர் பூணூல் அணிவது போல). அங்கு அவருக்குப் பூமாலை அணிவிப்பர். தோழனுக்கும் இதேபோல் உடை உடுத்தி தலைப்பாகையும் உத்தரியமும் இட்டு மணமகனோடு அழைத்து வருவர். தோழன் மணமகனின் இடப்பக்கமாக நிற்பார்.

மணமகன் புறப்படுதல்
வீட்டைவிட்டுப் புறப்படும் முன் வாசலில் இரு சுமங்கலிப் பெண்கள் ஆரத்தி எடுப்பார்கள். மாப்பிள்ளையோடு தோழி (மாப்பிள்ளையின் திருமணமான பெண் தோழியானவள் திருமணச் சடங்கில் முக்கிய பங்கு வகிப்பதால் நடைமுறைகளை நன்கு தெரிந்த சுங்கலிப் பெண்ணையே அமர்த்தவேண்டும்). தோழன் (பெண்ணின் சசோதரன் அல்லது உறவு முறையில் உள்ள ஒரு ஆண் அநேகமாகத் திருமணமாகாதவராக இருக்கவேண்டும்). அவருடன் உற்றார் உறவினர்கள் திருமண மண்டபத்திற்குச் செல்வர். செல்லும்போது தோழி கூறைத்தட்டும் வேறு இரு பெண்கள் 3 தேங்காய் வைத்த தட்டமும் 3 அல்லது 5 பலகாரங்கள் கொண்ட ஒரு தட்டமும் எல்லாமாக 3 அல்லது 5 தட்டங்கள் கொண்டு போக வேண்டும். அலங்கரிக்கப் பட்ட வாகனத்தில் செல்வர்.

பலகாரத் தட்டம்
அரியதரம், அச்சுப்பலகாரம், பயற்றம் உருண்டை, முறுக்கு, பாலுறட்டி, சிற்றுண்டி போன்றவை.

தேங்காய்த் தட்டம்
3 முடியுள்ள தேங்காய்களுக்குச் சீவி மஞ்சள் பூசி வைக்க வேண்டும்.

கூறைத்தட்டம்
ஒரு பெரிய தட்டில் நெல் அல்லது பச்சையரிசி பரப்பி அதன் மேல் கூறைச்சேலை, சட்டை, வெற்றிலை 5 முழுப்பாக்கு, 3 கஸ்தூரி மஞ்சள், 1 குங்குமம் (டப்பி), 1 தேசிக்காய், 1 வாழைப்பழச் சீப்பு, 1 கொண்டைமாலை, அலங்காரப் பொருட்கள் முதலிய சாதனங்கள் சீப்பு, கண்ணாடி, பவுடர், வாசனைத்திரவியம், சவர்க்காரம் (சோப்) முதலியன. தாலிக்கொடியோடு மெட்டி1 சோடி ஆகியன வைக்கவேண்டும்.

பெண் புறப்படுதல்
பெண் வீட்டில் பெண்ணிற்கு அதே போல் அறுகு, காசு, பால் தலையில் வைத்து நீராட்டி (ருது சாந்தி செய்யாத பெண்ணாகில் அன்று அல்லது முந்தைய நாளில் ருது சாந்தி செய்யவேண்டும்), மணப்பெண் போல் அலங்கரித்து மண்டபத்திற்கு அழைத்துச் செல்லவேண்டும். மணப்பெண்ணோடு ஒரு தட்டில் கோயிலில் அர்ச்சனை செய்யத் தேவையான பொருட்களை அடுக்கி எடுத்துச் செல்லவேண்டும். மண்டபத்தில் பெண் அவருக்கென்று கொடுக்கப்பட்ட அறையில் இருக்கவேண்டும். மணப் பெண் மண்டபத்திற்கு சென்ற பின்னரே மாப்பிளை மண்டபத்தை அடைய வேண்டும் திருமணம் மணமகள் இல்லத்தில் நடைபெறுவதாக ஆவகணம் செய்து).

அர்ச்சனைக்குரிய பொருட்கள்: வெற்றிலை, பாக்கு, தேங்காய், பழங்கள், பூக்கள்

மாப்பிள்ளை அழைப்பு
மாப்பிள்ளை மண்டபத்திற்கு வந்தவுடன் அவரை பெண்வீட்டார் மேளதாளத்தோடு வரவேற்பர். அங்கு தோழன் மாப்பிள்ளையின் காலைக் கழுவிவிடுவார். அதற்கு உபகாரமாக மாப்பிள்ளைத் தோழனுக்கு மோதிரம் ஒன்றை அணிவிப்பார். பின் பெண்ணின் தகப்பன், மாப்பிள்ளைக்கு மாலை சூடி வரவேற்பார். இரு சுமங்கலிப் பெண்கள் ஆரத்தி எடுப்பர். பின் தோழன், மாப்பிள்ளையின் கைகோர்த்து அவரை வலமாக மணவறைக்கு அழைத்துச் செல்வார் (கும்பத்திற்கு வலது பக்கம்).
மணமகன் மணவறைக்கு வந்தவுடன் புரோகிதரின் தலைமையில் திருமணச் சடங்கு ஆரம்பமாகும்.

கிழக்கு நோக்கியிருக்கும் மணவறையில் தோழன் மணமகனுக்கு இடப்பக்கத்தில் அமருவார். மணவறையில் நெல் பரவி அதன் மேல் கம்பளம் விரித்து மணமகனை இருத்துவதுதான் மரபு. கிரியை செய்யும் குருக்கள் மணவறையின் வலது பக்கத்தில் வடக்கு நோக்கியிருப்பார். மணமகனுக்கு திருநீறு கொடுத்து பவித்திரம் (தர்ப்பை)கொடுத்து வலக்கை மோதிரவிரலில் அணிவித்து விநாயகர் பூஜை பஞ்சகௌவிய பூஜை ஆகியவற்றை மந்திர உச்சாடனத்துடன் செய்வர்.

பவித்திரம் வலது கை மோதிர விரலில் அணியவேண்டும். இந்தச் சடங்கு முடியும் வரை ஒரு குற்றமும் வராமலிருக்கவும் மனம், வாக்கு, காயங்களினால் வரத்தக்க பாவங்களினின்று காக்கவும் பவித்திரம் அணியப்படுகின்றது. பஞ்சகௌவியத்தை அவ்விடத்தில் சுற்றித் தெளிந்து அதனைப் பருகும்படி மணமகனின் அகமும் புறமும் சுத்தியடையும் என்பதாலும் இவை செய்யப்படுகின்றன. இதனை புண்ணியாகவாசனம் என்பர்.

அரசாணிக்கல்
திருமணப் பந்தலில் கலியாண முருங்கை மரக்கிளை ஒன்றை வைத்து அதற்கு பட்டுச்சாத்தி அலங்கரித்து வைத்திருப்பர்.

அங்குரார்ப்பணம்
வித்திடுதல் என்று அர்த்தம். அதாவது முளைக்கும் விதைகளை பாலிகையிடல் என்பது. சந்திர கும்பத்தை பூசித்து அதற்கு முன்பாக இருக்கும் மண்சட்டியில் 3 அல்லது 5 சுமங்கலிப் பெண்களை கொண்டு நவதானியம் இட்டு தண்ணீர் தெளித்து புஷ்பம் சாத்தி பூசைகள் செய்வது. இதன் அர்த்தம் நவதானியம் செழித்து வளர்வது போல இத் தம்பதிகளின் வாழ்வும் செழுப்புடையதாக அமையவேண்டும் என்பதற்காக இப்பூஜை செய்யப்படுகின்றது. அப்பெண்களுக்கு வெற்றிலையில் பழம், பூ வைத்து உபசாரம் செய்தனுப்புவார்கள். அதன்பின் கற்பூரம் காட்டப்படும். (முன்பே பாலிகை போட்டிருந்தால் தண்ணீர் மட்டும் தெளித்தால் போதுமானது)

இரட்சாபந்தனம் (காப்புக்கட்டல்)
தொடங்கிய கருமம் நிறைபெறும் வரை எந்தவித தீட்டுக்களோ இடையூறுகளோ துக்கங்களோ மணமக்களைச் சாராதிருக்க வேண்டிய பாதுகாப்புக் கருதி செய்யப்படுவது. (காலமிருத்து அவமிருத்து போன்ற அபாயங்களில் இருந்து காப்பாற்றவும்). சர்வரோகம் அணுகாமலும், பீடை, பிணி அணுகாமலும் இருக்கவேண்டி விவாகச் சடங்குகள் இனிதே நடைபெறவும் (கட்டப்படுவது) காப்புக் நூல் கட்டுதல் செய்யப்பெறுகின்றது.

இதற்கு ஒரு தாம்பாளத்தில் அரிசி பரப்பி தேங்காய், வெற்றிலை, பாக்கு, பழம் காப்பு நூல் முதலியவற்றை வைத்து பூசித்து மாப்பிள்ளையின் வலது மணிக்கூட்டில் காப்புக் கட்டுவார்கள். காப்புக் கட்டும்போது மாப்பிள்ளை வீட்டார் ஒரு தேங்காய் உடைப்பார்கள்.

பின்னர் குருக்கள் சிவன், பார்வதி பூசை முதலியவற்றை மந்திர உச்சாடனத்துடன் செய்வர் (பின்னர் அக்கினி மூட்டப்பட்டு அதற்குரிய பூசை வழிபாடுகள் நடைபெறும்) முகூர்த்த தோஷம், லக்கினதோஷம் போன்ற தோஷங்கள் நீக்கும் பொருட்டும் இத் திருமணத்தின் போது நல்லருள் புரியவேண்டுமென நவக்கிரக தேவர்களுக்காக அமைக்கப்பட்டுள்ள கும்பங்களிற்கும் பூஜை செய்வார்கள். அதன்பின் அரசாணி மரத்திற்கும் அதன் நாலு பக்கங்களிலும் உள்ள கும்பங்களிற்கும் பூஜை செய்வர்.

மணமகளை அழைத்தல்
மணமகளை (பட்டாடை அணிந்து, அணிகலன்கள் பூண்டு முகத்தை மெல்லிய திரையால் மறைத்த வண்ணம்) தோழிகள், மணமகளின் பெற்றோர் மற்றும் உறவினர் புடைசூழ மலர் தட்டுகளுடன் சிறுமியர் முன்செல்ல மணமேடைக்கு அழைத்துச் சென்று மணமகனுக்கு வலப்பக்கத்தில் மணமகளை அமரச்செய்வார்கள். அதன்பின் மணமகனிற்குச் செய்யப்பட்ட அத்தனை பூசைகளும் மணமகளுக்கும் செய்யப்படும். பவித்திரம் இடது கைமோதிர விரலில் அணிவித்து ரட்சாபந்தனம் இடக்கை மணிக்கட்டில் கட்டப்படும். இதன் போது பெண் வீட்டார் ஒருவர் தேங்காய் உடைப்பார்.

பின்னர் இருவரின் பெற்றோர்களையும் அழைத்து மணமகளின் பெற்றோர்கள் பெண்ணின் பக்கத்திலும் மணமகனின் பெற்றோர் மணமகனின் பக்கத்திலும் கிழக்கு நோக்கி அமரச்செய்வார்கள். இவர்களுக்கும் குருக்கள், பவித்திரம், விபூதி கொடுத்து சங்கல்பம் செய்வித்து இரு வழியிலும் பிதுர்தோஷம் நீங்கவும் இரண்டு (நாந்தி தானம்) கொடுத்து பிதிரரின் ஆசியைப் பெறச்செய்வர். பின் கன்னிகாதானக் கிரியைகளை ஆரம்பிப்பார்.

கன்னிகாதானம்
மணமகளை அவரின் பெற்றோர் மணமகனிடம் ஒப்படைப்பதை (தாரைவார்த்துக் கொடுப்பதை) கன்னிகாதானம் என்பர். மணமக்களின் பெற்றோர் இருபகுதியினரும் சங்கற்பம் செய்து பெண்ணின் பெற்றோர் மணமகனின் பெற்றோர்க்கும் மணமகனின் பெற்றோர் பெண்ணின் பெற்றோருக்கும் திலகமிட்டு பன்னீர் தெளித்து மரியாதை செய்வர். பின் பெண்ணின் வலக்கரத்தில் வெற்றிலை, பாக்கு, பழம், எலுமிச்சம்பழம், தங்கக்காசு அல்லது நடைமுறை நாணயம் ஒன்றை கையில் கொடுத்து பெண்ணின் தந்தை இடது கை கீழாகவும் வலது கை மேலாகவும் சேர்த்துப் பிடித்திருக்க, குருக்கள் மணமகளின் மூன்று தலைமுறைப் பெயர்களையும் மணமக்களின் பெயர்களையும் உரிய மந்திரத்துடன் 3 முறைகள் சொல்லி இரு வம்சம் தழைக்கவும், அறம், பொருள், இன்பம் வீடு ஆகிய 4 பேறுகளைப் பெற வேண்டியும் கன்னிகாதானம் செய்து தருகின்றேன். எல்லாவித செல்வமும் பெற்று எனது மகளைக் காப்பாற்ற வேண்டும் என்று வேண்டிக் கொள்வார். மணமகனின் சம்மதம் பெற்றவுடன் மணமகளின் தாயார் நீர் விட்டு தாரைவார்க்க தந்தையார் மணமகளின் கரங்களில் ஒப்படைப்பார். அப்போது மங்கள வாத்தியம் முழங்க, பெண்வீட்டார் ஒருவர் தேங்காய், உடைக்க, மணமகன் பெண்ணை ஒப்புக் கொள்வார்.

தொடர்ந்து மணமகன் கொண்டுவந்த தாலிக்கொடியோடு கூடிய கூறைத்தட்டத்தை விதிப்படி பூசித்து, ஆசீர்வதித்து அக்கினியாற் சுத்தி செய்தபின் அச்சபையிலுள்ள பெரியோர்களிடம் காட்டி நல்லாசி பெறப்படும். பின் மணமகன் மணமகளிடம் கூறையைக் கொடுப்பார். மணமகளும் தோழியுடன் சென்று கூறை உடுத்தி மீண்டும் மணவறைக்கு அழைத்து வரப்படுவார்.

இதற்கிடையில் குருக்கள் மாங்கல்யத்தை எடுத்து சுத்தி செய்து மந்திரம் சொல்லி, சந்தனம், குங்குமம் சாத்தி தீபம் காட்டி சம்பாதஹோமம் செய்து பூசை செய்வார். (சம்பாதஹோமம் – சிருவத்தில் நெய் எடுத்து ஆகுதி செய்து மிகுதி நெய்யைத் தாலியில் விடுதல்) மணவறையைச் சுற்றி நிற்பவர்களுக்கு அட்சதை மலர்கள் கொடுக்கப்படும்.

தாலி கட்டுதல்
கூறை உடுத்தி வந்த மணமகள் வரும்போது ஒரு மாலையுடன் வந்து அதை மணமகனுக்கு அணிவார். அதன் பின் மீண்டும் மணமகனின் வலப்புறத்தில் கிழக்கு நோக்கி அமர்வார். குறித்த சுபமுகூர்த்ததில் மணமகன் எழுந்து மணமகளின் வலப்புறம் சென்று வடக்கு நோக்கி நின்று இறைவனைத் தியானித்து குருக்கள் ஆசிர்வதிதுக் கொடுக்கும் மாங்கல்யத்தை இரு கரங்களால் வலப்புறம் சென்று வடக்கு நோக்கி நின்று இறைவனைத் தியானித்து குருக்கள் ஆசிர்வதித்து கொடுக்கும் மாங்கல்யத்தை இரு கரங்களால் பற்றி கெட்டிமேளம் முழங்க, வேதியர் வேதம் ஓத, மாப்பிள்ளை வீட்டார் ஒருவர் தேங்காய் உடைக்க, பெரியோர் அட்சதை மலர்கள் தூவ, ஒரு சுமங்கலிப்பெண் பின்னால் தீபம் பிடிக்க மணமகன் மேற்கு திசை நோக்கி திரும்பிப் பெண்ணின் கழுத்தில் திருமாங்கல்யம் பூட்டுவார். அப்போது சொல்லப்படும் மந்திரம்

“மாங்கல்யம் தந்துநாநேந மம ஜீவனஹேதுநா
கண்டே பத்தாமி ஸூபகே ஸஞ்ஜிவசரதசதம்”

‘ஓம்! பாக்கியவதியே’ யான் சீரஞ்சீவியாக இருப்பதற்கு காரணமாக மாங்கல்யத்தை உன் கழுத்தில் கட்டுகிறேன். நீயும் நூறாண்டு வாழ்வாயாக என்று குருக்கள் கூறும் மந்திரத்தை மனதில் கொண்டு தாலி முடிச்சில் திருநீறு இட்டு தனது இடத்தில் இருக்க வேண்டும். மணமகளின் உச்சியில் குங்குமத்தில் திலகமிட வேண்டும்.

தாலி – தாலியில் சிவலிங்கம், விநாயகர் அல்லது லட்சுமியின் திருவுருவம் அமைத்தல் நல்லது. கொடியும், தாலியும் அதனருகில் கோத்திருக்கும் இரு தங்க நாணயங்கள் சேர்த்து (9, 11, ....) என்ற ஒற்றை எண் வரக்கூடிய அளவு பவுணில் செய்யவேண்டும். தாலிக்கொடியில் சேர்க்கப்படும்.

தங்கநாணயம் ஆங்கில நாணயமாக இருக்கவேண்டும் என்ற நியதியில்லை. அந்த நாணயத்தில் கடவுளின் உருவங்களுக்கு விருப்பத்திற்கேற்ப அமைக்கலாம். தாலி கட்டு நிகழ்வுற்றதும் சபையோருக்கு கற்கண்டு பரிமாறப்பெறும்.

மாலை மாற்றுதல்
மணமகள் எழுந்து வடக்கு நோக்கி இறைவனை தியானித்து மணமகள் கழுத்தில் மாலை சூட்டுவாள். மணமகன் மணமகளைத் தன் இடப்பக்கத்தில் அமரச் செய்து மாலை சூட்டுவான். மாலை மாற்றுதலின் பொருள் இருமனம் கலந்து ஒரு மனமாகி இல்வாழ்க்கையை ஆரம்பித்தல். மூன்று முறை மாலை மாற்ற வேண்டும்.

தொடர்ந்து கொண்டு வந்த மங்கலப் பொருட்களாகிய மஞ்சள், குங்குமம், பூ, வாசனைப் பொருட்கள், சீப்பு, கண்ணாடி முதலியவற்றை மணமகன் மணமகளிடம் கொடுப்பார். கணவன் மனைவியாக ஆனபின் தம் மங்கலக் கோலத்தை இருவரும் கண்ணாடியில் பார்த்து மகிழ்வார்கள்.

பால்பழம் கொடுத்தல்
பால், வாழைப்பழம் கலந்து மணமகள் முதலில் மணமகனுக்கு மூன்று முறை கொடுப்பார். பின் மணமகன் மணமகளுக்கு மூன்று முறை கொடுப்பார். நாயகன் நாயகி உணவு கொள்ளல் மறைவில் செய்யவேண்டும் என்பதால் திரை ஒன்று முன்னால் பிடிக்கப்படும். முதன் முதலில் தம்பதிக்களுக்குக் கொடுக்கும் இனிப்புப் பதார்த்தமாகையால் வாழ்க்கை இனிமையாக இருக்கவேண்டும் என்று உணர்த்தவே இச் சடங்கு.

கோதரிசனம்
இல்லறவாழ்வு தொடங்கும் தம்பதியர் வாழ்விற்கு வேண்டிய அட்ட ஐஸ்வரியங்களையும் வேண்டி பசுவை இலட்சுமிதேவியாக வணங்குவர். பசுவைக் கிழக்கு முகமாக நிறுத்திச் சந்தனம், குங்குமம், புஷ்பம் சாத்தித் தீபாராதனை செய்து வணங்குவர் பசுவின் உடலெங்கும் உறைகின்ற சகல தேவர்கள், முனிவர்கள், தெய்வங்கள் ஆசிர்வாதமும் இதன் மூலம் கிடைக்கும். அரிசி, காய்கறி, தட்சிணை வைத்துத் தானமும் வழங்கவேண்டும்.

பாணிக்கரம் (கைப்பிடித்தல்)
தருமம் செய்வதற்காகவும் சந்ததி விருத்திக்காகவும் திருமணம் செய்யப்படுகின்றது. பாணிக்கிரகணம் என்றால் மணமகளின் கையை மணமகன் பிடிப்பது என்று பொருள். ‘நீயும் நானும் முதுமையடைந்து விட்டாலும் கூட ஒருவரை ஒருவர் பிரியாதிருப்போம் என்று கையைப் பிடிக்கிறேன்’ என்று கூறி மணமகளின் கையைப் பிடிக்கவேண்டும். ஆணின் வலக்கை பெண்ணின் வலக்கையைப் பிடித்தல் வேண்டும். பின்னர் ஏழடி எடுத்து வைத்து அம்மி மிதித்து அக்கினியை வலம் வருவார்கள். வலம் வரும்போது தோழனும் தோழியும் சேர்ந்து வருவார்கள். பஞ்ச பூதங்களின் சாட்சியாக கையைப் பிடிப்பதாக ஒருகருத்து. மணப்பெண்ணால் ஐம்புலன்களால் செய்யப்படும் செயல்கள் கணவனுக்கு மட்டுமே உரியவை. கன்னியின் கையை வரன்கிரகிப்பது என்று பொருள்.

ஏழடி நடத்தல்
மணமகள் வலது காலை மணமகன் கைகளாற் பிடித்து ஏழடி எடுத்து வைக்கும் படி செய்யவேண்டும். ஒவ்வொரு அடிக்கும் ஒவ்வொரு மந்திரம் சொல்லப்படும்.
1. உனக்கும் வாழ்க்கையில் உணவு குறைவில் அளிப்பதற்கு இறைவன் உன்னைப் பின் தொடர்ந்து வரட்டும்.

2. உடல் வலிமை கிடைக்க இறைவன் பின் தொடரட்டும்

3. விரத்தை அனுஷ்டிக்கும் பொருட்டு உன்னை இறைவன் பின் தொடர்ந்து வரட்டும்.

4. சுகமும் மனச்சாந்தியும் கிடைக்க இறைவன் உன்னைப் பின் தொடரட்டும்

5. பசுக்கள் தூயலான பிராணிகள் பின் தொடர்ந்து வரட்டும்.

6. சகல சௌபாக்கியங்களும் கிடைக்க பின் தொடர்ந்து வரட்டும்.

7. உடன் வாழ்வில் இடம்பெறும் சுபகாரியங்கள், ஹோமங்கள் குறைவின்றி நிறைவேற்ற இறைவன் உன்னை பின் தொடர்ந்து வரட்டும். ஏழடிகள் நடந்த நாமிருவர்கள் சினேகிதரனோம். இருவரும் சேர்த்து அனுபவிப்போம். என்னுடன் கூடவா என்னும் பொருளில் இந்நிகழ்ச்சி அமையும் இதற்கு “ஸ்பத பதி” என்று பெயர்.

அம்மி மிதித்தல்
பெண்ணின் வலதுகாலை (அதாவது எட்டாவது அடி) மணமகன் கையால் தூக்கி அம்மியில் வைத்து பெருவிரலுக்கு அடுத்துள்ள விரலில் மெட்டி வைத்து அணிவிப்பார். இந்தக் கல்லைப் போல் நிலையாக நின்று உன் எதிரிகளைச் சகித்துக் கொள். இது பெண்ணிற்கு கற்பையும் ஆணுக்கு ஒழுக்கத்தையும் புகட்டுகின்றது. கல் எப்படி எதையும் தாங்குமோ அதுபோல் வாழ்கையிலும் இன்ப துன்பங்களைக் கண்டு கலங்காமல் உறுதியான கொள்கைகளைக் கடைப்பிடித்து நடக்கவேண்டும் என்று உணர்த்துகிறது.

தொடர்ந்து அக்கினியை வலம் வந்து ஹோம குண்டத்தில் நெற்பொரியும் ஹோமப்பொருட்களையும் இடுவார்கள். திரும்பவும்

இரண்டாம் முறை அக்கினியை வலம் வரும்போது மணமகன் மணமகளின் இடக்காலை அம்மியில் வைத்து மெட்டி அணிவிக்கப்படும். திருமணமான பெண் அவளைப் பார்க்கும் இன்னொரு ஆடவன் அவள் திருமணமானவள் என்பதை உணர்த்த மெட்டி அணிவிக்கப்படுகின்றது.

கணையாழி எடுத்தல்
மூன்றாம் முறை அக்கினியை வலம் வரும்போது கிழக்குப் பக்கத்தில் வைத்திருக்கும் மஞ்சள் நீர் நிறைந்த பாத்திரத்தில் இருக்கும் மோதிரத்தைத் தேடி எடுக்கவேண்டும். இது மூன்று முறைகள் நடைபெறும். இருவரும் ஒருவருக்குகொருவர் விட்டுக் கொடுத்து எடுத்தல் வேண்டும். இது தம் வாழ்க்கையிலும் விட்டுக்கொடுத்து வாழ வேண்டும் என்பதை எடுத்துக் காட்டுகிறது.

அருந்ததி பார்த்தல்
மூன்றாம் சுற்றில் அருந்ததி பார்த்தல் நடைபெறும். இருவரையும் கூட்டிக்கொண்டு மண்டபத்தின் வடக்கு வாசலுக்கு வந்து வானத்தில் இருக்கும் நடத்திரங்களுக்குப் பூஜை செய்து அருந்ததியைக் காண்பிப்பார்.

“நிரந்தரக் கற்பு நடசத்திரமாக மின்னுவேன்” என்று ஆணையிடுவதாகும். சப்தரிசிகள் கிருத்திகை எனப்பெயர் கொண்ட தங்கள் மனைவிக்குள்ளே முதலானவளான அருந்தியை எப்படி நிலைத்திருக்கச் செய்ய செய்தார்களோ அப்படி மற்ற ஆறு கிருத்திகைகளும் அருந்ததியைப் போலிருக்கச் செய்கின்றனர்.

இந்த அருந்ததியை தரிசனம் செய்தால் என்னுடைய மனைவி எட்டாளவாக வளர்ச்சி பெறட்டும் என்பதேயாகும். இந்த நட்சத்திரத்தைக் காட்டுவது நல் வாழ்க்கையும் வளத்தையும் பெறுவதற்கேயாகும்.

அருந்ததி வசிட்டரின் மனைவி. சிறந்த பதிவிரதை. வானத்தில் துருவ மண்டலத்திற்கு அருகில் ஏழு நட்சத்திரங்களிற்கிடையில் வசிட்ட நட்சத்திரமும் அதன் அருகில் அருந்ததி இருப்பதாகப் புராணங்கள் கூறுகின்றன.

அருந்ததியோடு சேர்த்து துருவ நடத்திரத்தையும் காட்டுவார். துருவ நட்சத்திரம் விண்ணில் ஒரு நிலையான இருப்பிடத்தை உடையவராகவும் மற்ற விண்மீன்கள் நிலைத்திருப்பதற்குக் காரணமாகவும் கட்டுத்தறியாகவும் இருப்பதால் எங்களை எதிரிகளிடமிருந்து காப்பற்றுவீராக என்று தரிசிப்பதாகும். இவர்கள் எம்வாழ்க்கையில் ஒரு வழிகாட்டியாக அமைகிறார்கள். துணைவனைப்போல் மணமகனுக்கு ஸ்திரத்தன்மையும் அருந்ததியைப் போல் மணமகளுக்குப் பதிவிரதத்தன்மையும் இருத்தல் வேண்டும்.

பொரியிடல்
அக்கினியை மூன்று முறை வலம் வரவேண்டும். ஒவ்வொரு முறையும் வலம்வந்து மணமக்கள் கிழக்கு நொக்கி நிற்கத் தோழன் நெற்பொரியை குருக்களிடம் இருந்து பெற்று மணமகனின் கையில் கொடுக்க மணமகன் மணமகளின் கையில் கொடுத்து மணமகனின் கைகளை தன் கைகளால் தாங்கி ஹோம் குண்டத்தில் இடுவார்கள். “அக்கினி பகவானே சகல செல்வங்களையும் எமக்குத் தந்தருள வேண்டும்.”. என வேண்டிக் கொண்டு பொரியிடுதல் வேண்டும். நெல் பொரியாக மலர்வது போல் நம்வாழ்வு மலரவேண்டும் என்பதே தத்துவம்.

மூன்றாம் முறை சுற்றி வந்தவுடன் பூர்ணாகுதிற்குரிய பொருட்களை தட்டத்தில் வைத்து குருக்கள் மணமக்களுக்குக் கொடுக்க இருவரும் சேர்ந்து குண்டத்தில் சொரித்தல் வேண்டும்.

அக்கினி பகவானிடம் சேர்க்கும் சகல திரவியங்களும் அக்கினி பகவான் அந்தந்தக் தெய்வங்களிடம் ஒப்படைத்து விடுவார்கள் என்து ஐதீகம்.

ஆகவே அக்கினியில் ஆவாகனம் செய்யப்பட்ட மூர்திகளுக்கு செய்யும் சடங்கு குறைவின்றி செய்து அவர்களுக்குப் பரிபூரண பலன் வேண்டி அனுப்பவேண்டும் என்று பிராத்தித்து செய்வதே ஹோமம்.

அதன் பின் தீபாராதனை செய்து ஹோமத்தில் இருந்து விடுவிக்கப்பட்ட ரட்சயை (கரிப்பட்டு) மணமக்களுக்கு திலகமிட்டு விபூதி சந்தனம் கொடுத்து குருக்கள் ஆசி வழங்குவார்.

ஆசிர்வாதம்
மணமக்களை கிழக்கு முகமாக நிற்க வைத்து குருக்கள் பிராத்தனை செய்து மந்திரத்துடன் மணமக்களுக்கு ஆசிர்வாதம் சொல்லி மணமக்களுக்கு சிரசில் அட்சதையிட்டு ஆசீர்வதிப்பர். தொடர்ந்து மணமகளின் பெற்றோர் ஆசிர்வதிப்பர்.

அட்சதை
முனை முறியாத பச்சையரிசி, அறுகம்புல், மஞ்சள்மா கலந்த கலவையே அறுகரிசி என்று சொல்வார்கள். பெரியோர் இரண்டு கைகளாலும் அறுகரிசி எடுத்து “ஆல் போல் தழைத்து அறுகுபோல் வேரூன்றி மூங்கில் போல் சுற்றம் முழுமையாய்ச் சூழப் பதினாறு பேறும் பெற்றுப் பெருவாழ்வு வாழ்க” என வாழ்த்தி உச்சியில் 3 முறை இடவேண்டும். அட்சதை இட்டு வாழ்த்தும் விதிமுறை சில இடங்களில் வித்தியாசமாக செய்யப் பெறுகின்றன. ஒருசிலர் உச்சியில் இருந்து பாதம் வரையும், வேறு சிலர் பாததில் இருந்து உச்சி வரை அட்சதை இட்டு வாழ்த்துகின்றனர்.

நிறைவு
மணமக்களின் கைகளில் கட்டப்பட்ட காப்புக்களை அவிழ்த்து பவித்திரங்களை கழற்றி அவற்றுடன் பெற்றோரின் பவித்திரங்களையும் வெற்றிலையில் வைத்து குருக்களின் தட்சணையும் சேர்த்து குருக்களிடம் கொடுக்கவேண்டும்.

ஆராத்தி
மணமகனின் உறவினர் ஒருவரும் மணப்பெண்ணின் உறவினர்களில் ஒருவருமாக இரு சுமங்கலிப் பெண்கள் ஆராத்தி எடுப்பார்கள். தம்பதிகளுக்கு தீய சக்தியினால் தீமை ஏற்படாமலும், மற்றவர்களுடைய கண் திருஷ்டி நீங்கும் பொருட்டும் இவை செய்யப்படுகின்றன. அதன் பின்னர் விருந்துபசாரமும் நடைபெறும். விருந்துபசரம் நடைபெற்று திருமணத்திற்கு வருகைதந்தோர் மணமக்களுடன் இணைந்து நிழல்படம் எடுப்பதும், கலியாணப் பரிசில்கள் வழங்குவதும் இடம்பெறும். அதன் பின்னர்…

மணமக்கள் இருவரும் அர்சனைத் தட்டோடு ஆலயம் சென்று வணங்கி அர்ச்சனை செய்து மணமகன் இல்லம் செல்வர். அங்கு வாசலில் ஆரத்தி எடுத்து வலது காலை முதலில் வைத்து வீட்டுக்குள் செல்வர். முதலில்  பூசை அறை சென்று வணங்கி பெற்றோர் காலிலும் விழுந்து வணங்குவர். அறைக்குள் சென்று வணங்கிய பின்னர் பால் அருந்தக் கொடுப்பார்கள்.

பூதாக்கலம்
மணமக்கள் ஒரே இலையில் மணமகள் உணவு பரிமாறி மணமகனுக்கு முதலில் தன் கையால் உணவூட்டிய பின் மணமகன் மணமகளுக்கு உணவூட்ட வேண்டும்.

பின் மணமக்களை மணமகள் வீட்டுக்கு அழைத்து செல்வார். அங்கும் ஆரத்தி எடுத்து உள்செல்வார். வலது கால் எடுத்து உட்சென்று பூசை அறை சென்று இறைவனை வணங்கி பெற்றோர் கால்களிலும் விழுந்து வணங்குவர்.

சில தத்துவங்கள்
தாலி கட்டிய பின் மணமகன் மணமகளின் உச்சியில் குங்குமத்தால் திலகமிடுவார். இது அவள் தன் கணவனுக்கே உரியவள் என்பதை எடுத்துக்காட்டவே. அத்தோடு அவ்விடத்தில் தான் மகாலட்சுமி வாசம் செய்கின்றாள்.

மாங்கல்யம் சூட்டும்போது கெட்டிமேளம் கொட்டுவது சபையில் உள்ளோர் யாராவது தும்முதல், அபசகுன வார்த்தைகள் பேசுதல் போன்றவை மணமக்களிற்குக் கேட்கக்கூடாது என்பதற்காகவே. வேறு விதமாக கூறின் சகுனத் தடைகள் ஏற்படாமலிருப்பதற்காகவே.

மஞ்சள் கயிற்றில் தாலி கட்டும் போது மூன்று முடிச்சுப் போடுவார்கள். இதற்கு ஒரு விளக்கம்.
முதலாவது முடிச்சு – கணவனுக்குக் கட்டுப்பட்டவள் அல்லது பிறந்த வீட்டிற்கு
இரண்டாவது முடிச்சு – தாய் தந்தையருக்குக் கட்டுப்பட்டவள் அல்லது புகுந்த வீட்டிற்கு.
மூன்றாம் முடிச்சு – தெய்வத்திற்குப் பயந்தவள் என்பதை குறிப்பதாகும்.

தாலி கட்டும்போது தூவப்படும் அட்சதை மணமக்கள் தீய சக்திகளிடம் இருந்து காப்பதற்கும் வளமான வாழ்க்கை அமைவதற்கும் ஆசீர்வதிப்பதாகும். தாலி கட்டும்போது காமாட்ஷி விளக்கு, அல்லது சிறிய குத்துவிளக்கை ஏந்தி நிற்பது ஏனென்றால் தாலி கட்டும்போது இலக்குமிதேவியின் அருள்கடாட்சம் கிடைப்பத்ற்காகவே.

திருமணத்தின் போது மணப்பெண் முகத்திரை அணிவது ஏன்?
முக்காலத்தில் மணமகள் தாலி கழுத்தில் ஏறும் வரை மணமகனைப் பார்ப்பதில்லை. ஆகவே முகத்திரை அணிந்து மணவறைக்கு அழைத்து வந்தார்கள். அத்தோடு கண் திருஷ்டிக்கும் விமர்சனங்களில் இருந்து விடுவிப்பதும் ஒரு காரணமாகும். தாலி ஏறியதும் முகத்திரையை அகற்றி நான் இப்போது “இவரின் மனைவியாகி விட்டேன்” என்று சபையோரிற்கு தன் முகத்தைக் காட்டுகிறாள்.

அட்சதை: அட்சதை என்றால் குத்துப்படாததும், பழுதற்றதும் என்று பொருள்படும். பழுதுபடாத பச்சைஅரிசியைப் போல் வாழ்க்கையும் பழுதுபடாமல் இருக்கவேண்டும் என்பதற்காகவே ஆசி வழங்கும் போது பெரியவர்கள் அதைத் தெளிக்கிறார்கள். (நுனி முறியாத முழு அரிசியாக இருக்கவேண்டும்).

நெல்லில் இருந்து பிரித்தெடுக்கப்பட்ட முளையுள்ள அரிசியுடன் மஞ்சள்மா, பன்னீர், மலர் இதழ்கள் ஆகியவை கலந்து அட்சதை தூவுவதே முறையாகும்.

ஆராத்தி
ஒரு தட்டில் 3 வாழைப்பழத் துண்டுகள் வைத்து அதன் நடுவே திரியைச் செருகவேண்டும். இலகுமுறை ஒரு நெருப்புக் குச்சியில் பஞ்சைசுற்றி நெய்யில் தோய்த்த வாழைபழத்தின் நடுவே குத்துவதாகும். ஆரத்தி எடுக்கும் போது யாருக்கு திருஷ்டி கழிக்கின்றோமோ அவரை நிற்க வைத்து (கிழக்கு முகமாக அல்லது வடக்கு பார்க்க நிற்கவேண்டும்). அவரை இறைவனாக நினைத்து இறைவனுக்கு எப்படிக் கற்பூரம் காட்டுகிறோமோ அதேபோல் ஆரத்தித் தட்டைச் சுற்றவேண்டும் (வலம் சுழியாக).

மணமக்களுக்கு எடுக்கும்போது மணமகன் பக்கத்தில் மேலெழும்பி மணமகளின் பக்கத்தில் கீழிறங்கவேண்டும். கீழே 3 தரம் ஆட்டி பின் மேலெழும்பிச் மூன்றுமுறை சுற்ற வேண்டும்.

ஆராத்தி சுப காரியங்களுக்காக எடுக்கப்பெறும் போது வலஞ்சுழியாகவும்; அசுப காரியங்களுக்கு எடுக்கப்பெறும்போது இடஞ்சுழியாகவும் எடுக்கப் பெறுகின்றன. எனவே சுப காரியங்கள் இடம்பெறும்போது ஆராத்தி எடுப்பவர்கள் இதன நன்கு அறிந்திருத்தல் அவசியமாகின்றது.


சுபம்